Loading

 

 

 

மேகோனின் மேன்மை நேசம்

மேகோன் : மேன்மை தாங்கிய அரசன்.

*திரைப்படங்களில் காணப்படும் முன்னும் பின்னுமாக காலப் பயணத்தை அனுமதிக்கும் எந்தவொரு நிறுவப்பட்ட அறிவியல் முறையோ அல்லது தொழில்நுட்பமோ நிஜத்தில் இல்லை. நடைமுறையில் சாத்தியப்படாதவை.

*யாவும் கற்பனையே!*

°கற்பனை என்று ஆனபின்பு கஞ்சத்தனம் எதற்கு?°
_______________________

‘காலங்கள் கடந்து நீளும் நேசமே!
உன்னில் என்னை சுமப்பாயோ!

உன்னில் தொலைந்து மீள நானோ என் வசமில்லையே.
உன் கண்கள் பார்த்து கதைத்திட, யுகங்கள் பல நீண்டதே!

ஜென்மம் தாண்டி வந்தவளே!
என்னுள் உயிர் கலந்தவளே!
எனக்கெனவே ஜனித்தவளே!

காலங்கள் கடந்து நீளும் நேசமே!
உன்னில் என்னை சுமப்பாயோ!
என்னுயிர் நேசம் அறிவாயா?
என் இதயத்தில் யுத்தம் புரிவாயா?’

– பிரியதர்ஷினி S

**************************

அத்தியாயம் 1

டெல்லி – இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் நோக்கி அந்த மகிழுந்து அதீத வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த வீரட்டிடம் அத்தனை பதட்டம்.

சரியான நேரத்திற்கு சென்றிட வேண்டுமென்ற துரிதம்.

வீரட்டிற்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன், எவ்வித பதட்டமுமின்றி, மிகுந்த ஆசுவாசத்துடன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, காரில் கசிந்து கொண்டிருக்கும் பாடலுக்கு ஏற்ப ஒற்றை கையால் தொடையில் தாளமிட்டபடி வெளிப்புறத்தை பார்வையால் அளந்து கொண்டிருந்தான்.

அவனது பார்வையில் கண்களுக்குத் தெரியும் காட்சிகளின் மீதான ரசிப்பு கொஞ்சமும் இல்லை. மாறாக பல மாதங்களுக்குப் பின்னர் வெளியுலகத்தை பார்க்கும் பார்வை அவனிடம். அவதானிக்கும் உற்று நோக்கல்.

“எதுவும் மாறல” என்றவன், “பொலியூஷன் மட்டும் அதிகமாகியிருக்கு” என்றான்.

சொல்லியவனை வீரட் ஏற இறங்க பார்த்திட…

“என்னடா… பாசமா பாக்குற?” எனக் கேட்டான் அவன்.

“எப்படிடா உன்னால இப்படி இருக்க முடியுது? நானும் உன்னோட தானே வொர்க் பண்றேன். அப்புறம் ஏன்டா நீ மட்டும் இப்படி இருக்க?” என்றான் வீரட். ஆதங்கமாக.

“வொர்க்ல டெடிகேஷனா இருக்கிறது தப்பாடா?” என்றான் அவன்.

“அடேய் உன் பொறுப்பு கடமையில் தீ வைக்க… தனக்கு நடக்கப்போற வெட்டிங்கே நினைவில்லாம எவனும் வேலையிலே மூழ்கி இருப்பானாடா? நீ வொர்க்கோஹாலிக் தெரியும். அதுக்குன்னு இப்படியாடா இருப்ப?” என்று பொரிந்தான் வீரட்.

“அதான் கிளம்பியாச்சே… அப்புறம் என்னடா?” அவன் சலிப்பாக நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

“அப்புறம் என்னவா? உன் அப்பா மட்டும் எனக்கு கால் பண்ணலன்னா… இப்போக்கூட நீயா கிளம்பியிருக்கமாட்ட” என்றான் வீரட்.

“சரி விடுடா… வேலையில் ஃபோகஸ்டா இருந்துட்டேன்.”

“ரெண்டு நாளா உனக்கு அவ்ளோ ஃபோன் கால்ஸ் பண்ணியிருக்காங்க. ஒன்னை அட்டெண்ட் பண்ணியிருந்தாலும், இந்த லாஸ்ட் மினிட் ஹரிபரி இருந்திருக்காது.” வீரட்டின் பேச்சிலும் அத்தனை வேகம்.

பின்னே யாரேனும் தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தையே மறந்துவிட்டு வேலை தான் முக்கியமென்று, அலுவலகமே கதியேயென இருப்பார்களா?

“அந்த சீஃப் என்னவோ நான் உன்னை மறக்க சொன்னமாதிரி என்மேல பாயுறாரு. நானாடா உன்னை மறக்க சொன்னேன். வெட்டிங் உனக்கா எனக்காடா” என்ற வீரட்டின் புலம்பல் மட்டும் நிற்கவில்லை.

நண்பனின் பேச்சில் அவனிடம் புன்னகை மட்டுமே!

“கொஞ்சமாவது ஃபிளைட்டை பிடிக்கணும் எண்ணம் இருக்காடா உனக்கு? இன்னைக்கு ஈவ்வினிங் உனக்கு எங்கேஜ்மென்ட்டா. இன்னும் ரெண்டு நாளில் வெட்டிங். நினைவிருக்கா இல்லையா? எனக்கிருக்கும் பதட்டம் கூட உனக்கில்லையே.” ஆயாசமாகக் கூறிய வீரட்… விமான நிலையம் வந்திருக்க, வண்டியை நிறுத்தி, வேகமாக இறங்கி, நண்பனின் பயணப்பொதிகளை எடுத்து அவனது கையில் திணித்து, விரட்டாத குறையாக போர்டிங் செய்வதற்கு தள்ளிவிட்டான்.

“நீ வரலையா?” வீரட்டிடம் அவன் கேட்டான்.

“உன் மேரேஜ்க்கு நீயே ரெண்டு நாள் முன்ன தான் போற… உனக்கு டிக்கெட் கிடைச்சதே பெரிய விஷயம். இதுல எனக்கு எங்கிருந்து?” என்ற வீரட்… “எனக்கு நாளைக்கு ஈவ்வினிங் ஃபிளைட் தான் கிடைச்சிருக்கு” என்றான்.

“ஓகே!” என்று தோள் குலுக்கியவன், “பை டா” என்று உள்ளே சென்றான்.

விமானநிலைய விதிமுறைகள் அனைத்தும் முடித்து, அவனுக்கு உட்கார எல்லாம் நேரமில்லை. வந்ததே கடைசி நிமிடம். நேராக அவன் பயணிக்க வேண்டிய விமானம் நின்றிருக்கும் இடம் சென்று ஏறி, தனக்குரிய இருக்கையில் அமர்ந்தான்.

பிஸ்னஸ் கிளாஸ். இது அவனது பணத்திற்கு கிடைத்த இடமல்ல. அவனது தொழிலுக்கு, அவன் வகிக்கும் பதவிக்கு கிடைத்த இடம்.

சில நொடிகளில் விமானம் பறக்க ஆயத்தமாக,

நன்கு சரிந்து அமர்ந்தவன், சன்னல் திறந்து வெளி வானை கண்கள் சிமிட்டாது பார்த்தான்.

கடந்து செல்லும் மேகங்களை சில கணங்கள் மென் இதத்தோடு பார்த்தவன், சிறு புன்னகையோடு கண்களை மூடிக் கொண்டான்.

கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பின்னர் வெளியுலகை பார்க்கின்றான். இல்லை இல்லை இப்படியொருவன் இருக்கின்றேன் என்று தன்னை வெளியுலகிற்கு காட்டியிருக்கிறான்.

அவன் தேவித்… தேவித் மகிழோன்.

முப்பத்தியோர் வயது இயற்பியல் ஆராய்ச்சியாளன். ஐஐடி மாணவன். பிஎச்டி’யில் அவன் செய்த ஆராய்ச்சி கட்டுரையை, டெல்லியில் அமைந்துள்ள (CSIR – NPL) இந்திய தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடத்திற்கு அவனை வழிநடத்தும் முனைவரின் தலைமையில் அனுப்பி வைத்திட, அவனுக்கு இளம் வயதிலேயே அங்கு பணியில் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

அதீத அறிவாற்றல் மிக்கவன். அவனது துறையில் இன்னுமின்னும் தன்னுடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள நினைத்து எதையும் செய்துகொண்டே இருப்பான். புதுப்புது மூலக்கூறுகளை உருவாக்கி புதியதாய் ஒன்றை கண்டறிந்திட வேண்டுமென்ற முனைப்பு அவனிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதை அறிந்து, அவனுக்கு ஏதுவான பல வேலைகளை தலைமை ஆராய்ச்சியாளர் வழங்கிக்கொண்டே இருக்க, இவனது உலகம் ஆராய்ச்சிக் கூடத்திலேயே சுழன்று கொண்டிருக்கிறது.

முதலில் ஜூனியர் அளவில் உள் நுழைந்தவன், தற்போது பல சீனியர்களையும் முந்திக் கொண்டு தலைமை சிறப்பு ஆராய்ச்சியாளர்களின் நேரடி குழுவில் அவனும் ஒருவனாக வளர்ந்து நிற்கிறான்.

இந்தியாவில் கண்டறியப்படும் எவ்வித பொருட்களுக்கும் இவர்களது குழு தர ஆய்வு நடத்தி, குறியீடு அளித்த பின்னரே அப்பொருள் உலகின் பார்வைக்கு சந்தைப்படுத்தப்படும்.

தேவித்க்கு அவனது வேலையில் அதீத பிடித்தமும், பற்றும். அது எந்தளவில் என்றால் அவனது திருமணத்தையே மறக்கும் அளவிற்கு.

என்னதான் வேலை விடயமாக பல சோதனைகள் செய்து வந்தாலும், அவனாக ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற ஆசையில், இதுவரையில் உண்மையா?பொய்யா? இப்படி ஒன்று நிஜத்தில் இருக்கிறதா? இருந்தால் அதன் செயல்கள் நம்பக்கூடியதா? என்று பல கேள்விகள் முன் வைத்து நம்ப முடியாது ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கும் ஒன்றை, தான் சாத்தியப்படுத்திக் காட்டுகிறேன் என்பதில் அதி தீவிரமாக இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

தன்னுடைய தேடல் ஓரளவிற்கு சரியான பாதையில் பயணிக்கிறது என்று தனக்கே ஒரு பாதை தெரிந்த பின்னர் தான் மற்றவர்களிடம் சொல்லிட வேண்டுமென்று அவனது குருவாக திகழும், அவர்களது ஆராய்ச்சிக் கூடத்தின் தலைமை சிறப்பு ஆராய்ச்சியாளர் முனைவர்.கதிரேசன் அவரிடம் கூட, இதுவரை தனது வடிவமைப்புப் பற்றி எதுவும் சொல்லியிருக்கவில்லை.

இது சட்டப்படி தவறென்று அவனறிவான். ஆனால் ஆசைக்கு அளவில்லையே. முடியாதென்ற ஒன்றை நடத்திக்காட்ட வேண்டுமென்ற குணம் இயல்பிலேயே அவனுள் பொருந்தியிருக்க, முயற்சித்து பார்க்க எண்ணி கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடைய ஆராய்ச்சியை செய்து கொண்டிருக்கிறான்.

சிறுசிறு ஆராய்ச்சி வடிவமைப்புக்கு அரசாங்க அனுமதி வேண்டியதில்லை. முடிவை சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கிக்கொள்ளாலாம்.

ஆனால், பெரும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்க அனுமதி மட்டும் என்.பி.எல் அனுமதியும் வேண்டுமாக இருக்க… அனுமதி அளிக்க வேண்டிய இடத்தில் இருப்பவனே, தன்னுடைய ஆராய்ச்சிக்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது என்றறிந்து மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறான்.

தொடங்கிவிட்டான். இடையில் பல சோதனைகள், சறுக்கல்கள், தடைகள். நன்றாக வந்து கொண்டிருக்கிறது என்று தேவித் நினைக்கையில் தோல்வியில் முடிந்திருக்கும்.

‘தோல்வியில் தான் வெற்றிக்கான படிகள் உயர்ந்திடுமாம்.’ யாரோ சொன்னது. ஆனால் தோல்வியில் துவளும் அவனுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வரி அது.

உச்சம் சென்று வெற்றியை சுகிக்காது நின்றுவிடக் கூடாது என்பதில் மட்டும் திண்ணமாக இருக்கின்றான்.

இதனின் சிந்தனையே தேவித்தை உலகம் மறக்க வைத்து, அவனது உறவுகளின் நினைவின்றியும் அவனை இருக்க வைத்திருக்கிறது.

அந்நேரம் அவனது அலைப்பேசி ஒலிக்க… திரையில் தந்தையின் முகம் ஒளிர, அவனின் முகம் கனிந்தது.

மகன் என்ன செய்தாலும் ஆச்சரியம், எது கூறினாலும் அதிசயம் என்று கண்மூடித்தனமாக மகன் ஒருவனே உலகமென்று இருக்கும் தந்தையின் மீது அளவில்லா அன்பு அவனுக்கு.

தேவித்தின் சொந்த ஊர் திருச்சி அருகே கிராமம். நல்ல செல்வ செழிப்பான குடும்பம். உட்கார்ந்து தீர்க்க பல தலைமுறைக்கு சொத்துக்கள் இருந்தபோதும், தேவித் படிப்பின் மீது காட்டும் ஆர்வம், அவனது உயர் மதிப்பெண்கள் யாவும் சிறுவயது முதலே அவனது எந்தவொரு ஆசைக்கும் தடைவிதிக்க விடாது, விருப்பம் தெரிவிக்க வைத்திட, அந்த சுதந்திரம் தான் அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக அமைந்தது.

ஒவ்வொரு முறை அவன் மேற்கொண்டு படிக்க வேண்டுமென்று சொல்லிட, அவனது தந்தை மாமன்னன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காது, அவனது படிப்பு செலவிற்கு வேண்டியவற்றை மனமுவந்து அளித்திடுவார்.

தேவித்தும் அதிக செலவென்று வைத்தது இல்லை. அனைத்து இடங்களிலும் அவனது முதல் மதிப்பிற்கு பணத் தேவைகள் இன்றியே இடம் கிடைத்திட, மற்ற தேவைகளுக்கு மட்டுமே தந்தையிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வான்.

தேவித் படித்துக்கொண்டே செல்வதில்… அதிலும் முதல் மாணவனாக திகழ்ந்ததில் மாமன்னனுக்கு அப்படியொரு பெருமை.

கிராமத்து மனிதரான அவருக்கு மகன் கூறும் உயர்கல்வி பற்றிய புரிதல் இல்லையென்றாலும், மகன் செய்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு டெல்லியில் வேலை கிடைத்திட, அதன் பொருட்டு மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி மாநிலத்தின் முதல்வரும் அவனை அழைத்து பாராட்டியிருக்க, மனிதருக்கு பெருமை தாளவில்லை.

பார்க்கும் யாவரிடமும் அன்றைய தினம் ஓடி ஓடி மகனின் பெருமையை சொல்லி மாய்ந்துப் போனார்.

பள்ளி கல்வி மட்டுமே முடித்து, விவசாயத்தில் பண்ணையம் செய்யும் மனிதருக்கு, மகன் கல்வியின் மூலம் வாங்கித்தந்த பெருமை அலாதி. தேவித் உயர் இடத்திற்கு சென்றது மட்டுமில்லாது, அவனது தந்தை என அவரையும் நாடறியச் செய்து புகழ் பெற்றுத் தந்திருந்தான்.

அதில் மகன் எனும் பாசம் கடந்து, மரியாதையாக அவனை பார்க்கத் தொடங்கியவருக்கு, தேவித் என்ன சொன்னாலும் வேதம் என்றாகியது.

அவருக்கு மகன் மட்டுமே உயிர். அவன் கண்ணசைவுக்கு அவர் அவனது தேவைகளை நிறைவேற்றி வைத்திடுவார்.

“மகன் கேட்கிறான்னு கொள்ளை காசு செலவு பண்ணி ஒண்ணுமே விளங்காத படிப்பெல்லாம் படிக்க வைக்கிறியே… பின்னாடி, நாலு பேருக்கு வேலை தர உன்னை நாலு பேரு பண்ணையில வேலை செய்ய விட்டுடப்போறான் உன் பையன்” என்று சொல்லியவர்களை எல்லாம், தேவித் முதல்முறையாக டெல்லி செல்லத் தயாரான அன்று வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து கர்வமாக ஏறிட்டார்.

“இருந்தாலும் உங்க அப்பாவுக்கு இவ்வளவு சேட்டை இருக்கக்கூடாது” என்று மகனிடம் அருணா கணவரின் அன்றைய செயல் வைத்து கூற,

“எந்தவொரு இடத்திலாவது அப்பா போதும் கண்ணுன்னு சொல்லியிருந்தா, நான் இன்னைக்கு இந்த இடத்தில் இருந்திருக்கமாட்டேன்ம்மா. அவருக்கு என்ன சந்தோஷமோ செய்யட்டும்” என்ற மகனின் கன்னத்தை வாஞ்சையாக தடவிய அருணா…

“அவரை நீ விட்டுக் கொடுத்துடுவியா என்ன?” என்றார்.

தேவித்திடம் அளவானப் புன்னகை.

சட்டென்று பழைய நினைவை மீட்டிப்பார்த்திருந்த தேவித் தந்தையின் அழைப்பை ஏற்றான்.

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
31
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்