Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 11

கயல் கண் திறந்து பார்க்க ஒரு பெரிய வீட்டின் ஒரு படுக்கை அறையில் இருந்தாள். முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது. காலையில் நடந்தது, கல்லூரி கிளம்பியது, அதன் பிறகு மயங்கி விழுந்தது எல்லாமே. மயங்கி விழுகும் போது பார்த்த முகம் மட்டும் ஒரு நிமிடம் வந்து போனது நினைவில். அதன் பிறகு எவ்வளவு முயன்றும் அதன் பின்னாடி நடந்தது ஏதுவும் நினைவு இல்லை. இங்கே எப்படி வந்தோம்? இது யாரு வீடு? எனக்கு என்னதா ஆச்சு… போன்ற எந்த கேள்விக்கும் விடை தான் இல்லை. ஐயோ நேரம் என்னனு தெரியலையே. வீட்டுக்கு வேற போகணும்… என யோசித்து அந்த அறையை சுத்தி பார்க்க நேரம் 2:10 ஆகா இருந்தது. அப்போது தான் கயலுக்கு மூச்சே வந்தது.. பரவாயில்ல ரொம்ப நேரம் ஆகலை… என யோசித்து கொண்டே அந்த அறையை சுற்றி பார்க்க அவளின் அறையை விட 3 மடங்கு பெரியதாக இருந்தது. எங்கு பார்த்தாலும் பணத்தின் செழுமை தெரிந்தது. இதை எல்லாம் பார்த்து ஒரு வித பயம், பதட்டம் என எல்லாம் அவளை தொற்றி கொண்டது.

யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். அப்படியே தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள். அப்போது தான் ஒரு பெண் இவளை பார்க்க வர, இவள் எழுந்து அமர்ந்து இருப்பதை பார்த்து, “அம்மா அவங்க எழுந்துட்டாங்க…” என கத்திகொண்டே ஓடி விட்டாள். ‘யாரு இந்த பொண்ணு… நம்மள பாத்து ஏன் கத்துது… ஐயோ ஒன்னும் புரியலையே…’ என மேலும் குழப்பத்தில் இருக்க, எதிரில் யாரோ ஒருவர் நடந்த வர நிமிர்ந்து பார்த்தாள்.

சாந்தமான முகம், நெற்றியில் குங்குமம், காட்டன் புடவையை கச்சிதமாக கட்டி முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்புடன் வந்தார் சீதா. அவரை பார்த்ததும் இதுவரை இருந்த பயம் இப்போது இல்லை தன் அம்மாவை நேராக பார்ப்பது போன்ற உணர்வு. அவரை பார்த்து கொண்டே இருக்க அவர் அருகில் வந்து, “என்னமா எழுந்துட்டியா… இப்போ எப்படி இருக்கு…” என அக்கறையாக கேட்க ஒரு நிமிடம் கண்கள் கலங்கி விட்டது. சிறுவயதிலே தாயை இழந்தது முதல் அம்மாவின் அன்பை பெறாமல் இருந்து விட்டு இவரின் அக்கறையில் திடீரென கண் கலங்க விட்டது. சீதா பதறிகொண்டு, “என்னாச்சு மா.. ஏன் அழகுற..?” என பரிதவிப்புடன் கேட்க, “ஒன்னும் இல்லமா கண்ல தூசி…” என ஏதோ சமாளித்தாள்.

அப்போது அங்கு வெண்பா வர, “இது என் பொண்ணு வெண்பா. எனக்கு ஒரு பையனும் இருக்கான் ஆதி…” என அறிமுகப்படுத்தினார். “உன் பேரு என்ன மா” என கேட்க, கயல்விழி என்று சொல்ல, “நல்ல பெயர்… உன்னைய மாதிரி அழகா இருக்கு…” என அவளை நெட்டி முறுத்தார். கயலும் சிரித்து கொண்டால், வெண்பா கயல் பற்றி கேட்டு இருவரும் ஒரே கல்லூரி என்பதால், அப்படியே பேசி தோழிகளாக மாறி விட்டனர். சீதா தான் போதும் பேசிட்டே இருப்பிங்க சாப்பிட்டு வந்து பேசலாம் வாங்க என அழைக்க, கயல் தயங்கி கொண்டே, “அதெல்லாம் வேண்டாம் ம்மா… நான் கிளம்புறேன் லேட்டா ஆயிடுச்சு…” என்க சீதாவும் அவளின் தயக்கத்தை புரிந்து கொண்டு, “இதுவும் உன் வீடு தான் மா. எதுக்கு தயக்கம், நீயும் என் பொண்ணு மாதிரி தா சரியா…” என்று ஒருவழியாக சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்.

கயலும் வீட்டின் பிரமாண்டத்தை பார்த்து அசந்து விட்டாள். கூடவே பயமும் வர ஒரு வித பதட்டத்துடனும் பயத்துடனும் கீழே வர அங்கு இருந்தார் வெங்கட். அவரும் கயலை பார்த்து சகஜமாக தான் பேசினார். “என்னமா இப்போ பரவாயில்லையா…” என கேட்க ஒன்றும் புரியவில்லை என்றாலும் தலையை ஆட்டி வைத்தாள். அதன் பிறகு அவளை அமர வைத்து வேண்டாம் வேண்டாம் என்றாலும் சாப்பிட வைத்தார் சீதா. கயலின் பசி அவள் சாப்பிட்டதும் தான் தெரிந்தது. சாப்பிட்டு அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது தான் ஆதி வந்தான். கயலுக்கு அவனை பார்க்கும் போது நியாபகம் வந்தது. மயங்கும் போது பார்த்த அதே முகம் என.

ஆதி வந்ததும் சீதா, “என்னடா இந்த நேரத்தில வந்துருக்க…” என கேட்க, “அதும் ஒன்னும் இல்லமா ஒரு பைலை மறந்துட்டேன் அதான் எடுக்க வந்தேன்…” என்று சொல்லிவிட்டு கயலை பார்த்தான். அவனை பார்த்து கயலுக்கு தான் ஒருவித படபடப்பு தொற்றி கொண்டது. அவனும் “இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு?” என கேட்க வெறும் தலையை மட்டும் ஆட்டினாள்.. அவனும் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் தனது அறைக்கு சென்று பைலை எடுத்து கொண்டு கீழே வர சீதா சாப்பிட்டு போக சொல்ல, “வேண்டாம் மா டைம் இல்லை… நான் கிளம்புறேன்” என்று சென்று விட்டான். அவன் போனதும் தான் கயல் சகஜ நிலைக்கு வந்தாள். சீதா, “இவன்தான் மா என் பையன் ஆதித்யா”, என்க மனதிற்குள் ஒருமுறை அவனின் பெயரை சொல்லிக்கொண்டு வெளியில் சிரித்து வைத்தாள்.

கயலிடம் அவளின் குடும்பத்தை பற்றி கேட்க எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொன்னாள். தன் கஷ்டம் தன்னோடு போகட்டும் இவர்களிடம் சொல்லி மேலும் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவர்களும் அதற்கு மேல் எதுவும் கேட்க வில்லை. கயலை அங்கு இருந்த எல்லோருக்கும் பிடித்து விட்டது குறிப்பாக வெண்பாவிற்கு. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு, அடக்கம், பெரியவர்களுக்கு கொடுத்த மரியாதை என எல்லாமே அவளை அனைவர்க்கும் பிடிக்க வைத்து விட்டது. சீதா கூட, ‘நம்ம பையனுக்கு இந்த பொண்ண கட்டி வெச்சா எப்படி இருக்கும்…’ என கனவு எல்லாம் காண ஆரம்பித்து விட்டார்.

சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப சீதாவிற்கு தான் அவளை அனுப்ப மனம் இல்லை. இருந்தாலும் சென்று தான ஆகவேண்டும். அதனால், “பாத்து போ மா… நல்ல சாப்புடு சரியாய்… உடம்ப பாத்துக்கோ… இனிமேலே இப்படி மயங்கி எல்லாம் விழுகக்கூடாது.. எதுவா இருந்தாலும் அதை தைரியமா எதிர்கொள்ளணும் சரியா… நீ எப்போ வேணும்னாலும் இங்க வரலாம் இது உன் வீடு மாதிரிதான்…” என அன்பாக பேசி அவளின் முகவரியும் தந்தையின் தொலைபேசி எண்ணையும் வாங்கி கொண்டு, தன் எண்ணையும் குடுத்தார். அதன் பிறகு எல்லோரிடமும் சொல்லிவிட்டு ஆசிர்வாதம் வாங்கி கொண்டு கிளம்பினாள். சீதாவும், “காரில் சென்று இறங்கிக்கோமா…” என்று கேட்டும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். “பரவாயில்ல மா.. நான் போய்டுவேன்…” என சொல்லி விடை பெற்று நடக்க ஆரம்பித்து விட்டாள்.

இன்று காலையில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சீதா கேட்க வெங்கட் வராத போன்-யை எடுத்து கொண்டு “என்னது முக்கியமான வேலையா… நான் இருந்தே ஆகணுமா… என்னய்யா… பொறுப்பு இல்லாம இருக்கீங்க…. முன்னாடியே சொல்ல வேண்டியது தான…” என ஒரு 70mm பிலிமை சீதாவின் காதில் சுத்திவிட்டு “பட்டு பாத்தியா ஏதோ முக்கியமான வேலையமா… நான் போய் ஆகணும்… நீ வேணும்னா நம்ம வெண்பா பாப்பாவை கூட கூட்டிட்டு போய்ட்டு வா சரியா…” என சமாளித்து விட்டு ஓடி விட்டார்.

அப்போது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த வெண்பா ‘என்ன இந்த தாடி நம்மள கோத்து விட்டுட்டு போய்டுச்சு.. யோ தாடி வாயா உனக்கு இருக்கு.. ‘ என தன் தகப்பனை கழுவி ஊத்தி விட்டு எப்படி எஸ்கேப் ஆவது என யோசித்து கொண்டே கீழே வர, அவளை பார்த்ததும் சீதா அவளிடம் வர.. வெண்பா முந்தி கொண்டாள். பரபரப்பாக இருப்பது போல் காட்டி கொண்டு “அம்மி… எனக்கு சாப்பாடு வேண்டாம்… முக்கியமான டெஸ்ட் இருக்கு… சீக்கிரமா போகணும்… நான் கிளம்புறேன்…” என அவர் பேச வாய்ப்பே அளிக்காமல் விட்டால் போதும் என ஓடி விட்டாள்.

சீதா, ‘என்ன யாரும் வரமாட்டேங்குறாங்க.. நான் கோவிலுக்கு தான கூப்பிட்டேன்… எதுக்கு இப்படி பயந்து ஓடுதுங்க எல்லாம்…’ என யோசித்து கொண்டு இருக்க ஆதி தான் அலுவலகம் தயராகி கீழே வந்தான். “அம்மா அங்க என்ன பண்றிங்க வாங்க சாப்பாடு எடுத்து வைங்க…” என அழைக்க அவனை கவனிக்க சென்று விட்டார். “நீங்க சாப்பிட்டீங்களா…?” என ஆதி கேட்க, “இல்லப்பா… இன்னைக்கு ஒரு விஷேசம் அதான் கோவிலுக்கு போய்ட்டு வந்து சப்படலாம்னு பாத்தா யாரும் கூட வர மாட்டேங்குறாங்க.. நீ ஆச்சும் வாடா.. போய்ட்டு வரலாம்…” என கேட்க “போச்சு அதான் எல்லாரும் எஸ் ஆயிட்டாங்களா.. நம்ம தான் மாட்டுனோமா… சுத்தம்…” என நினைத்து, “அம்மா எனக்கு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்கு… போகணும்…” என ஏதோ சமாளிக்க சீதா விடவில்லை, “அது நம்ம ஆபீஸ் தான. அதெல்லாம் கார்த்தி பாத்துப்பான்… நீ வா…” என கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார். இவனும் அம்மாவிற்காக தான என்று கிளம்பி விட்டான். அங்கே சென்றால் போர் அடிக்கும் என கார்த்திகை அழைத்தால் அவன்அதற்கு மேல் “மச்சான்… எனக்கு சரியா ஏதும் கேட்கலை மச்சான்.. ஹலோ… ஹலோ…” என கேவலமாக சாமாளித்து வைத்து விட்டான்.

ஆதி தன்னை தானே நொந்து கொண்டு கோவிலில் இருந்தான். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் தான் கயல் ஒரு வித தடுமாற்றத்தோடு போவதை பார்த்து சீதா வண்டியை நிறுத்த சொல்லி ஆதியும் அழைத்து கொண்டு போய் பார்ப்பதற்குள் மயங்கியவளை ஆதி தாங்கி பிடித்து கொண்டான். சீதா பதட்டத்தோடு பார்க்க தண்ணீரை தெளித்தும் லேசாக மயக்கம் தெளிந்தவள் இவனை பார்த்து முழுவதுமாக மயங்கி சரிந்தாள் அவன் மடியில். (ஆதியின் m.v: என்ன இந்த பொண்ணு நம்மள பாத்து மறுபடியும் மயங்கிருச்சு.. இது தான் அழகுல மயங்கறதா… இல்லை ஒருவேளை பயத்துல மயங்கிருச்சோ.. நம்ம மூஞ்சி என்ன அவ்ளோ கொடூரமாவா இருக்கு… என்னடா ஆதி உனக்கு வந்த சோதனை… என நினைத்து கொண்டான்).

அருகில் தான் அவர்கள் வீடு என்பதால் சீதா பயந்து, “ஆதி இந்த பொண்ண தூக்கு… வீட்டுக்கு கூட்டிட்டு போயிரலாம்.. அப்படியே நம்ம பேமிலி டாக்டர்-அ வர சொல்லு…” என்க அவனுக்கும் அது தான் சரி என தோன்ற அவளை பூ போல ஏந்தி கொள்ள காரானது அவர்கள் வீட்டில் நின்றது. அவளை தூக்கி கொள்ளும்போது தன்னுடைய பொருள் தன்னிடமே வந்து விட்டது போல ஒரு உணர்வு. ஆனால் எதையும் யோசிக்காமல் அவளது முகத்தை மட்டுமே பார்த்து கொண்டு விருந்தினர் அறையில் படுக்க வைத்தான். டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, “ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க.. சரியாய் சாப்பிடலை… அதனால தான் மயங்கிட்டாங்க… எழுந்ததும் சாப்பிட வைத்து இந்த மருந்தை கொடுங்க…” என சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.

ஆதி அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான். அவனுள் ஏதோ ஒரு தடுமாற்றம். ஆனால் அதை புரிந்து கொள்ளத்தான் விருப்பம் இல்லை. அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா… எதாவது தோணும்… என அதை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டான். சீதாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் போது கயலை ஒரு முறை பார்த்து விட்டு சென்று விட்டான். சீதாவும் கயல் எப்போது கண் திறப்பாள் என்று பார்த்து கொண்டு இருந்தார்.
வெண்பாவும் வெங்கட்டும் வீட்டிற்கு வர அவர்களிடமும் சொல்ல வெண்பா தான் கயல் கண்விழிப்பதற்கு ஆர்வமாக காத்திருந்தாள்.

கல்லூரியில் திவ்யாவிற்கு தான் கயல் வராமல் வகுப்பில் இருக்க கூட பிடிக்கவில்லை. தன்னை நொந்து கொண்டு நேரத்தை கடத்தி கொண்டு இருந்தாள். சிவாவும் வரவில்லை என்பதால் அவளுக்கு இன்னும் போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. நேரத்தை நெட்டி தள்ளி கொண்டு இருந்தாள்.

ஆதி அலுவலகத்தில் தன்னிலை மறந்து யோசித்து கொண்டு இருந்தான். கயலை பார்க்கும் போது பலநாள் பழகிய உணர்வு. எதையோ அடைந்து விட்ட சந்தோசம். அதுவும் அவளை கையில் ஏந்திய பொது இந்த உலகையே வென்று விட்ட பெருமிதம். அவளின் உடல்நிலை பற்றி அறியும்போது அது தனக்கே ஏற்பட்டது போல வலி, இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தான்.

அவளின் வாசம் இன்னும் தன்னோடு இருப்பது போல ஒரு உணர்வு. அவளை கையில் ஏந்தும் போது வந்த உணர்வை சொல்ல வார்த்தைகள் தான் இல்லை. அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒன்னும் இல்லாத மொக்கை காரணத்தை சொல்லிக்கொண்டு வீட்டிற்கும் சென்றான். அதுவும் மொக்கையாக தான் முடிந்தது. அவளிடம் பேச தான் முடியவில்லை. அவளும் கேட்டதுக்கு தலையை மட்டும் ஆட்ட, ‘ஏன் மேடம் வாய திறந்து பேசமாட்டாங்களா…’ என நினைக்க மட்டுமே முடிந்தது. அவன் மனசாட்சி ‘அந்த பொண்ணு ஏன் உன்கிட்ட பேசணும்… இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல’ என கேட்க அதெல்லாம் அவன் தான் கண்டு கொள்ளவில்லை. ‘நம்ம பேசுறதுக்கு பதில் சொல்றானா பாரு…’ என்று புலம்பி விட்டு சென்றது.

கயல் வீட்டில்…

தொலைந்து போனது என்று சொன்ன நகையை கையில் வைத்து பார்த்து கொண்டு இருந்தால் சுமதி. ‘கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ… இன்னும் கொஞ்சம் நேரம் தேடி பாத்துருக்கலாம்… சரியான லூசு சுமதி நீ… என்னதா இருந்தாலும் இப்படியா நடந்துக்குவ… இது மட்டும் அந்த ஆளுக்கு தெரிஞ்சது நீ அவ்ளோதான். சொத்து கைக்கு வர வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசி…’ என நினைத்து கொண்டாள். இது யாருக்கும் தெரியக்கூடாது அப்படியே மறைச்சுருவோம். இல்லைனா நம்ம மேல இருக்க பயம் போய்டும் என யோசனையை விட்டு அந்த நகையை எடுத்து பத்திரப்படுத்தி கொண்டாள்.

சற்று முன்பு….

அருண் வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்து விட்டான். காலையில் நடந்தது எல்லாம் அவனுக்குள்ளே ஓடி கொண்டே இருந்தது. தன் அக்காவை அவன் அம்மா இப்படி திட்டியது அவனுக்கு புடிக்கவே இல்லை. ஏற்கனவே அம்மாவை புடிக்காமல் இருந்தது, இப்போது சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் பார்க்க இன்னும் அவன் தாய் வந்துருக்கவில்லை. அப்பாவை பார்க்க அவர் மகளை நினைத்து அழுது அழுது சோர்ந்து போய் தூங்கியும் விட்டார்.

அருண் நேரே தன் அம்மா அறைக்கு சென்று தேட ஆரம்பித்தான். பலமணி நேர தேடலுக்கு பிறகு அவன் தேடியதும் கிடைத்தது. அதை வைத்து கொண்டு காத்திருக்க சிறிது நேரம் கழித்து சுமதி அங்கே வர “நீ இங்க என்னடா பண்ற… எப்போ வந்த நீ?” என கேட்க அவன் ஏதும் பேசாமல் கையில் உள்ளதை அவர்முன் காட்டினான். சுமதிக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது. காணாமல் போன நகை தன் மகன் கையில் எப்படி என நினைக்க உடனே, “நீ தான் அத திருடினியா…” என அடிக்க போக “இந்த அடிக்குற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க.. யாருக்கு வேணும் உங்க நகை… இது எங்க இருந்துச்சு தெரியுமா?” என கேள்வியாக கேட்டு அந்த இடத்தையும் காட்டினான்.

என்ன நடந்திருக்கிறது என்றால் சுமதி அந்த நகையை வைக்கும் போது போன் பேசி கொண்டு இருந்ததால் அது தவறுதலாக கீழே விழுந்து விட்டது. அதன் பிறகு அதை கவனிக்காமல் விட்டு அதுவும் கால் பட்டு பெட்டிக்கு அடியிலே சென்று விட்டது. அது தெரியாமல் தான் நகையை தேடிவிட்டு இவ்வளவும் செய்தார் சுமதி.

அருண் நன்றாக தேடி பார்த்து கடைசியில் ஏதேர்ச்சியாக பீரோவின் கீழே பார்க்க அங்கு இருந்தது. அதை தான் தாயிடம் காட்டி, “முதல்ல நல்லா தேடணும். எல்லா தப்பும் உங்கமேல வெச்சுகிட்டு, இப்படி ஒன்னும் தெரியாத அக்காமேலே கடைசியாய் எல்லா பழியும் போட்டுட்டீங்க. நீங்க ஏன் தான் இப்படி இருக்கீங்க. ஏற்கனவே அக்காவை கொடுமை படுத்துறது போதாதா, இப்போ திருடின்னு சொல்லி அசிங்க படுத்திட்டிங்க.. இன்னும் என்ன தான் வேணும் உங்களுக்கு… எவ்ளோ நாள் தான் இப்படி பணம் பணம்னு அது பின்னாடியே சுத்துவிங்க…” என பேசிக்கொண்டே செல்ல, “டேய், போதும் உங்க அக்கா மேல உள்ள பாசம். அவளுக்கு ரொம்ப தான் சப்போர்ட் பண்ற. இந்த மாதிரி அதிக பிரசங்கி தனமா பேசாம போய் படிக்குற வேலையை மட்டும் பாரு. அப்புறம் முக்கியமா இங்க நடந்தது யாருக்கும் தெரியக்கூடாது.. நகை கிடைச்சதை யாருகிட்டயும் சொல்ல கூடாது.. புரியுதா பிச்சுருவேன்… போ” என மிரட்டி அனுப்பி வைக்க அவனும் இது எல்லாம் எங்க திருந்த போகுது என நினைத்து விட்டுவிட்டான்.

தன் அக்காவிடம் இதை சொல்லிவிடலாம் என நினைக்க அப்போது தான் வீட்டுக்கு வந்த கயலை பார்த்து சொல்ல போக சுமதி இருப்பதால் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான். கயலும் வீட்டிற்கு வரும்போதே இருந்த சந்தோஷமான மனநிலை மாறி இரவு என்ன நடக்க போகுதோ என்ற கலக்கம் வந்து ஒட்டி கொண்டது. ஆனால் தன் மேல் எந்த தப்பும் இல்லை எது நடந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று தான் வந்தாள். நேரே தன் அறைக்கு சென்று சிறிது நேரம் கழித்து தன் வேலையை செய்ய கீழே இறங்கும் போது சோபாவில் அமர்ந்து இருந்த சுமதி கயலை அழைக்க, இதுவரை இருந்த தைரியம் இப்போது இல்லை. அடித்தால் கூட வாங்கி கொள்ளலாம், வார்த்தையால் காயப்படுத்தினால் என்ன செய்வது, என்று யோசித்து கொண்டே பயத்துடன் அருகில் சென்றாள். அப்போது…???

அடுத்து என்ன நடக்கும்…. அடுத்த ஏபில பார்ப்போம்

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments