சிற்றம்பலம் இறந்து போனது, வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்திலும் குளறுபடிகளை கிளப்பத்தான் செய்தது. அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் இருக்க, ஜாக்ஷி வேலை செய்வதை போட்டு விட்டு அமர்ந்து விட்டாள். அவளால் ஒன்றும் யோசிக்க முடியவில்லை.
இந்த நிறுவனதுக்கு அவள் வெறும் வைஸ் பிரசிடண்ட் தான். சிற்றம்பலம் என்ன தான் துரோகம் செய்திருந்தாலும், திறமையான நிர்வாகி. அதனால் பொறுப்பு அவரிடம் தான் இருந்தது.
தலைமை பீடத்தில் அவர் இருந்தாலும், ஜகதீஸ்வரி அவரை கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தார்.
சிற்றம்பலம் இறந்ததும், அந்த தலைமை பதவி யாருக்கென இப்போது கேள்வி வந்தது. சிலருக்கு ஜாக்ஷியை தூக்கி வைக்க விருப்பம். சிலருக்கு ஜாக்ஷிக்கு எதுவும் தெரியாது வேண்டாம் என்ற எண்ணம்.
சிலர், எரியும் வீட்டில் புடுங்கும் வரை லாபம் என்று கிளம்பி இருந்தனர். சிலர் நானே தலைமைக்கு வந்தால் என்ன? என்று யோசித்து கூட்டத்தைச் சேர்க்கப் பார்த்தனர்.
எல்லாமே காதில் வந்து விழுந்த வண்ணம் இருக்க, ஜாக்ஷி இப்போது அடுத்த முடிவுக்கு வர வேண்டும்.
அவளுக்கு தலைமை பதவியில் அமர்வதில் பயமில்லை தான். ஆனால் பொறுப்புகள் அதிகம். அதை தூக்கி சுமந்து கொண்டு அலைய தான் தயாரா? என்பது தான் அவளது யோசனை.
அரை நாள் குழப்பங்களில் கடந்து போய் விட, ஜகதீஸ்வரியிடமிருந்து செய்தி வந்தது.
சீக்கிரமே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி. அதில் அவர் சில விசயங்களை அறிவிக்கபா போவதாகவும் சொல்லி அனுப்பி விட்டார்.
“பாட்டி தான் பேசனும் இனி” என்று ஜாக்ஷியும் முடிவு செய்து விட்டாள். முக்கியமான ஆட்களுக்கு செய்தி பறந்து சென்றது.
இரண்டு நாட்களில் தலைமையை உறுதி செய்வதாக முடிவு செய்தனர்.
*.*.*.*.*.*.*.*.
வீரா வீட்டுக்கு வந்ததும், பாட்டியை விட்டு விட்டு அவர்களது வயலுக்கு சென்று விட்டான்.
அறுவடை முடிந்து போனதால், பூமி காய்ந்து கிடந்தது. இனிதான் அடுத்த வேலையை ஆரம்பிப்பார்கள்.
ஒரு கல்லில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க, அவனது கைபேசி அழைத்தது.
தாமரையின் பெயரை பார்த்து விட்டு, எடுத்து காதில் வைத்தான்.
“சொல்லுங்க” என்றதும் தாமரை அந்த பக்கம் அழுது விட்டார்.
“என்னாச்சு? ஏன் அழுறீங்க?”
“வீரா.. அப்பாக்கு கிட்னி ஃபெயிலியராம்..” என்றவருக்கு வார்த்தை வரவில்லை.
“வாட்? என்ன நடந்துச்சு? எங்க இருக்கீங்க?”
“ஹாஸ்பிடல்ல..” என்றவர் மேலும் அழ, விவரங்களை வாங்கிக் கொண்டவன் உடனே வீட்டுக்கு ஓடினான்.
“அப்பத்தா..” என்று அவசரமாக கூப்பிட படி உள்ளே நுழைந்த பேரனைப் பார்த்து, அவரும் பதட்டமானார்.
விசயத்தை சொல்லி விட்டு, “நான் போய் என்னனு பார்க்குறேன்” என்று கிளம்பினான்.
“நானும்…”
“வேணாம் வேணாம். இப்ப தான் அலைஞ்சுட்டு வந்துருக்கீங்க. வீட்டுல இருங்க. எதாவது டிரீட்மெண்ட் தான் பார்க்க சொல்லுவாங்க. அப்புறமா போய் பார்க்கலாம்” என்றவன், உடனே கிளம்பியிருந்தான்.
தாமரை கணவனுக்காக கண்ணீர் விட்டபடி இருக்க, அருகே அவருடைய இளைய மகள் கவிதா, முகம் இருண்டு போய் அமர்ந்திருந்தாள்.
வீராவை பார்த்ததும், “ம்மா.. அண்ணேன்” என்று கை காட்டினாள்.
“இப்ப எப்படி இருக்காங்க?” என்று வீரா கேட்க, “உள்ள தான் தூங்கிட்டு இருக்காங்க. கிட்னிய மாத்துறது தான் நல்லதுனு டாக்டர் சொல்லுறாரு வீரா. எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல” என்றார் தாமரை.
“அப்ப மாத்திக்கலாம். மத்தவங்க?”
“அருளு காலேஜ்ல இருந்து வரல. சேகர் வேலைக்கு போயிருக்கான். இவ தான் ஸ்கூலுக்கு லீவ் போட்டு வீட்டுல இருந்தா. வயிறு வலிக்குதுனு ரொம்ப துடிச்சாருனு கூட்டிட்டு வந்தோம்”
“எதாச்சும் சாப்பிட்டியா?” என்று கவிதாவிடம் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள்.
“எதாவது சாப்பிடுங்க போங்க. நான் டாக்டர் கிட்ட கிட்னி எப்ப கிடைக்கும்னு பேசிட்டு வர்ரேன்” என்று கூறி இருவரையும் அனுப்பி விட்டு, மருத்துவரை பார்த்தான்.
“எதாவது பெரிய ஹாஸ்பிடல்லனா சர்ஜரி ஈசியா இருக்கும் சார்” என்றார் மருத்துவர்.
அவனுக்குமே அது தான் தோன்றியது. அன்றைய நாளை அங்கே கழித்து விட்டு, அடுத்த நாள் வீட்டுக்கு வந்து விட்டனர்.
“நான் நாளைக்கு ஊருக்குப் போறேன். என்னோட வேலைய ரிசைன் பண்ணிட்டு சென்னை போறேன். அங்க ஹாஸ்பிடல்ல சேர்க்கலாம். ரொம்ப யோசிக்காதீங்க. கிட்னி சீக்கிரம் கிடைச்சுடும் மாத்திடலாம்” – வீரா
“நான் வேணும்னா கிட்னி கொடுக்கட்டுமா?” என்று அருள் கேட்க, வீரா மறுப்பாக தலையசைத்தான்.
“நீ கொடுக்குறது தப்பில்ல. ஆனா நீ சின்ன பையன். காலம் முழுக்க ஒன்னோட வாழனும். நாம வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்”
“ஆனா நிறைய செலவாகும்ல?”
“ஏன் என் கிட்ட இல்லையா? நான் தந்தா வாங்க மாட்டீங்களா?” என்று லட்சுமி கேட்க, யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.
இதே வீட்டுக்குள், லட்சுமியையும் வீராவையும் நுழையவிடாமல் தடுத்ததை எல்லாம் அவர்களும் பார்த்திருக்கிறார்கள். எல்லாம் அவர்களது சொந்த பாட்டி இருந்த காலத்தில். அதன் பின்பு வந்து ஒட்டிக் கொள்ளவில்லை என்றாலும், வெட்டி விடவும் இல்லை.
இப்போது அவர்களது பணத்தில் தான் சிகிச்சை என்பது, என்னவோ போல் இருந்தது. அவர்களிடமும் இருக்கிறது தான். ஆனால் எல்லாம் நிலமாக இருக்கிறது. அதை விற்று, பணத்தை எடுக்க அலையக்கூட யாருக்கும் தெம்பில்லை.
கிட்டத்தட்ட வீராவின் வயது கொண்ட சேகர் மட்டும், அமைதியாக இருந்தான். அவன் வீரா அளவு பெரிய வேலைக்குப் போகவில்லை. நிறைய சம்பளமும் இல்லை. சேமிக்கும் பழக்கமும் இது வரை இருந்தது இல்லை. அவனால் உதவ முடியாது என்ற உண்மை புரிந்த போது, தலையை நிமிர்த்தாமல் அமர்ந்து விட்டான்.
அவர்களை வீட்டில் விட்டு விட்டு, லட்சுமியோடு வீரா கிளம்பினான்.
“அப்ப நீ சென்னையில வேலை பார்க்க போறியா வீரா?” என்று கேட்ட பாட்டிக்கு, தலையை மட்டும் தான் அசைத்தான்.
“ரொம்ப சந்தோசம். எங்க மாட்டேன்னு சொல்லிடுவியோனு நினைச்சு கவலையாவே இருந்துச்சு”
“மாட்டேன்னு சொல்ல காரணமே இல்ல அப்பத்தா. அவங்க கம்பெனி ரொம்ப பெருசு. வேலையிலயும் ரொம்ப நல்ல வேலை. அங்க வேலை கிடைச்சு போகாம இருக்கது தான் தப்பு”
“சரிபா சரிபா”
அவர் சந்தோசமாக தலையாட்டினாலும், அவனுக்குள் ஜாக்ஷியை பற்றிய எண்ணம் ஓடிக் கொண்டு தான் இருந்தது.
அவளை கவனித்த வரை, நல்ல நிர்வாக திறமை இருப்பதாக தான் அவனுக்கு தோன்றியது. சொந்த குடும்பத்தை அடித்து துரத்தினாளே! அவளது பேச்சும் பாவனையும், அவளுக்கு ஒரு பாதுகாப்பு தேவையே இல்லை என்றது.
ஆனால் அவளுடைய பாட்டி வேண்டும் என்கிறார். அதற்கு வீரா தகுதியானவன் என்று எந்த வகையில் முடிவு செய்தார்? என்று அவனுக்கும் புரியவில்லை தான்.
இப்போதைக்கு அவனால் இந்த நல்ல வேலையை விட முடியாது. வேலைக்காக மட்டுமாவது, அவன் அங்கு செல்வது நல்லது என்று முடிவு செய்து விட்டான்.
வீட்டுக்கு வந்ததும் ஜகதீஸ்வரியை அழைத்து சம்மதம் தெரிவித்து விட்டான்.
“நான் ரிசைன் பண்ணுற பிராஸஸ் கொஞ்சம் போகும். ரெண்டு நாள்ல முடிச்சுட்டு சொல்லுறேன்”
“சரிபா..”
“இந்த விசயம் உங்க பேத்திக்கு தெரியுமா?”
“சொல்லல. உன் முடிவ கேட்டுட்டு சொல்லலாம்னு இருந்தேன். நீ வா. நேர்ல பேசிக்கலாம்”
“ஓகே” என்றதோடு முடித்து விட்டான்.
*.*.*.*.*.*.
கூட்டம் கூடியது. ஜாக்ஷி அவளுக்கான இடத்தில் அமர்ந்திருக்க, எப்போதும் சிற்றம்பலம் அமர்ந்திருக்கும் இடத்தில் இப்போது ஜகதீஸ்வரி இருந்தார்.
முக்கியமான சில விசயங்களை பேசி விட்டு, கடைசியாக தலைமை பதவிக்கு யாரை அமர வைப்பது என்ற பேச்சு வந்தது. சிலர் சில கருத்துக்களை சொன்னாலும், ஜகதீஸ்வரி முழு பொறுப்பையும் பேத்தியிடம் கொடுப்பதாக சொல்லி விட்டார்.
“இனி ஜாக்ஷி பார்த்துப்பா. என்னோட பொறுப்பையும் சேர்த்து” என்று முடித்து விட்டார்.
அதாவது சிற்றம்பலத்தை அமர வைத்து, பின்னால் ஜகதீஸ்வரி இருந்தது போல் இனி ஜாக்ஷிக்கு இருக்க மாட்டார். முழு பொறுப்பும் அவளுக்கென்றானது.
இதை ஜாக்ஷியே எதிர்பார்க்கவில்லை. தன் அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல் அமைதியாக இருந்து விட்டாள்.
சிலருக்கு சிறு பெண்ணை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுப்பதில் உடன்பாடில்லை என்றாலும், ஜகதீஸ்வரியின் முடிவை மாற்ற முடியாமல் முணுமுணுப்போடு அடங்கி விட்டனர்.
கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பியதும், ஜாக்ஷி பாட்டியை பார்த்தாள்.
“ஏன் பாட்டி?”
அமைதியாகவே கேட்டாள்.
“எனக்கும் வயசாகுதுல? முன்னாடி மாதிரி எல்லா பிரச்சனையும் தூக்கி தலையில போட்டுக்க முடியல. பிரஷ்ஷர் கூடுதுனு டாக்டர் வேற திட்டுறாரு. உன் புள்ளைங்கள பார்க்குற வரை நான் நல்லா இருக்கனும்னா, இந்த சந்தடிய விட்டு தள்ளி இருக்கது தான் நல்லதுனு முடிவுக்கு வந்துருக்கேன்”
“ரொம்ப கஷ்டம்னா முன்னாடியே சொல்லிருக்கலாம்ல?”
“எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரனும்ல? இப்ப வந்துடுச்சு. இப்ப உன் ஆஃபிஸ்க்கு போகலாம் வா. காதம்பரி பத்தி பேசனும்”
இருவரும் அவளது அறைக்குள் சென்று, மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டனர்.
“அவங்களுக்கு இப்ப என்னவாம்?”
“சொத்துல பங்கு கேட்டு கோர்ட்ல கேஸ் போடுவேன்னு சொல்லிருக்கா”
“ஓஹோ.. கொடுத்ததெல்லாம் போதாதாமா? இன்னும் வேணுமா?”
“வக்கீல் என்ன செய்யலாம்னு என் கிட்ட கேட்டாரு. உன் கிட்ட கேட்க சொல்லிட்டேன். நீ எதாவது பண்ணு. நான் பெத்தத பார்க்கவே எனக்கு பிடிக்கல.”
“சரி பார்த்துக்கலாம். அந்த மேனகா குடும்பம் என்னாச்சு?”
“அவங்க அப்பா எதாவது சொத்து சேர்த்து வச்சுருக்காரானு கேட்டுட்டு இருக்காங்களாம். உயில் படிக்கனும் உங்களுக்கு எப்ப நேரமிருக்குனு கேட்டாரு வக்கீல்”
“அந்த உயில்ல என்ன இருந்தா நமக்கென்ன? நம்மல ஏன் கூப்பிடுறாங்க?” என்று ஜாக்ஷி கடுப்பாக பேச, “பிரொசீஜர மறந்துட கூடாதுல?” என்றார் பாட்டி.
“மண்ணாங்கட்டி. அந்தாளு எத எழுதி இருந்தாலும், எனக்கு அது தேவையில்லாத டேஷ். என் வேலைய விட்டுட்டு இதுக்காக உட்கார்ந்துருக்கனுமா? ப்ச்ச்”
“என்ன தான் இருக்குனு பார்த்துக்க. தெரியாம விடுறத விட, தெரிஞ்சுட்டா தான் அடுத்து என்ன பண்ணுறதுனு யோசிக்க முடியும்”
“என்னவோ போங்க”
“நாளைக்கு சாயந்தரம் வக்கீல் வருவாரு. நீயும் வந்துடு” என்று கூறி விட்டு, பாட்டி வீட்டுக்குக் கிளம்பி விட்டார்.
*.*.*.*.*.*.
வீரா வேலையை விட்டு விட்டான். அவன் தங்கியிருந்த அறையில் இருந்து, பொருட்களை லாரியில் ஏற்றினான். லாரி பின்னால் ஊர் வந்து சேரும். அவன் முதலில் சென்றான்.
தாமரையிடம் பேசி விட்டு, லட்சுமி கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு படுத்திருந்தான்.
தலை முழுவதும் சிந்தனைகள் நிரம்பி வழிந்தது. புது வேலை ஜகதீஸ்வரி சொன்ன காரணத்தால் நிச்சயமாகி விட்டாலும், நிர்வாகத்திற்கென சில கட்டுத்திட்டங்கள் உள்ளது. அதன் படி தான் அவனுக்கு வேலை கிடைக்கும்.
இப்போது, பசுபதியின் அறுவை சிகிச்சையை பற்றி மட்டும் யோசித்தால் போதும். அவனிடம் பணம் இருக்கிறது தான். லட்சுமியிடம் கூட. ஆனால் அதை தாமரை வாங்க மறுக்கிறார். ஒருவேளை அவர்கள் குடும்பத்திற்குள் எதாவது பேசி முடிவு செய்திருக்கலாம்.
கவிதாவிற்காக வாங்கிய நகைகளை, அடகு வைத்து அந்த பணத்தில் சிகிச்சை செய்து கொள்வதாக சொல்லி விட்டார்கள். லட்சுமி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தாமரை கேட்க மறுத்து விட்டார்.
இரண்டு ஆண்பிள்ளைகளும் கூட திடமாக இருக்க, வேறு வழியில்லாமல் ஒதுங்கி விட்டனர். ஆனால் வீரா நல்ல மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பை மட்டும் எடுத்துக் கொண்டான்.
பசுபதியை மருத்துவமனையில் சேர்த்து விட்டால் போதும். அதற்காக நாளை சென்னை செல்ல வேண்டும். கூடவே ஜகதீஸ்வரியை சந்திக்க வேண்டும்.
தலைக்குள் ஓடிய அனைத்தையும் தாண்டி தூக்கமும் வந்து இடம் பிடிக்க, நன்றாக தூங்கி விட்டான்.
அடுத்த நாளே சென்னை கிளம்பி விட்டான். பசுபதியை முதலில் சோதித்த மருத்துவர் சொன்ன மருத்துவமனைக்கே சென்று சேர்ந்தான்.
அங்கிருந்த மருத்துவரிடம் கடிதத்தைக் கொடுத்து விசாரிக்க, பசுபதியின் பெயரை பதிவு செய்து வைக்க சொல்லி விட்டார். அங்கு ஒருமுறை அழைத்து வந்து சோதிக்கவும் கேட்க, தாமரைக்கு அழைத்து விசயத்தை சொன்னான்.
“நீங்க வந்து செக் பண்ணிட்டா போதும். கிட்னி கிடைச்சதும் ஆப்ரேஷன் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லுறாங்க. கிளம்பி வர்ரீங்களா?”
“சரிபா.. சேகர கூட்டிட்டு வர்ரேன். இந்த சின்னதுங்க ரெண்டயும் தான் என்ன பண்ணுறதுனு தெரியல”
“அப்பத்தா கிட்ட விடுங்க. அவங்க பார்ப்பாங்க. டிரீட்மெண்ட் முடியுற வரை இங்கயே தங்குற மாதிரி பார்த்துக்கலாம்”
“ரொம்ப நாளாகுமா?”
“ஆகாது. டாக்டர் சீக்கிரம் பண்ணலாம்னு சொல்லிருக்காங்க. நீங்களே வந்து பேசுங்க தெரியும்”
“சரி சரி. நாங்க கிளம்பிட்டு சொல்லுறோம்” என்று விட்டு வைத்து விட்டார்.
பேசி முடித்ததும் பெருமூச்சு விட்டவன், அப்போதே ஜகதீஸ்வரி வீட்டை நோக்கி கிளம்பி விட்டான்.
அதற்கு முன்பே, அங்கு உயில் வாசிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
காதம்பரி, மேனகா, அவருடைய இரண்டு பிள்ளைகள், ஜாக்ஷி, ஜகதீஸ்வரி, வக்கீல் எல்லோரும் அமர்ந்திருந்தனர்.
சிற்றம்பலம் எழுதிய உயிலை படிக்க ஆரம்பித்தார் வக்கீல். சிற்றம்பலம் மேனகாவை திருமணம் செய்த பிறகு வாங்கிய வீடும் நிலமும், அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் சமமாக எழுதி வைத்திருந்தார்.
மேனகா வாழ்க்கையில் வரும் முன்பே வாங்கிய சில சொத்துக்கள், ஜாக்ஷிக்கு என்று எழுதி இருந்தார். அவர் பெயரில் இருக்கும் கம்பெனி
பங்குகளின் பொறுப்பு மொத்தமும், ஜகதீஸ்வரியிடம் கொடுத்து விட்டார்.
அது ஜகதீஸ்வரி மருமகனுக்காக கொடுத்தது. இது நாள் வரை அதில் வந்த பணத்தில் வாழ்ந்து, தேவையானதை சம்பாதித்து விட்டார். எத்தனையோ தவறுகளை செய்த போதும் ,ஜகதீஸ்வரி அவரை துரத்தி அடிக்காமல், மரியாதையாக நடத்தியதையும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கொடுத்த சொத்தை, அவரிடமே ஒப்படைத்திருந்தார். காதம்பரிக்கென எதுவும் இல்லை. ஒரே ஒரு கடிதம் மட்டும் இருந்தது. அதை காதம்பரியிடம் கொடுத்து விட்டு, பங்குகள் சம்பந்தபட்டவற்றை பாட்டியிடம் ஒப்படைத்தார் வக்கீல்.
ஜகதீஸ்வரியிடம் பங்குகளை சேர்த்தது போல், அவர் கொடுத்த குடும்ப சொத்தான நகைகள் இப்போது மேனகாவிடம் இருக்கிறது. அதையும் ஜகதீஸ்வரியிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார்.
தன் மீது தவறிருந்தாலும், தன் இரண்டு மகள்களின் திருமணத்திற்கு முன் தான் இறந்து விட்டால், ஜாக்ஷியை போல ஜானகியையும் பேத்தியாக நினைத்து, நல்ல வாழ்வை அமைத்து கொடுக்கச் சொல்லி கேட்டதோடு உயில் முடிந்தது.
தொடரும்.
வீரா சென்னைக்கு வந்தாச்சு. என்ன போஸ்டிங் கொடுத்தாங்கன்னு தெரியலையே..?
எம்.டி. போஸ்டிங்கா…?
எம்ப்டி (கணவன்) போஸ்டிங்கா?
இல்லை, பாடிகார்ட் போஸ்டிங்கா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
சூப்பர்