தாமரை சேகரின் நிச்சயதார்த்தம் பற்றி லட்சுமியிடம் பேசினார்.
“வர்ர முகூர்த்தத்துல நிச்சயம் வச்சுட்டு, ஆடி முடிஞ்சதும் கல்யாணம் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம் அத்த.”
“நல்லது தான். காலகாலத்துல கல்யாணம் முடிஞ்சா, உனக்கும் ஒத்தாசையா மருமக இருப்பா”
“வீராவ நிச்சயத்துக்கு கூப்பிடவா அத்த?”
“வருவானானு தெரியல தாமரை. நான் வர்ரேன்”
“வந்தான்னா அவனையும் கூட்டிட்டு வாங்க”
“சரி சரி” என்று சமாளித்து வைத்தார்.
நிச்சயமாக வர மாட்டான். சொல்லி நோகடிக்க வேண்டாம் என்று விட்டு விட்டார்.
நிச்சயதார்த்த வேலைகளை பார்க்க தாமரை கிளம்பி விட, லட்சுமி வீராவிடம் விசயத்தை சொன்னார்.
“என்னைக்கு?”
தேதியை சொன்னார்.
“நல்ல வேளை. நாங்க மறுநாள் தான் வர்ரோம். நீங்க மட்டும் போயிட்டு வாங்க”
“நீங்க வர்ரீங்கனு அவ கிட்ட சொல்லவே இல்ல”
“ரொம்ப நல்லது. என்னால அங்கலாம் போக முடியாது அப்பத்தா”
“சரிபா விடு. நீங்க வீட்டுக்கு வாங்க. திருவிழாவ முடிச்சுட்டு போகலாம்” என்றதோடு விட்டு விட்டார்.
தாமரை வீட்டில் நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்தது. கவிதாவினால் உடனே விடுமுறை எடுத்து வர முடியவில்லை. இப்போது தான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். திருமணத்திற்கு வருவதாக சொல்லி விட்டாள்.
சேகர் நிசாந்தினிக்கு மோதிரம் போட, வெட்கத்துடன் அவளும் போட்டு விட்டாள். விழா முடிந்ததும் லட்சுமி கிளம்ப, “வீரா வரவே இல்லையே அத்த” என்று தாமரை மனம் பொறுக்காமல் கேட்டு விட்டார்.
“அவன பத்தி தான் தெரியுமே. நீ இங்க இருக்க வேலைய பாரு” என்றவர் கிளம்பி விட்டார்.
பசுபதியின் குடும்பத்தினருக்கு வீரா வராதது நிம்மதியாக இருக்க, ஊரில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை.
“இப்படியா மொத்தமா ஒதுக்கி வைப்பான்?” என்று புரணி பேசிக் கொண்டிருந்தனர்.
எதை பற்றியும் கவலைப்படாமல், அடுத்த நாள் காலையில் வீரா, ஜாக்ஷி, ஜகதீஸ்வரி பாட்டி, சுபத்ரா நால்வரும் வந்து இறங்கினர்.
சுபத்ராவிடம் பேசி சரிகட்டியது வீரா தான். அவளிடம் ஊரின் திருவிழாவை பற்றி கூறி, ஆசை காட்டி, பாதுகாப்பை வழியுறுத்தி, அவளை ஒப்புக் கொள்ள வைத்திருந்தான்.
பயந்தாலும், வீராவும் ஜாக்ஷியும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் கிளம்பி வந்திருந்தாள். நான்கு பேரும் வந்ததும், லட்சுமி சந்தோசமாக வரவேற்றார்.
“வாங்க வாங்க.. வாமா.. நீ தான் சுபத்ராவா? சின்ன புள்ளையா இருக்க” என்று அவளை பிடித்துக் கொள்ள, சுபத்ரா கூச்சத்தில் நெளிந்தாள்.
“ஸ்கூல் படிக்கிற புள்ள மாதிரி இருக்கா” என்றதும், “ஆமா பாட்டி.. வெறும் இருபது வயசு தான். காலேஜ் போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறா. நீங்களே கேளுங்க” என்றாள் ஜாக்ஷி.
சுபத்ரா படிக்காததில் அவளுக்கு பெரிய வருத்தம். அதை எப்போதும் போல் இப்போதும் காட்டினாள்.
“படிப்பு தானமா முக்கியம். படிக்காம என்னனு வாழுறது?” என்று லட்சுமி கேட்க, சுபத்ராவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“சரி சரி.. இங்க தான் இருப்பா. அப்புறமா பேசி சரி பண்ணுங்க. இப்ப போய் முகத்த கழுவட்டும் விடுங்க அப்பத்தா” என்றான் வீரா.
அந்த வீட்டில் இருந்தது மூன்று அறை தான். ஜகதீஸ்வரி லட்சுமியோடு தங்கிக் கொள்ள, சுபத்ராவும் ஜாக்ஷியும் ஒரே அறைக்கு வந்தனர்.
“வீடு நல்லா இருக்குல?” – சுபத்ரா
“ஆமா.. நான் கூட கிராமத்து வீடு முற்றம் போல இருக்கும்னு நினைச்சுட்டு வந்தேன். இது மார்டனா தான் இருக்கு”
“குட்டியா அழகா இருக்கு” என்ற சுபத்ரா, பெட்டியை பிரிக்க ஆரம்பித்தாள்.
வீரா தன் அறைக்குச் சென்று விட்டான். குட்டி குளியலை முடித்து விட்டு வர, லட்சுமி வந்தார்.
அதுவரை மற்றவர்களின் தேவையை கவனித்துக் கொண்டிருந்தார். இப்போது பேரனிடம் பேச வந்தார்.
“குளிச்சுட்டியா? எதாவது சாப்பிட கொண்டு வரவா?”
“வேணாம் அப்பத்தா.. வரும் போது டீ குடிச்சுட்டு தான் வந்தோம். டிரைவர் தான் நைட் திரும்ப ஊருக்கு போகனும்னு சொன்னாரு. அவருக்கு தூங்க ஏற்பாடு பண்ணுங்க”
“சொல்லிட்டேன். நேத்து நீ வரலனு எல்லாரும் கேட்டாங்க வீரா”
“நீங்க என்ன சொன்னீங்க?”
“வேலை இருக்கும்னு சொல்லி வச்சேன்”
“அப்ப சரி”
“தாமரை கூட கேட்டா. நீ இல்லாம போய் நிக்கவும் அவ மூஞ்சி சுருங்கி போச்சு”
“அப்பத்தா..”
“உனக்கு பிடிக்கலனு தெரியுது. ஆனாலும் விசேஷ வீட்டுல எல்லாரும் உன்னை எதிர்பார்க்க தான செய்வாங்க”
“கல்யாணத்துக்கு வேணா போயிடலாம். போதுமா?”
“போதும் போதும்”
“சரி இருங்க. உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்”
“என்னபா?”
“நான் போன தடவ வந்தப்போ, ஒரு ஃப்ரண்ட பார்க்க போறதா சொல்லிட்டு போனேன்ல? உண்மையா நான் ஃப்ரண்ட்ட பார்க்க போகல. டெல்லிக்கு ஹாஸ்பிடலுக்கு போனேன்”
“ஹாஸ்பிடலுக்கா?” என்று அவர் அதிர, வீரா அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“என்னடா நீ?” என்று அவர் கண்கலங்கி நிற்க, “ரிசல்ட் நல்லதா தான் அப்பத்தா வந்துச்சு. எனக்கு வர வாய்ப்பில்லனு சொல்லிட்டாங்க” என்றான்.
ஆனாலும் நினைக்கவே பயமாக இருக்க, லட்சுமிக்கு கண்ணீர் நிற்கவில்லை.
“என்ன அப்பத்தா நீங்க? நல்ல விசயம் சொல்லிருக்கேன். சந்தோச படுங்க”
“எல்லாம் அவளால தான? பெத்த அம்மாவா இருந்துட்டு, இப்படி பேசி.. நீ யாருக்கும் சொல்லாம போய் டாக்டர பார்த்துருக்க. ஒரு வேளை முடிவு தப்பா வந்துருந்தா? நினைச்சாலே பதறுது வீரா”
“அது தான் வரலயே. நல்லதா வந்துருக்கு அப்பத்தா.. இனி தலை நிமிர்த்தி சந்தோசமா வாழலாம். மனசுக்குள்ள வச்சு மறுக வேணாம் பாருங்க”
“என்னால ஏத்துக்கவே முடியல. சொல்லிட்டு போயிருக்கலாம்ல?”
“முடிவு வர்ர வரை பயந்துட்டு இருந்துருப்பீங்க. அதான் சொல்லல.”
“நீ பயப்படலயா?”
“இல்லயே. எது வந்தாலும் சரினு தான் யோசிச்சேன். ஆனா தப்பா வந்துருந்தா, கல்யாணம் பண்ணாம உங்களுக்கு பேரனா சந்தோசமா வாழ்ந்துட்டு போயிருப்பேன். இப்ப முடிவு சாதகமா வந்துடுச்சு. சந்தோசமா கல்யாணம், குழந்தை குட்டினு வாழ வேண்டியது தான். நீங்களும் சந்தோசமா கொள்ளு பேரன கொஞ்சுங்க. சரி தான?” என்று கேட்க, லட்சுமி கண்ணீரை மறந்து புன்னகைத்தார்.
தொண்டைக்குழி வலித்தாலும், மனதில் ஆறுதல் பரவியது. பயந்து பயந்து வாழ்வதை விட, இப்போது முடிவு தெரிந்து விட்டது. பேரன் நன்றாக இருப்பான் என்ற எண்ணத்தில், நிம்மதியாக மூச்சு விட்டார்.
“அழாம அடுத்த வேலைய பாருங்க. திருவிழா முடிஞ்சதும் ஜாக்ஷி கிட்ட பேசலாம்” என்று அனுப்பி வைத்தான்.
அவர் நேராக சென்று ஜகதீஸ்வரியிடம் எல்லாம் ஒப்பிக்க, “எனக்கு தான் தெரியுமே” என்றார் அவர்.
“அடிப்பாவி.. ஒரு வார்த்தை சொன்னியா?”
“எனக்கே ரிசல்ட் வர்ரதுக்கு முன்னாடி தான் சொன்னான். சொன்னா நீ பயந்து இப்ப மாதிரி அழுவியேனு தான் சொல்லல. அப்புறம் இந்த பொங்கல் எதுக்குனு நினைக்கிற? ரிசல்ட் நல்லபடியா வந்தா பொங்கல் வைக்கிறதா வேண்டிக்கிட்டேன்.”
லட்சுமிக்கு மீண்டும் மனதில் நிம்மதி வந்தது. ஜகதீஸ்வரிக்கு வீரா யாரோ தான். அவனது நலத்துக்காக வேண்டியிருக்கிறார். ஏற்கனவே எல்லாம் தெரிந்தும், பேத்தியை கட்டி வைக்க விரும்பினாரே. எதை நினைத்தும் பயப்படவில்லையே.
‘இப்படி ஒருத்தியின் பேத்தியை கட்டிக் கொள்ள, வீரா கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தார்.
*.*.*.*.*.*.
“என்னடா பண்ண போற? எதுக்குடா அவள தேடுற?” என்று வினய்யின் நண்பன் கேட்க, “எங்கனு சொல்லுடா” என்று எரிந்து விழுந்தான் வினய்.
“லேப்ல இருப்பானு நினைக்கிறேன்”
உடனே அங்கு ஓடினான்.
கவிதாவும் அவளது சில தோழிகளும் கணினியின் முன்னால் அமர்ந்திருந்தனர். கூட்டமாக இருப்பதை பார்த்து விட்டு, வினய் அவளிடம் பேசாமல் தள்ளிச் சென்றான்.
சில நிமிடங்களில் கவிதாவின் தோழிகள் எல்லோரும் கிளம்பி விட, அவள் மட்டும் தனியாக இருந்தாள்.
உடனே வினய் அவளிடம் சென்றான்.
“கவிதா” என்றதும் திரும்பிப் பார்த்தாள்.
“இந்தா” என்று சாக்லேட்டை நீட்டினான்.
“என்ன?”
“இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்”
“ஓஹோ”
‘வாங்க மாட்டாளோ?’ என்று அவன் நினைத்திருக்க, உடனே வாங்கிக் கொண்டாள்.
“ஹாப்பி பர்த்டே” என்று வாழ்த்த, சந்தோசமாக நன்றி சொன்னான்.
“சாக்லேட் சாப்பிடு”
“வேலை இருக்கு. அப்புறமா சாப்பிடுறேன்” என்றவள், கணினியின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
வினய் அங்கிருந்து சென்று விட்டான்.
‘திடீர்னு இவனுக்கு என்னாச்சு?’ என்று யோசித்தவள், தோளை குலுக்கி விட்டு வேலையை பார்த்தாள்.
கல்லூரி முடிந்து கிளம்பும் வரை, அந்த சாக்லேட் கவரை அவள் பிரிக்கவே இல்லை.
வினய் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
“டேய் உண்மைய சொல்லு. எதுக்கு அவள தேடிப்போய் சாக்லேட் கொடுத்த?”
“அது எதுக்கு உனக்கு?”
“மறுபடியும் எதாவது பிரச்சனை இழுத்து, போலீஸ் ஸ்டேஷன் வரை அலையனுமா? வேணாம்டா”
“நான் ஒன்னும் பிரச்சனை இழுக்கல”
“அப்புறம் என்னடா பண்ணுற?”
“உனக்கு அப்புறமா சொல்லுறேன். பேசாம போடா”
கவிதா, ஹாஸ்டல் சென்று தன் வேலைகளை பார்த்தவள், அந்த சாக்லேட்டை மறந்தே விட்டாள்.
அவளது அறையில் இருந்த வேறு ஒருத்தி, அந்த சாக்லேட்டை பார்த்து எடுத்தாள்.
“கவி.. இதென்ன சாக்லேட்?”
“வினய் பிறந்த நாளாமே.. கொடுத்தான்”
“பார்ரா! உனக்கு தேடி வந்து கொடுத்தானா?”
“அதான் எனக்கும் டவுட்டு.. அத எதுக்கும் ஜாக்கிரதையா பிரி”
“என்னடி பயமுறுத்துற?” என்றவள், தள்ளி வைத்து பிரித்து பார்த்தாள்.
“சாக்லேட் தான் இருக்கு” என்றவள், அதை கையில் எடுத்ததும் ஒரு காகிதம் விழுந்தது.
“ஹேய்.. எதோ லெட்டர்” என்றதும், கவிதா அதை வாங்கி பிரித்து பார்த்தாள்.
“ஐம் சாரி.. நான் அப்படி உன் புக்க கிழிச்சுருக்க கூடாது. இனிமே நாம நல்ல ஃப்ரண்டா இருக்கலாம்னு நினைக்கிறேன். இது என்னோட நம்பர். என்னை மன்னிச்சுட்டா மெஸேஜ் பண்ணு” என்று எண்ணை கொடுத்திருந்தான்.
“அடப்பாவி” என்று மற்றவள் அதிர, “இத பத்தி யாருக்கும் சொல்லாத.” என்றாள் கவிதா.
“ஏன்டி?”
“எனக்கென்னமோ அவன் மேல சந்தேகமா தான் இருக்கு” என்றவள், அந்த காகிதத்தை மடித்து பத்திரப்படுத்தினாள்.
“ஏன்டி? அவனே சமாதானமா போக நினைக்கிறான். நீ இப்படி சொல்லுற?”
“இவன் அவ்வளவு நல்லவன் கிடையாது. எதாவது வம்பு இருக்கும். அதுல இருக்க நம்பர் அவனோடதா இல்லாம இருந்தா? சொல்லு.. எவ்வளவு அசிங்கம் எனக்கு?”
“ஓ.. செக் பண்ணுவோமா?”
“ஒரு ஆணியும் புடுங்க வேணாம். அவன நாளைக்கு பார்த்துக்கலாம். நீ யாரு கிட்டயும் சொல்லாத. சாக்லேட்ட நீயே சாப்பிடு. எனக்கு வேணாம்” என்றவள், அங்கிருந்து சென்று விட்டாள்.
இரவு படுத்திருக்கும் போது, வினய் எதற்காக இப்படிச் செய்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
‘இது உண்மையிலயே அவன் ஃபோன் நம்பர் தானா? கண்டு பிடிக்கிறேன்’ என்று நினைத்தபடி, தூங்கி விட்டாள்.
மறுநாள் காலையில், வேகமாக அந்த காகிதத்தை எடுத்து எண்ணை மனப்பாடம் செய்து கொண்டாள். கல்லூரிக்கு சென்றதும், அவர்களது வகுப்பு மாணவர்கள் பட்டியலை எடுத்து, அதில் இருந்த எண்களை பார்த்தாள். அதில் வினய்யின் பெயரில் அந்த எண் இல்லை.
‘ராஸ்கல்.. என்னடா ப்ளான் பண்ண? யார் நம்பர் அது?’ என்று பல்லைக்கடித்தாள்.
ஆனால் காட்டிக் கொள்ளாமல், வகுப்பில் சென்று அமர்ந்து கொண்டாள்.
வினய் உள்ளே வந்ததும், கவிதாவை தான் பார்த்தான். அவள் சாதாரணமாக அமர்ந்திருக்க, ‘சாக்லேட்ட பார்க்கலயோ?’ என்று யோசித்தான்.
உடனே அவளிடம் சென்றான்.
“கவிதா..”
“ம்ம்?”
“நேத்து சாக்லேட் சாப்பிட்டியா?”
“இல்ல. எனக்கு சாக்லேட் அவ்வளவு பிடிக்காதுனு என் ரூம் மெட் கிட்ட கொடுத்துட்டேன்”
“வாட்?”
“இல்ல.. நேத்து பிறந்த நாள்னு சொல்லி கொடுத்ததால தான், நான் சொல்லல. எனக்கு நிஜம்மாவே சாக்லேட் பிடிக்காது. பட் என் ஃப்ரண்ட் சாப்பிட்டா. வேஸ்ட் ஆகல” என்று புன்னகைக்க, வினய் கடிதத்தை பற்றி கேட்க முடியாமல் விழித்தான்.
“என்ன?”
“ஒன்னுமில்ல.. சாப்பிட்டா சரி” என்றவன் புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
‘இந்த நம்பர் யாரோடதுனு தெரியனும். நாமலா கண்டு பிடிக்குறதா? இல்ல வீரா அண்ணா கிட்ட கேட்போமா? அண்ணன் கிட்டயே போயிடுவோம். பின்னாடி பிரச்சனை வந்தாலும், அண்ணன் நம்மல பார்த்துக்கும்’ என்று நினைத்தவள், ஹாஸ்டலுக்கு சென்றதும் அந்த கடித்தத்தை படமெடுத்து அனுப்பி வைத்தாள்.
“இது அந்த வினய் நம்பர் இல்லனா. நான் ரிஜிஸ்டர்ல செக் பண்ணிட்டேன். அவன் பேரண்ட்ஸ் நம்பரும் இல்ல. க்ளாஸ்ல வேற பசங்களோடதானு பார்த்தேன். எதுலயும் இல்ல. அதான் உங்களுக்கு அனுப்பிட்டேன்” என்று செய்தியும் சேர்த்து அனுப்பி வைத்தாள்.
அது உண்மையில் யாருடைய எண்? கேள்வி அவளை குடைந்து கொண்டே தான் இருந்தது.
தொடரும்.
கவிதா ரொம்ப அழகா வினய் மேட்டரை டீல் பண்றான்னு நினைக்கிறேன். வீராவோட சிஸ்டர்ன்னு ப்ரூவ் பண்றா.
சூப்பர்..!
😀😀😀
CRVS (or) CRVS 2797