Loading

 

ஒரு மாதத்திற்கு முன்பு..

அன்று, முதல் நாள் கல்லூரியில் நுழைந்தாள் கவிதா. நிறைய மதிப்பெண்களை எடுத்து, பிடித்த கல்லூரியில் அடம்பிடித்து சேர்ந்திருந்தாள்.

சென்னைக்கு அனுப்ப குடும்பமே தயங்க, தாமரை மட்டும் வீராவை நம்பினார். ஹாஸ்டலில் தங்கியவள் காலையில் கல்லூரிக்கு வந்திருந்தாள்.

வகுப்பை தேடி நடந்து கொண்டிருக்க, “ஓய்.. நில்லு” என்று அதட்டினான் ஒருவன்.

கவிதா காதில் வாங்காமல் செல்ல, முன்னால் வந்து வழியை மறித்தான்.

“கூப்பிட்டுட்டே இருக்கேன். நீ பாட்டு போயிட்டே இருக்க..”

கவிதா அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

“யாரு நீங்க?”

“அந்த தண்ணிய கொடு கை கழுவனும்” என்று அவளது கையிலிருந்த பாட்டிலை பறிக்க வந்தான்.

சட்டென பின்னால் இழுத்துக் கொண்டவள், “அதெல்லாம் தரமுடியாது” என்றாள் கோபமாக.

“என்ன லந்தா? சீனியர் கேட்குறேன்ல? தண்ணிய கொடு”

“சீனியரா?”

“ஆமா.. நல்லா ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி வாட்டர் பாட்டில்ல தண்ணி கொண்டு வர்ரத பாரு” என்றவன் மீண்டும் பறிக்க வர, கவிதா இரண்டடி பின்னால் சென்று விட்டாள்.

“சீனியர்னா? நான் எப்படி நம்புறது? ஐடி கார்ட காட்டு நம்புறேன்”

அவன் எங்கே போவான் அதற்கு? விழித்துக் கொண்டு நின்று விட, “யார் வந்து சீனியர்னு சொன்னாலும் நம்பிடுவோமா? சரியான லூசு” என்றவள், விருட்டென சென்று விட்டாள்.

“என்னடா.. ஒழுங்கா குழாய்ல கைய கழுவாம, பொம்பள பிள்ளை கிட்ட போய் அசிங்கப்பட்டு நிக்கிற?” என்று கேட்டு சிரித்தான் நண்பன்.

வினய் கவிதாவின் முதுகை முறைத்துப் பார்த்தான்.

“பாட்டில கேட்டா தர மாட்டேங்குறாடா”

“உனக்கு ஏன்டா அவ தரனும்? வந்தன்னைக்கே ஆரம்பிக்காத. இது நம்ம ஸ்கூல் இல்ல. காலேஜ்”

“இருந்தாலும் அவளுக்கு ஓவர் திமிரு தான். சீனியர்னு சொல்லுறேன். ஐடிய காட்டு நம்புறேன்னு சொல்லுறா”

நண்பன் சிரித்து விட்டான்.

“லூசாடா நீ? சீனியர்னு யாரு சொன்னாலும் எல்லாரும் நம்பிடுவாங்கனு நினைப்பா? அந்த புள்ள அறிவாளியா பேசிட்டு போகுது”

“அறிவாளி? திமிருடா.. இதுக்கு பேரு திமிரு” என்று பல்லைக்கடித்தவன், கையை கழுவி விட்டு வகுப்பை தேடிச் சென்று அமர்ந்தான்.

அவன் நுழைந்த அதே வகுப்பில், முதல் வரிசையில் இருந்தாள் கவிதா. அவனை நன்றாக பார்த்தவள், பிறகு நக்கலாக சிரித்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

அங்கே ஆரம்பித்தது இருவருக்குள்ளும் பனிப்போர். அது இன்று காவல்நிலையம் வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

*.*.*.*.*.

ஜாக்ஷி, அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள்.

“சொல்லுங்க மேடம்?”

“மேடம் ஸ்டேஷன் வரை வர முடியுமா?”

“ஏன் என்னாச்சு?”

“வினய் இங்க இருக்கான். அவன் பேரண்ட்ஸ் ஊர்ல இல்ல போல”

“என்ன பண்ணி தொலைச்சான்? ஓகே நான் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றவள் உடனே எழுந்து விட்டாள்.

“என்னாச்சு?”

“போலீஸ் கூப்பிடுறாங்க. என் கூட வர்ரீங்களா?”

“ஓகே போகலாம்”

சுபத்ராவை அழைத்து சொல்லி விட்டு இருவரும் கிளம்ப, வீராவின் கைபேசி இசைத்தது.

“ஹலோ?”

“சார்.. வீரபத்திரனா?”

“ஆமா நீங்க?”

“உங்க தங்கச்சி கவிதா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்க. கொஞ்சம் வர்ரீங்களா?”

சட்டென ஜாக்ஷியை பார்த்தவன், “எந்த போலீஸ் ஸ்டேஷன்?” என்று கேட்டான்.

விவரம் கிடைத்ததும், “இப்பவே வர்ரேன்” என்றான்.

“என்னாச்சு?”

“கவிதா.. தங்கச்சி.. போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கா”

காவல்நிலையம் பற்றி கேட்டவள், “ரெண்டு பேருமே அங்க தான் இருக்காங்க போல. சீக்கிரம் போயிடலாம்” என்றவள் காரை துரிதபடுத்தினாள்.

பத்து நிமிடங்களில் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். வீராவை பார்த்ததும், கவிதா அழுகையுடன் ஓடி வந்து அவனருகே நின்று கொண்டாள்.

“ஸ்ஸ்.. அழாத..” என்று வீரா அமைதியான குரலில் அதட்டினான்.

அவர்களை விட்டு விட்டு, ஜாக்ஷி எழிலரசியிடம் சென்றாள்.

“ஹலோ மேடம்”

“உட்காருங்க மேடம்”

“எப்படி இருக்கீங்க?”

“குட்”

“இப்ப என்ன பண்ணி வச்சான்?”

“நீங்களே கேளுங்க. ரோட்டுல அந்த பொண்ணு அப்படி அழுது. இவன கேட்டா எதுவுமே பண்ணலனு சொல்லுறான்”

ஜாக்ஷி வீராவை ஒரு பார்வை பார்த்து விட்டு, வினய்யை பார்த்தாள்.

“என்ன பண்ண?”

“உங்களுக்கு எதுக்கு பதில் சொல்லனும்? உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று துள்ளினான் வினய்.

வினய், வீராவை பார்த்து அதிர்ந்தது உண்மை. அதுவும் அவன் கவிதாவின் அண்ணன் என்பது கிலியை கிளப்பியது. இருந்தாலும், எழிலரசி ஜாக்ஷியை அழைத்ததை, அவனால் ஏற்கவே முடியவில்லை.

பெற்றோர்களுக்கு தெரிந்தாலும் பூசை தான். கார் விசயத்தில், அசோக்கும் காதம்பரியும் அவனை ஒரு வழியாக்கி இருந்தனர். இதற்கும் பூசை கிடைக்கும். ஆனால் ஜாக்ஷி இடையில் வந்தால், பிரச்சனை மேலும் பெரிதாகும்.

“திமிர பார்த்தீங்களா?” என்று எழிலரசி முறைக்க, “ஆமா மேடம் கொஞ்சம் கூட தான் இருக்கு. ஒன்னு பண்ணுங்க. கேஸ ஃபைல் பண்ணுங்க. அவங்க கம்ப்ளைண்ட் கொடுப்பாங்க. புடிச்சு ஒரு மூணு.. வேணாம் ஆறு மாசம் உள்ள வைங்க. படிப்பு ஊத்திக்கிடும். ஈவ்டிசிங் கேஸ்ல இருந்து, என்னலாம் போட முடியுமோ போட்டு தள்ளி விடுங்க. ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்னு, எந்த காலேஜ்லயும் சீட் கொடுக்க மாட்டாங்க. மாடு மேய்க்கட்டும்” என்று ஜாக்ஷி அடுக்கிக் கொண்டே போனாள்.

“வேணாம் வேணாம்.. மேடம்.. எங்கம்மா அப்பா கிட்ட பேசுங்க.. இவ..ங்க இப்படி சொல்லுறாங்கனு பண்ணிடாதீங்க” என்று பதற ஆரம்பித்தான் வினய்.

கவிதா தேம்பிக் கொண்டிருந்தாள். வீரா அவளை சமாதானம் செய்து விட்டு அருகே வந்தான்.

“என்ன நடந்துச்சு ஜாக்ஷி?”

“சொல்லுவான் கேட்போம். சொல்லுறியா? இல்ல கம்ப்ளைண்ட் கொடுக்க சொல்லவா?” என்று ஜாக்ஷி வினய்யை அதட்ட, தலையை தொங்க போட்டுக் கொண்டு, “நான் ஒன்னுமே பண்ணல.. அவளா தான் அழுதுட்டு இருந்தா” என்றான்.

“நீ எதுவுமே பண்ணாம, உன் கிட்ட வந்து கஷ்டத்தை சொல்லி அழ நீ என்ன கடவுளுடா?” என்று எழிலரசி அதட்ட, ஜாக்ஷி வீராவை பார்த்து கவிதாவை கண் காட்டினாள்.

புரிந்து கொண்டவன், “அழுறத நிறுத்திட்டு என்ன நடந்ததுனு சொல்லு கவிதா..” என்றான்.

“நா.. நான்..” என்றவளுக்கு தேம்பல் தான் வந்தது.

தண்ணீர் பாட்டிலை தூக்கி கொடுத்தார் எழிலரசி.

“இத குடிச்சுட்டு அழாம சொல்லுமா. வந்ததுல இருந்து அழுற.. பொண்ணுனா தைரியமா இருக்க வேணாம்?” என்று மிரட்டி வைத்தார்.

குடித்து விட்டு நடந்ததை விளக்கினாள்.

“காலேஜ்ல இவன்… என் க்ளாஸ் தான்.. இவனுக்கும் இவன் ஃப்ரண்ட்டுக்கும் என்னை பிடிக்காது. நான் ரெஃபரஷன்டேடிவ் ஆனதுல இருந்து, எதாவது வம்பு பண்ணிட்டே இருந்தாங்க. போன வாரம் இவங்க காலேஜ்ல வச்சு சிகரெட் படிக்கிறத பார்த்தேன். அத ஃபோட்டோ எடுத்தேன். இனிமே என் கிட்ட கலாட்டா பண்ணா, இத பிரின்ஸிபல் கிட்ட காட்டிருவேன்னு சொன்னேன்.

அதுக்கு.. நேத்து என் புது புக்க… புது புக்க கிழிச்சுட்டாங்க.. அடம் பிடிச்சு புதுசா வாங்குன புக்.. எல்லாம் தாறு மாறா கிழிச்சுட்டாங்க. என் ஃபோனயும் எடுத்துட்டு, கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா தான் ஃபோன தருவேன். இல்லனா உடைச்சுருவேன்னு மிரட்டுறாங்க. அதுல அம்மா ஃபோன் பண்ணா, அட்டன் பண்ணி தப்பு தப்பா பேசுவேன்னு சொல்லுறாங்க.

அத கேட்டு கெஞ்சுனேன். கால்ல விழுனு கேட்டான். ஃபோட்டோவ டெலிட் பண்ணிடுறேன்னு சொல்லியும் தரல. இன்னைக்கு மறுபடியும் கெஞ்சும் போது தான், இவங்க பார்த்துட்டாங்க”

“நடு ரோட்டுல அழுதுட்டு நிக்கவும், அதுவும் இவன ஏற்கனவே பார்த்துருக்கவும் கூப்பிட்டு வச்சு விசாரிக்க வேண்டியதா போச்சு” என்ற எழிலரசி வினய்யிடம் திரும்பினார்.

‘பிசாசு எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்டா’ என்று வினய் கோபமாக நிற்க, “எங்கடா ஃபோனு?” என்று அதட்டினார்.

வினய் வாயை திறக்கும் முன், “அவன் பேக் செக் பண்ணுங்க” என்று அங்கிருந்த மற்றவருக்கு கட்டளையிட்டார்.

தேடி இரண்டு கைபேசிகளை எடுத்தனர்.

“இதுல எது உன்னது?”

கவிதா கை காட்ட, “பாஸ்வோர்ட் சொல்லு” என்று கேட்டு திறந்து பார்த்தார்.

உள்ளே படங்கள் இருந்தது.

“இத எவிடன்ஸுக்கு எடுங்க” என்று மற்றவர்களிடம் கொடுத்து விட்டு, எழிலரசி ஜாக்ஷியை பார்க்க, அவள் கண்ணை காட்டினாள்.

அடுத்த நொடி வினய்யின் கன்னம் பழுக்கும் அளவு அறை விழுந்திருந்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு. அப்படி ஒரு அடி.

“காலேஜ்ல சிகரெட் பிடிச்சது மட்டுமில்லாம.. கூட படிக்கிற புள்ள புக்கை கிழிச்சு வச்சுருக்க.. இதுல துரை கால்ல வேற விழனுமா?” என்று கேட்டவர், லத்தியால் காலில் இரண்டு அடி வேறு வைத்தார்.

வலி பொறுக்க முடியாமல் வினய் அலற, யாருமே அதை கண்டு கொள்ளவில்லை.

“அந்த ஃபோட்டோல இருக்க அத்தனை பேரையும் கூப்பிட்டு வச்சு பேசுங்க மேடம். இவங்க யாரும் இனி கவிதா பக்கம் தலை வச்சு படுக்க கூடாது. அவள சின்னதா காயப்படுத்துனா கூட, கூண்டோட தூக்கி உள்ள வச்சுடுவேன்னு சொல்லுங்க” என்ற ஜாக்ஷி வீராவை பார்த்தாள்.

“கவிதா.. புக் எங்க?”

“என் பேக்ல”

அதை திறந்து பார்த்தனர். கிழிந்து போன புத்தகத்தை, முடிந்தவரை ஒட்டி வைத்திருந்தாள்.

ஜாக்ஷி வினய்யின் பையிலிருந்து பணத்தை எடுத்தாள்.

“இதுல புது புக் வாங்கிக்கோ கவிதா.” என்று கொடுத்து விட்டு, “கேஸ் எதுவும் போட மாட்டாங்க. கூட்டிட்டு போய் விட்டுட்டு வாங்க” என்று கார் சாவியை வீராவிடம் நீட்டினாள்.

“மேடம்?” என்று வீரா எழிலரசியை பார்க்க, அவரும் கிளம்ப சொன்னார்.

“இனிமே இப்படி பண்ணா அழுதுட்டு நிக்காதமா.. நாலு அப்பு விட்டு நேரா பிரின்சிபல் கிட்ட இழுத்துட்டு போ. இல்லையா இங்க வந்து சொல்லு.. துரைய நான் பார்த்துக்கிறேன்” என்றவர் கையை ஓங்க, வினய் பயந்து பம்மினான்.

“கிளம்புறோம் மேடம்” என்ற வீரா, கவிதாவின் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியேறினான்.

ஜாக்ஷி அங்கேயே இருந்தாள்.

வினய் அவளை முறைக்க, “முறைப்ப பாருடா…! பண்ணது தப்பு.. இதுல முறைப்பா? உன்னை பெத்தவங்க வரட்டும். நாலு வார்த்தை கேட்டுட்டு போறேன்.” என்று நக்கலாக சொல்லி விட்டு, அமர்ந்து கொண்டாள்.

வினய்யை ஓரமாக அமர சொல்லி விட்டு, எழிலரசியும் ஜாக்ஷியும் பேச ஆரம்பித்து விட்டனர்.

*.*.*.*.*.*.*.

வீரா காரை ஓட்ட, கவிதா அழுது கொண்டே இருந்தாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் அழுவ?” என்று வீரா அதட்ட, “அப்பாக்கு தெரிஞ்சா என்னை இங்க படிக்கவே விட மாட்டாரு” என்று தேம்பினாள்.

“அதுக்காக சொல்லாம இருக்க முடியுமா?”

கவிதா மீண்டும் தேம்பினாள்.

“எல்லா இடத்துலயும் பிரச்சனை இருக்க தான் செய்யும் கவிதா. பிரச்சனை இல்லாத இடம், இந்த உலகத்துலயே கிடையாது. நீ தான் சமாளிக்கனும். சமாளிக்க தெரியலனா, படிக்க வந்துருக்க கூடாது. அவன் ஃபோன தூக்குன உடனே எனக்கு ஃபோன் பண்ணிருக்க வேண்டியது தான? கெஞ்சிட்டு இருந்துருக்க. இல்லனா பிரின்சிபல் கிட்ட போயிருக்கலாம்.

பிரச்சனையே நீ தனியா சமாளிக்க முடியாதுனு தெரிஞ்ச உடனே, அடுத்து என்னனு யோசிக்கனும். புரியுதா?”

தலையை ஆட்டினாள்.

“இப்ப ஃபோன் பண்ணி நடந்தத வீட்டுல சொல்லு. எதையும் மறைக்காத. அவங்கள ஒரு நாள் வந்து பார்த்துட்டு போக சொல்லு. உனக்கு தைரியமிருந்தா, இங்க இனியும் இருப்பேன்னு சொல்லி சமாதானம் பண்ணி இரு. இல்லனா கிளம்பி போயிடு. ஒரு மாசம் தான ஆகுது காலேஜ் சேர்ந்து. அங்க போய் வேற எதாவது காலேஜ்ல கூட சேர்ந்துக்க.”

“எனக்கு இங்க தான் படிக்கனும்”

“அப்ப தைரியத்த வளர்த்துக்க. இத விட பெரிய பெரிய பிரச்சனைகள் வந்தாலும், சமாளிக்க தைரியம் இருக்கனும். சமயோசித புத்தியும் இருக்கனும்”

அதோடு பேச்சை முடித்து விட்டு, ஹாஸ்டலில் கொண்டு சென்று விட்டான்.

“சாப்பிட்டியா?”

மறுப்பாக தலையசைத்தாள்.

“நைட் சாப்பாடு லேட்டாகுமா?”

“இல்ல.. கொஞ்ச நேரத்துல கொடுத்துடுவாங்க”

“எதாவது வேணுமா?”

“வேணாம்”

“இரு வர்ரேன்” என்றவன், சில நிமிடங்களில் சிலபல திண்பண்டங்களோடு வந்து சேர்ந்தான்.

“வீட்டுல தைரியமா பேசு. என்ன?”

“ம்ம்.. அவங்க .. அந்த வினய்யோட அக்கா..”

“ஜாக்ஷி”

“அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிடுங்க”

“ம்ம்.. உள்ள போ” என்று அனுப்பி விட்டு கிளம்பினான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
28
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. என்ன பண்ணி என்ன கிழிக்க…? ஒரு லிமிட்டுக்கு மேல ஆம்பிளை பசங்களை சமாளிக்கவே முடியறதில்லை
      அதானே உண்மை நிலவரம்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797