
அத்தியாயம் -6
‘அப்பப்பா! எவ்வளவு பெரிய வில்லத்தனம்! இப்படி எல்லாம் கூடவா இருப்பாங்க மனுஷங்க?’
மனதில் கோபம் பொங்கி வந்தது மீனாவுக்கு. ஆனால் அந்த நேரத்தில் அவளால் அவனை எதிர்த்துப் பேசக் கூட முடியவில்லை என்பது தான் வலி மிகுந்த உண்மை.
அவளுடைய கையாலாகத்தனத்தை நினைத்து அவளுக்கே வெறுப்பாக இருந்தது.
அவனோ, இன்னும் தன் பேச்சைத் தொடர்ந்து கொண்டு இருந்தான்.
“என்ன செல்லம், அப்படியே கோவம் கோவமா வருதா என் மேலே? கொலை செய்ற அளவுக்கு ஆத்திரம் வருதா? ஆனா முடியல இல்ல? ப்ச்ச்ச்ச்.. சோ பேட்!
ஆனா என்ன பண்றது? நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலையே டார்லிங்! சொல்றேன் கேளு!
“இப்ப உன் முகத்தில வரிசையா மாறி மாறி வருதே! பாரு.. பாரு. இப்ப கூட உன் முகம் கோவத்தில அப்படியே செக்கச் செவேல்னு சிவந்து போயிருக்கு பாரு! கொஞ்ச நேரத்தில எத்தனை உணர்ச்சிகள் வருது உன் முகத்தில? அழுகை , கவலை, வெறுப்பு, இன்னும் வரிசையா ம்ம்! அதெல்லாம் நான் பாக்க வேணாம்? சந்தோஷப் பட வேணாம்? அதுக்குத் தான், உனக்கு அலயன்ஸ் ஃபிக்ஸ் ஆகிற வரைக்கும் வெயிட் பண்ணி, அது கல்யாணம் வரைக்கும் வந்து, கல்யாணத்து அன்னைக்கு காலையில அந்த ஆகாஷைத் தூக்கினேன். புரிஞ்சுதா?
ஆனா இதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்குத் தெரியுமா பேபி? எவ்வளவு திட்டம் போட்டு ஒவ்வொரு காயையும் பாத்துப் பாத்து நகர்த்த வேண்டியதா இருந்ததுன்னு உனக்குத் தெரியாது செல்லம்! அத்தான் எவ்வளவு பாவம் தெரியுமா?
ஓகே டார்லிங்! திட்டம் போட்டு திட்டம் போட்டு ரொம்பவே டயர்டா இருக்கு எனக்கு. சோ, நான் இப்ப தூங்கப் போறேன். ஓகேயா? நீ என்ன பண்றேன்னா, உன்னோட இந்த ட்ரெஸ்ச நீ மாத்திப்பியோ இல்ல அப்படியே இருப்பியோ, அதெல்லாம் எனக்குத் தேவையில்லாத விஷயம்.
இந்தக் கட்டில்ல படுத்துத் தூங்குறதுக்கு கூட உனக்கு இடம் கிடையாது. ஏன், உனக்கு அதுக்கு தகுதி கூட கிடையாது. இந்தா, இந்தத் தலைகாணியும் இந்தப் போர்வையும் எடுத்துக்கோ. இந்த ரூம்ல ஒரு மூலையில போயி படுத்துக்கோ”
என்று கூறியவாறு, போர்வை ஒன்றையும் தலையணை ஒன்றையும் அவள் மேல் தூக்கிப் போட்டான்.
வரிசையாக கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு, உடையை மாற்றிக் கொண்டு வந்து படுக்கையில் விழுந்தான். அடுத்த நிமிடமே தூங்கியும் போனான்.
பெண்ணவள் என்ன செய்வாள்? அவனுக்கு என்ன பதில் தருவாள்? எதுவும் பேசாமல், அவன் வீசிய தலையணையையும் போர்வையையும் கையில் எடுத்து ஒரு மூலையில் வைத்து விட்டு, தன் உடைகள் அடங்கிய பெட்டியைத் திறந்து, அதிலிருந்து இரவு உடை ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
உடை மாற்றி வந்ததும் போர்வையை அந்த மூலையிலேயே விரித்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
பாவம், தூக்கமா வரும் அவளுக்கு? நிம்மதியாகத் தூங்கும் நிலையிலா இருந்தாள் அவள்?
ஒரே நாளில் எத்தனை மாற்றம் அவளுடைய வாழ்க்கைக்குள்? ஒரு நாள் முன்பு கூட, உன் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கப் போகிறது என்று யாராவது சொன்னால் கூட அதை நம்பி இருப்பாளா அவள்?
பாவம், தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நினைத்து எத்தனை கனவுகள் இருந்திருக்கும் அவளுக்கு?
நியாயமாக இந்நேரம் ஆகாஷுடன் திருமணம் முடிந்து, முதலிரவை அவனுடன் சந்தோஷத்துடன் கொண்டாடிக் கொண்டு இருந்திருக்க வேண்டியது.
ஆனால் நிலைமையோ, கணவன் என்கிற பெயரில் இந்த சபரி என்கிற முன் பின் தெரியாத ஒரு ஆடவனுடன் வந்து இப்படி ஒரு கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாள்.
இதை என்னவென்று சொல்வது? அவளுடைய விதி என்று சொல்வதா? அல்லது தலையெழுத்து என்று கூறுவதா? அதற்கு என்ன பெயர் வைத்தாலுமே, இந்த நேரம் அவள், வழி தெரியாத ஒரு திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போன்ற ஒரு நிலைமையில் இருக்கிறாள். அது மட்டும் தான் நிஜம்!
இனி மீனாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது? இவனுடன் எப்படி காலந்தள்ளப் போகிறாள் இந்த அப்பாவிப் பெண்?
இதிலிருந்து மீள்வாளா மீனா? இன்பமான இரவாக இருக்க வேண்டிய அந்த இரவு அவளுக்குத் துன்பம் தரும் ஒரு இரவாக சிவ ராத்திரியாக நீண்டு கொண்டிருந்தது.
பலவிதமான யோசனைகளுடன் போராடிக் கொண்டிருந்தாள் பேதையவள்.
மீனாவின் குடும்பம் நான்கே நான்கு பேர் கொண்ட அழகான அன்பான குடும்பம்.
அன்பு காட்டுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை அந்தக் குடும்பத்தில்.
சுந்தரம், ரேணுகா தம்பதியருக்கு முதலில் பிறந்தவன் நவீன். அவன் பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு தான் மீனா பிறந்தாள்.
சுந்தரம், வங்கி ஒன்றில் கணக்கராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். குடும்பத்தை நடத்துவதற்கு ஏற்ப சொற்ப வருமானம் தான் அவருக்கு வந்து கொண்டு இருந்தது அப்போது. அதில் எப்படியோ மகனையும் மகளையும் நல்லபடியாக படிக்க வைத்து விட்டார்.
நவீன், பொறியியல் படிப்பை முடித்து விட்டு மின் வாரியத்தில் வேலை செய்கிறான். அவன் தலையெடுத்த பிறகு குடும்பம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அவனுக்குப் பிறகு மீனாவும் படிப்பை முடித்து வேலைக்குச் சென்றதும், வருமானத்தை சேமிக்கும் அளவுக்கு குடும்பம் முன்னேறி விட்டிருந்தது.
நவீனும் மீனாவும் சேர்ந்து தங்களுக்கு வந்த சம்பளப் பணத்தை அப்படியே சேர்த்து வைத்தனர். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, பத்தாதற்கு கடனை உடனை வாங்கி, தங்கள் தந்தையின் பெயரில் தங்களுக்கு என்று ஒரு சொந்த வீடும் வாங்கி விட்டனர்.
இப்போது ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பு தான் நவீனுக்குத் திருமணம் முடித்தார் சுந்தரம்.
நவீனுக்கு மனைவியாக வந்த அர்ச்சனாவும் நல்ல பெண் தான். குடும்பத்தை அனுசரித்து வாழக்கூடிய பெண்ணாக இருந்தாள். அவளும் ஒரு சிறிய வேலைக்குச் சென்று தன்னால் ஆன உதவியைக் குடும்பத்திற்குச் செய்தாள். அனைவரும் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வந்தனர்.
இப்படியாக அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குடும்பமாக எந்தவித சண்டையோ சச்சரவோ இன்றி அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர்.
மீனா இயல்பாகவே கொஞ்சம் அமைதியான பெண். எங்கு சென்றாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பாள்.
அநாவசியமாக அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் பழக்கம் இல்லை அவளுக்கு. அது அவளுக்கு பிடிக்கவும் செய்யாது.
தான் இருக்கும் இடத்தில் ஏதாவது வம்பு வழக்கு வந்து விட்டால் அங்கிருந்து வேகமாக நகர்ந்து வந்து விடுவாள்.
அளவாகப் பேசி அளவாகச் சிரிக்கும் சுபாவம் கொண்டவள். ஒருவரிடம் தனக்கு ஒத்து வரவில்லை என்றால் அவர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு விடுவாள். அவ்வளவு தான். மற்றபடி அவர்களிடம் வீணான பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ள மாட்டாள்.
பள்ளிப் படிப்பைத் தன் ஊரான இதே சென்னையில் முடித்தாள். சிறு வயதில் இருந்தே அவளுக்கு ஃபேஷன் டிசைனிங் மிகவும் விருப்பமாக இருந்தது.
அதனால் கல்லூரிப் படிப்பு என்று வரும் போது தனக்கு மிகவும் பிடித்தமான, தனது சிறு வயதுக் கனவாக இருந்த ஃபேஷன் டெக்னாலஜி தான் படிக்க வேண்டும், அதுவும் கோவை மாநகரில் இருக்கும் வி எஸ் சி (VSC – கற்பனைப் பெயர்) கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்கின்ற தன் கனவை நனவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தாள்.
கடைசியில் தன் முயற்சியில் வெற்றியும் பெற்றாள். அவளோடு அவளுடைய நெருங்கிய பள்ளித் தோழியான ஷோபனாவும் அதே படிப்பைத் தேர்ந்தெடுத்தாள். இருவரும் சேர்ந்து கோவைக்குச் சென்றனர்.
கல்லூரி விடுதியிலேயே தங்கிப் படிக்க ஆரம்பித்தனர். தோழிகள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததில் உற்ற மகிழ்ச்சி இருவருக்கும். அது இருவருக்கும் ஒரு வகை ஊக்கத்தைத் தந்தது.
மிகவும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் படித்தாள் மீனா. நல்ல மதிப்பெண்கள் வாங்கி, கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது நல்ல ஒரு வேலையுடனே வந்தாள்.
நல்லவேளையாக வேலை, அவளின் சொந்த ஊரான சென்னையிலேயே கிடைத்தது அவளுக்கு. தன் படிப்பு சம்பந்தமான வேலை என்பதால், மிகவும் விரும்பி வேலைக்குச் சென்றாள் மீனா.
நவீனுக்குத் திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீனாவுக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார் சுந்தரம்.
மீனாவுக்கு இப்போது இருபத்து நான்கு வயதாகிறது. இப்போது பார்க்க ஆரம்பித்தால் தான் அடுத்த ஒரு வருடத்தில் திருமணத்தை முடிக்க முடியும் என்கிற எண்ணத்தில் நண்பர்களிடமும் உறவினர்களிடமும், தங்கள் தகுதிக்கு ஏற்ப நல்ல வரன் ஏதாவது இருந்தால் சொல்லுமாறு சொல்லி வைத்திருந்தார்.
ஒரு இரண்டு மாதங்கள் முடியும் வரையிலும் எந்த ஒரு வரனும் வராததால் தெரிந்த கல்யாணத் தரகர் ஒருவரை அழைத்து அவரிடமும் சொல்லி வைத்தார்.
தரகர் எத்தனையோ வரன்களைக் கொண்டு வரத்தான் செய்தார். ஆனால் என்னவோ சுந்தரத்திற்குத் தான் எதுவுமே பிடிக்கவில்லை.
மகள், திருமணத்திற்குப் பிறகும் இதே சென்னையிலேயே இருந்தால் நல்லது என நினைத்தார் அவர். ஆனால் தரகர் கொண்டு வந்த வரன்கள் எல்லாமே வெளியூர் வரன்களும் வெளிநாட்டு வரன்களும் தான்.
இப்படியே ஆறு மாதங்கள் வரையிலும் ஓடி விட்டது. இப்போது சுந்தரமும் ரேணுகாவும் மகளை நினைத்து கவலைப்பட ஆரம்பித்து விட்டிருந்தனர்.
நவீனும் மீனாவும் தான் அவர்களுக்குச் சமாதானம் சொல்லி, கண்டிப்பாக நல்ல வரனாக அமையும் என்று கூறி அவர்களைத் தேற்றினர்.
கடைசியில் நண்பர் ஒருவர் மூலமாக வந்த வரன் தான் ஆகாஷ். அவன் வீட்டிற்கு ஒரே பையன். நல்ல வேலை. நல்ல சம்பளம். குடும்பமும் நல்ல குடும்பமாகத் தான் இருந்தது.
சுந்தரத்திற்கு இந்த வரன் மிகவும் பிடித்து விட்டது. அதில் நண்பர் மூலமாக வேறு வந்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அவருக்கு. ரேணுகாவுக்கும் அப்படித்தான்.
அது என்னவோ, கல்யாணத்திற்கு மாப்பிள்ளையோ பெண்ணோ, அது தெரிந்தவர் மூலமாக வந்து விட்டால், மனம் கொஞ்சம் எளிதாகவே இசைந்து விடுகிறது அனைவருக்கும்.
சம்பிரதாயப்படி பெண் பார்க்க வந்தனர் ஆகாஷ் வீட்டில் இருந்து. அவர்களுக்கும் மீனாவையும் அவளுடைய குடும்பத்தையும் மிகவும் பிடித்து விட்டது.
ஆகாஷுக்கும் மீனாவுக்கும் கூட ஒருவரையொருவர் மிகவும் பிடித்துப் போக உடனே தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.
தன் தாயும் தந்தையும் ஆசைப்பட்டது போலவே, திருமணம் முடிந்த பிறகும் இதே சென்னையில் தான் வாசம் என்பதில் மீனாவுக்கு கொள்ளை மகிழ்ச்சி.
மனம் இறக்கை கட்டிப் பறந்தது அவளுக்கு.
அடுத்த இரண்டு வாரங்களில் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்து, உடனே வேலைகளும் மளமளவென நடந்ததன.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அளவான அமைதியான குடும்பத்தில் வளர்ந்து பிடித்த படிப்பை படித்து முடித்து வேலைக்கும் சென்று தங்களுக்கான வீட்டினை கட்ட பக்கதுணையாய் இருந்திருக்கிறாள்.
பெண்ணை பக்கத்திலேயே வைத்து பார்த்துகொள்ளவேண்டி சொந்த ஊரிலேயே வரன் தேடி அது அமைந்தும் இறுதி நேரத்தில் கலைந்து விட்டது.
தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்கும் பாந்தமான பெண்ணாக உள்ளால்
இவள் எந்த வகையில் இவனது இத்தனை வன்மத்திற்கு காரணம் ஆகியிருக்க முடியும்? சபரி சரியாக புரிந்துகொள்ளாமல் செயல்பட்டுவிட்டானோ?
உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊
சூப்பர்
மிக்க நன்றி 😊
நல்ல அழகான குடும்பம் … அழகாக போயிட்டு இருந்த வாழ்க்கையிலே இவன் ஏன் வந்து இவளை பழி வாங்கணும் … ஏதோ கதை இருக்கு … ஆனா மீனா நிலைமை மோசம் தான்
உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சிஸ் 😊
அருமையான பதிவு
பாவம் மீனா,
பழி வாங்க திட்டமிட்டு தந்திரமாக அவளது திருமணத்தை நிறுத்தி இருக்கிறான் சபரி. ஏதோ பெரிய சாகசத்தை செய்து விட்டது போல பெருமை வேறு.
அடேய், உனக்கு இருக்குடா மவனே
உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊