Loading

தாமதமாக எழுந்த வள்ளியம்மாள் தெய்வானை எழுவதற்குள் ஏதாவது சமைப்போம் என்று அடுப்பை பத்த வைக்க, அவரின் சத்தத்தில் உறக்கம் களைந்து எழுந்தாள் தெய்வானை. 

கண்களை கசக்கி திறந்ததும் வெளிச்சமாக இருக்க பதறி எழுந்து அமர்ந்தாள். “அச்சோ என்னம்மா விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிடுச்சா?” என்று தன் செல்போனை எடுத்து மணியை பார்க்க, மணி 7:30 ஆகியிருந்தது. அதற்குள் பாலை சுடவைத்த வள்ளியம்மாள் இருவருக்கும் காபி கலந்து அவளிடம் “போய் பல் தேச்சுட்டு வாமா, காபி குடிக்கலாம்” என்றார்.  

“ஏன்மா என்னை எழுப்பவில்லை? என்றவறே எழுந்து தன் காலைக்கடனை முடித்து வந்தாள். பின்னர் காபியை எடுத்துக்கொண்டு, “என்னை எழுப்பிருக்கலாமே!” என்க, 

“நானும் இப்பொழுது தான் எழுந்தேன். நான் உனக்கு மதியத்துக்கு சமையல் செய்யணுமா? இல்லை லீவு போட போகிறாயா?” என்றார். 

தெய்வானைக்கு பள்ளிக்குச் செல்லவே பயமாக இருந்தது. மீண்டும் கண்ணன் தொந்தரவு செய்வாரோ என்று. “இல்லை அம்மா. மனதிற்கு ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கு. இன்னைக்கு நான் எங்கேயும் போகல” என்று காபி குடித்துவிட்டு மீண்டும் மகனின் அருகிலேயே படுத்துக் கொண்டாள். ஏனோ இன்று அவளுக்கு எழுந்ததும் குகனின் நினைவுதான் வந்தது. நேற்று முழுவதும் பழைய நினைவுகளை அம்மாவிற்கு சொன்னதால், எனக்கு அவரின் நினைப்பு வருகிறதோ! என்று நினைத்தவாறு மகனை பார்த்தபடி படுத்து கொண்டிருந்தாள். 

மதிய உணவிற்கு பிறகு ஊர் தலைவரை சென்று பார்த்துவிட்டு வருவதாக சொல்லிக் கிளம்பினார் வள்ளியம்மாள். 

ஊர் தலைவரிடம் தெய்வானையை கண்ணன் என்ற வாத்தியார் கல்யாணம் செய்து சொல்லி வற்புறுத்திக் கொண்டிருப்பதாக கூறினார். “நீங்கள் எப்படியாவது பள்ளிக்கூட முதலாளியிடம் சொல்லி அவரை கொஞ்சம் கண்டித்து வையுங்க” சென்றார். 

“கண்ணன் சாரா? அவர் ரொம்ப நல்ல வாத்தியார் ஆயிற்றே!” என்ற ஊர் தலைவர், “சரி மா, நான் கண்டிப்பாக ஐயாவிடம் சொல்கிறேன். இல்லை நான் வேண்டுமென்றால் கண்டித்து பேசவா?” என்றும் கேட்டார். 

“அதெல்லாம் வேண்டாம் ஐயா. அவளே சமாளித்து கொள்கிறாள். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கொண்டே இருப்பதால்தான் என்னிடம் இப்பொழுது கூறினாள். அவருக்கு பயந்துகிட்டே இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு போகாம லீவு போட்டுட்டா!” என்றார் . 

“சரி மா. நான் ஐயா கிட்ட பேசிடுறேன். இதுக்கெல்லாம் பயந்து யாராவது ஸ்கூலுக்கு போகாம இருப்பாங்களா? நீ அந்த பிள்ளைக்கு நல்ல விதமா தைரியம் சொல்லி நாளையிலிருந்து ஸ்கூலுக்கு போக சொல்லு. இனிமேல் அவர் தொந்தரவு செய்யாமல் இருப்பார்” என்று கூறி, வள்ளியம்மாளை நம்பிக்கையாக அனுப்பினார். 

சொன்னபடியே உடனே மேனேஜருக்கும் ஃபோன் செய்து விவரத்தை கூற, அவர் முதலாளியிடம் பேசிவிட்டு அவருக்கு பதில் கூறுவதாக கூறினார். 

வீட்டிற்கு வந்த வள்ளியம்மாள் “தலைவரிடம் சொல்லி இருக்கிறேன். அவர் அந்த வாத்தியாரை கண்டித்து விடுவார். உன்னை தைரியமாக பள்ளிக்கூடத்துக்கு போகச் சொன்னார்” என்றதும் மிகவும் மகிழ்ந்த தெய்வானை, 

“ரொம்ப நன்றி மா. ஆனால் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் வீட்டில் அம்மா தங்கை எல்லாம் இருக்கிறார்கள். அவரின் வருமானம் தான் அவர்கள் குடும்பத்திற்கு என்று, அப்பொழுதும் தன்னால் பிறருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்று கூறினாள். 

அவளின் நல்ல மனதை கண்ட வள்ளியம்மாள், “அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள். கண்டித்து பேசி விட்டு விடுவார். அதற்கு மேல் உன்னை தொல்லை செய்தால் பார்த்துக் கொள்ளலாம்” என்றார். 

மறுநாள் பள்ளிக்குச் செல்ல, அங்கு அவளை முறைத்த கண்ணன், “நான் உன்னிடம் தானே என் காதலை சொன்னேன். நீ ஏன் ஊர் தலைவரிடம் போய் சொன்னாய்? இப்ப பார், நேற்று அவர் எனக்கு ஃபோன் செய்து திட்டுகிறார். நான் நேர்மையாக தானே உன்னிடம் என் காதலை சொன்னேன்” என்று கோபமாக கத்தினான். 

அவனது கோவத்தில் பயந்த தெய்வானைக்கு கண்கள் கலங்க, அழுகையை தன்னுள்ளையே புதைத்துக் கொண்ட தெய்வனை, “நான் உங்களிடம் ஆரம்பத்திலேயே என்னுடைய விருப்பமின்மையை சொல்லிவிட்டேன். மீண்டும் தொந்தரவு செய்வது நீங்கள்தான். நீங்கள் முதன் முதலில் என்னிடம் காதலை சொல்லும் போதே, நான் முடியாது என்று தானே சொன்னேன். 

இருந்தும் நீங்கள் மீண்டும் மீண்டும் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தினீங்க. அது மட்டுமா, செந்தூர் கிட்ட அப்பா என்று சொல்ல சொல்லி இருக்கீங்க. இதற்கு மேலேயும் நான் பொறுமையாக இருக்க முடியுமா? அதான் ஊர் தலைவரிடம் சொன்னோம். 

நான் சொன்னாதான் உங்களுக்கு புரியமாட்டுதே, அதான். இதில் ஒன்றும் தவறில்லையே? என்னவோ நீங்கள் நேற்று காதலை சொல்லி, இன்று நான் கம்ப்ளைன்ட் பண்ணியது போல் பேசுறீங்க.  

இத்தனை நாட்கள் நீங்கள் தொந்தரவு கொடுத்தது தெரியவில்லையா? நான் ஆரம்பத்தில் இருந்தே மறுத்து தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன். என் மறுப்பையும் மீறி, என்னிடம் தொந்தரவு செய்தது நீங்கள்தான். இப்பொழுது என்னையே திட்டுகிறீர்களா?” என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள் தெய்வானை. 

இதுவரை அமைதியாக இருக்கும் தெய்வானையை கண்ட கண்ணனுக்கு, இன்று குரல் உயர்த்தி படபடவென்று பேசும் தெய்வானை, புதிதாக தெரிய, ஆச்சரியமாக பார்த்தான் கண்ணன். 

அவள் சொல்லுவதும் நியாயம் தானே. அவன் தானே அவளை வற்புறுத்திக் கொண்டே இருந்தான். அதில் தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு “சாரி தெய்வானை. நான் உன்னிடம் கோவமாக பேசி இருக்க கூடாது. ப்ளீஸ், அதற்காக என்னை வேண்டாம் என்று சொல்லிவிடாதே. தயவு செய்து என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லி விடு” என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தான். 

அவனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெய்வானைக்கும் தெரியவில்லை.

ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட தெய்வானை “சார் உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று தெரியவில்லை. எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் இருக்கிறது. எனக்கும் என் கணவருக்கும் ஒரு சின்ன பிரச்சனை. அதில் தனித்தனியாக இருக்கிறோம். பிரச்சனை தீர்ந்ததும் இருவரும் சேர்ந்து விடுவோம். இதில் நடுவில் நீங்கள் ஏன் வந்து குழப்புகிறீர்கள்.

உங்களுக்கு திருமணம் வேண்டும் என்றால் உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி, ஒரு பெண்ணை பார்த்து கட்டிக் கொள்ளுங்கள். விருப்பமில்லாத என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? உங்களுக்கு இன்னும் ஒன்று சொல்கிறேன் கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். என்னை மட்டுமல்ல, எந்த பெண்ணை நீங்கள் கல்யாணம் செய்துக்க விரும்பினாலும், அவள் விருப்பம் இல்லை என்றால் அவளை தொந்தரவு செய்வதை தயவு செய்து விட்டு விடுங்கள்” என்று அமைதியாக ஆரம்பித்து கோபமாக முடித்தாள்.

எப்படி கேட்டாலும் தன்னை மறுக்கின்றாளே என்ற கோபம் தான் அவனுக்கு இருந்தது. அவள் கூறிய காரணங்களை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “இதுவரை வராத உன் புருஷனா இனிமேல் வரப்போகிறான்?” என்றான் கோபமாக. 

“அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள். என்றைக்கு இருந்தாலும் அவர் என்னிடம் தான் வருவார், அதைப்பற்றி உங்களுக்கு எந்த கவலையும் தேவையில்லை. தயவுசெய்து இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று தலைக்கு மேல் கை உயர்த்தி ஒரு கும்பிட போட்டுவிட்டு அங்கு இருந்து நகர்ந்தாள். 

கண்ணனிடம் கோபமாக பேசிவிட்டு ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு வந்து அமர்ந்து, தண்ணீரை எடுத்து குடித்து தன்னை சமன்படுத்திக் கொண்டிருந்தாள். அவளின் அருகில் வந்த சக ஆசிரியர்கள், கண்ணனுக்கு ஆதரவாக பேசி, அவனை திருமணம் செய்து கொள்ளும்படி பேசினார்கள். முதலில் அமைதியாக இருந்த தெய்வானை, “நான் உங்கள் யாரிடமாவது வந்து எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டேனா?” என்றாள் கோவமாக. 

அவளின் கோப முகத்தை கண்டதும் எல்லோரும் ஒரு நொடி அமைதியாக அவளை பார்க்க, “தயவுசெய்து எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் வேலையை மட்டும் ஒழுங்காக பாருங்கள். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக இல்லாவிட்டாலும், கடமைக்காவது பிள்ளைகளுக்கு புரியும் படியும், உதவும் படியும் பாடம் நடத்துங்கள்” என்றாள் கோபமாக. 

இதுவரை அமைதியாக இருந்த தெய்வானை, திடீரென்று இப்படி கோவமாக பேசியதை கண்டு எல்லோருமே அதிர்ந்து நின்றனர். 

தெய்வானையின் கோபம் வேலை செய்தது. அதன் பிறகு யாரும் அவளிடம் அவளின் திருமணத்தைப் பற்றி பேசவே இல்லை. கண்ணன் மட்டும் அன்று முழுவதும் ஏக்கமாக அவளை பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் தன் வேலையை ஸ்ருத்தையாக செய்தாள் தெய்வானை. 

அதன் பிறகும் கண்ணனாலும் மற்ற ஆசிரியர்களாலும் அவளுக்கு எந்த தொல்லையும் இல்லை. அதை வள்ளியம்மாளிடம் இரவு சொல்லி மகிழ்ந்தாள். “நீங்கள் ஊர் தலைவரிடம் சொன்னது நல்லாதாக போயிட்டும்மா. அதன்பிறகு கண்ணன் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை” என்றாள் மகிழ்ச்சியாக. 

இப்படியே நாட்கள் கடக்க அவர்களது வாழ்க்கை அப்படியே சென்று கொண்டு இருந்தது. இன்று பௌர்ணமி. காலையில் பள்ளிக்குச் செல்லும் பொழுது தன் மகனையும் கிளப்பி கொண்டிருந்தாள் தெய்வானை. 

“என்னம்மா? செந்தூரை, இன்னைக்கி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறியா?” என்றார் வள்ளியம்மாள்.

“ஆமாம் அம்மா, இன்று பௌர்ணமி அல்லவா? அப்படியே கன்னியாகுமரிக்கு போவேன்ல. அதான்” என்றாள்.

இங்கிருந்து பார்த்தாலும் அதே நிலா தான் தெரியும். நீ ஏன் அந்த கடற்கரையில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாயோ?” என்று புன்னகையாக சொல்லிக்கொண்டு, “சரி மா” என்று அனுப்பி வைத்தார். 

இன்று காலை எழுந்ததிலிருந்தே, ஏனோ மனம் ஒருவித படபடப்பாகவே இருந்தது. ஒருவேளை கண்ணன் இன்று செந்தூரை வைத்து, மீண்டும் எதுவும் நம்மிடம் கேட்டு தொந்தரவு செய்துவிடுவாரோ? என்று நினைத்துக் கொண்டே… பள்ளிக்கு வந்தாள். 

வழக்கத்திற்கு மாறாக கண்ணனின் கண்களில் ஒருவித மரியாதை தெரிவதை கண்டு குழப்பமாக அவனை கடந்து, தன் மகனுடன் சென்றாள் தெய்வானை.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்