Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!! 

அத்தியாயம் – 3 ( 3.2 )

 

இன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன் … 

டி.எ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கல்லூரியின் வாசலில் நின்றுக்கொண்டு அதன் பெயர் பலகையையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தவளின் தோளில் வந்து விழுந்தது ஒரு கரம். தன் தோளில் தீடீரென்று ஒரு கரம் வந்து விழ, அதில் பதறி அடித்துக்கொண்டு இரண்டடி பின்னே சென்றவள் , அக்கரங்களுக்கு சொந்தமானவளின் முகத்தை கண்டு முதலில் சிறு புன்னகை பூக்க , பின் ஏதோ ஞாபகம் வந்தவளாய் தன் எதிரே நின்றவளை முறைக்க துவங்கினாள்.

” ஐயோ மேடம்ஜி என்ன முறைப்பெல்லாம் ரொம்ப பலமா இருக்கு. ஓஹ் மேடம் மதுரைலயிருந்து வந்துருக்கீங்கள்ல அதான் கண்ணகி மாதிரி பார்வையில இவ்ளோ உஷ்ணமா இருக்கீங்க போல , பாத்து மேடம் இது மதுரை இல்ல சென்னை ஏற்கனவே கொழுத்துற வெயிலுக்கு எல்லார் மண்டையும் சூடேறி போய் கிடக்கு , இதுல நீங்க வேற பயங்கரமா முறைக்குறீங்க , பார்த்து சென்னையவே எரிச்சிடப்போறீங்க மிஸ் மாடர்ன் கண்ணகி ” என்று தன்னெதிரே சற்று பயந்தவள் போல் நின்றிருந்த கார்த்திகாவை மேலும் வெறுப்பேத்தி கொண்டிருந்தாள் வந்திதா. 

வந்திதா தன்னை விளையாட்டுக்காய் சீண்டுவதை கூட புரிந்து கொள்ளாத கார்த்திகாவோ 

” ஏன் டி இப்படி எல்லாம் பேசுற ? நானே என் ஊர, என் அப்பா , அம்மாவெல்லாம் விட்டு இவ்ளோ தூரம் இங்க சென்னைக்கு உன்னை நம்பி படிக்க வந்துருக்கேன். ஆனா நீ எப்ப பார்த்தாலும் எங்க ஊர பத்தி பேசி என்னையும் எங்க ஊரையும் கிண்டல் பண்ணிகிட்டே இருக்க. இதுக்கு தான் சென்னைகாரவங்கள நம்ப கூடாதுனு அப்பவே  என் அப்பத்தா சொல்லுச்சு , நான் தான் கேட்கல. உன்ன நம்பி இங்க படிக்க வந்தேன் பாரு , என் புத்திய விளக்கமாத்தாளையே அடிச்சுக்கணும். விடு டி, அம்மா தாயே உன் சங்காத்தமே வேண்டாம் நா என் ஊருக்கே திரும்பி போறேன் ” என்று கல்லூரி வாயிலை கடந்து வெளியில் செல்ல சென்றவளின் கையை  சற்று அழுத்தத்துடன் பற்றினாள் வந்திதா.

 ” ஏய் கார்த்தி இப்போ எதுக்கு நீ இவ்ளோ எமோஷனல் ஆகுற ? நா சும்மா விளையாட்டுக்கு தான அப்படி பேசுனேன் , அதை ஏன்டி இவ்ளோ சீரியஸா எடுத்துக்குற ? ” என்று வந்திதா கார்த்திகாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க பதிலுக்கு கார்த்திகாவும் 

” முதல்ல சும்மா எல்லாத்துக்கும் இப்படி பட்டு பட்டுனு கேள்வி கேக்குறத நிறுத்து வந்தி. இப்போ இவ்ளோ கேள்வி கேக்குறதுக்கு உனக்கு நேரம் இருக்கு , ஆனா என்னை என் ப்ளாக்கு கூட்டிட்டு போய் , கரெக்ட்டா கிளாஸ் பாத்து உட்கார வைக்கரதுக்கு மட்டும்  உனக்கு நேரமில்ல. எவ்ளோ தூரத்துலயிருந்து இங்க படிக்க வந்துருக்கேன். உன்ன நம்பி தான வந்தேன் , ஆனா நீ ரொம்ப தான் பிகு பண்ணிக்குற. போ டி , உனக்கும் இந்த சென்னைக்கும் சேர்த்து ஒரு பெரிய கும்புடு. என்னை ஆள விடு, நா எங்க மதுரைக்கே திரும்பி போறேன் ” என்று வந்திதாவிடமிருந்து தன் கையை விடுவிக்க முயன்று கொண்டிருந்தாள். 

” ஐயோ டா , இந்தம்மா எல்.கே.ஜி பாப்பா இவங்களுக்கு ஒன்னுமே தெரியாது, ஏன் டி ஏழு கழுத வயசாகுது உனக்கு ஆனா இன்னும் வெளிய தனியா போக பயப்படுற. இந்த பயத்த போக்க தான் உன் அப்பா அம்மா வெளியூருக்கு அனுப்பி உன்ன படிக்க வைக்கனும்னு இங்க சேர்த்து விட்டாங்க.

சரி நானும் புள்ளை பாவம் இப்போ தான புதுசா சென்னை வந்துருக்கு  கொஞ்சம் கொஞ்சமா பயமில்லாம வெளிய தனியா போறதுக்கு சொல்லி குடுப்போம்னு உனக்கு பாவம் பார்த்து , இயர்லி மார்னிங் ஏழரை மணிக்கு எழுந்துச்சு உன்னையும் கிளப்பிகிட்டு இந்த சென்னை  ட்ராபிக்ல நாக்கு தல்ல தல்ல இந்த ஓட்ட வண்டில உன்னையும் சுமந்துக்கிட்டு கரெக்டான நேரத்துக்கு  உன்ன கொண்டு வந்து சேர்த்தேன்ல நீ என்ன இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவ.” என்று தம்கட்டி பேசிய வந்திதா கோவத்தில் அவ்விடத்திலிருந்து நகர எத்தனிக்க , கார்த்திகாவோ வந்திதாவின் கோவத்தில் பயந்து போனாள்.

” ஐயோ வந்தி ப்ளீஸ் டி , என்னை தனியா விட்டுட்டு போயிடாத டி. அப்படி போறதா இருந்தா , என்னை பஸ் ஸ்டாண்ட் கூட்டிட்டு போயி , மதுர பஸ்ல பத்திரமா ஏத்தி  விட்டுட்டு நீ எங்க வேணா போ, நா உன்ன எதுவும் கேக்க மாட்டேன். ப்ளீஸ் டி எனக்கு இந்த இடம் , இந்த ஊரு , இந்த ஊராளுங்கனு எதுவுமே புடிக்கல டி. தயவு செஞ்சு என்னை எங்க ஊருக்கே அனுப்பி வச்சிடு ப்ளீஸ் வந்திதா. ” 

கார்த்திகாவின் இக்கூற்றில் மேலும் கோவம் கொண்டாள்  வந்திதா .

” ஏன்டி , நானும் தெரியாம தான் கேக்குறேன் , நீ என்ன இங்கயிருக்க மதுரைல இருந்து தான வந்திருக்க ? என்னமோ மார்ஸ்ல இருந்து வந்த மாதிரி ஸீன் போடுற. ஏன் உங்க ஊர்ல நீ மனுஷங்களையே பார்த்தது இல்லையா ? நாங்களும் அதே மனுஷங்க தான் , மிருகங்க இல்ல , இங்க இருக்க யாரும் உன்ன கடிச்சு திண்ணுற மாட்டாங்க. சும்மா சும்மா ஏன் டி இப்படி பயந்து சாகுற ? ” 

இம்முறை வந்திதா கார்த்திகாவை சற்று கடுமையாக திட்டி விட , அதில் பொங்கி வந்த அழுகையை அடக்க வழி தெரியாமல் , மடை திறந்த வெள்ளம் போல் கார்த்திகா பட படவென்று தன் கண்ணீரை கொட்ட துவங்கினாள். 

அவள் அழுகையை கண்ட வந்திதாவிற்கு தன் கோவமெல்லாம் நொடிப்பொழுதில் காற்றில் கலந்து மாயமாய் மறைந்து விட , கார்த்திகாவை சமாதான படுத்தும் வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

” ஐயோ கார்த்தி சாரி டி , நா நீ எதுக்கெடுத்தாலும் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்னு சொன்னீயா. அதான் கார்த்தி கோவத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்.  ” 

இவ்வாறு வந்திதா கார்த்திகாவை சமாதானம் செய்து கொண்டிருக்க , அவர்களுக்கே பின்னே ஓர் குரல் சத்தமாக ஒலித்தது. 

” டேய் வா ரே வா , நான் கூட நீ வெறும் கவிதை மட்டும் தான் நல்லா எழுதுவேன்னு நெனச்சேன் டா , ஆனா பரவால்லையே கதைக்கு டயலாக்ஸ் கூட சூப்பரா எழுதுற . மதுர  மாஸு , மார்ஸு மெர்மைடு , வாவ் மச்சான்  ரெய்மிங் எல்லாம் தாறு மாறு டா. ” என்று தன் அருகில் நின்றிருந்த அமுதனிடம் , அவன் கையிலிருந்த சிறு பஸ் டிக்கெட்டில் அமுதன் எழுந்தியிருந்த வசனத்தை பார்த்து , அவனை பெருமையாய் தட்டி கொடுத்து கொண்டிருக்க , அவன் குரலில் ஈர்க்க பட்ட கார்த்திகா தன் அழுகையை நிறுத்திக்கொண்டு அவன் புறம் திரும்ப , வந்திதாவோ ” இவ யார இப்படி வாய பிளந்து பார்த்துக்கிட்டிருக்கா ” என்று ஆச்சரியமாய் அவன் புறம் திரும்பினாள்.

சரியாக அதே நேரம் அமுதனும் , அந்த அவனும் கூட பெண்கள் புறம் திரும்ப , நான்கு ஜோடி விழிகளும் ஒன்றோடு ஒன்று நேர்கோட்டில் சந்தித்து கொண்டது. 

அதில் இரு ஜோடி விழிகள் கண்டதும் காதலில் விழுந்து விட , மற்றொரு ஜோடியோ மோதலுக்கு தயாராகி கொண்டிருந்தது.

ஒருபுறம் காதல் , மறுபுறம் மோதல் …. 

தொடரும் …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. Oosi Pattaasu

      அமுதனுக்குக் கவிதை எழுதுறது கை வந்த கலை, அவன் கஞ்சத்தனத்துக்கே ஊருக்குள்ள வைக்கலாம் ஒரு சிலை…

    2. kanmani raj

      கார்த்திகா ஒரு பயந்தாங்கோளி, அவ தோழி வந்திதாதான் அமுதனோட காதல்கள்ளி…