Loading

என் ஆயுள் நீயே 9

அத்தருணத்திற்கே உரிய இயல்பான படபடப்பு நனியிதழிடம். இரண்டு கை விரல்களையும் கோர்த்து நின்றதில் தெரிந்தது.

அவள் வந்தது முதல் விழிகளை அகற்றாது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் பிரணவ்.

‘அல்ரெடி ரொம்ப சைலண்ட். இப்போ இன்னும் அடக்கம் ஆகிட்டாளோ! தலையை நிமிர்த்தாம நிக்கிறாள். தரையில் எதும் தேடுறாளோ?’ பிரணவ்வின் மனம் அந்நேரம் இப்படித்தான் நினைத்தது.

மனதை அத்தனை இறுக்கமாக இரும்புத்திரை கொண்டு மூடியிருக்கின்றானோ என்னவோ?

பிரணவ் அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அவன் நினைக்கும் ஒன்று நடக்கவில்லை எனும் பயம் அவளிடத்தில் என தவறாக எண்ணிக்கொண்டான்.

‘பெரிய குடும்பம். சொல்றது கஷ்டம் தான்.’ தன்னைப்போல் அவள் மேல் பரிதாபம் கொண்டான்.

“வாம்மா உட்காரு.” விமலா சொல்ல, இன்பாவின் அருகில் சென்று அமர்ந்தாள். அடுத்த கணம் இன்பாவின் கையை பிடித்துக் கொண்டாள்.

புதைத்து வைத்த காதலின் அழுத்தம், அவளவனின் அருகில் கனம் கூடிப்போனதே அவளின் நிலையில்லா தவிப்புக்கு காரணம். அவன் முகம் பார்த்தாள் சேர்த்து வைத்த காத்திருப்புக்கு இணையாக கண்ணீரை கொட்டிவிடுவோம் என்று அஞ்சியே, பிரணவ்வின் முகம் நோக்காது இருக்கின்றாள்.

“ரிலாக்ஸ்டா…” இன்பா மெதுவாக சொல்லியிருந்தாலும், அமைதியாக சூழலில் அனைவருக்கும் கேட்கத்தான் செய்தது.

“ஓகே தான் அண்ணா” என்ற நனியிதழ், “தண்ணி… தண்ணி வேணும் அண்ணா” என்றாள்.

அவளிடம் தென்பட்ட படபடப்பு, தவிப்பு மற்றும் காற்றாய் ஒலித்த அவளின் குரலில், தங்களின் முதல் பேச்சு நினைவுக்கு வந்தது பிரணவ்வுக்கு.

அப்போது இரண்டாம் வருடம். (அஷ்மி முதல் வருடம்.)

பிரணவ்வுக்கு அதுதான் முதல் சந்திப்பு.

ரீமா மற்றும் அஷ்மி வாயிலாக நனியிதழின் பெயர் அறிந்திருந்தாலும், அன்று தான் முதல் முறை ரீமாவின் தோழியாக நேரில் காண்கிறான்.

அவன் மனம் மட்டுமே அறிந்த சந்திப்பு வேறொன்று உள்ளது. அவனாக கூறினால் அன்றி நாம் அறிய வாய்ப்பில்லை.

“லாஸ்ட் மினிட் உன் கோ டான்சர் பொண்ணுக்கு கை உடைஞ்சிடுச்சு சொன்னியே… நனி நல்ல டான்ஸ் பண்ணுவா. ஜாயின் பண்ணிக்கோ” என்ற ரீமா நனியை கையோடு அழைத்து வந்திருந்தாள்.

ரீமாவின் பின் தயக்கத்தோடு விரல்களைக் கோர்த்து பிரித்து என்று படபடப்பாக நின்றிருந்த நனியிதழை கண்டதும், பிரணவ்வின் இதயத்தில் பூ பூத்தது.

‘நனியிதழ்.’ மனதில் சொல்லிக் கொண்டான். மனம் காட்டும் ஆர்வத்தை கண்களில் மறைத்துக் கொண்டான்.

“நோ நீட் ரீமா. நாளைக்கு நூன் டான்ஸ் ஷோ. இன்னும் ஹாஃப் டே தான் இருக்கு. அதுக்குள்ள எப்படி பிராக்டிஸ் பண்ணி, ரிகர்சல் பண்ண முடியும்” என்றான்.

“இல்லை முடியும்” என்று ஓசையின்றி சொல்லிய நனியிதழ்,

“கேட்கல… சத்தமா சொல்லு” என்று அதட்டலாக வந்த பிரணவ்வின் குரலில் வேகமாக விழியுயர்த்தி அரண்டு அவன் முகம் பார்த்தாள்.

“ம்ம்… தட்ஸ் குட். இப்போ சொல்லு” என்றான்.

“நீங்க வன்ஸ் ஸ்டெப்ஸ் போட்டு காட்டுங்க” என்றாள். அப்போதும் அவள் குரல் மெலிந்து தான் வந்தது.

அவளின் இயல்பே இதுதான் போலும் என எண்ணிய பிரணவ், “நீயென்ன அவ்ளோ பெரிய கேஷூவா?” எனக் கேட்க, அவனுடனிருந்த மற்ற நட்புக்கள் யாவரும் சத்தமின்றி சிரித்தனர்.

“டேய் அவள் ஸ்டேஜ் பெர்ஃபாமர் டா. முறையா டான்ஸ் கத்துக்கிட்டிருக்கா. டிஸ்ட்ரிக்ட் லெவல் இன்டர் ஸ்கூல் வின்னர்டா அவள். சைலண்ட் டைப். காலேஜில் எல்லாரும் புதுசு அப்படிங்கிறதால லாஸ்ட் இயர் எதுலையும் பார்ட்டிசிபேட் பண்ணல” என்று ரீமா மற்றவர்களை அடக்கினாள்.

“ஹோ…” எல்லோரும் ஒன்றுபோல வாயால் வட்டமிட்டனர்.

“இப்பவும் பயந்து வரலைன்னு சொன்னவளை, நேத்து புலம்பிட்டு இருந்தியேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தால் ரொம்ப பண்றீங்க. உங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண நினைச்சேன் பாரு” என்று தலையில் தட்டிக்கொண்ட ரீமா, “நீ வா நனி” என்று தோழியின் கரம் பற்றினாள்.

“இரு ரீமா. நம்ம காலேஜ் வின் பண்ணனும் தானே!” என்ற நனியிதழ், ரீமா பிடித்த கரத்தை விலக்கிக்கொண்டு பிரணவ் முன் வந்து நின்றாள்.

தற்போது அவளிடம் நடுக்கமோ, பதட்டமோ எதுவுமில்லை. தன் திறமையை நிருபிக்க வேண்டுமென்ற எண்ணம் கொடுத்த திடம் அவளிடம்.

பிரணவ் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தாள்.

“ஸ்டெப்ஸ் போட்டு காட்டுங்க” என்றாள்.

“ஆஹான்… அதையும் தான் பார்த்திடலாம்” என்ற பிரணவ்வுக்கு நனியிடம் ஏனென்று தெரியாத சுவாரஸ்யம்.

“மியூசிக்” என்ற பிரணவ், தன்னுடன் ஆடும் மற்ற ஜோடியை கண்காட்டி, பார்வையாளர்கள் அமரும்படி சுற்றியிருந்த மேடையில் சென்று அமர்ந்தான்.

பிற நிகழ்ச்சிகளின் பயிற்சியிலிருந்த மாணவ மாணவிகளும் வேடிக்கை பார்க்கும் விதமாக ஆங்காங்கே சுற்றி அமர்ந்துவிட்டனர்.

அந்த ஜோடி மேல்நாட்டு இசைக்கு ஏற்ப ஆடிட, நனியிதழ் அவர்களுக்கு பக்கவாட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

நனியிதழிடம் அழுத்தமான கவனம் இருப்பதைப்போல தெரியவில்லை. இலகுவாக நடனம் பார்ப்பதைப்போல் நின்றிருந்தாள்.

எப்படியும் அவள் ஆட வராதென்று சென்றிடுவாள் என நினைத்தான் பிரணவ்.

அப்போது பிரணவ் தேடி அங்கு வந்த அஷ்மி, ரீமாவுடன் நனியிதழையும் கண்டு, “ஹாய் சீனியர்ஸ்” என்று கையசைக்க, கீற்றாய் புன்னகைத்தாள் நனியிதழ்.

அந்நேரம் மேல்நாட்டு இசை மாறி, குத்து இசை ஒலிக்க, ஆடிக்கொண்டிருந்த ஜோடி விலகிட வேறொரு ஜோடி மாறி ஆடினர்.

“ஒவ்வொரு மியூசிக்கும் ஒவ்வொரு பேர்(pair). பட் நீ டான்ஸ் பண்ணப்போறது மெயின் பிளேஸ். சோ, ஸ்டார்டிங் டூ எண்ட் நீ டான்ஸ் பண்ணனும்” என்றான் பிரணவ்.

ஆடிக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டே… “பண்ணிடலாம்” என்று தலையசைத்தாள் நனியிதழ்.

“அவ்ளோ கான்பிடன்ட்டா?”

“கான்பிடன்ட் தான். என் மேல” என்ற நனியிதழின் பார்வை அழுத்தமாக பிரணவ்வின் முகம் பார்த்து விலகியது.

ரீமா மூலமாக அங்கு நடப்பதை தெரிந்துகொண்ட அஷ்மி, “அண்ணா எனக்கென்னவோ நீ பல்ப் வாங்கப்போறன்னு தோணுது” என்றாள்.

“அடிங்க… நீ எனக்கு சப்போர்ட்டா? இல்லை அவளுக்கா?” என்றான்.

“அஃப்கோர்ஸ் என்னோட சீனியர்க்கு தான். என்னயிருந்தாலும், நீ வேற டிப்பார்ட்” என்று கண்ணடித்தாள்.

மொத்தம் நான்கு ஜோடிகள் முடித்து ஐந்தாவதாக, முதன்மை ஜோடியுடன் மற்ற நான்கு ஜோடிகளும் இணைந்து ஆட வேண்டும்.

“பிரணவ்… ஆல் டூகேதர்.”

“லாஸ்ட் வன் அப்புறம் பார்ப்போம். இப்போ இந்த ஃபோர் செட் ஆஃப் டான்ஸ் பண்ணு” என்றான் பிரணவ்.

“ம்ம்” என்ற நனியிதழ், “தேர்ட் வன் இன்னொருமுறை” என்றாள்.

பிரணவ் புருவத்தூக்கலோடு சிரித்துக்கொண்டே இரு பக்கமும் தலையை ஆட்டி, “டூ இட்” என்றான் அந்த பகுதிக்கான ஜோடியிடம்.

“நனி ஆடிடுவியா? இவனுங்க என்ன கழுத்தை வளைச்சு, கை, கால் முறுக்கி ஆடுறானுங்க. இதுல டைவ் வேற” என்றாள் ரீமா.

“பார்த்துக்கலாம்” என்ற நனி, அவர்கள் ஆடி முடித்ததும், “வன் செக்” என்று அஷ்மியிடம் சென்று எதோ பேசி, அங்கே இருக்கும் அறைக்குள் சென்றாள்.

“உள்ள ரிகர்சல் பார்த்திட்டு வருவாள் போல.” ஒருவன் சொல்லிட, அனைவரும் சிரித்தனர். பிரணவ் பார்த்ததில் சிரிப்பு அடங்கியது.

சில நிமிடங்களில் வெளிவந்த நனியிதழ் மற்றும் அஷ்மி தங்களின் ஆடைகளை மாற்றியிருந்தனர்.

நனியிதழ் ஸ்கர்ட் அணிந்திருந்ததால், டைவ் ஸ்டெப்ஸ் எல்லாம் இருக்கவும், அஷ்மியின் ஜீன்ஸ் மாற்றி வந்திருந்தாள். மேல்சட்டையை டக் இன் செய்திருந்தாள்.

பார்த்ததும் காரணம் கண்டுகொண்டான் பிரணவ்.

“நான் ரெடி. என்னோட பேர்?” என்று ஆடும் இடத்தில் சரியாக சென்று நின்றாள்.

அவளுக்கு ஜோடியாக பிரணவ் சென்று நிற்கவும், அவளிடம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அவன் மீது அப்போதே அவளுக்கு கொள்ளை காதல். தற்போது அவன் கரம் பிடித்து கால்கள் பின்னி ஆட வேண்டும். முகம் குப்பென்று வியர்த்து விட்டது.

“ஹேய் ரிலாக்ஸ்…” என்று அவளருகில் சென்ற பிரணவ் தான் அவளை ஆசுவாசப்படுத்தினான்.

இவ்வளவு நேரமும் தன்னால் முடியுமென்று அத்தனை திடமாக இருந்தவளின் முகத்தில் சட்டென்று பூத்த துளி வியர்வையும், துளிர்த்த அலைப்புறுதலும் ஏனென்று தெரியாது பார்த்தான் பிரணவ்.

நனியிதழ் தன் நண்பி ரீமாவை பார்க்க, காரணம் தெரிந்த அவளோ கண்களை மூடி திறந்தாள்.

இருப்பினும் நனியிடம் சிறு பதட்டம்.

“டைம் ஆகுது.” பிரணவ் சொல்லிட,

“ரெடி… ரெடி…” என்று கண்களை இறுக மூடி தன்னை நிலை நிறுத்தினாள்.

இசை ஒலிக்க, பிரணவ் ஆடத் துவங்கினான். மூடிய விழிகளைத் திறக்காது நனியிதழும் இசையின் தாளத்திற்கு ஏற்ப அசைந்தாட, பிரணவ்விடம் மெச்சுதல். அவனிடம் கை கொடுக்க வேண்டிய இடம், கால்கள் பிணைத்து கரம் கோர்க்க வேண்டிய இடமென அனைத்திலும் சரியாக பொருந்தி ஆடினாள்.

பார்வையாளராக இருந்த அனைவரும் இருக்கையின் நுனியில் வியப்பைக் காட்டினர். இறுதி மெட்டுக்கு பிரணவ் அவளின் இடையோடு கையிட்டு அணைக்க, நனியிதழ் ஒற்றை கால் உயர்த்தி, அவனது தோள்களில் தன்னிரு கைகள் வைத்து நிறுத்த, நடனம் முடிவுபெற்றது.

கைத்தட்டல்கள் அவ்விடம் எதிரொலித்தது. அதன் சத்தத்தில் நனியிதழ் கண்கள் திறக்க, பிரணவ்வின் பார்வை அவளது விழிகளில் கவ்வி நின்றது.

இருவரின் கணங்களும் உறைந்து நின்றன.

“வாவ் சீனியர் சூப்பர்.” என்று கைத்தட்டிக்கொண்டு அவர்களின் அருகில் அஷ்மி வரவே இருவரும் சுயம் மீண்டு விலகி நின்றனர். அதிலும் நனியிதழ் மட்டுமே தன் பார்வையை விலக்கியிருந்தாள்.

“பின்னிட்டிங்க சீனியர்” என்று அஷ்மி மட்டுமில்லாது, மற்ற மாணவர்களும் அவளுக்கு கை கொடுத்து பாராட்டி நகர, பிரணவ்வின் ரசனையான பார்வை மட்டும் விலகவில்லை.

அஷ்மி தன் அண்ணனின் விழி மொழியை கண்டு கொண்டாள். அவள் அவனின் தோளில் கரம் பதித்து, “ஃபிரீஸ் ஆகிட்டப்போல” என்று வினவ, அவனிடம் பதிலில்லை.

நினைவின் அழகியலில் மூழ்கி நிகழ் மீண்ட பின்னரும், அன்றைய உறை நிலையில் கொஞ்சமும் மாற்றமில்லாது இன்றும் தன் முன்னே நிற்பவளின் முகத்தில் லயித்து நின்றிருந்தான் பிரணவ்.

இருவரும் இயற்கையின் வரமான சமுத்திரத்தின் பிண்ணனியில் மொட்டை மாடியில் நின்றிருந்தனர்.

எப்படியும் அனைவரின் முன்னும் பிரணவ்விடம் தனித்துப்பேச தன் தங்கை அனுமதி கேட்டிடமாட்டாளென்று தெரிந்திருந்த உதயன், தானிருக்கும் சூழலிலும் இன்பாவுக்கு அழைத்து இருவரும் தனித்து பேசிட வாய்ப்பு ஏற்படுத்துமாறு கூறி வைத்திட்டான்.

தனித்து பேசியதால் தான் தங்கை அழுகைக்கு சொந்தமாகக் போகிறாள் என்பது முன்பே அறிந்திருந்தால், அந்த பாசமிகு அண்ணன் அதனை செய்யாது இருந்திருப்பானோ.

காதலால் அழுத்தம் கொண்டிருக்கும் உடன் பிறப்பின் மனம், தனிமையில் பிரணவ்வுடன் பேசினால் கொஞ்சம் அமைதி கொள்ளும் என்று நினைத்து செய்ய, விதி அவளின் வலியை கூட்டும் வேலையை செய்திருந்தது.

 

என் ஆயுள் நீயே 10

உப்புக் காற்று முகம் மோத, தென்னை மரத்தின் நிழலில், மொட்டை மாடிச் சுவற்றில் சாய்ந்து, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கால் மேல் காலிட்டு நின்றிருந்த பிரணவ், நனியிதழை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.

காற்றின் வேகத்திற்கு அலைபாய்ந்த புடவை தலைப்பை முன் இழுத்து இறுகப்பற்றி நின்றிருந்தவளின், கன்னம் தீண்டி உறவாடியது அவளின் கேசம்.

செவி மடலில் அசைந்தாடிய குட்டி ஜிமிக்கியில் அவனது இருதயம் தாளம் தப்பி துடித்தது. சடுதியில் தன் எண்ணத்திற்கு முன்னுரிமை அளித்து சீரானான்.

நிமிடங்கள் நீண்டிட,

பிரணவ்வின் மார்பில் பதிந்திருந்த நனியிதழின் பார்வை தானாக மெல்ல உயர்ந்து அவனது முகத்தில் நிலைத்து நின்றது.

அவள் தன் முகம் பார்ப்பதற்காகவே காத்திருந்தவன் போன்று பேச ஆரம்பித்தான் பிரணவ்.

“நாம காலேஜ்மெட்ஸ் அப்படின்னு வீட்ல யாரிடமும் சொல்லலையா?”

“இல்லை. நேத்து தான் நீங்க வரீங்க சொன்னாங்க. எனக்கு சொல்ல சான்ஸ் கிடைக்கல” என்றாள்.

“ஹம்ம்” என்ற பிரணவ்,”லாஸ்ட் டே சொல்லாம கிளம்பிட்ட?” என்றான். பதில் வேண்டும் என்பதாக.

அன்று அவளிருந்த நிலை என்ன? நினைக்கவே ரணம் மேலெழும்பியது. சொல்ல வந்தவளை தான் தன்னை அறியாது மரிக்கச் செய்து அனுப்பியிருந்தானே!

“அண்ணா வந்துட்டாங்க. சோ, உங்களை மீட் பண்ண முடியாமப் போச்சு” என்று நனியிதழ் தடுமாறி சொல்லிட, பிரணவ்விடம் கசந்த முறுவல்.

‘அது மட்டுமா காரணம். அன்னைக்கு மேடமிருந்த நிலைக்கு நானெல்லாம் நினைவு வந்திருந்தால் அதிசயம்.’ விரக்தியாக நினைத்துக் கொண்டான். கண்களை இறுக மூடி திறந்தான்.

“கால், மெசேஜ் எதுவுமில்லை!”

“யாரோடவும் கான்டாக்ட் வச்சிக்கல.” உண்மையைத்தான் கூறினாள். ஆனால் காரணம் சொல்லவில்லை. அவளுக்கு பழக்கமான கல்லூரி நட்புக்கள் யாவும், அவனுக்கும் பழக்கமாயிற்றே! யாரிடம் பேசினாலும், அவனைப்பற்றிய பேச்சுக்கள் வருமே! அது மேலும் வலியாகுமே! அதற்காகவே அவனிலிருந்து அனைவரிலிருந்தும் தள்ளியிருந்தாள். அவனுக்கும் அதே காரணம் தான். ரீமாவிடம் மட்டுமே அவனது நட்பு தொடர்கிறது. அவள் அவனது முதல் நட்பாயிற்றே தவிர்க்க முடியவில்லை. அவளிடமும் நனியிதழ் பேசுவதில்லை என்ற பின்னரே, ரீமாவுடன் பழையது மாதிரி சகஜமாகியிருந்தான்.

“அஷ்மிகிட்ட கூட பேசுறது இல்லைப்போல?”

“எனக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்பட்டுச்சு.”

‘எதுக்காம்?’ அத்தனை கோபமாக வெளிவரத் துடித்த கேள்வியை தொண்டைக்குள் புதைத்தான்.

“வீட்டுக்கு ரொம்ப பயப்படுவியோ?” எனக் கேட்டான்.

இந்தக் கேள்வி ஏன் கேட்கிறானென்று தெரியவில்லை. நெற்றிச் சுருங்க பார்த்தாள்.

“வீட்டிலும் ரொம்ப சைலன்ட்டா இருக்கியே” என்றான்.

“தட்ஸ் மை நேச்சர்” என்ற நனியிதழ், “என் மேல ரொம்பவே பாசம். சோ, அவங்க அன்புக்கு அடிக்ட். அதை பயம்ன்னு சொல்ல முடியாது” என்றாள்.

இதனை அவள் சொல்லாது இருந்திருக்கலாம். அவன் தான் நினைத்திருப்பது சரியென்று உறுதி செய்து கொண்டிருக்கமாட்டான்.

“ம்ம்” என்ற பிரணவ், சில நொடி அமைதிக்குப் பின்னர், “நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணனுமே” என்றான்.

“சொல்லுங்க.” நனியிதழ் முடியாதென்று சொல்லியிருக்க வேண்டுமோ?

“உனக்கு என்னை பிடிக்கலன்னு சொல்லணும்” என்றான்.

‘நான் சொல்லுன்னு சொல்லலைன்னாலும், நீயும் இதைத்தானே சொல்லப்போற. அதுக்குத்தானே உன் அண்ணனே என்கிட்ட தனியா பேச சான்ஸ் வாங்கிக் கொடுத்தான்.’ இல்லாத ஒன்றை இருக்கு என்று நினைக்கும் மனதின் செயல்கள் பொல்லாதது. அதனை இருவரும் உணரும் நாள் என்றோ?

‘நீ சொல்றதுக்கு முன்னாடி நான் முந்திக்கிறேன்.’ சிறுபிள்ளையாக போட்டி போட்டான். திருப்தி பட்டுக் கொண்டான். இதற்கெல்லாம் சேர்த்து வலி சுமக்கப்போவதும் அவனே!

விலுக்கென அவனின் கருவிழிகளோடு முட்டி மோதி நின்ற அவளின் விழியில் வலியின் தடம்.

அவனோ நிர்மலமான தோற்றத்தில் பார்த்திருந்தான்.

உள்ளுக்குள் பெரும் அதிர்வு. ஆழிக்குள் பொங்கும் பேரலையின் சுழல். சமுத்திரத்தின் அடி ஆழம் பிளவுபடும் ரணம். அவளின் இதயத்தை பாறை மோதி சிதறும் நீர்த் திவலைகளாக சிதற வைத்தது.

எத்தனை மகிழ்வோடு, பெருங்காதலோடு தொடங்கிய நாள். அவனின் இந்தப் பேச்சினைக் கேட்பதற்குத்தானா?

கரு மணிகள் பந்தாடியது. அவளின் மனதின் தவிப்புக்கு இணையாக.

அவள் ஏனென்று கேட்பாளென்று காத்திருந்தான். எப்படி கேட்பாள். அவள் தான் அவனின் வார்த்தைகளில் மரித்து நின்றிருந்தாளே.

நெஞ்சுக்கூடு வற்றிட, பிளவு பட்ட வறண்ட நிலத்தில் கருகி நிற்கும் கொடியாய் அவள்.

அவனே பேசினான்.

இருவரில் ஒருவர் தெளிவாக பேசியிருந்தாலும் வலி பரவிய இடம் முழுக்க காதல் பூக்கள் பூத்து நேசம் விரவியிருக்கும்.

அவனோ தன் எண்ணத்தில் நிலையாக நின்றிட, அவள் பேசிடவும் வாய்ப்பின்றி போனது.

“லுக் இதழ்…” நான்கு வருடங்களுக்குப் பின்னர் அவனின் அழைப்பு. இதம் சேர்க்கும் தருணமாக இருந்திடவில்லை.

“எனக்கு மேரேஜ், லவ் இந்த கான்செப்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஒரு வட்டத்துக்குள்ள வாழுற கமிட்மென்ட் எனக்கு வேண்டாம். இதைத்தாண்டி நான் சுதந்திரமா இருக்கணும். இப்போ இந்தியா முழுக்கத் தெரியற என் கம்பெனி, உலக நாடுகள் வரை பேசப்படனும். லைட்டா பேராசைன்னு தெரியும். பட் இது என்னால முடியும். கோல் பெருசா இருந்தா தானே ஓட முடியும். என்னோட இந்த ஓட்டம் குடும்பம் அப்படிங்கிற கடமைக்குள்ள சிக்கிக்கக் கூடாது நினைக்கிறேன். இதை சொல்லி என்னோட மாம் கன்வைன்ஸ் பண்ண முடியல. கொஞ்ச நாளுக்கு முன்ன தான் அட்டாக் வந்து, அவங்க ரெக்கவர் ஆகவே வன் மந்த் ஆச்சு. சோ, என்னால ரொம்ப பிரஷர் பண்ணி சொல்ல முடியல. திரும்ப என்னால, என்னோட முடிவால அவங்களுக்கு எதும் அகிடுமோ அப்படிங்கிற பயம். இப்போ நீ என்னை வேண்டாம் சொல்லிட்டன்னா… இதை வச்சு, சோகமா இருக்க மாதிரி பில்டப் கொடுத்து கொஞ்சநாள் ஓட்டிடுவேன். அதுக்குள்ள என்னோட எண்ணத்தை அவங்களுக்கு புரிய வச்சிடுவேன்” என்று நீண்டு பேசினான்.

உண்மையில் அவளுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை.

இன்று அவனை பார்த்ததும் இல்லையென்றாலும், எல்லாம் பேசி முடித்து சென்ற பின்னராவது, அவனுக்கு அழைத்து தன் காதலை சொல்லிட வேண்டுமென்று நினைத்திருந்தாள்.

இந்த காதலை இதுநாள் வரை பொத்தி வைத்திருந்தது போதுமென்று எண்ணியிருந்தாள்.

முன்பு என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கட்டும். தான் காதலை சொல்லாமல் விட்டதற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இன்று இவள் தான் உன்னவள் என்று முடிவாகியப் பின்னர் காதலை சொன்னால் கட்டாயம் அவனிடம் மறுப்பு இருக்காது. தானாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென அவள் நினைத்திருக்க, அவனோ அவளின் ஆசைக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.

இந்த காதல் ஒன்றை சுமந்து அவள் படும் வேதனையை நினைக்கையில், அவளுக்கே அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

அவனுக்கு பிடிக்காது என்பதற்காக காதலையே சொல்லாமல் விட்டவள், அவனாக தன் பிடித்தம் இதுதானென்று சொல்லிக் கேட்கும்போது, அதனை செய்யாமல் விட்டிடுவாளா என்ன!

மனதை கல்லாக்கிக்கொண்டு,

“நான் என்ன பண்ணனும்?” எனக் கேட்டாள்.

அதுவரை அவளின் முகத்திலிருந்த எதோவொன்று அக்கணம் குறைந்ததுப்போல் உணர்ந்தான். அவனின் மனதிற்கு பிடிபடவில்லை.

அவளின் மனம் வழியாகப் பார்க்கத் தவறிவிட்டான். எங்கனம் அவளின் வலியின் சாயல் அவனுக்கு பிடிபடும்.

“என்னை பிடிக்கலன்னு சொல்லணும்.”

“சரி” என்றவள், அடுத்து ஒரு நொடியும் அவன் முன் நிற்கவில்லை. கீழே செல்ல நகர்ந்திட்டாள்.

பிரணவ்வினுள் ஏனென்று தெரியா ஏமாற்றம். அவள் சரியென்று ஒப்புக்கொள்வாள் எனும் நம்பிக்கை இருந்த போதும், அவள் சரியென்றதில் அவன் மனம் சுணங்கியது.

‘தெரிந்தது தானே! நீ வேணாம் சொல்லலைன்னாலும் அவளே சொல்லியிருப்பாள். இப்போ நீயே கேட்கவும் ஏன், எதுக்கு கேட்காம இதுதான் சான்ஸ் அப்படின்னு அவளே சரி சொல்லிட்டாள். ஆக்ச்சுவலி, இப்போ அவள் உனக்கு மனசுக்குள்ள தேங்க்ஸ் கூட சொல்லிட்டு இருக்கலாம்.’ தன்னுடைய ஏமாற்றத்திலிருந்து தன்னைத்தானே தேற்றுவதாக நினைத்து தேவையில்லாத காரணங்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

நனியிதழ் கீழே செல்வதை உணர்ந்ததும், வேகமாக அவள் பின்னால் சென்று இணைந்து கொண்டான்.

எப்படியும் இருவரும் பேசி முடித்து வந்து, தங்களின் சம்மதம் சொல்லப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் பெரியவர்கள் அடுத்தக்கட்ட பேச்சில் ஆர்வமாக மூழ்கியிருந்தனர்.

இருவரும் ஒன்றாக வந்து நிற்க,

“பேசிட்டிங்களா பிரணவ்? எல்லாம் ஓகே தானே?” விமலாவின் முகத்தில் அத்தனை எதிர்பார்ப்பு.

“அவங்க சொல்லட்டும் மாம்” என்ற பிரணவ், எதுவும் சொல்லாது அமைதியாக விஜயனின் அருகில் அமர்ந்து கொண்டான்.

தங்கையின் முகம் வைத்தே எதோ சரியில்லையென கண்டுகொண்ட இன்பா, மெல்ல அவளருகில் சென்று நின்றான்.

“எதுவாயிருந்தாலும் அண்ணா வரட்டும் நனிம்மா” என்றான்.

இன்பாவை நோக்கி உயிர்ப்பற்ற புன்னகை சிந்திய நனியிதழ், “இப்போவே சொல்றது தான் நல்லது அண்ணா” என்றாள்.

“டேய்…” இன்பா எதோ சொல்லவர,

“என்னடா சொல்றா உன் தங்கச்சி. அவள் சம்மதத்தை எல்லாருக்கும் கேட்கிற மாதிரி சொல்ல சொல்லுடா” என்றார் ஜெயலட்சுமி.

அடுத்து நனியிதழ் தயங்கவோ, தடுமாறவோ இல்லை.

பிரணவ்வின் முகத்தை பார்த்துக்கொண்டே,

“அவங்களுக்கும் எனக்கும் ஒத்துவரும் தோணல பாட்டி. அதற்கு மேல் உங்க விருப்பம்” என்று சொல்லிவிட்டு, அங்கு நிற்காது வேகமாக தனதறைக்குள் புகுந்திருந்தாள்.

அப்போதும் அவன் சொல்ல சொல்லிய அவனை பிடிக்கவில்லை என்று அவள் சொல்லவில்லை. அவன் மீதான பிடித்தத்தின் அளவை தன் உயிராகக் கொண்டிருக்கும்போது, அவனை பிடிக்கவில்லை என்றுதான் அவளால் சொல்ல முடியுமா?

அவன் சொல்ல சொல்லி கேட்கும்போது தெரியாத ஒன்று அவள் சொல்லிச் சென்றதில் உணர்ந்தான் பிரணவ்.

நனியிதழ் சென்ற திசையையே பிரணவ் பார்த்திருக்க, இன்பா அவனை அழுத்தமாக முறைத்து வைத்தான்.

தங்கையாக இதனை சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பது தான் இன்பாவுக்குத் தெரியுமே! உதயனுக்கு அடுத்து நனியிதழின் காதலை அறிந்தது அவன் மட்டுமே!

அங்கு ஆழ்ந்த அமைதி. யாருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

சில மணி நேரங்களில் இரு குடும்பமும் ஒரு குடும்பமாக இணையப் போவதை எண்ணி அத்தனை பேசியிருந்தனர்.

கஜமுகன், ராகவனின் முகத்தை சங்கடமாக ஏறிட, ராகவனோ விரைவாக கிடைத்த நட்பின் கரத்தை ஆதரவாக பிடித்து விடுத்தார்.

விஜயனுக்கும் இளங்கோவனின் முகம் பார்ப்பதைத் தவிர என்ன பேச வேண்டுமென்று தெரியவில்லை.

ஒருவர் முகத்தை ஒருவர் சங்கடமாக பார்த்திருக்க…

“நைட்டு சரின்னு தானே சொன்னா. இப்போ என்னவாம் அவளுக்கு. அவளை வெளிய கூப்பிடு இன்பா. என்னன்னு கேட்போம்” என்றார் குமரி. இப்படி நனியிதழின் திருமணம் ஆரம்ப நிலையிலேயே தடைபட்டால், தன்னுடைய மகளின் திருமணம் தாமதமாகுமே எனும் கவலை அவரிடம்.

“வேண்டாங்க இருக்கட்டும். எதுவும் கேட்க வேண்டாம்” என்ற ராகவன், “ரெண்டு பேரும் பேசி பார்த்ததில் மனசு ஒப்பல. மனசு ஒப்பாம அவங்களை ஏன் கஷ்டப்படத்தனும். ஆண்டவன் சித்தம் என்னவோ அதுதான் நடக்கும். அப்போ நாங்க வரோமுங்க” என்று இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்.

அதற்குமேல் அங்கிருக்க முடியாது விமலாவும் வலிய புன்னகைத்து, தன் ஆட்களுடன் வெளியேறியிருந்தார்.

வண்டியை கிளப்புவதற்கு முன் தாங்கள் இருவரும் ஒன்றாக நின்றிருந்த மொட்டை மாடியை பார்த்து கண்மூடி திறந்தான் குரு பிரணவ்.

மனதில் அவளுக்கு நல்லது செய்துவிட்டோம் எனும் நிம்மதியுடன், பெரும் பாராம் ஒன்றும் அவனுள் குடிகொண்டது.

அந்த பாரத்தின் பெயர் காதல் என்று அவன் மட்டுமே அறிவான்.

 

Epi 11 and 12

https://thoorigaitamilnovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-11-%e0%ae%ae-12/

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்