எபிலாக்…
“என்னங்க… என்னங்க….. “, என அழைத்தபடி அறுபதை கடந்த ஒரு பெண்மணி அறையினுள் வந்தார்.
“எங்க போய் தொலஞ்சாரு இந்த மனுஷன்? ச்ச…. கீழ ரூமுலையே இருக்கலாம்னு சொன்னா கேட்டா தானே? இந்த லிஃப்ட் வேற…. ஷோ….. படில இறங்கணுமா…”, எனத் தனக்குத் தானே புலம்பியபடி படிகளில் இறங்க ஆரம்பித்தார் ரதி.
ஆம்… நமது ஸ்வர்ண ரதி தான்.. இப்போது 60 வயது கடந்து முதுமையின் அழகைத் தொட ஆரம்பித்திருந்தார்.
அப்போது பின்னிருந்து இரு வலியகரங்கள் அவரை நோகாமல் தூக்கிக் கொண்டு படிகளில் இறங்கியது.
அவனைக் கண்டதும் ரதியின் வதனத்தில் பெருமையும், உவகையும் அத்தனையாக பொங்கியது.
ரதி மற்றும் ரகுவின் இரண்டாவது மகவு… அவர்களது மகன். ரதியின் மறு பிம்பமாக, தந்தையின் உடல் திறத்தையும் தாயின் முக அமைப்பும் என இருவரும் கலந்த கலவையாக இன்று வாலிப வயதில் நிற்கிறான்.
துருவன்….. தந்தையின் தொழிலைப் பின்பற்றி முறையாக ஆடையகக் கல்வியைப் பயின்று, தனித் தொழிற்சாலை நிறுவி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதிச் செய்துக் கொண்டிருக்கிறான்.
முதல் மகவான மகளிற்கு ஆதினி எனும் நாமம் சூட்டி, அவளுக்கு விருப்பமான இயந்திர தொழில்நுட்பக் கல்வியைப் படிக்க வைத்து, வெளிநாட்டில் சில காலம் வேலை செய்தாள். தற்சமயம் மனித உதவிசார் இயந்திர வகைகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பிக்கும் முயற்சிகளில் இருக்கிறாள்.
“டேய் துருவா …. பாத்து டா… என் பொண்டாட்டி பத்திரம்…… “, கீழிருந்து ரகு கூறினார்.
“உங்களை தேடிட்டு தான் அம்மா மேல போனாங்க…. நீங்க எங்க இருந்தீங்க? கம்முன்னு வீட்டுக்கு முழுசா சோலார் போற்றலாம்.. ஜெனரேட்டர் கரெண்ட் பிரச்சினை இருக்காது…”, துருவன் தந்தையைக் கடிந்தபடிக் கூறினான்.
“வேணாம் டா கண்ணா…. மரம் இருந்தா தான் வீடு குளிர்ச்சியா இருக்கும்…. மரத்த வெட்ட வேணாம் டா….”, ரதி தனயன் முகம் வருடி கூறவும், “உங்கள வச்சிட்டு …. சரி இனிமே அடிக்கடி மேல போகாம இருங்க.. ஜெனரேட்டர் மாத்தற வரைக்கும் மட்டும்… லிஃப்ட் வேலை செய்யாது… அதுவரைக்கும் கீழ ரூம்ல இருங்க நீங்களும் அப்பாவும்….”, எனக் கூறினான்.
“அதுலாம் முடியாது… நான் என் பொண்டாட்டி கூட என் ரூம்ல தான் இருப்பேன்…. நீ சீக்கிரம் ஜெனரேட்டர் போடற வழிய பாரு….”, என ரகு முந்திக்கொண்டு பதில் கொடுத்தார்.
“நீங்க கம்முன்னு இருங்க…. இங்க பாரு கண்ணா… பெரிய லிஃப்ட் இல்லைனா பரவால்ல டா.. சின்ன லிஃப்ட் இருக்குல்ல அது போதும்…. எனக்கும் அவருக்கும் அங்க படுத்தா தான் தூக்கம் வரும்.. கோச்சிக்காத டா….. “, மகனின் புஜம் பிடித்து அவன் மனமும், கணவனின் மனமும் நோகாமல், பொறுமையாகக் கூறினார்.
“ரெண்டு பேரும் என்னமோ பண்ணுங்க.. ஆதினி இன்னிக்கி வரா.. நான் ஃபேக்டரி போயிட்டு அவளை கூட்டிட்டு வரேன்.. அதுவரை ரெண்டு பேரும் வீட்ல இருங்க.. ஜோடியா வெளியே போயிட்டு அப்பறமா எனக்கு வெளிய இருக்கேன்னு சொல்லாதீங்க…”, எனக் கூறிவிட்டு அலுவலகம் சென்றான்.
ரகுவும், ரதியும் சிரித்தபடி தங்களது வாழ்வின் தொடக்கம் முதல் நடக்கும் தினம் வரையிலும் தினம் ஒரு நினைவைப் பேசி, சண்டைப் போட்டு, சமாதானம் செய்து, நினைத்தால் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு இரவு தாமதமாக இல்லம் வருவதை வழக்கமாக்கி இருந்தனர்.
இவர்களின் மத்திம வயதில் ரகுவின் அம்மாவும், அப்பாவும் அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்துவிட்டனர்.
சாந்தம்மாதேவி இல்லாமல் ரதி தான் பெரிதும் துவண்டுவிட்டாள்.
அவரின் கண்டிப்பான அறிவுரைகளும், வேலை பழக்கும் பாங்கும், வருமானத்தைப் பெருக்கும் அனுபவ யுக்தியும், அத்தனையும் தாண்டி இருவருக்கும் இருந்த ஆழமான பிணைப்பு அவரில்லாமல் போகவும், அவளை வெகுவாகத் தாக்கியது.
“அம்மா நம்ம கூடவே தாண்டி இருப்பாங்க.. கவலப்படாம இரு… வந்து சாப்பிடு வா…. “, ரகு தான் முதல் மூன்று மாதமும் அவளை ஆறுதல் கூறி தோள் தாங்கினான்.
“அத்தைக்கு என்ன அவசரம் அப்படி? நம்ம பசங்க கல்யாணத்த பாக்காமையே போயிட்டாங்க..”
“அவங்களே கூட நமக்கு பேர புள்ளையா வந்தாலும் வருவாங்க டி…. அழாத… வந்து கடை நிர்வாகத்தை கவனி…..”, அதட்டி உருட்டி அவளைத் தேற்றி கவனத்தை மாற்றினான்.
“ரகுப்பா….. சாரி.. உங்கள ரொம்ப படுத்தறேன்…”, என அன்று இரவு அவனை சமாதானம் செய்வாள்.
“அதுலாம் ஒண்ணுமில்ல…. உன்ன பாத்து பாத்து எனக்கு எங்கம்மா இல்லைங்கற நினைப்பே வரது இல்ல…. “
“என்னடா சொல்ற?”, அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“நீ வந்த அப்பறம் நீயும் அவங்களும் தான் ஒன்னாவே இருந்தீங்க… அம்மா இறந்ததும் மனசுல வருத்தமும், வெற்றிடமும் இருந்தாலும் உங்க ரெண்டு பேரோட நெருக்கம் எப்போவும் எனக்கு பொறாமை கலந்த சந்தோசம் தரும்.. இப்பவும் அவங்க உன்கூட ரொம்ப நெருக்கமா இருக்கமாதிரி தான் எனக்கு தோணுது…. சில சமயம் நீ என்னை தொடறப்ப அம்மா தொடற மாதிரியே இருக்கு….”, எனக் கூறி அவளின் மடியில் தலைவைத்து இடுப்போடு கட்டிக் கொண்டு உறங்குவான்.
தன்னில் தாயை உணரும் கணவனை ரதியும் தாயன்போடு அணைத்துக் கொள்வாள்.
இப்படியாக அவர்கள் வாழ்நாளும் இன்று முதுமை எனும் அழகான கிரீடம் தாங்கி மெதுவாக நடக்கத் தொடங்கியுள்ளது.
அவர்களது மகன் அந்த பக்கம் கிளம்பியதும் ரகு ரதியுடன் வெளியே கிளம்பிவிட்டார்.
“ஆனாலும் நாம பசங்களை இப்படி படுத்தக்கூடாது ரகுப்பா… நமக்காக தானே அவன் சொல்றான்…. “, காரில் பயணித்தபடிக் கூறினார்.
“அதுக்காக நம்ம மாடி தோட்டம், ஊஞ்சல் எல்லாம் விட்டுட்டு கீழ இருக்க முடியுமா உன்னால? நாம இப்படி ஸ்பாயில் ஆகணும்ன்னு நாம தானே முடிவு எடுத்தோம்…. நாமலே அத மீறக்கூடாது ரதி செல்லம்….”, மனைவியின் கன்னம் கிள்ளிக் கூறினார்.
துருவனும், ஆதினியும் இல்லம் வந்துச் சேர்ந்தனர்.
“செல்லையா….. “, துருவன் குரல் கேட்டு ஒரு பெரியவர் சமையற்கட்டில் இருந்து வெளியே வந்தார்.
“வாங்க சின்னம்மா…. பிரயாணம் சௌரியமா இருந்ததா?”, எனக் கேட்டார்.
“நல்லா இருந்தது செல்லையா… அப்பா அம்மா எங்க?”, ஆதினி சிரித்த முகமாக பதில் கூறிப் பெற்றவர்களைப் பற்றிக் கேட்டாள்.
ஆதினி… தந்தையின் முக சாயலோடு, தாயின் உடல் அமைப்பை கொண்டு, இருவரின் நல்மனதோடு, நல்ல புத்தி சாதுர்யமும் கொண்டவள்.
துருவன் பாட்டியின் சதுர்யமும் கண்டிப்பும் சற்று கூடுதலாகப் பெற்றிருந்தான்.
“அவங்க பழமுதிர்சோலை வரை போயிருக்காங்க தம்பி… சாப்பிட வந்துடுவாங்க….”
“இவ வர வரைக்கும் கூட வீட்ல இருக்க முடியல… ஆது…. இவங்க அலும்பல் தாங்கல டி…. டீனேஜ் லவ்வர்ஸ் மாதிரி தான் நடந்துக்கறாங்க……”, மகிழ்ச்சி கலந்த சலிப்போடுக் கூறினான்.
“ஹாஹா.. இது புதுசா என்ன? விடு.. நான் குளிச்சிட்டு வரேன்.. நம்ம சாப்பிடலாம்… அவங்க வரப்ப வரட்டும்…. நீ இங்கேயே இரு…”, எனத் தம்பியிடம் சிரிப்புடன் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றாள்.
செல்லும் தன் தமக்கையை மென்னகையுடன் பார்த்தவன், “செல்லையா…… ஆதுக்கு பிடிச்ச தேன் குழல் செய்ங்க.. அவளுக்கு பிடிச்சதும் வேலைக்கு ஒன்னு செய்துடுங்க….”
“அம்மா ஏற்கனவே என்ன என்ன செய்யணும்னு சொல்லிட்டு தான் போனாங்க தம்பி…. எல்லாருக்கும் பிடிச்சது கண்டிப்பா தினம் இருக்கும்… நீங்க கை கால் அலம்பிட்டு வாங்க… ஜுஸ் தரவா?”
“இல்ல செல்லையா… ஆது கூட சாப்பிட்டுக்கறேன்…. ஜெனரேட்டர் வேலை செய்ய ஆளுங்க வருவாங்க.. அவங்களுக்கு சாப்பிட ஏதாவது செய்து அனுப்புங்க….”, என வீட்டின் பக்கவாட்டிற்குச் சென்றான்.
துருவன்…. அவன் உருவான பின் தான் ரதியின் பூரண சந்தோஷம் வந்தது….
ரதிக்கு முதல் குழந்தை பிறந்து 3 வருடங்களில் இன்னொரு குழந்தை உருவானது. வயிற்றில் கரு தங்கியதும் தனது அலுவலக வேலையை ராஜினாமா செய்துவிட்டு ரகுவுடன் மதுரை கிளை ஆரம்பிக்கும் வேலையில் இணைந்துக் கொண்டாள்.
பிள்ளை பெற்றபின், இடத்திற்கு பூமி பூஜை செய்து கட்டிடம் கட்ட ஆரம்பித்து ஒரு வருடத்தில் திறப்பு விழாவும் நடத்தினான் ரகு.
பிள்ளைகள் வளர வளர அவர்களின் தொழிலும் நன்றாக வளர்ந்தது. கொடைக்கானல் மற்றும் மதுரைச் சுற்றி இன்னும் 2 கிளைகளைத் தொடங்கி வெற்றிகரமாக கணவன் மனைவி இருவரும் நடத்தி வந்தனர்.
பெரியவர்களின் ஒத்துழைப்பினால் பிள்ளைகள் பற்றிய கவலையின்றி இருவரும் முழுதாகத் தொழிலில் கவனம் செலுத்தி நன்றாக காலூன்றி நின்றனர்.
பிள்ளைகள் கல்லூரி தொடும் நேரத்தில் பெரியவர்கள் இல்லாது போகவும் தான் ரகுவும், ரதியும் பெரிதும் கலங்கி நின்றனர்
அப்போது இருவரையும் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அழகாகத் தாங்கி நின்று ஆறுதல் கூற, ரகு மனப்பாரம் குறைந்து தெளிவானார்.
ஆதினி வீட்டை நிர்வகித்துக் கவனித்தபடி தனது படிப்பில் நாட்டம் செலுத்த, துருவன் தந்தையின் தொழில் ஸ்தானத்தில் நின்று வேலைச் செய்ய ஆரம்பித்தான்.
இரண்டு பிள்ளைகளும் பொறுப்பாக இருப்பது கண்டு பெற்றவர்கள் தங்களைத் தேற்றிக் கொண்டு விரைவாகப் பிள்ளைகளின் பாரம் குறைத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் “ரதி எக்ஸ்போட்ஸ்“ என துருவன் தொடங்கி, இப்போது வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான்.
ஆதினி வெளிநாட்டில் ரோபோடிக்ஸ் படித்து, அனுபவம் பெற்று, சொந்த நிறுவனம் தொடங்க இந்தியா வந்திருக்கிறாள்.
திருமணம் பிள்ளைகளின் விருப்பம் என்று இருவரும் கூற, “சரிதான்… நீங்க ஜாலியா சுத்தறதுக்கு எங்களுக்கு பொண்ணு பையன் தேடற வேலை கூட பாக்க மாட்டீங்களா?”, என துருவன் கேள்வியெழுப்பினான்.
“டேய்… உனக்கு பொண்ண கரெக்ட் பண்ண தெரியாதுன்னு சொல்றியா ?”
“ரகுப்பா…. அமைதியா இருங்க… துருவா… உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா சொல்லு டா பேசலாம்….. அத தான் சொல்றோம்…”, ரதி பொறுமையாகக் கேட்டார்.
“எங்க ரெண்டு பேருக்குமே நீங்க தான் பொண்ணும், பையனும் தேடிப்பிடிச்சு கல்யாணம் செஞ்சு வைக்கணும் சொல்லிட்டேன்…. ஆது சரி தானே?”
“ரொம்ப சரி… அப்பா.. அம்மா…. எங்களுக்கு எந்த விருப்பமும் இப்பவரைக்கும் வரல.. இனி வந்தா சொல்றோம்… ஆனா நீங்க தான் எல்லாமே பாக்கணும்… நான் கம்பெனி ஆரம்பிக்கிற வரை பொறுமையா இருங்க அதுமட்டும் தான் என் விண்ணப்பம்…”
“பாத்தியா ரது… பசங்க வளர்ந்துட்டாங்க…. ஆனாலும் நம்மள தான் வேலை வாங்கறாங்க…. இவங்களே யாரையாவது காதல் பண்ணிட்டு வந்தா நமக்கு வேலை சுலபம் நாமளும் வைன் மூன் போலாம்ன்னு பத்தா…. விடமாட்டாங்க போலவே…”
“அதென்னப்பா வைன் மூன்?”, ஆதினி சந்தேகமாகக் கேட்டாள்.
“கல்யாணம் ஆன புதுசுல போனா ஹனிமூன்…. 60+ ல போனா அது வைன் மூன் செல்லம்…”, மகளை அணைத்தபடி விளக்கம் கொடுத்தார்.
“நல்ல விளக்கம்….. எப்படிம்மா இவர லவ் பண்ணீங்க?”, துருவன் தாயின் தோளில் சாய்ந்தபடிக் கேட்டான்.
“அது முதல் காதல் டா….. அந்த காதல் கைகூடாதுன்னு தெரிஞ்சி மறுபடியும் கைக்கு கிடைக்கிற சுகமே வேற.. நீங்களும் காதல் வந்தா மறுக்காம அம்மாகிட்ட சொல்லணும்… சரியா?”, ஆதுரமாக மகனின் சிகைக் கலைத்துக் கண் நிறைந்து நிற்கும் தனது உதிரங்களைக் கண்டு உள்ளம் குளிர்ந்துப் போனார்.
ஆதினியின் தொழில்நுட்ப தொழிற்சாலை தொடங்க அனைத்து ஆயத்தங்கள் செய்ய ரகுவும், துருவனும் மாறி மாறி அவளுடன் அலைந்து ஒருவழியாக தொடங்க உத்தரவுப் பெற்றுவிட்டனர்.
அவளின் தொழிற்சாலைக் கட்டடம் கட்ட தொடங்கும் நாள் வந்தது.
ரதியும், ரகுவும் மிகவும் உள்ளம் பூரித்து அன்று அங்கே நின்றிருந்தனர். மகள் சம்பாத்யத்தில் இந்த இடம் வாங்கி போட்டார்கள். அது அவளின் தனித் தொழிலாக இன்று உருபெற போவது நினைத்து சந்தோஷமாக இருந்தனர்.
தன்னை நிலைநிறுத்தியவள் இன்று தானும் நிலையாக நிற்கும் முதல் படியில் இருக்கிறாள். நிச்சயமாக நிலையாக நிற்பாள் என்ற நம்பிக்கை கலந்த சந்தோஷத்துடன் துருவன் அனைத்து வேலைகளையும் சரிப்பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆதினி தன் குடும்பமே தன்னைச் சுயமாக நிற்க வைக்க முனைவதுக் கண்டு மனம் முழுதும் நிறைந்து, பூமி பூஜை செய்ய தாய் தந்தை தம்பியின் கைக்கொண்டு வேலையைத் தொடங்கக் கூறினாள்.
அங்கே மற்றொரு அழகான சந்ததியின் பயணம் தொடங்கியது… ரகுவும், ரதியும் வாழும் காலம் வரையிலும் வைன்மூன் சென்றுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாமும் அவர்களின் சந்ததிகளை ஆசிர்வதித்து, மகிழ்வோடு அனைவரிடமும் விடைபெறுவோம்….
அன்புடன்,
ஆலோன் மகரி.
பின்னாளில் சந்தர்ப்பம் அமைந்தால் துருவன், ஆதினி கதைகளும் உருபெற்று நம்மை சந்திக்க வரலாம்….