என் உயிர் – 5🧬
டில்லியில் சிறப்பு விழா நடத்த என்ன காரணம் மிஸ்டர் ஆதவ் செழியன் ?
” எங்க அப்பாவுடைய முக்கிய திருப்பம் இந்த டில்லில தான் நடந்தது. அவருக்கு இரண்டு முக்கிய ஆய்வுக்கு கிடைச்ச வாய்ப்புகள் இங்க தான். அதான் இங்க வைக்கனும்னு ஆசைப் பட்டேன் “
“இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினரா யாரை அழைச்சீங்க ? “
“மிஸ்டர் செழியன் என் அப்பா ……… ” ஆதவ் முடிப்பதற்குள் மைக்கை வாங்கிய செழியன் “மிஸ்டர் . ரகுவேந்தர் “
“வாவ் மிஸ்டர். ரகுவேந்தர் உள்ள தான் இருக்காரா? நாங்க அவரை பேட்டி எடுக்கலாமா ? ” பேட்டியாளர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
ஏற்கனவே அப்பா ரகுவேந்தர் பெயரைக் கூறியதில் கோபத்துடன் இருந்த ஆதவ், பேட்டியாளர்களின் பேச்சு மேலும் தூண்டியது.
” அவரை பாக்க வந்தீங்களா இல்லை என் அப்பாவை பேட்டி எடுக்க வந்தீங்களா ? ” என்று சத்தமாகவே கேட்டு விட்டான் ஆதவ். அதில் அதிர்ந்த செழியன் “கெட் அவுட் ஆஃப் மை சைட் ஆதவ் “என்று கூறி, தனது அசிஸ்டண்ட்டிடம் கண் காட்ட, ஆதவ்வை இழுத்து கொண்டு சென்று விட்டனர்.
இருந்தும் அங்கு நடக்கும் சலசலப்பை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை. இதற்கு மேல் இருந்தால் குடைய ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்து ஏதோ ஏதோ கூறி பேச்சை கத்தரித்து பேட்டியை முடிவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தார்.
அவருக்கு ஏற்றார் போல் ரகுவேந்தர் வெளியில் வருகிறார் என்று யாரோ கூறிய செய்தியில் அனைவரின் கவனமும் திசை திரும்பி விட்டது. ஆனால், ரகுவேந்தர் காரில் ஏறி பறந்து விட்டார். அவரின் பி.ஏ தான் நின்று ஏன் இவ்விழாவிற்கு வந்தார் என்பதை பேட்டியாளர்களுக்கு கூறிக் கொண்டிருந்தார்.
அதனைக் கண்டு மேலும் மேலும் எரிச்சல் பட்டுக் கொண்டிருந்த ஆதவ்வை அச்சன்னலில் இருந்து விலக்கி யாரும் யோசிக்கும் முன் அறைந்து விட்டார் செழியன். தன் தகப்பனா என்று கன்னங்களில் கை வைத்து அதிர்ந்து பார்த்தார் ஆதவ்.
“ரகுவேந்தரை இம்முறையும் தவற விட்டுவிட்டோம் …..ச்சை…. சிக்க மாட்டேங்கிறார். அவரு முகம் கூட தெரிய மாட்டேங்குது” என்று ஒரு பேட்டியாளர் புலம்பினான் .
“ஆமாடா, அவரு சைன்டிஸ்டா இல்லை தொழில் அதிபரா இல்லை இரண்டுமா எதுவும் தெரியல. ஆனா, தொழில் துறையில அவருக்கு பெரிய பேர் இருக்கு. ஆனா , யாரும் அவரை பத்தி வாயை திறக்க மாட்டேங்கிறாங்க” என்று இன்னொருவன் கூற,
“அது கூட பரவாயில்லை எல்லாரும் அவரு தான் எனக்கு ரோல்மாடல்னு சொல்லுறாங்க . ஆனால், வெவ்வேறு துறையில இருந்து சொல்லுறாங்க . அதுவே மண்டை காயுது மச்சான் “
“அது கூட பரவாயில்லை மச்சான். அவரு ஆபிஸில் யாராச்சும் பிடிச்சு விசாரிக்கலாம்னு பாத்த ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேங்குறான். எப்பூடினே தெரில மச்சான் “
இங்கு இவ்வாறு நண்பர்கள் குழு காரசாரமாக விமர்சித்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பேசும் ரகுவேந்தர் அந்த ஹோட்டலை விட்டு வெளியே போகும் சமயம் அவரின் பி.ஏ “சார் உங்க பையன் “என்று கூறியவுடன், அவர் தனது ஜன்னலை திறந்து பார்க்க, அங்கு சஞ்சய்யும், நிலவனும் ஒரு சேர அவர்களை முறைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, தனது மகனை கண் குளிர கண்டு விட்டு சென்று விட்டார்.
♥️♥️♥️♥️♥️
திருமலை, தீரன் மற்றும் கண்மணி மூவரும் இந்திராவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் வருவதைக் கண்டு கொண்டும் அடுப்பறையில் இருந்து காது கேளாதது போல் வேலைச் செய்து கொண்டிருந்தார் வாயில் அவர்களை மென்று கொண்டே .
பாரியும் எதுவும் தெரியாதது போல் முற்றத்தில் இருக்கும் கயித்து கட்டிலில் உறங்கி கொண்டிருந்தார். இல்லை இல்லை உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார்.
அவர்களின் வீட்டில் அருகிலேயே அவர்களின் சொந்தங்கள் இருப்பதால் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காவே நிற்க வைத்திருந்தனர்.
அதோடு அவ்வாறு பேசிவிட்டோம் என்று திருமலை தயங்கி நின்றதோடு தீரனையும் நிற்க வைத்திருந்தார். அதுவும் அவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. தான் அழைக்கிறேன் என்று கூறிய கண்மணியையும் அமைதி காக்க வைத்தார் யாரேனும் வந்து தங்களை கண்டு அழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் .
ஆனால், வெளியில் போவோர் வருவோர் பேசுவதிலும், கண்டு விட்டு செல்வதையும் கண்ட தீரன் இதற்கு மேல் முடியாது என்று அழைக்கும் சமயம் “மாமா ” என்று அழைத்துக் கொண்டே தனது ராயல் என்பீல்ட் வண்டியை நிறுத்தினான் மகிலன்.
அதில் பின்வாங்கினார் தீரன். அவர் உள்ளே வருவதை கண்டு மனதிற்குள் குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தவருக்கு இச் செயல் ஏமாற்றமாக இருந்தது. வெளியில் எட்டி பார்க்கும் மனைவியை “என்ன பிள்ளை வளத்திருக்கிறாய் ? ” என்று கேட்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.
எல்லா தாய்மார்களுக்கும் உள்ளே அதே போராட்டம் தான் இவருக்கும். மகனுக்கும் கணவனுக்கும் இடையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார். என்ன தான் மகிலன் அழைத்தது தனக்கும் கோபம் வந்தாலும் அதை தன் கணவரிடம் காண்பிக்க மனம் ஒப்பவில்லை. அதனால் கண்டும் காணாதது போல் தன் மகனின் அழைப்பில்
அடுப்பறையில் இருந்து வெளியில் வந்தார் .
“அம்மா ….. அம்மா…… “
“என்ன மகி ? எதுக்கு கத்திக்கிட்டே வர்ற ? ” என்று தனது முந்தானையால் முகத்தை துடைத்து கொண்டே வந்தவர் அப்பொழுது தான் அவர்கள் நிற்பதை கவனித்தது போல் பாவனை செய்வது போல் பாசாங்கு தான் செய்தார்.
கண்களில் கண்ணீர் பெருகியது. தனது முந்தானையால் வாயை பொற்றி அழுகையை உள்வாங்கி அடக்குவது போல் செய்து, வெளி வராத குரலில் “உள்ள வாங்க அண்ணா, வாங்க அண்ணி, வா மச்சான் ” என்று அழைத்தார்.
அவரது அழைப்பில் துயில் கலைந்து எழுவது போல் மூவருக்கும் பொதுவாக “வாங்க ” என்று கூறிவிட்டு முகம் கழுவ சென்றார் . அவர்களை அவமரியாதை செய்யும் பொருட்டு இவ்வாறு கூறி விட்டு, உன்னை போல் நான் இல்லை என்பதை காட்டும் பொருட்டு “இந்திரா வந்தவங்களுக்கு காபி தண்ணீ கொடு “என்று சொல்லிக் கொண்டே சென்றார்.
மகிலன் தனது மாமன் வெளியில் நிற்பதைக் கண்டு ஏன் தயங்குகிறார் என்ற யோசனையில் வேகமாக தனது வண்டியை நிறுத்தி ஓடி வந்து தனது அன்னையை அழைத்து கொண்டே மாமனை உள்ளே கூட்டிச் சென்றான்.
இந்திரா அடுப்பறைக்கும், பாரி வாசலுக்கும் சென்றதைக் கண்டு வேக வேகமாக அருகில் உள்ள பெரியப்பா உறவில் உள்ள பெரிய மனிதரை அழைத்து வந்து அவர்களுடன் பேச்சுக் கொடுக்க சொன்னான்.
அந்த இடைவெளியில் தனது காட்டத்தை தகப்பனிடம் காண்பிக்காமல் நேராக தனது தாயை நாடினான். அவனது பார்வை தனது முதுகை துளைக்கிறது என்பது புரிந்தும் காரியமே கண்ணாக காபி தயார் செய்து கொண்டிருந்தார்.
பொறுமை இல்லாமல் “அம்மா என்னது இதுலாம் ? ” என்று அவன் அமைதியாக கேட்டாலும் அதில் அழுத்தம் இருந்தது நன்றாகவே புரிந்தது.
“டேய் உனக்கு உன் மாமா பெரிய முன்னோடியா இருக்கட்டும் வழிக்காட்டியா இருக்கட்டும் . ஆனால், அவரு அந்த வீட்டுக்கு எப்படி பிள்ளையோ அப்படி தான் நானும். அதோட , நான் கல்யாணம் பண்ணி வந்திருக்கிறது இவருக்கு . உங்க அப்பாக்கும் தக்க மரியாதை கொடுக்கனும். அதை நான் என்னைக்கும் எந்த இடத்துலயும் விட்டுக் கொடுக்க மாட்டேன்”
“என்ன அப்படி தலை குனிஞ்சுட்டாரு ? நம்ம அவருனால தலை குனிஞ்சத விட இப்போ கெளரவம் போச்சா? ” மெதுவாக தான் கேட்டான். ஆனால், இறுதியில் அவன் பல்லைக் கடித்தது நன்றாகவே இந்திராவிற்கு கேட்டது.
“டேய் மகி ! நம்ம அப்பா …..மரியாதை இல்லாம பேசாத “என்று கையை நீட்டி எச்சரித்தார் .
“ஆமா இப்படியே பேசி பேசி தான் அந்தாளு இப்படி இருக்கிறாரு” என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு வெளியில் வந்தான்.
வாசலில் நின்றிருந்த பாரியைக் கண்டு முறைத்து விட்டு சென்றான். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்திரா பதைபதைத்து ஓடி வந்தார்.
“கல்யாணத்துக்காக அமைதியா போறேன். இல்லை இங்க நடக்கிறதே வேற ” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு தனது துண்டை
எடுத்து உதறிக் கொண்டே சென்று விட்டார். அப்பொழுது தான் மூச்சே வந்தது இந்திராவிற்கு . வேகமாக காபியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.
அப்பொழுது பாரி “அதான் கல்யாணம் இப்போதைக்கு வேணாம்னு சொன்னீங்க. இப்ப என்ன மாப்பிள்ளை கல்யாணத்தை எப்போ வேணாலும் வச்சுக்கலாம் உங்க இஷ்டம்னு சொல்லுறீங்க “
இதைக் கேட்ட இந்திராவிற்கு சந்தோஷம் தாளவில்லை. முகம் கொள்ளா இன்பத்துடன் அனைவருக்கும் இன்முகத்தோடு விருந்தோம்பல் செய்தார்.
” நீ ஏன் மகி வீட்டுக்கு வரல? அதுவும் ஊர்ல தான் இருந்திருக்க? ” என்று சம்பந்தம் இல்லாத கேள்வியை தீரன் தொடுத்தார்.
அதில் லேசாக புரிதல் ஏற்பட்டு திருமலை யோசனையுடன் தனது தங்கை மகன் பதிலுக்காக காத்திருந்தார்.
“இல்லை சித்தப்பா! திடீர்னு வேலை பாக்குற இடத்துல இருந்து கூப்பிட்டாங்க. அதான் டவுனுக்கு போய்ட்டு வந்தேன் சில பேப்பர்லாம் பிரிண்ட் எடுக்க . அப்படியே வீட்டுக்கு வரேன்னு தான் சொன்னேன். கொஞ்சம் லேட்டாகும்னு சொல்ல அம்மாக்கு கால் பண்ணேன். அவங்க தான் இல்லை வீட்டுக்கே வானு சொன்னாங்க. எதுவும் பிரச்சனையோனு கிளம்பினேன். கம்பெனில இருந்து கால் பண்ணி சொன்ன வேலையை முடினு சொல்லிட்டாங்க. அதான் லேட் ஆகிருச்சு “என்று இறுதி வாக்கியத்தை முழுங்கினான்.
அது அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேறு திசை திரும்பினார்கள். ஆனால் தீரன் மட்டும் அவனை ஆராயும் பார்வை பார்த்தார்.
ஆனால், இதை அறியாத மகிலனோ மாமன் வீட்டில் என்ன நடந்தது என்று அருகிலிருக்கும் அன்னையை விசாரித்தான். இந்திரா கூறுவது அனைத்தும் தீரனுக்கு கேட்டது.
“இப்போ கல்யாணம் வேணாம்னு அண்ணன் சொன்னுச்சு டா ” என்று பொங்கி பொறுமி கூற, மகிலனோ அதிர கூட செய்யாமல் தலை ஆட்டி விட்டு நகர்ந்து விட்டான்.
“எனக்கு அத்தான் தான் வேணும் . ஏன் புருஞ்சிக்க மாட்டேங்கிறங்க ? “என்ற வாக்கியம் காதில் எதிரொலித்து கொண்டே இருந்தது தீரனுக்கு .
முதன் முறையாக பதற்றம் தொற்றிக் கொண்டது தீரனுக்கு .
கீர்த்தி ☘️