என் ஆயுள் நீயே 7
காலை கண் விழித்த பிரணவ் கீழே வர, அனைவரும் பெண் பார்க்க செல்ல ஆயத்தமாகி அவனுக்காகக் காத்திருந்தனர்.
பிரணவ் எஙகென்று கேட்கும் முன்பு,
“சீக்கிரம் கிளம்பி வா பிரணவ். நல்ல நேரத்தில் போய் சேரணும்” என்றார் விமலா.
“எங்க மாம்?”
“பொண்ணு வீட்டுக்குடா!” அசராது அவன் தலையில் இடியை இறக்கினார்.
“வாட்?”
“என்னடா? நேத்து நைட் நீதானே சரின்னு சொன்ன?” என்று அவனை மடக்கினார் விமலா.
“ஆமா… அதுக்குன்னு இன்னைக்கேவா? அவங்களுக்கு ஓகேவா தெரியாம எப்படி மாம் போறது” எனக் கேட்டான்.
“அதெல்லாம் நேத்து பொண்ணு போட்டோ பார்த்து பிடிச்சதுமே, அவங்க வீட்டுக்கு இன்னைக்கு நாள் நல்லாயிருக்கு பொண்ணு பார்க்க வரோம்ன்னு தகவல் கொடுக்க சொல்லி தரகர்கிட்ட சொல்லிட்டேன்” என்றார்.
“யேதே!” என்று அதிர்ந்த பிரணவ், “டாட் என்னதிது” என்றான்.
“அம் ஹெல்ப்லெஸ் மை சன்” என்ற விஜயன், “நீங்க வாங்கப்பா நாம தோட்டத்தில் இருப்போம். அம்மாவுக்கும் பையனுக்கும் நடுவில் மாட்டினால் நம்ம தலை தான் உருளும்” என்று ராகவனையும் கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.
“ஹேய் அஷ்மி, வாட் இஸ் திஸ்? நைட் தான் சொன்னீங்க… இப்போ பொண்ணு வீட்டுக்குப் போகணும் சொல்றீங்க. திஸ் இஸ் நாட் குட்” என்றான் பிரணவ்.
“எங்களுக்கு இது குட் தான். இந்தப் பொண்ணுதான்னு ஃபிக்ஸ் பண்ணதுமே, நீ ஓகே சொன்ன உடனே வேகமாக எல்லாம் செய்ய முன்னவே பிளான் பண்ணிட்டேன். நீ எப்போ மாறுவன்னு தெரியாதே, அதான். இந்நேரம் பொண்ணு வீட்டுல எல்லாரும் நமக்காகக் காத்திருப்பாங்க” என்று அவனை கிளம்ப விரட்டினார்.
“எதுக்கு இவ்ளோ அவசரம் மாம்?”
“உன்னை கல்யாண கோலத்தில் பார்க்கத்தான்.” மகனின் வாயடைக்க விமலாவுக்கு சொல்லியாத்தர வேண்டும்.
பிரணவ் யோசித்துக்கொண்டே நின்றிருக்க…
“இன்னைக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் ஒன்னு இருக்கு மாம்” என்றான்.
“அப்போ நான் வரல. நீங்க போயிட்டு வாங்க. இங்க மீட்டிங்கை நான் பார்த்துக்கிறேன்.” சொல்லிய தங்கையை தீயாய் முறைத்தான் பிரணவ்.
“சும்மா எதும் காரணம் சொல்லிட்டு இருக்காதடா! நைட் நீதானே ஓகே சொன்ன. ஓகே சொல்லிட்ட… எப்போ போய் பொண்ணு பார்த்த என்ன?” என சரியாகக் கேட்டாள் அஷ்மி.
“எனக்கு வில்லி நீதான். வெளியில யாரும் வேணாம்” என்று அஷ்மியின் கன்னம் கிள்ளிய பிரணவ், “கிளம்பி வரேன்” என்று தனதறை நுழைந்தான்.
பிரணவ் குளித்து முடித்து ஆடை உடுத்திய சமயம், அஷ்மி கதவினை தட்டி உள்ளே நுழைந்தாள்.
கண்ணாடி முன்பு நின்று சிகை சரி செய்து கொண்டிருந்தான்.
மார்பிர்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனருகில் சென்று நின்றாள் அஷ்மி.
தங்கையை பக்கவாட்டாக பார்த்தவன், கண்ணாடியில் கண்ணாக இருந்தான். என்ன என்று எதுவும் கேட்கவில்லை.
பிரணவ் தலைமுடியை சரி செய்து, ஆடையில் வாசனை திரவியம் அடித்து, கையில் லோஷன் தடவி, தங்கையின் பக்கம் திரும்பி, போகலாமா எனும் விதமாக வாயில் நோக்கி கை காண்பித்து, அவளைத் தாண்டி அடி வைத்தான்.
“உண்மையாவே சீனியரை உனக்கு பிடிச்சிருக்கு… மேரேஜ்க்கு நீ ரெடின்னா மட்டும் அங்க போகலாம் அண்ணா” என்றாள். அவளின் குரலில் என்ன உணர்வென்று அவனால் பிரித்தறிய முடியவில்லை. ஆனால் அவனது நடை சட்டென்று நின்றது.
“எனக்கு என்ன… சொல்லத் தெரியல. பட், எதிர்பார்ப்பு கொடுத்து ஏமாத்துறது ரொம்ப பெரிய வலி” என்றாள்.
முழுதாக திரும்பி தங்கையின் முகம் நேருக்கு நேர் பார்த்த பிரணவ், “பெரிய மனுஷி மாதிரி பேசாம வா” என்று அவளின் தலையில் தட்டி அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.
அஷ்மி தவிர்த்து மற்றவர்கள் வண்டியில் ஏறி அமர்ந்திட, வரவில்லையா என்று பார்த்தான் பிரணவ்.
“வயசுப்பொண்ணு அங்க எதுக்குடா?” விமலா அவனின் தோளில் அடிக்க, “அப்போ மீட்டிங் பார்த்துக்கோ. ரீமாகிட்ட சொல்லியிருக்கேன்” என்று வண்டியை இயக்கினான். இதழ் குவித்து ஊதிய பெருமூச்சொடு.
அஷ்மி உடன் வந்தால், தன் எண்ணத்தை செயல்படுத்தாமல் விட்டாலும் விட்டுவிடுவான். அவனின் முகம் பார்த்தே அஷ்மி கண்டுகொள்வாளே! அஷ்மி வராதது அவனுக்கு சாதகம் தான். அதனாலேயே அவளில்லை என்றதும் வாதம் செய்யாது கிளம்பியிருந்தான்.
இதுவே நன்முறையில் அடுத்தக்கட்டதிற்கு நகர்த்துபவனாக இருந்திருந்தால், தங்கை இல்லாது தன் வாழ்வில் ஒரு நிகழ்வா என மூச்சை பிடித்துக்கொண்டு பேசியிருப்பான்.
“அஷ்மியை வீட்டுல விட்டு வர பிளான் முன்னவே இருந்தும், நான் மீட்டிங் இருக்கு சொன்னப்போ வேணுன்னே, ரெண்டு பேரும் டிராமா பாண்ணியிருக்கீங்க அப்படித்தானே!” என்றான்.
“உன்னை நம்ப முடியாதே அதான்” என்ற விமலா, அடுத்து அகத்தீஸ்வரம் வரும் வரையிலும் நனியிதழ் பற்றி தான் பேசிக்கொண்டு வந்தார்.
“எவ்வளவு அழகு. அடக்கம். முகத்துல அமைதி தெரியுது. அப்படியொரு கனிவு.” சிலாகித்துப் பேசிக்கொண்டு வந்தார்.
விமலா எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை என்று பிரணவ்வுக்குத் தெரியும். அதனால் அமைதியாகவே வந்தான்.
தான் நேரில் பார்த்து வேண்டாமென்று சொல்லிவிடுவேனோ என்று அன்னை நனியிதழ் பற்றி பேசிக்கொண்டே வருகிறார் என்றும் அவன் அறிவான்.
அன்னை சொல்வதைப்போல நனியிதழ் அத்தனை பொறுமை. அதிர்ந்துகூட பேசிட வராது. அவனே, “பலமுறை நீ பேசினால் வெறும் காத்து மட்டும் தான் வருது” என்று அவளை கிண்டல் செய்திருக்கிறான்.
கல்லூரி நினைவு மேலெழும்பி அவன் இதழ் விரியச் செய்தது.
பிரணவ் எதையோ நினைத்து முகம் மலர, அவனின் அருகில் அமர்ந்திருந்த விமலா, பெண்ணின் நினைவில் திருமணக் கனவு நினைத்து மலர்கிறான் என நினைத்து, பின்னால் திரும்பி தன் கணவர் மற்றும் மாமனாரிடம் கண் காண்பித்தார்.
அத்தோடு பிரணவ்வுக்கு நனியிதழை அதிகம் பிடித்துவிட்டது என்று அவர் நம்புவதற்கு காரணமும் இருந்தது.
இரவு பிரணவ் ஏனென்றே தெரியாது நனியிதழின் படத்தை தனக்கு அனுப்பிக்கொண்டது. அனுப்பிய தடம் அவரின் அலைபேசியில் கண்டு அத்தனை மகிழ்ந்துப் போனார்.
“கல்யாணமே வேணாம் சொல்லிட்டு இருந்தவன், போட்டோ பார்த்ததும் பிளாட் ஆகிட்டான்” என்று கணவரிடம் இரவு முழுக்க சொல்லி அவரை தூங்கவிடாது ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.
“ஊர் வந்தாச்சு மாம். வீடு எங்கிருக்கு?” ஊருக்கு அரண் போல் காட்சியளிக்கும் கடலை கார் சன்னல் வழி பார்த்துக்கொண்டே வினவினான்.
அந்நேரம் அவனது வண்டியை கடந்து, அதிவேகத்தில் உதயனின் கருநிற தார் வண்டி பறந்துச் சென்றது.
தரகர் உதயன் எண்ணை கொடுத்திருக்க… விஜயன் உதயனுக்கு அழைத்தார்.
_________________________
அதிகாலை விடிந்ததுமே அந்நாளுக்கான பரபரப்பு உதயனின் வீட்டில் ஆரம்பமாகியிருந்தது.
அவர்கள் வீட்டின் இளவரசியை பெண் பார்க்க வருகின்றனர் என்ற சிறு நிகழ்வும் அவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
எப்போதும் அமைதியாக எதையோ இழந்ததைப்போல் வலம் வரும் நனியிதழ் முகத்தில் மகிழ்வை தேக்கி, துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா செமயா இருக்கீங்க.” கல்லூரிக்கு கிளம்பி வந்த எழில், தன்யாவின் கை வண்ணத்தில் அழகோவியமாக காட்சியளித்த நனியிதழை வியந்துக் கூறினாள்.
“ஹேய் நீயென்ன பேக் மாட்டிட்டு நிக்கிற. காலேஜ் போறியா?” நனிக்கு வளையல் அணிவித்துக்கொண்டே தன்யா எழிலிடம் வினவினாள்.
“ஆமா… இன்னைக்கு போயே ஆகணும். பிராக்டிக்கல் இருக்கு” என்று முகத்தை சுருக்கிக் கூறிய எழில், “போட்டோ எடுங்க. நான் வந்து பார்க்கிறேன்” என்றாள்.
“கிளம்பிட்டியா வாலு” என்று வாயிலிலே நின்றிருந்த எழிலின் பின்னால் வந்து நின்ற இன்பா, எழிலின் தலையில் தட்டி, “வா வா… உன்னை விட்டுட்டு, அவங்க வரதுக்குள்ள நான் திரும்பி வரணும்” என்றான்.
“ம்ம்” என்று எழில் நகர்ந்து வெளியில் வர, நனியிதழை அலங்காரத்தில் பார்த்த இன்பா விழிகள் மலர்ந்தான்.
“யாருடா இது…” என்று உள்ளே நுழைந்தவன், தங்கையின் இரு கன்னங்களிலும் தன் உள்ளங்கை வைத்து, “உன் முகம் எப்பவும் இதே சந்தோஷத்தோட இருக்கணும்டா” என்றான்.
“தேங்க்ஸ் அண்ணா” என்ற நனி, அவனின் இடையோடு கட்டிக்கொள்ள… “இன்னும் யாரும் போட்டோ எடுக்கல தானே?” எனக் கேட்டு, “நாம பர்ஸ்ட் வன் செல்ஃபி” என்று அலைபேசியை உயர்த்தி பிடிக்க, உதயன் வந்தான்.
தங்கையை பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான்.
“நீங்களும் வாங்கண்ணா!” இன்பா அழைக்க, சிரிப்போடு மறுத்துவிட்டான் உதயன்.
“ஹேய் வாலு வா” என்று எழிலை அழைக்க, உதயன் தவிர்த்து மற்ற நால்வரும் பல்வேறு போஸ்களில் சுயமி எடுத்துக் கொண்டிருக்க, நனியிதழின் இதழின் சிரிப்பில் மலர்ந்த இருந்தது.
தங்கையின் கண்களில் பல வருடங்களாக தொலைந்துப்போன உயிர்ப்பை இன்று தான் காண்கிறான் உதயன். மனம் நிறைந்து தங்கையின் சிரிப்பில் உறைந்துபோனான்.
இதற்காக, இந்த நொடிக்காக நான்கு வருடங்களாகக் காத்திருக்கிறான். நெஞ்சத்தின் நெகிழ்வு கண்களில் ஒளிர, இமை தட்டி சரி செய்தான்.
“அண்ணா பிளீஸ்… வன் பிக்.” நனி கண்கள் சுருங்க, விரல் காண்பித்து கேட்க, நால்வருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
“பெரியண்ணா பக்கத்தில் நான் தான்… எவ்ளோ அழகா இருக்கு” என்று எழில் எடுத்த படத்தை பார்த்து மகிழ, “நாங்களும் அண்ணா கூட நிக்கிறோம்” என்றான் இன்பா.
“ம்க்கும் போடா…” என்ற எழில் உதடு சுளிக்க, “யாரை டா சொல்ற” என்று இன்பா அவளை அடிக்க வர, எழில் உதயனின் பின்னால் மறைந்தாள்.
“அண்ணா நகருங்க…” என்று இருவரும் உதயனைச் சுற்றி ஓடிட, மற்ற மூவரும் இருவரின் சேட்டையில் சிரித்துக் கொண்டிருந்தனர்.
நனியிதழிடம், கண்களில் நீர் இறங்கும் அளவிற்கு அழுத்தமான சிரிப்பு. அதனை பார்த்த உதயன் அவளின் உச்சியில் தன் கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.
“இப்படி அஞ்சு பேரும் ஒண்ணா திரியாதீங்க எத்தனை தரம் சொல்லுறது. எங்க கண்ணே படும்” என்ற ஜெயலட்சுமியின் குரலில் தான் தங்கள் நிலை மீண்டனர்.
“எதுக்கு இப்படி ஒண்ணா ஒரேயிடத்தில் நின்னு சிரிக்கிறீங்க. கங்கா பார்த்தா சுத்திப்போடுறேன்னு என்னத்தையும் கையில் தூக்கிட்டு வந்திடுவாள்” என்றவர், “அம்சமா இருக்கடா” என்று பேத்தியின் கன்னம் வழித்து உதட்டில் ஒற்றியவராக அங்கிருந்து சென்றார்.
“எப்போ வராங்க மாமா?” தன்யா கேட்க, “பக்கம் வந்திருப்பாங்க” என்றான் உதயன்.
எழிலிடம், “காலேஜ் கிளம்பு நீ” என்ற இன்பா, “நான் அவங்க வரதுக்குள்ள வரணும்” என்று அவளுடன் நகர, உதயனின் அலைபேசி சிணுங்கியது.
எடுத்துப் பார்த்த உதயன் நெற்றி முடிச்சிட்டது. யோசனையாக எடுத்து செவிமடுத்தான்.
எதிரில் சொல்லப்பட்ட செய்தியின் தீவிரம், அவனை வேகமாக செயல்பட வைத்தது.
“இன்பா…” அழைத்த உதயன், “எழிலை நான் ட்ராப் பண்றேன். நீ இங்கயிரு” என்று கூறினான்.
“அண்ணா நீங்க இங்க” என்று இன்பா சொல்ல, திரும்பி நனியிதழை பார்த்தான் உதயன்.
உதயனின் முகத்தில் தெரிந்த தீவிரமே, அவன் தற்போது செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் புரிய,
“நீங்க போயிட்டு வாங்கண்ணா” என்றாள் நனியிதழ்.
தங்கையின் கன்னம் தட்டிய உதயன், “எல்லார் முன்னாடியும் எதும் பேசணும், சொல்லணும் அப்படின்னா தயங்காம பேசு. வந்துடுறேன்” என்று எழிலைக் கூட்டிட்டு கிளம்பினான்.
“எதும் பிரச்சினையா அண்ணா. நான் வேணுன்னா போகட்டுமா? நீங்க இங்க இருங்க” என்றான் இன்பா. நனிக்கு உதயன் எத்தனை முக்கியமென்று அறிவானே! எத்தனை பேர் இருந்தாலும் தங்கை பெரியவனை தேடுவாள் என்பதை அறிந்தவனாக உதயனை இருக்க வைக்கக் கூறினான் இன்பா.
“பட்டுக்கு நீயும் அண்ணன் தான்.” உதயனின் அழுத்தமான வார்த்தைகளில் இன்பா அமைதியாக நின்றுவிட்டான்.
உதயன் எழிலை கூட்டிக்கொண்டு புறப்பட, எதிரே பிரணவ் ஊருக்குள் நுழைந்து உதயனின் வீட்டைத் தேடியவனாக வண்டியை நிறுத்தியிருந்தான்.
என் ஆயுள் நீயே 8
உதயனின் கரு நிற தார் வண்டியும், பிரணவ்வின் வெண்மை நிற ஆடி வண்டியும் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் இடைவெளியில் கடந்து சென்றன.
இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள இன்னும் கால நேரம் கூடிவரவில்லை போலும்.
“வீடு எங்கன்னு கேளுங்க மாம்.” சொல்லிய பிரணவ், மிக அருகில் வரிசைக்கட்டி வரும் அலைகளை தன் மனதை ஒப்புவித்தான்.
கஜமுகன் வீடென்று கேட்டால் யாரும் அவ்வீட்டிற்கு வழி சொல்லுவார்கள் என்று தெரியும். நான்கு ஆண்டுகள் கன்னியாகுமரியில் விடுதியில் தங்கி படித்திருக்கிறான். கஜமுகனின் குடும்பத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். இருப்பினும் தன்னை அங்கு தெரிந்தவனாகக் காட்டிக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை போலும்.
எண்ண அலைகளில் பிரணவ்வின் கண்களில் கல்லூரியின் இறுதிநாளும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் காட்சிகளாக, விமலாவின் குரலில் நிகழ் மீண்டான்.
விமலாவிடம் தரகர் உதயனின் எண்ணை கொடுத்திருக்க, அதற்கு அழைத்தார்.
“ஹலோ!” உதயனின் கம்பீரக் குரல்.
விமலா முறையாக தன்னை அறிமுகம் செய்து, தாங்கள் தற்போது நின்று கொண்டிருக்கும் இடத்தின் அடையாளம் சொல்லிட…
“ஜஸ்ட் டூ மினிட்ஸ் ஆன்டி” என்று அழைப்பை வைத்தான் உதயன்.
“வரேன் சொல்லியிருக்காங்க பிரணவ்.” விமலா பதில் கொடுத்ததும், பிரணவ் வண்டியிலிருந்து இறங்கி, கடற்கரையோர நடை பாதையில் சென்று நின்றான்.
மனதிற்குள் அவனறியா சிறு படபடப்பு.
“நீ எடுத்திருக்க முடிவு சரியா பிரணவ்?” தனக்குத்தானே சுய கேள்வி அவனிடம். சரியென எடுத்த முடிவுக்கு பதில் மட்டும் அவனிடம் வேறாகவா இருந்திடும்.
‘உன்னைப்போல் அவளும் குடும்ப நபர்களின் அழுத்தத்தால் ஒப்புக் கொண்டிருக்கலாம்.’ அவனாகவே நினைத்துக் கொண்டான்.
நம் எண்ணங்களும், பார்க்கும் பார்வையும் தவறாகக் கூட இருக்கலாம் என்பது, அந்த சிறந்த தொழிலதிபனுக்கு ஏனோ தெரிந்திருக்கவில்லை.
உதயன் சொல்லியது போலவே, இரண்டு நிமிடங்களில் அவர்களது வண்டியின் முன் தனது இரும்புக் குதிரையை நிறுத்தினான் எழிலின்பன்.
“ஹாய் ஆன்டி…” என்று வண்டியிலிருந்து இறங்கிச் சென்று, இன்பா சன்னல் வழி விமலாவிடம் பேசினான்.
“தம்பி நீங்க?”, விஜயன் கேட்டிருந்தார்.
உதயன் தரகரின் பெயர் சொல்லி, விளக்கம் கொடுத்திட,
“நாங்க தான்ப்பா” என்ற விமலா, “இப்போ பேசினது நான் தான்” என்றார்.
“நீங்க பேசினது என்னோட அண்ணாகிட்ட ஆன்டி” என்ற இன்பா, “போகலாமா?” என்றான்.
“ம்ம்” என்ற விமலா, “பிரணவ்” என்று அழைக்க, பேண்ட் பாக்கெட் இரண்டிலும் கையை விட்டுகொண்டு, கால்களை அகட்டி வைத்து, முழு உயரத்திற்கும் நிமிர்ந்து, பின்பக்கம் காட்டி நின்றிருந்த பிரணவ், தலையை மட்டும் திருப்பி பார்த்தான்.
கடல் காற்றின் உதவியால், முன் நெற்றியில் அலையலையாய் தவழ்ந்த அவனது கேசமும், கண்ணுக்கு அணிந்திருந்த ரேபானும், சூரிய ஒளியில் அவனது முகத்திற்கு தனி அழகை கொடுத்திட…
இன்பா சடுதியில் தன் தங்கையுடன் பொருத்திப் பார்த்தான்.
‘ஜோடி பொருத்தம் அள்ளுது.’ அண்ணனாக உள்ளுக்குள் மகிழ்ந்தான். தன் தங்கைக்கு ஏற்றவன் என்று நிறைவு கொண்டான்.
பிரணவ் அருகில் வருவதற்கு முன்பு, அவன் பக்கம் சென்று வரவேற்கும் விதமாக கை குலுக்கிட கையை நீட்டியிருந்தான் இன்பா.
“செல்வா?” எனக் கேட்டு பிரணவ் கரம் பற்றினான்.
“இன்பா.” மென் முறுவலோடு குலுக்கிய கரம் பிரித்தான் எழிலின்பன்.
“குட் டூ சீ யூ.” பிரணவ்வின் இதழ் விரிந்ததோ!
“அண்ணாவை உங்களுக்குத் தெரியுமா?” இன்பா கேட்க, பிரணவ்வின் கருவிழிகள் மோதி சீரானது.
“தரகர் நெம்பர் கொடுத்திருந்தார்” என்று சமாளித்தான்.
“ஹோ” என்ற இன்பா முன்னால் அடி வைத்து திரும்பி, “செல்வான்னு சொன்னாரா?” எனக் கேட்டான்.
“அது…” பிரணவ் வார்த்தைகளற்று நின்றான்.
“பிரணவ்.” இன்பாவின் தொடுகையில் தான் மீண்டான்.
“ஆன்டி கூப்பிடுறாங்க”, இன்பா.
“மாம்…” பிரணவ் வண்டியில் ஏறிட,
“நல்ல நேரத்தில் போகணும் பிரணவ்” என்றார் விமலா.
“என்னை ஃபாலோ பண்ணிக்கோங்க” என்று இன்பா முன் செல்ல,
‘பிரணவ் நீயே தெரிஞ்சா மாதிரி காட்டிக்காத மேன்.’ முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
அவள் என்று வருகையில் மட்டும் மனம் ஏன் தடுமாறுகிறது. காரணம் அவனுக்கே விளங்கவில்லை.
‘நான்கு வருடங்களாக அவள் நினைவின்றி தானே இருந்தாய்.’ மனதால் தன்னையே அடித்துக்கொண்டான்.
‘என்ன பேசணும் நினைத்து போறியோ… அதை பேசுற வந்திட்டே இருக்க.’ நினைத்தவன், இண்பாவின் வண்டி பெரிய கேட்டிற்குள் நுழைய தானும் கவனித்து வண்டியை உள் செலுத்தினான்.
வீட்டு ஆண்கள் கேட்டிற்குள், வாயிலிலே நின்றிருந்தனர்.
“வாங்க… வாங்க…” கஜமுகன் அனைவருக்கும் பொதுவாக வரவேற்றிட, விஜயன் இளங்கோவனை பார்த்ததும் கண்டுகொண்டார். முன்பு தொழில்முறையில் உறவு கொண்டிருந்ததை.
அதனை விஜயன் நினைவு கூர்ந்து கேட்கவும் செய்திட, உள் வந்த அமர்ந்ததும் சாதாரணப் பேச்சுக்கள் தடையின்றி வந்தன.
பிரணவ் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“தம்பி என்ன அமைதியா உட்கார்ந்திருக்கீங்க… ரொம்ப அமைதி சுபாவமா?” எனக் கேட்டார் குமரி.
“புது இடம்… சோ” என்று முடித்துக் கொண்டான் பிரணவ்.
கஜமுகனும், ராகவனும் வயதின் ஒற்றுமை காரணமாக எளிதில் ஒட்டிக் கொண்டனர்.
நேரம் சென்று கொண்டிருக்க, நனியிதழை அழைத்து வருவதைப் போல தெரியவில்லை.
வந்திருந்த அனைவருக்கும் கங்காவும், காமாட்சியும் தான், தேநீர் மற்றும் பலகாரம் கொடுத்து உபசரித்தனர்.
பிரணவ் தன் அன்னைக்கு கண் காட்டினான்.
“பொண்ணை வர சொன்னா நேரில் பார்ப்போம்.” விமலா கேட்க,
“எங்க பெரிய பையன் வெளியில் போயிருக்காங்க. வந்திடட்டும் நினைச்சோம்” என்று இளங்கோவன் பதில் கொடுத்தார்.
“அதனாலென்ன… வரப்போ வரட்டும். நாம் பேசிட்டு இருப்போம்.” வீட்டில் எப்போதும் ஒற்றையாக தனித்து தொலைகாட்சி மற்றும் அலைபேசியோடு நேரத்தை போக்கும் விமலாவுக்கு, இங்கு ஒன்றிற்கு நான்கு பெண்கள பேச கிடைத்திட, ஆர்வமாகவே அவர்களுடன் இணைந்து கொண்டார்.
“மாம்.” பிரணவ் சத்தமின்றி பற்களை கடித்தான்.
கண்டுகொண்ட இன்பா வாய்க்குள்ளே சிரித்துக்கொண்டு, தங்கையின் அறைக்குள் சென்றுவிட்டான்.
அப்போதுதான் சன்னல் வழி தன்யா கூடத்தில் இருப்பவர்களை எட்டிப்பார்த்தாள்.
“மாமா உன்கிட்ட போட்டோ காட்டினாங்களா நனி?” என்ற தன்யாவின் கேள்விக்கு, அவளோ தயங்கி இல்லையென்று பதில் வழங்கினாள்.
“அப்போ நீ நேரில் பார்க்கும்போது ஃபிளாட் தான் போ. பையன் செமயா இருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே தனு திரும்ப, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அழுத்தமான பார்வையோடு நின்றிருந்தான் இன்பா.
“அது… அது வந்து…” தனு நாவால் தந்தியடிக்க…
அவனோ அவளை கண்டுகொள்ளாது, நனியின் அருகில் சென்று அமர்ந்தான்.
“உன்னை பார்க்க ரொம்பவே ஈகரா இருக்கார் போல” என்ற இன்பா, தங்கையின் கையை பிடிக்க, அத்தனை குளுமையாக இருந்தது.
“ஹேய் நனி… என்னடா இவ்வளவு சில்லுன்னு இருக்கு” என்ற இன்பா, கையை நன்கு சூடு பரவ தேய்த்துவிட்டான்.
“ரொம்பவே படபடப்பா இருக்குண்ணா.”
தங்கையின் மனம் அவனுக்கு புரிந்தது.
கொள்ளை காதல் கொண்டிருந்த போதும், அதனை சொல்லிட முடியாது அவள் கொண்டிருந்த தவிப்புகள் யாவும் முடிவுக்கு வர இருக்கும் நேரத்தின் இனிய அவஸ்தை என்பது விளங்கியது.
“ஜஸ்ட் உன் ஃப்ரெண்ட்… கூப்பிடும் போது அப்படி நினைச்சிட்டு வந்து நில்லு” என்றான். சரியென அண்ணனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
அந்நேரம் உதயனிடமிருந்து இன்பாவுக்கு அழைப்பு வந்தது.
“அண்ணா…”
“இங்க வேலை முடிய டைம் ஆகும் போல இன்பா. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்” என்று முழு காரணம் எதுவும் சொல்லாது வைத்திட்டான்.
“என்னாச்சு அண்ணா?”, நனியிதழ்.
“அண்ணா வர முடியாதாம்?” என்ற இன்பா, தங்களின் ஷிப்பிங் மேனேஜரை அழைத்தான்.
“அங்க என்ன பிரச்சினை ரமேஷ்?”
“நான் சொல்லலனா, இப்போ உங்களுக்கு தெரியக்கூடாதுன்னு அர்த்தம்.” எதிர்பக்கம் ஒலித்தது என்னவோ உதயனின் குரல்.
“சாரிண்ணா!”
“அங்க நடக்க வேண்டியதை கவனிடா” என்று உதயன் வைத்திட, “அவரை மீறி காற்று கூட திசை திரும்பாது” என எழுந்து சென்றான் இன்பா.
“நீ பையனை பார்க்கலையா நனி. முன்னாடி போய் நிக்கும் போது, நிமிர்ந்து பார்க்க முடியாது. இப்போவே இங்கிருந்து பாரு, நல்லா தெரியுறாங்க” என்றாள் தனு.
“வேண்டாம்… இருக்கட்டும் அண்ணி” என்ற நனியிதழ், “நீங்க வரல?” எனக் கேட்டு உதயனுக்கு தகவல் அனுப்பினாள்.
தகவலை பார்த்ததும் உதயன் தங்கைக்கு அழைத்துவிட்டான்.
“பட்டு என்னடா?”
“ரொம்ப நெர்வஸா இருக்கு செல்வா!”
“ம்ம்… நம்ம ஷிப்பிங் பேக்டரிக்கு ரைட் வந்திருக்குடா.”
தங்கை தன்னை, தனது அண்மையை தேடுகிறாள் என்றதும், அத்தனை நேரம் இன்பா கேட்டும் சொல்லாத, தான் உடனில்லாததற்கான காரணத்தை அவளிடம் சொல்லிவிட்டான்.
“அண்ணா!”
“நத்திங்டா. ஐ கேன் மேனேஜ். நீ அங்க நார்மலா இரு. உனக்கு பிரணவ்கிட்ட பேசணும் அப்படின்னா நேரடியா சொல்லு, அப்பாகிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன். பெரியவங்க என்ன நினைப்பாங்க யோசிச்சு நின்னுட்டு வந்திடாதே” என்றான்.
“ம்ம்” என்ற நனி, “அவங்க கிளம்பறதுக்குள்ள வரப்பாருங்க” என்றாள்.
வெளியில் சென்ற இன்பா கஜமுகனிடம் உதயன் வர முடியாது என்பதை சொல்லிட, நனியை அழைத்துச்செல்ல குமரி அறைக்குள் வந்தார்.
“இப்பவும் என்ன ஃபோனு நனி. வா கூப்பிடுறாங்க” என்றார்.
குமரியின் குரல் அந்தப்பக்கம் உதயனுக்கும் கேட்க, “சான்ஸ் மிஸ் பண்ணிடாத பட்டு” என்றுகூறி வைத்திட்டான் உதயன்.
குமரி முன் சென்றிட, தனு தான் நனியை அழைத்து வந்தாள்.
நனியிதழ் அனைவருக்கும் முன் வருவதற்கு முன்பே, பிரணவ்வின் பார்வை அவளை கண்டு நிலைத்துவிட்டது.
வான் நீல நிற புடவை, தங்க இழைகள் மின்னும் கத்தரிப்பூ வர்ண பட்டுக்கரை. வகிடெடுத்து பின்னிய கூந்தலில் அளவான மல்லிகைச் சரம். கூரிய நாசியின் வலது பக்கம் கடுகளவில் ஒற்றை கல் மூக்குத்தி. ஒரு நொடி மூக்குத்தியில் பார்வையை அழுத்தமாக பதித்து மேலேற்றினான். நெற்றியில் புள்ளியலவிலான பொட்டு. கண்ணுக்கு மையின்றி, இமை இழைகளுக்கு மட்டும் மை தீட்டியிருந்தாள். நன்கு வளைந்து புருவம் தொட்டு நின்ற இமை இழைகளில் பிரணவ்வின் இதயம் ஊசியால் தைக்கும் உணர்வு பெற்றது. சாயம் பூசாது இயற்கையாகவே பன்னீர் ரோஜா நிறத்தில் அவனை மொத்தமாக ஈர்த்தது பெண்ணவளின் செவ்விதழ்கள்.
“ஊஃப்.” பிறர் கவனம் பெறாது உதட்டினை குவித்து ஊதி, தன்னை நிலைப்படுத்தி பார்வையை சடுதியில் மாற்றிக் கொண்டான்.
‘என்னடா பிரணவ் பன்ற… உள்ள குடையிறாளா?’ கல்யாண வயதுடைய இளம் ஆண் மகன். அழகான பெண்ணை பார்த்து வரும் இயல்பான உணர்வென்று நொடியில் கடந்துவிட்டான்.
மெல்ல நடந்து வந்து அனைவருக்கும் நடுநாயகமாக நின்றாள் நனியிதழ்.
“பெரியவங்களை கும்பிட்டுக்க நனிம்மா.” ஜெயலட்சுமி பாட்டி சொல்ல,
தலை நிமிராது வணக்கம் வைத்த நனியிதழுக்கு, தன்னவனின் முகம் கண்டுவிட உள்ளமும், விழிகளும் அதீத ஆவல் கொண்ட போதும், தன் உற்சாகம் அடக்கி பொறுமை காத்தாள்.
Epi 9 and 10
https://thoorigaitamilnovels.com/%e0%ae%8f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9-%e0%ae%ae-10/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
20
+1
+1