Loading

என் ஆயுள் நீயே 5

வீட்டின் கூடத்தில் உம்மென்று அமர்ந்திருந்தார் விமலா.

“நீ என்ன தான் பெர்ஃபாமென்ஸ் பண்ணாலும், அவனை ஒத்துக்க வைக்க முடியாது. டிராமைவை வேஸ்ட் பண்ணாத” என்றார் ராகவன்.

“இனியும் முடியாது மாமா. எதாவது பண்ணனும். அவன் ஒத்துக்கிட்டே ஆகணும்” என்ற விமலா, “நீங்க என்னங்க சொல்றீங்க?” என்று கணவரிடம் கேட்டார்.

“நான் சொல்ல என்னயிருக்கு விமலா. பிரணவ் ஒத்துகிட்டா சந்தோஷம் தான்” என்றார்.

“பொண்ணு போட்டோவை நீங்களே பாருங்க மாமா. எவ்வளவு லட்சணமா, அமைதியா தெரியுறாள்” என்று தன்னுடைய அலைப்பேசியை ராகவன் முன்பு காட்டியவர், “அப்படியே பிரணவ் பக்கத்துல நிக்க வச்சுப் பாருங்க. கண்ணே பட்டுடும்” என்றார். அத்தனை சிலாகிப்பு விமலாவின் முகத்தில்.

“பொண்ணு நல்லா தான் இருக்கு. அவன் சரி சொல்லணுமே” என்ற ராகவன், “ஓகே சொல்லிட்டான்னா சொல்லு” என்று எழுந்து சென்றுவிட்டார்.

நேரத்தை பார்த்த விஜயனும், “தூக்கம் வருது விமலா. நீ அவன் வரதுக்குள்ள சாப்பிட்டுடு. அப்புறம் அவன் முன்னாடி சாப்பிட்டு மாட்டிக்காதே” என்று சென்றுவிட்டார்.

தனித்து அமர்ந்திருந்த விமலா, நனியிதழின் புகைப்படத்தை பார்த்தது பார்த்தபடியே இருந்தார்.

‘பாந்தமான அழகு.’ மனதோடு சொல்லிக் கொண்டார்.

பிரணவ்க்கு திருமணம் செய்து பார்க்க வேண்டுமென்று விமலாவுக்கு ஆசை. அவனோ இருபத்தி ஆறு வயது தான் ஆகிறதென்று ஆரம்பகட்ட பேச்சிற்கே மறுத்துவிட்டான். விமலா விடுவாரா, பெண்ணை முடிவு செய்து காட்டினால் பிடித்துப்போகுமென்று தரகர் மூலமாக பெண் பார்க்கத் துவங்கியிருந்தார்.

அவரின் செயல் தெரிந்து,

“நீங்க கல்யாணம் வரை என்னை இழுத்திட்டுப் போனாலும் தாலி கட்டப்போறது நான் தான். சும்மா டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. எனக்கு கல்யாணம் பண்ணிக்கும் ஐடியாவே இல்லை” என்றிருந்தான்.

பிரணவ் பொறுமையாக எடுத்து சொல்லியிருந்தால், அவரும் கொஞ்சநாள் போகட்டும் என்று அமைதியாகியிருப்பாரோ? அவனோ கல்யாணம் செய்துகொள்ளப் போவதே இல்லை எனும் அர்த்தத்தில் சொல்ல, எங்கே தனித்து நின்றிடுவானோ என்று ஆரம்பித்த வேலையை அவனது திருமணத்தில் முடித்தே தீர்வேன் என்று தீவிரமாக பெண் வேட்டை செய்தார்.

அதில் அவருக்கு பார்த்ததும் பிடித்தது தான் நனியிதழின் புகைப்படம்.

“என்ன போட்டோ மம்மி அது?” என்று கேட்டுக்கொண்டே அவரின் அருகில் இடித்துக்கொண்டு அமர்ந்தாள் அஷ்மிதா.

அஷ்மிதா விஜயனின் தம்பி விதுரனின் மகள். விதுரன் தந்தையைப்போல் ராணுவத்தில் சேர்ந்து உயிர் நீத்திருக்க, அவரின் காதல் மனைவி கணவரின் இறப்பு செய்தி கேட்டு நான்கு வயது மகளின் நினைவின்றி, அதிர்வில் உயிரை விட்டிருக்க, அஷ்மிக்கு தன்னுடைய பெரியம்மா, பெரியப்பாவே பெற்றோராகினர்.

அஷ்மிக்கும், பிரணவ்வுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். அஷ்மியும் பிரணவ் படித்த கல்லூரியில் தான் பயின்றாள். நனியிதழுக்கு ஜூனியர் அவள்.

“நீ இன்னும் தூங்கல?”

“ஃபாரின் க்ளையன்ட் கூட ஒரு கால் மம்மி. இப்போ தான் முடிஞ்சுது. ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ண எழுந்து வந்தேன்” என்ற அஷ்மி, அவரின் கையிலிருந்த அலைபேசியை வாங்கி பார்த்தாள்.

“வாவ்… ஹூ இஸ் திஸ் பியூட்டி?” என்று விழிவிரித்தாள் அஷ்மி.

“நீ கொடுக்கிற இந்த எக்ஸ்பிரஷனை உன் அண்ணன் கொடுத்தால் நல்லாயிருக்கும்” என்ற அன்னையை அர்த்தமாக ஏறிட்ட அஷ்மிதா, “அண்ணியா மம்மி?” எனக் கேட்டாள்.

‘நல்லா நடிக்கிற அஷ்மி நீ.’ மனதிற்குள் தன்னை பாராட்டி சிரித்துக் கொண்டாள்.

“உன் அண்ணன் ஓகே சொல்லிட்டா உனக்கு அண்ணி தான்” என்றவரின் வார்த்தைகளிலேயே, அவருக்கு நனியிதழை எத்தனை பிடித்திருக்கிறது… இந்த சம்மந்தம் கைகூட வேண்டுமென்கிற அவரின் எதிர்பார்ப்பு அஷ்மிதாவுக்கு புரிந்தது.

“உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல?”

“ஆமா… ரொம்பவே பிடிச்சிருக்கு” என்ற விமலா, “எப்படியாவது உன் அண்ணனை ஒத்துக்க வை அஷ்மி” என்றார்.

“அண்ணி அழகா இருக்காங்க. அண்ணாக்கு பக்கா மேட்ச். பட் மம்மி, அவன்கிட்ட அடி வாங்க எனக்குத் தெம்பு இல்லை. நீங்களே டீல் பண்ணிக்கோங்க” என்றவள், கொரிப்பதற்கு பண்டம் எடுத்து வந்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்து சாப்பிடத் துவங்கினாள்.

“நல்லா சாப்பிடு. இப்போ இதுதான் ரொம்ப முக்கியம்.” இருக்கும் கடுப்பை மகளிடம் காண்பித்தார்.

லட்டுவை வாயில் வைத்து மென்று கொண்டிருந்தவளுக்கு, கல்லூரி காலங்களில் நனி தன்மீது கொண்டிருந்த அன்பு, அக்கறையின் நினைவு. அத்தனை அன்பு கொண்டிருந்தபோதும், நனியிதழ் கல்லூரி முடித்து சென்றதும், முற்றும் முழுதாக தன்னையும் தவிர்த்தது வேதனையாக இருந்தபோதும், அவளின் மனம் அறிந்து அவளின் விலகலை ஏற்கவே செய்தாள்.

அவள் மனதில் நினைவுகளை அலசிக் கொண்டிருக்க,

“நீயென்ன சீக்கிரம் வந்துட்ட. அவனை காணோம்?”, விமலா.

பிரணவ் அலுவலகத்தில் தான் அஷ்மியும் வேலை செய்கிறாள். அண்ணனுக்கு தொழிலில் வலது கை அவள்.

“எனக்கு தெரியாது. எல்லாம் சொல்லிட்டா செய்கிறான் அவன்.” அஷ்மி உதடு சுளிக்க,

பிரணவ் வீடு வந்து சேர்ந்தான்.

“ஹாய் அண்ணா” என்ற அஷ்மி, அவன் வருகை அறிந்ததும் முகத்தை உம்மென்று மாற்றிக்கொண்ட அன்னையை கண் காட்டினாள்.

பிரணவ் புருவம் உயர்த்தி என்னவென்று வினவ, அவளோ கையால் தாலி கட்டுவதுபோல் சைகை செய்து காண்பித்தாள்.

“போச்சுடா” என்று வாய்விட்டே சொல்லியவன், ‘சமாளிக்கப் போனா நேரம் ஓடும். முதலில் தெம்பா சாப்பிட்டு வருவோம்’ என்று விமலாவை கண்டுகொள்ளாது தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட்டான்.

“மம்மி களீன் போல்ட்” என்று அஷ்மி சிரித்திட, விமலா பார்த்த முறைப்பில் அவள் அமைதியாக உணவு மேசை நோக்கி ஓடிவிட்டாள்.

அஷ்மி பிரணவ்வுக்கு உணவு எடுத்து வைக்க, தன்னை சுத்தம் செய்துகொண்டு ஆடைமாற்றி வந்து சேர்ந்தான்.

“நீ சாப்பிட்டியா வாலு” என்று தங்கையின் தலையில் கொட்டியவன், “மாம்?” என்று கேள்வியாக பார்த்தான்.

“அடிக்காதடா தடிமாடு” என்று அவனின் புஜத்தில் குத்தியவள், “நிஜமாவே அம்மா சாப்பிடாம இருக்காங்க. அவங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிப்போச்சு” என்றாள்.

உணவில் கை வைத்தவன், தங்கையின் முகம் காண, “எனக்கும்” என்று கண் சிமிட்டினாள் அஷ்மி.

“வாய் மூடிட்டு சாப்பாடு வை” என்ற பிரணவ், தங்கைக்கும் நடுவில் உணவினை ஊட்டிவிட்டிவனாக உண்டு முடித்து எழுந்தான்.

“நீ சாப்பிடும் போது எனக்கு இப்படி கொடுக்காதன்னு எத்தனைவாட்டி சொல்றது மங்கி. உன் சப்பாட்டில் பாதி சாப்பிட்டே நான் வெயிட் போடுறேன்” என்று சிணுங்கினாள் அஷ்மி.

“ஊட்டுற வர அமைதியா இருந்திட்டு, கடைசியில சொல்ற பார்த்தியா. அங்க நிக்கிற நீ. அரிசிமூட்டை” என்ற பிரணவ், “குட்டியா இருக்கும் போது கொழுகொழுன்னு இருப்ப. அந்த அஷ்மி குட்டியை ரொம்பவே மிஸ் பண்றேன். அதான் உன்னை பழைய மாதிரி குண்டு பேபி ஆக்கலான்னு என் சாப்பாட்டில் பாதியை உனக்கு கொடுக்கிறேன்” என்றான்.

அண்ணனும் தங்கையும் நண்பர்கள் போல அத்தனை ஜாலி. இருவரும் ஒன்று சேர்ந்தால் கலகலப்பு தான். ஆனால் எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

இப்படி கேலி, கிண்டல் நிறைந்த பேச்சின் உள்ளே இருவருக்குமான அன்பு மறைந்திருக்கும்.

பிரணவ்வுக்கு தங்கைக்கு ஊட்டாது உணவு உண்ட திருப்தி இருக்காது. அவளுக்கும் அண்ணன் கையில் ஒரு வாய் வாங்காது அந்த நாள் நிறையாது.

“என்ன குண்டா மாத்துறது இருக்கட்டும். இப்போ மம்மியை போய் பாருடா” என்று அவனின் முதுகில் கை வைத்து தள்ளிக்கொண்டு சென்று விமலா முன் நிறுத்தினாள்.

“நீயும் என்னை குழிக்குள்ள தள்ளப் பாக்குற அஷ்மி” என்ற பிரணவ், “மாம் சாப்பிட வாங்க” என்று அழைத்தான்.

“எனக்கு பசிக்கல.” பட்டென்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டார்.

“கிட்டிஷா பிஹேவ் பண்ணாதீங்க மாம்.” அவரின் தோளில் கரம் பதித்து அமர்ந்தான்.

“கையை எடுடா” என்று நகர்ந்து அமர்ந்தவர், “ஓகே சொல்லு நான் சாப்பிடுறேன்” என்றார்.

“மாம்… எனக்கு என் பிஸ்னசில் நிறைய கமிட்மென்ட் இருக்கு. நிறைய அச்சிவ் பண்ணனும். அதோட மேரேஜ் லைஃப் ஃபுல் ஆஃப் பிர்ஷர். எனக்கு செட் ஆகாது” என்றான்.

“ஹோ… இதையே நானோ உன் அப்பாவோ நினைத்திருந்தால்?”

அடுத்து அவர் சொல்லாது விட்டது அவனுக்கு புரிந்தது.

“நிஜமா நீ சரி சொல்லாது நான் சாப்பிடமாட்டேன்” என்றார்.

“என்னவோ பண்ணுங்க” என்று பிரணவ் எழுந்து சென்றுவிட்டான்.

பிரணவ், அன்னை வழக்கமாக எதாவது ஒன்றிற்கு தன்னை ஒத்துக்கொள்ள வைத்திட, தனக்குத் தெரியாது சாப்பிட்டுவிட்டு, பட்னி இருப்பது போல நடிப்பதை இப்போதும் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் இம்முறை அவரின் தீவிரம் அவன் உணரவில்லை. எப்படியும் தான் அறைக்குள் சென்றுவிட்டால் அவராக சென்று சாப்பிட்டுவிடுவார் என்று நினைத்தான்.

அவனின் பின்னால் சென்ற அஷ்மி, “வன்ஸ் அண்ணி பிக் பாருடா. செமயா இருக்காங்க. நீ ஓகே சொன்னாலும் சொல்லுவ” என்றாள்.

இடையில் கை வைத்து முறைத்து பார்த்தான்.

“சும்மா முறைக்காதடா. நீ கல்யாணம் பண்ணா தான, எனக்கு நாத்தினார் பதவி கிடைக்கும். நான் கெத்து காட்ட முடியும்” என்றாள்.

“நீ கெத்து காட்ட, நான் ஏன் பக்கி கிணத்துல விழணும்” என்ற பிரணவ், “உனக்கே பிடிச்சிருக்கு அப்படின்னா, நல்ல பொண்ணா தான் பார்த்திருக்காங்க போல. பட் அம் நாட் இன்ட்ரஸ்ட்” என்று தோள் குலுக்கினான்.

“ஆமா ரொம்ப பிடிக்கும்” என்றவள்,

“எனக்கென்னவோ நீ இவங்ககிட்ட தான் மாட்டிக்கிட்டு தொங்கப் போறன்னு தோணுது” என்றாள் அஷ்மி.

“ஹா ஹா…” வாய்விட்டு சிரித்தான் குரு பிரணவ்.

“நானா? நெவர்” என்றவன், “இப்போதைக்கு ஃபோகஸ் ஃபுல்லா என் ஜாபில் தான்” என்றான்.

“இதையே எத்தனை நாளுக்கு சொல்லுவ… இவங்க யாருன்னு தெரிஞ்சால் நீ ஓகே சொல்லிடுவ” என்றாள்.

“எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்ற? பொண்ணு உன் ஃப்ரண்டா?” எனக் கேட்டான்.

“ஆமா… காலேஜில் என்னோட சீனியர்” என்ற அஷ்மி தன்னுடைய அலைபேசி ஒலிக்கவும், “ஆரி தான்” என நகர்ந்து சென்றாள்.

“உன் சீனியரா!” என்ற பிரணவ், “அப்போ எனக்குத் தெரிஞ்சிருக்கணுமே, யாரு?” என்றான். தங்கையின் பின் சென்று.

அவளோ பால்கனி பக்கம் சென்றவள், இவனை திரும்பி பார்த்துவிட்டு, அலைபேசியில் உரையாடத் துவங்கிவிட்டாள்.

அஷ்மி பேசி முடித்து வந்து பதில் சொல்லும் வரை பொறுமை இல்லாத பிரணவ், வேகமாக கீழே வந்தான்.

இன்னமும் விமலா அதே இடத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க,

“பொண்ணு பிக் காட்டுங்க மாம்” என்றான்.

நொடியில் முகம் மலர்ந்த விமலா, தன்னுடைய அலைபேசியின் திரை நீக்கி, படத்தை காண்பித்தார்.

அலைபேசியை கையில் வாங்கிய பிரணவ்வின் அதரம் விரிந்து உச்சரித்தது,

“நனியிதழ்.”

 

என் ஆயுள் நீயே 6

அஷ்மிதா தன்னுடைய தம்பி குரு ஆர்யனிடம் பேசிக் கொண்டிருந்தாலும், தன் அண்ணனின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

குரு ஆர்யன், பிரணவ்வின் உடன் பிறந்தவன். ஐந்து வருடங்கள் இளையவன். கன்னியாகுமரியில் விடுதியில் தங்கி படிக்கிறான். பிரணவ், அஷ்மி, நனி, ரீமா பயின்ற அதே கல்லூரி.

“நிஜமாவா சொல்றீங்க?” அஷ்மி, பிரணவ் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிடுவானென்று உறுதியாக சொல்ல, ஆர்யன் நம்ப முடியாது கேட்டிருந்தான்.

“கண்டிப்பா” என்ற அஷ்மி, பிரணவ் வேகமாக கீழே செல்லவும், தானும் அவன் பின்னால் சென்று, படிகளில் இறங்காது மேலிருந்தே அவன் என்ன செய்கிறானென்று பார்த்தாள்.

பிரணவ் விமலாவிடம் பெண்ணின் புகைப்படத்தை வாங்கி பார்ப்பது தெரிந்தது.

ஓசையின்றி என்றாலும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அஷ்மிக்கு, அவனது இதழ் பிரிந்து மொழிந்த நனியிதழ் எனும் உச்சரிப்பு புரிந்தது.

“இன்னும் மறக்கல.” வாய்விட்டுக் கூறினாள்.

“யாரை மறக்கல? அக்கா என்ன சொல்றீங்க?” அழைப்பில் எதிர்பக்கமிருந்த ஆர்யன் வினவிய பின்னரே அவன் இணைப்பிலிருப்பது நினைவு கூர்ந்து, “நத்திங்” என்றாள்.

“நீயெப்போ சொல்லப்போற?”, அஷ்மி.

“ம்ம்” என்ற ஆர்யன், “சரியான அண்ணா கோண்டுக்கா அவள். எப்போ பாரு அண்ணா புராணம் தான்” என்றான்.

“அண்ணா மேலயே அவ்ளோ பாசமா இருக்க பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டா, உன்மேல எவ்ளோ பாசமா இருப்பாள். இதுக்கெல்லாமா ஜெலஸ் ஆவாங்க” என்றாள்.

“ம்க்கும்… நீங்க வேற, கிட்ட போனாலே எங்க அண்ணான்னு ஸ்டார்ட் பண்ணிடுறா. இதுல எங்கேர்ந்து நான் என் லவ்வை சொல்றது” என்று ஆயாசமாகப் புலம்பினான்.

“லவ் கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட் தான். செய்ய நினைக்கிறதை செய்ய முடியாது. சொல்ல நினைக்கிறது தொண்டையை தாண்டி வெளிய வரவே வராது” என்று தன்னைப்போல் கூறியிருந்தாள்.

“அனுபவம் போல பேசுறீங்க. உண்மையை சொல்லுங்க. யாரது?”

ஆர்யன் அவ்வாறு கேட்ட பின்பே தான் உளறியது புரிந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அதான் நீ படுறபாட்டை பாக்குறேனே… இதைவிட ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தனியா வேற வேணுமா” எனக் கேட்டு எப்படியோ தம்பியை சமாளித்து, “நீ வை டா! நான் அண்ணா என்ன பண்ணப் போறான் பார்க்கிறேன்” என்றாள்.

இதற்கு மேல் பேசினால் தன் மனதை அவனிடம் இயல்பாய் வெளிக்காட்டிடுவோம் என்று பயந்தே அழைப்பை வைத்திருந்தாள்.

இல்லையென்றால் இருவரின் பேச்சும் மணிகணிக்கில் நீளும்.

“என்ன ஃப்ரீஸ் ஆகிட்டான்!”

நனியிதழ் படத்தை பார்த்தது பார்த்தபடி பிரணவ் நின்றிருக்க, அஷ்மி மேலிருந்து கீழ் வந்து, அவன் தோளில் கை வைத்தாள்.

“நான் சொன்னேன்ல. இந்தப் பொண்ணை உனக்கு பிடிக்கும்னு” என்று கண்ணடித்தாள்.

“எனக்கு முன்ன அஷ்மிக்கு பண்ண முடியாதா?” அன்னையிடம் கேள்வி கேட்டாலும், பிரணவ்வின் பார்வை அலைபேசி திரையிலிருந்து நகரவில்லை.

“பண்ணலாமே! அதுக்கு அவ ஒத்துக்கணுமே” என்று மகளை முறைத்தார் விமலா.

பிரணவ் தங்கையை ஏறிட்டான்.

“ஹலோ ப்ரோ… என்ன லுக்கு. நான் முன்ன சொன்னதுதான். உனக்கு பர்ஸ்ட் மேரேஜ். தென், எனக்கு. அப்பா அம்மா இடத்தில் நீயும் அண்ணியும் தான் எனக்கு எல்லாம் செய்யணும்” என்று சொல்லிக் கொண்டே விமலாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“அதான் மாம் அண்ட் டாட் இருக்காங்களே” என்றான் பிரணவ்.

“அஃப்கோர்ஸ் இருக்காங்க” என்று விமலாவினை கட்டிக்கொண்டு அவரின் கன்னத்தில் முத்தம் வைத்த அஷ்மி, “எனக்கு நீ செய்யணும். இது என்னோட விஷ். அவ்ளோதான்!” என்றாள்.

தங்கையின் மனம் புரிகிறது அவனுக்கு.

அவள் தாய், தந்தையை இழந்த போது நான்கு வயது குழந்தை. அப்போது ஆர்யன் ஆறு மாத கைக்குழந்தை. அப்போது விஜயனும் வேலை வேலையென்று ஓடிக்கொண்டிருந்த தருணம். ராகவனும் பிள்ளை இறந்த துக்கத்தில் மூழ்கியிருந்தார்.

சிறு குழந்தைகள் இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது விமலா திணறிய சமயம் அது. அப்போது ஆறு வயதான பிரணவ் தானாக அஷ்மியை தூக்கிக்கொள்வான். தன்னுடனே வைத்துக் கொள்வான். அவளுக்கு உணவு ஊட்டுவதில் ஆரம்பித்து, தன்னுடனே உறங்கவும் வைத்துக்கொள்வான். அந்த சிறு வயதிலேயே அஷ்மிக்கு தயுமானவனாக மாறியிருந்தான் பிரணவ்.

ஆதலால் அன்னை தந்தையாக பெரியப்பா, பெரியம்மா இருந்த போதிலும், அஷ்மிக்கு அனைத்தும் பிரணவ் தான். அதனை வாய் வார்த்தையாக சொல்லாவிட்டாலும் தன் செயலால் உணர்த்திடுவாள்.

மகளின் மனம் புரிந்து விமலாவும், விஜயனும் சிறு வருத்தமும் கொண்டதில்லை.

“என்ன செண்ட்டிமெண்ட்டா?”, பிரணவ்.

“அப்படியே வச்சுக்கோ.” தோள்களை உயர்த்தி இறக்கிய அஷ்மி, “அப்படியே பேச்சை டைவர்ட் பண்ணாத. இப்போ உனக்குத்தான் கல்யாணம். உனக்குத்தான் பொண்ணு பார்த்திருக்கு” என்றாள்.

“ம்ம்” என்று படத்தை பார்த்துக்கொண்டே, தலையை மேலும் கீழும் ஆட்டிய பிரணவ், “எனக்கு ஓகே” என்றான்.

“ஹேய்” என்று அஷ்மி, விமலாவின் கன்னம் இரண்டையும் பிடித்து ஆட்டிட, “ஹேய் விடுடி” என்ற விமலா, மகனின் முகத்தை ஆராய்ந்தவாறு “என்ன ஓகே?” எனக் கேட்டார்.

“பொண்ணு பார்க்க வரேன்” என்றான்.

“உண்மையாவா பிரணவ்?” என்று விழிவிரித்துக் கேட்டவராக, அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து குதித்தபடி விமலா கேட்டிட, அவரின் செயலில் பிரணவ் முகம் மின்ன சிரித்தான்.

“ஐ ஸ்வேர் மாம்” என்று சிரித்த பிரணவ்வின் உள் வேறு திட்டமிருந்ததை யாரும் அறியவில்லை.

அஷ்மியும் அவன் சம்மதம் சொல்லியதில், வேறொரு மகிழ்விற்குள் மூழ்கிட, அவனின் மனதை அவதானிக்க மறந்தாள்.

மகிழ்வான செய்தியை உடனடியாக கணவரிடம் தெரிவிக்க, விமலா சிறுமியாய் ஓடிட,

“டைம் ஆச்சு. நீ போ தூங்கு” என்று தங்கையை விரட்டினான்.

“நான் சொன்னேன்ல, நீ இவங்களுக்கு ஓகே சொல்லுவன்னு” என்ற அஷ்மி, “உனக்கு அவங்க மேல க்ரஷ் இருந்துச்சுல?” எனக் கேட்டாள்.

“நீயா எதுவும் இமாஜின் பண்ணி உளறாத” என்று அவளின் கன்னத்தில் குத்திய பிரணவ், “ரீமாவோட ஃப்ரெண்ட். தென் உனக்கு ரொம்ப க்ளோஸ். சோ, பேசியிருக்கேன். பழகியிருக்கேன். அவ்ளோதான்” என்று இரண்டிரண்டு படிகளாகத் தாவியேறி மேலே ஓடிவிட்டான்.

அறைக்குள் வந்த பிரணவ், சற்று முன்னர் விமலாவின் அலைபேசியிலிருந்து எதற்காக தன்னுடைய எண்ணுக்கு பகிர்ந்துகொண்டோம் என்று அறியாது, தனக்கு அனுப்பிக்கொண்ட நனியிதழின் புகைப்பத்தை திறந்து பார்த்தான்.

விவரிக்க முடியா உணர்வு நெஞ்சத்தில் மோதுவது போலிருக்க, ஆராய முற்படவில்லை.

அவனுக்கு தன் அன்னையை சிறிது காலம் திருமணப்பேச்சை எடுக்கவிடாது செய்ய, அவனுக்கு தற்போது எடுத்திருக்கும் முடிவு அவசியமாகப்பட்டது. அதற்கு தெரிந்த பெண் என்றால், தான் சொல்வதை புரிய வைப்பது எளிதென்று எண்ணியே சரியென்றிருந்தான்.

இதனை அறியாத அவனது குடும்ப உறுப்பினர்கள், மகிழ்வில் ஆர்ப்பரித்தனர்.

“அண்ணா ஓகே சொல்லிட்டாங்க.” அஷ்மி யாருக்கோ தகவல் அனுப்பினாள்.

சில நிமிடங்களில் அவளுக்கு ரீமாவிடமிருந்து அழைப்பு வந்தது.

ரீமா நம்ப முடியாது கேட்டிருந்தாள்.

“பய ஒத்துக்கிட்டானா?”

“ஆமாக்கா.”

“நம்ப முடியலையே” என்று தன் தாடையை நீவிய ரீமா, “அவன் காலேஜ் டேசில் பொண்ணுங்க பக்கம் திரும்பிக்கூட பார்க்காததுக்கு காரணம், அவனோட ட்ரீமில் டிஸ்ட்ராக்ட் ஆகக்கூடாதுன்னு தான். அதே காரணத்தை தான் இப்போவரை சொல்லிட்டு இருக்கான். சடனா எப்படி ஓகே சொன்னான் அஷ்மி?” என்றதோடு, “அவன் வேறெதுவும் பிளான் பண்ணியிருக்கப்போறான்” என்றாள்.

“அப்படிலாம் எதுவும் இருக்காது ரீமா’க்கா. அண்ணா காலேஜில் பொண்ணுங்க யாரையும் பார்த்தது இல்லை தான். ஆனால், சீனியரை(நனி) அவன் சைட் அடிச்சு நான் பார்த்திருக்கேன்” என்றாள்.

“இது எப்போ? நான் நனியோடவே தானே சுத்திக்கிட்டு இருந்தேன்.” ரீமாவிடம் கதை கேட்கும் சுவாரஸ்யம்.

“நீங்க சீனியர் கூடவே இருந்ததால் தான் உங்களுக்குத் தெரியல” என்ற அஷ்மி, “டான்ஸ் பிராக்டிஸ் அப்போ. என்னை கூப்பிட வந்துட்டு, சீனியரை இமைக்க மறந்து பார்த்திட்டு நின்னான்” என்றாள்.

“ஹோ… அது வெறும் சைட்டா கூட இருந்திருக்கலாம்” என்ற ரீமாவின் பேச்சை தடை செய்து, “நீங்க சொல்ற மாதிரி வெறும் சைட்டா மட்டும் இருக்கட்டுமே! இப்போ அது பார்த்ததும் லவ் ஃபீல் வந்திருக்கலாம் இல்லையா?” என்றாள் அஷ்மி.

“வேலிட் பாயிண்ட்” என்ற ரீமா, “இருந்தாலும் அவனை நம்ப முடியாது. என்ன காரணமோ? இவ்வளவு நாள் காத்திருந்த காதல் கல்யாணத்தில் சேர்ந்தால் சந்தோஷம் தான்” என்றாள்.

“எஸ்… பட் எந்த கௌசிக்கும் குறுக்க வராமல் இருக்கணும்” என்றாள் அஷ்மி. (இது ஒரு படத்தில் வரும் வசனம். குறுக்கே மண்ணு லாரி எதுவும் வரக்கூடாது சொல்வதற்கு லேட்டஸ்ட் வார்த்தை கௌசிக்.)

அங்கு குறுக்கே வரும் கௌசிக்கே பிரணவ் தான் என்பதை அறியாது போயினர் இருவரும்.

“இப்போ நடக்கும் பெண் பார்க்கும் படலத்திற்கும் உனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லையே?” என்று சம்மந்தமே இல்லாது கேட்டாள் ரீமா.

ஒரு நொடி தடுமாறினாலும், “இல்லை ரீமாக்கா. எனக்கு சீனியர் பக்கம் யாரையும் தெரியாதே! நான் எப்படி அரெஞ் பண்ணியிருக்க முடியும்?” என்று கேட்டு, ரீமாவையே குழப்பிவிட்டு இணைப்பைத் துண்டித்திருந்தாள் அஷ்மிதா.

உறக்கம் வராது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பிரணவ்,

நான்கு வருடங்களுக்குப் பின்னர் தன்னுடைய காண்டாக்ட் லிஸ்டில் நனியிதழின் பெயரைத் தேடினான்.

கல்லூரி நாட்களில் கூட அவளின் எண்ணிற்கு அவன் அழைத்தது சொற்பமே.

தேடியது கிடைத்ததும் அழைத்து விட்டான். ஆனால் ஒலி சேர்வதற்கு முன்பே துண்டித்தும் விட்டான்.

திடீரென திருமணமென்று எப்படி பேசிட முடியும்? பார்த்து தெரிந்து பழகிய பெண்ணாக இருந்தாலும், நான்கு வருட இடைவெளி இருக்கிறதே! தயக்கம் கொண்டான்.

‘வாட்ஸ் அப் பண்ணுவோமா’ என்று புலனம் திறந்து அவளது கணக்கை தேடி எடுத்தான்.

முகப்புப் படத்தில் பூவாய் அவள் முகம்.

சில நிமிடங்கள் அசைவற்று பார்த்தான். ஏனென்று அவனுக்கும் தெரியவில்லை. தலையை உலுக்கி சுயம் மீண்டான்.

‘மெசேஜ் பண்ணுவோமா?’

‘இத்தனை வருஷம் இல்லாம இப்போ மட்டும் என்னன்னு கேட்டால்?’

‘வேணாம். நேரிலே பேசிப்போம்.’

அழுத்தமாக முடிவெடுத்தவனாக அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

ஒருத்தியை உயிரோடு மரிக்கச் செய்யப்போகிறோம் என்பது அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினான்.

வழக்கமாக எழும் நேரம் கண் விழித்து கீழே வந்த பிரணவ் அனைவரும் எங்கோ வெளியில் செல்லத் தயாராகி இருப்பதைக் கண்டு புருவம் சுருக்கினான்.

அடுத்து விமலா சொல்லியதில்,

“அதுக்குள்ளவா?” எனக் கேட்டு அதிர்ச்சியில் விழிவிரித்தான்.

“எஸ் உன்னை கட்டம்கட்டி தூக்கியாச்சு. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்று சிரித்த அஷ்மியின் தலையில் கொட்டிய பிரணவ், “கிளம்பி வரேன்” என்று அறைக்குள் நுழைந்தான்.

Epi 7 and 8 https://thoorigaitamilnovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-7-%e0%ae%ae-8/

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
21
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்