Loading

என் ஆயுள் நீயே 19

நனியிதழும் எழிலும் இருசக்கர வாகனத்தில் கல்லூரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன மேடம் ரொம்ப அமைதியா வரீங்க?” கண்ணாடி வழி தனக்கு பின் அமர்ந்திருக்கும் தங்கையிடம் வினவினாள் நனியிதழ்.

“எனக்கென்னவோ அண்ணிக்கு இன்பா அண்ணா மேலதான் விருப்பம் தோணுது” என்றாள். முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு.

“ஹோ…” என்று நனியும் தீவிர முகபாவம் காட்ட… “பெரியண்ணாவுக்கும் தெரியும் போல” என்றால்.

“ம்ம்…”

“என்ன நீங்க சொல்றதுக்கு பதிலே பேசாம வரீங்க!” நனியின் தோளிலே தட்டினாள் எழில்.

“எதுவாயிருந்தாலும் அண்ணா பார்த்துப்பாங்க. நீ இதையெல்லாம் ரிசர்ச் பண்றேன்னு இல்லாத மூளையை உருட்டாத” என்று சிரியாது கேலி செய்தாள் நனி.

“அக்கா” என்று இழுத்த எழில், “என்னையே கிண்டல் பண்றீங்க” என நனியிதழின் இடையில் குறுகுறுப்பு காட்ட, நனி நெலிந்ததில் வண்டி ஆட்டம் கண்டது. அந்நேரம் சட்டென்று யாரோ குறுக்கே வர, கீழே விழும் முன்னர், சுதாரித்து காலூன்றி நிறுத்தியிருந்தாள்.

“நல்லவேளை ஒன்னுமாகல” என்று எழில் கூற, “அமைதியா வா எழில்” என்று நனி வண்டியை உயிர்ப்பிக்க, எழில் தமக்கையின் தோளை சுரண்டினாள். வந்தனா முன் வந்து நிற்பது தெரிந்தும், நனி கவ்னைக்காத்தைப் போன்று சென்றுவிட நினைத்தாள்.

ஆழமான காதலாக இருப்பினும் நேற்று வந்தனா செய்த செயலை நனியால் ஏற்க முடியவில்லை.

“இவங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்.” எழில் வந்தனாவின் முகத்தை கூர்ந்து பார்க்க,

“வந்தனா” என்று மெல்ல உச்சரித்தாள் நனி.

“ஆமா இவங்க பெட்ல கிடக்காம இங்கென்ன நின்னுட்டு இருக்காங்க?” எழில் கேட்க,

“இப்போ ஓகே தான்” என்று வந்தனா பதில் சொல்லியிருந்தாள்.

“அச்சோ அக்கா இவங்க நம்மகிட்ட பேசுறாங்க. நீங்க வண்டியை எடுங்க” என்றாள் எழில்.

ஏற்கனவே வீட்டிற்கு மருதன் மனைவியோடு வந்திருக்க, இங்கு இவள் தங்களிடம் என்ன பேசப்போகிறாள் எனும் பதட்டம் எழிலிடம். இருக்கும் பிரச்சினை போதாதா என்று தான் தோன்றியது.

“காலேஜ்க்கு டைம் ஆச்சு அக்கா” எழில் சொல்லிட, “சரி நீங்க டிராப் பண்ணிட்டு வாங்க. நான் வெயிட் பன்றேன். உங்ககிட்ட தான் பேச வந்தேன்” என்று நனியிடம் வந்தனா கூறினாள்.

“நீங்கென்ன எங்ககிட்ட பேசணும்? அதெல்லாம் ஒண்ணும் வேணாம். வழியை விடுங்க” என்றாள் எழில்.

“எழில் சும்மா இரு” என்று தங்கையை அமைதிப்படுத்திய நனியிதழ், “என்னன்னு சொல்லுங்க” என்றாள். வந்தனாவிடம்.

“அக்கா…”

“எழிலு…”

“ஓகே… ஓகே… நீங்க என்ன பேசணும் சட்டுன்னு பேசுங்க” என்ற எழில், “வர லேட்டாகும் போல, அட்டெண்டன்ஸ் போடுங்கப்பா யாராவது” என்று புலனத்தில் தன்னுடைய வகுப்பு குழுவில் குரல் பதிவை அனுப்பினாள்.

“கொஞ்ச நேரம் அமைதியா இரு எழில்” என்று இம்முறை நனியிதழ் தங்கையை அதட்டிட, எழில் வாயில் விரல் வைத்து, “ம்ம்… ம்ம்…” என்று தலையாட்டினாள்.

“நீங்க சொல்லுங்க?”

“நான் யாருன்னு தெரியுமா?” வந்தனா கேட்க, “இதை கேட்கவா வண்டிக்கு குறுக்க வந்து நின்னீங்க” என்று களுக்கி சிரித்தாள் எழில்.

சட்டென்று வந்தனாவின் முகம் மாறி சீரானது. நனியிதழ் கவனித்துவிட்டாள்.

தங்கையின் காலில் கை வைத்து அழுத்திய நனியிதழ், “தெரியும். சொல்லுங்க” என்றாள்.

“உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்” என்ற வந்தனா, “நீங்க சொன்னா உங்க அண்ணா மறுக்கமாட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். எனக்காக அவங்ககிட்ட பேச முடியுமா?” என தன்மையாகக் கேட்டாள்.

“ஆத்தீ… இது ராசதந்திரம்ரா” என்று மெல்ல முணுமுணுத்தாள் எழில். தங்கையின் கால் மீதிருந்த நனியின் கையில் அழுத்தம் கூடியது.

“அண்ணாகிட்ட நீங்களே சொல்லலாமே!” உதயனுக்கு இதில் துளியளவும் விருப்பமில்லையென்று நனிக்கு மட்டுமல்ல அவனது குடும்பத்தாருக்கும் தெரியுமே! அதோடு முந்தைய தினம் அவள் உதயனிடம் பேச விழைந்ததும்.

குடும்பத்தில் சிரியதோ பெரியதோ உதயன் கண்ணசைவின்றி எதுவும் நடக்காது. அப்படியிருக்கையில் உதயன் விருப்பம் பெரிதாக பார்க்கப்பட வேண்டிய விஷயமிது. அவனுக்கு பிடிக்காதென்று தெரிந்த பின்னரும் அவனின் பட்டு, பேச முனைந்திடுவாளா என்ன?

வந்தனாவுக்கு தன்மையாகவே புரிய வைத்திட நினைத்தாள்.

“எனக்கு அவங்களை கட்டிக்கணும். என்னை பேசவே விடல அவங்க. நீங்க சொன்னா மறுக்கமாட்டாங்க” என்றாள். தன் எண்ணம் செயல் கொள்ள வேண்டும். வந்தனாவின் முனைப்பு அவளின் பேச்சிலே தெரிந்தது.

வந்தனா முயன்று தன்னிடம் தன்மையாக பேசுகிறாள் என்பது நனியிதழுக்கு நன்கு தெரிந்தது.

“நான் சொல்ல முடியாதுங்க.” பொறுமையாக பேசினால் வந்தனாவிடம் வேலைக்காகாது என்று புரிந்து பட்டென்று கூறினாள் நனியிதழ்.

வந்தனாவின் அமைதியெல்லாம் எங்கோ சென்றிருந்தது.

“உன் அண்ணனுக்காக சாவோட விளிம்பைத் தொட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“எங்க அண்ணா உங்களை விஷம் சாப்பிட சொல்லலையே?” நறுக்கென்று கேட்டிருந்தாள் எழில்.

வந்தனா எழிலை முறைக்க,

“அவள் சொல்றது உண்மை தான்” என்றாள் நனியிதழ்.

“எப்படியும் உங்க அண்ணாக்கு கல்யாணம் பண்ணுவீங்க தானே? அது ஏன் நானா இருக்கக் கூடாது?” சட்டமாகக் கேள்வி கேட்டாள் வந்தனா.

“வேணும்னே பேசுறாங்கக்கா. காலேஜுக்கு டைம் ஆச்சு. பிரேக் ஹவரே வந்திடும் போல” என்று எழில் முணுமுணுத்தாள்.

“எனக்கு பதில் சொல்லிட்டுப் போங்க.” நன்றாக வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தாள் வந்தனா.

“உங்களுக்கு பிடிச்சிருக்கு அப்படிங்கிறதால, எங்க அண்ணாக்கு பிடிக்காததை எப்படி செய்ய சொல்றீங்க?” முயன்றளவு நனியிதழ் பொறுமையாகவே பேசினாள்.

“இப்போ முடிவா என்ன தான் சொல்ற?” அவ்வளவு எரிச்சல் வந்தனாவிடம். அபப்பட்டமாக முகத்தில் காட்டினாள்.

“அண்ணாவே ஓகே சொன்னாலும் இவங்க வேணாம் நனிக்கா. அவங்க முகத்தை பாரேன்” எழில் நனியின் காதில் கிசுகிசுத்தாள்.

“எங்க அண்ணாக்கு பிடிக்காததை நாங்க மட்டுமில்ல, எங்க தாத்தா கூட செய்யமாட்டார். வழியை விடுறீங்களா?” என்றாள் நனியிதழ்.

“வேண்டாம்…” என்று வந்தனா பற்களைக் கடித்துக் கொண்டு, விரல் நீட்டி எச்சரித்தாள்.

“நாங்களும் அதேதான் சொல்றோம். நீங்க எங்க அண்ணனுக்கு மட்டுமில்ல, எங்க குடும்பத்துக்கே வேண்டாம்.”

“ஆமா.”

நனியிதழ் சொல்லிட, எழில் ஆமோதித்தாள்.

“என்னைத் தவிர வேறொருத்தியை எப்படி உங்க அண்ணா கட்டிக்கிறாங்க பார்க்கிறேன்” என்ற வந்தனா, “உங்களுக்கு அண்ணியா வந்து, என் கச்சேரியை வச்சிக்கிறேன்” என்று சிலுப்பிக் கொண்டு நகர்ந்தாள் வந்தனா.

“பார்க்க பேச்சே வராதுங்கிற மாதிரி, புள்ள பூச்சியாட்டம் இருந்துகிட்டு எவ்ளோ ஆத்திரம் பாருங்க” என்று எழில், செல்லும் வந்தனாவை பார்த்துக்கொண்டு சொல்ல, நனியிதழ் இரு பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டு வண்டியை முடுக்கினாள்.
__________________________

உயிர் அதிரும் அதிர்வில் உறைந்திருந்தான் பிரணவ்.

“ஷீ இஸ் மேட்லி லவ்ஸ் யூ அண்ணா.”

அஷ்மி சொல்லியது இன்னும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பிரணவ்வால் நம்ப முடியவில்லை.

கண்ணில் விரியும் நினைவின் தடங்கள் யாவும், அவனுக்கு எதிராக உருவம் கொடுத்தது.

நம்ப முடியாது, ஏற்க முடியாது திணறினான்.

ஒருவித மரத்த நிலையில் தான் வீடு வந்து சேர்ந்தான்.

அஷ்மியிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்றன. ஆனால் அவள் சொல்லிய ஒற்றை வரியிலேயே ஸ்தம்பித்துப் போனவனுக்கு அடுத்து என்ன என்றே நிகழ் உணரவில்லை.

விமலா வந்து இரவு உணவிற்கு அழைத்தும் வேண்டாமென மறுத்துவிட்டான்.

“என்னாச்சு அவனுக்கு?”

கூடத்தில் அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் வந்து கேட்டார் விமலா.

“எனக்கென்னத் தெரியும்” என்று அசட்டையாக பதில் கொடுத்து எழுந்து சென்றுவிட்டாள் அஷ்மி. அதிலே இருவருக்குள்ளும் என்னவோ உள்ளதென்று விமலா கண்டுகொண்டார்.

“இந்தப் பசங்க எதையோ மறைக்குதுங்க.” மனைவி சொன்னதை விஜயன் கேட்டுக்கொண்டாரேத் தவிர, எதுவும் சொல்லவில்லை.

“என்ன மாமா உங்க பையன் இப்படியிருக்கார்?” விமலா ராகவனிடம் குறைப்பட்டார்.

“எப்படிம்மா இருக்கான்?”

“எனக்கென்னவோன்னு.”

“அவன் அப்படியே பழகிட்டாம்மா!”

“எதே!”

“ஆமாம்மா.”

தன் தந்தையின் கேலியில் விஜயன் சத்தமின்றி சிரிக்க, ராகவன்

“மாமா” என்று விமலா முறைத்து பார்த்தார்.

“எதுக்கு இப்போ டென்ஸ்ட் ஆகுற. உன் சின்னப் பையனுக்கு கால் பண்ணு. அவன் சொல்லுவான். என்ன ஓடுதுன்னு” என்றார் விஜயன்.

“இதை மறந்துட்டேனே” என்ற விமலா ஆர்யனுக்கு அழைப்பு விடுத்து அவன் எடுக்கக் காத்திருந்தார்.

இறுதி ஒலியில் அவன் அழைப்பை ஏற்க, “என்னடா ஆச்சு? இங்க உன் அண்ணனும், அக்காவும் ஆளுக்கு ஒரு பக்கம் வயலின் வாசிச்சிட்டு இருக்காங்க” எனக் கேட்டார்.

“நீங்ககெல்லாம் ஒரு அம்மாவா?”

“என்னடா நக்கலா?”

“பின்ன… மகன் ஹாஸ்டலில் இருக்கானே. போன் எடுத்ததும், என்ன தங்கம் எப்படியிருக்க? சாப்பிட்டியா? எல்லாம் ஓகே தானே? அப்படின்னு கேட்காம, உங்க கூடவே இருக்க ரெண்டும் உம்முண்ணு இருக்கிறதை விசாரிக்கிறது தான் முக்கியமா?” என்றான் ஆர்யன்.

“ரெண்டு மணி நேரத்திலிருக்க ஹாஸ்டல். வாராவாரம் வீட்டுக்கு வந்திடுற. இதுல நடுவுல அது வேணும் இது வேணும்ன்னு கேட்டு பிரணவ்வை அங்க வரவைச்சிடுற. பத்தாதுக்கு அஷ்மி வேற வாரத்துல ரெண்டு முறை வந்து பாக்குறா. இப்போ நீ கேட்டது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல” என்று விமலா கேட்க, “அம்மா” என்று சிணுங்கினான் ஆர்யன்.

“சரிடா கோச்சிக்காத… எப்படியிருக்க?”

“இதுக்கொன்னும் குறைச்சலில்லை” என்ற ஆர்யன், “இன்னுமா அவங்க பஞ்சாயத்து தீரல?” எனக் கேட்டான்.

“என்ன பஞ்சாயத்துடா? நமக்கு நல்ல பொழுதுபோகுமா?” இடையில் புகுந்து விஜயன் கேட்டார்.

“அப்பா… நீங்க இருக்கீங்களே” என்று இழுத்த ஆர்யன், “தாத்தாவும் பக்கத்தில் இருக்காரா? இல்லைன்னா அவரையும் கூப்பிடுங்க. ஒண்ணாவே சொல்லிடுறேன். அப்புறம் ஆளாளுக்கு எனக்கு சொல்லலன்னு சண்டைக்கு வருவீங்க?” என்றான்.

“நான் இங்க தான் இருக்கேன். போன் ஸ்பீக்கரில் இருக்கு. நீ கதையை சொல்லு” என்றார் ராகவன்.

“குடும்பமாய்யா அது. பசங்க ரெண்டு சோகமா இருக்கே, தெரிஞ்சு சரிபண்ணுவோம் இல்லாம, எதோ சினிமா கதை கேட்கிற மாதிரி கேட்கறீங்க. நாள பின்ன உங்களையெல்லாம் நம்பி நான் எப்படி என் லவ்வுக்கு சப்போர்ட் பண்ணக் கூப்பிடுறது” என்று கிடைத்த இடத்தில் தன்னுடைய காதலை பெரியவர்களிடம் சொல்லிவிட்டான்.

“டேய் ஆரி லவ் பன்றியாடா?” விமலா ஆச்சரியமாக வினவினார்.

“ஆமா. இப்போ தான் சொல்லியிருக்கேன். பதில் வரட்டும், அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேளுங்க” என்றான்.

“அடேய்… ரொம்ப தான் ஸ்பீடு. உனக்கு முன்ன அண்ணா, அக்கா இருக்காங்க நினைவு வச்சுக்கோ” என்றார் விமலா.

“ம்க்கும்… அவங்களுக்கு நான் வெயிட் பண்ணா சாமியாரா போக வேண்டியது தான்” என்றான்.

“அதென்னவோ சரிதான்.” விஜயன் சொல்லிட, “என்ன கிண்டலா?” என்று அவரின் தொடையிலே அடித்திருந்தார் விமலா.

“என்னயிருந்தாலும் என் முன்னாடி அடிக்காதம்மா. ரூமுக்குள்ள வச்சு அடி” என்றார் ராகவன்.

“அப்பா… யூ டூ!” விஜயன் அப்பாவியாகக் கேட்க, “விடு மகனே” என்றார் ராகவன்.

“சரி நீங்க மூணு பேரும் நல்லா விளையாடிட்டு தூங்குங்க. நான் வைக்கிறேன்” என்று ஆர்யன் சொல்ல,

“டேய் விஷயத்தை சொல்லிட்டு வைடா” என்றார் விமலா.

“அண்ணா லவ் பண்றாங்க.”

ஆர்யன் சொல்லியதை மூவருமே நம்ப முடியாது, மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர்.

எதிர்ப்பக்கம் சத்தமின்றி போகவே,

“இதுக்கே ஷாக்கா?” என்ற ஆர்யன், “அண்ணா லவ் பன்ற பொண்ணு… அண்ணாக்கு பார்க்கப் போனீங்களே அவங்க தான்” என்றான்.

முதலில் ஆச்சர்யம் கொண்டவர்கள், தற்போது சொன்னதில் அதிர்ச்சி அடைந்தனர்.

 

என் ஆயுள் நீயே 20

 

பிரணவ் காதல் செய்கிறான் என்பதைவிட, அவனுக்குத் தாங்கள் பார்க்க சென்ற பெண் தான் அவன் நேசிக்கும் பெண் என்பதில் அதிர்வு கொண்டனர்.

 

“ஆரி… ஆர் யூ சீரியஸ்? இது ஜோக் இல்லை.” விஜயன் தான் அதிர்விலிருந்து மீண்டிருந்தார்.

 

“நான் ஜோக் பண்ணல டாட். அண்ணா தான் பண்ணிட்டு இருக்காங்க” என்ற ஆர்யன், “ஷீ லவ்ஸ் ஹிம் அண்ட் ஹீ லவ்ஸ் ஹெர். ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்காம… வேறெதோ காரணத்தால் விலகி நிக்கிறாங்க” என்றான்.

 

“அப்புறம் முக்கியமான ஒன்னு…” என்றவன், “அவங்களா அண்ணாவை நோ சொல்லல. அண்ணா கேட்டுக்கிட்டதால, அண்ணி வேணாம் சொல்லியிருக்காங்க” என்று விளக்கமாகக் கூறினான்.

 

ஆர்யன் சொல்லியதைக் கேட்டதும், விமலாவின் முகம் வாடியது. நனி வேண்டாமென்ற கோபத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டார். அப்படித்தான் பேசும் போது பிரணவ் அமைதியாக இருந்தது இன்னும் வருத்தமளித்தது.

 

“இப்போ என்ன பண்றது ஆரி?” ராகவன் கேட்க, “எல்லாம் நானே சொல்ல முடியுமா? பெரியவங்கன்னு எதுக்கு இருக்கீங்க? என்ன செய்யணுமோ செய்யுங்க” என்றவன், “இதுக்கு நடுவுல என் லவ்வை மறந்துடாதீங்க” என்று சொல்லி வைத்திட்டான்.

 

“ஆரி சொல்றதை எந்தளவுக்கு உண்மைன்னு நம்புறது விமலா?” என்ற ஜெயந்தன், “லவ் பண்ணறப்போ ஏன் வேணாம் சொல்லணும்? தானா அமையும் போது மறுக்க என்ன காரணம்?” என்றார்.

 

“எல்லாம் என்கிட்டே கேளுங்க. நானா லவ் பண்றேன்” என்று இருக்கும் கடுப்பை மொத்தமாக கணவனிடம் காட்டிய விமலா, “ஆரம்பிச்சவனுக்கு இன்னைக்கு தானே உண்மை தெரிஞ்சிருக்கு. அவனே முடிச்சும் வைப்பான். இல்லைன்னா நான் முடிவுக்கு கொண்டு வரேன். அதுவரை வேடிக்கை மட்டும் பார்ப்போம்” என்றார்.

 

விமலா எதோ திட்டம் போட்டுவிட்டார் என அவரின் பேச்சிலிருந்து புரிந்திட, “எல்லாம் சரி வருமா விமலா?” எனக் கேட்டார் ராகவன்.

 

“ஆசைப்பட்டதை நிறைவேத்திக்க அவனுக்குத் தெரியும் மாமா. நடுவுல எதையோ போட்டு குழப்பிக்கிட்டான் நினைக்கிறேன். இப்போ அஷ்மி பேசியதில், அவனே ஒரு முடிவுக்கு வந்திருப்பான். நாம கொஞ்சம் பொருத்திருப்போம்” என்றார்.

 

ஆண்கள் இருவரும் விமலாவின் பேச்சினை ஆமோதித்தனர்.

 

ஆனால் விமலாவின் திட்டம் வேறாக இருக்க… அவரின் எண்ணத்திற்கு அவர் கூறும் முன்பே செயல் வடிவம் கொடுத்திருந்தான் உதயச்செல்வன்.

 

**************

 

“இப்படி மொகத்தை பார்த்துக்கிட்டு வெறுக்குன்னு உட்காரத்தான் வந்தீங்ககளா?” லட்சுமி பாட்டி அமைதியை கலைத்தார்.

 

அவர் தன் மகள் மற்றும் மருமகன் இருவரையும் பொதுவாக பேசிடத் தூண்டினார். 

 

ஆனால் உதயன்,

 

“என்ன பேசணும்?” என்று மருதனிடம் மட்டுமே தன் பேச்சைத் துவங்கினான்.

 

“அவங்களுக்கு முன்ன நான் தான் வந்தேன்.” குமரிக்கு தன்னை விடுத்து மருதனிடம் முதலில் பேசுகிறானே எனும் பொருமல்.

 

அத்தோடு அவர் பக்கம் சாய்ந்து விடுவானோ எனும் அச்சம். தன்னிடம் முதலில் பேசாது மருதன் முன்பு தன்னை விட்டுக் கொடுத்துவிட்டான் எனும் எண்ணம்.

 

“வீட்டுக்கு வராதவங்க வந்திருக்காங்க. அவங்ககிட்ட முதலில் பேசிடுவோமே” என்ற உதயன், மருதன் புறம் திரும்ப,

 

“அவங்க முதலில் அப்படின்னு உரிமை கொடுக்குறீங்களோ?” என்றார் குமரி.

 

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயாசமாக வந்தது. ஆனால் உதயன் முன்பு, அவனின் அமைதிக்கு முன்பு குமரியை அதட்டி பேசிட முன்வரவில்லை. உதயன் பார்த்துக் கொள்வான் எனும் திடம். அவ்விடத்தில் கஜமுகனே அமைதியாகத்தான் அமர்ந்திருந்தார்.

 

உதயனின் முகமே அவனொரு முடிவை எடுத்துவிட்டான் என்று அறிவுறுத்திட, இடையில் பேசிட அவருக்கும் விருப்பமில்லை.

 

“இப்போ இவங்க தங்கச்சி வீடுங்கிற உரிமையான நினைப்பில் இங்க வரல. வெளியாளாத்தான் வந்திருக்காங்க. அப்படி வெளியாளா வந்திருக்கும், அவங்க முன்னாடி நம்ம குடும்ப விஷயம் பேசணுமா?” எனக் கேட்டு, குமரி மற்றும் மருதன் இருவருக்கும் ஒரே நேரத்தில் வார்த்தையால் அடி கொடுத்தான் உதயன்.

 

குமரி கப்பென்று வாயினை இறுக மூடிக் கொண்டார். இதற்கு மேல் எதுவும் பேசினால், பார்வையாலே அதட்டிடுவான் எனும் புரிதல்.

 

மருதன் வந்திருக்கும் நினைப்பும் தெரிந்ததால், வார்த்தையாலே அவரை எட்ட நிறுத்தினான் மருதன்.

 

இதே மருதன் கங்காவின் அண்ணனாக வந்திருந்தால், தாய்மாமன் என்று சகலவித மரியாதை அளித்து உபசரித்திருப்பான். எதிரில் இருப்பவரின் மனம் புரியாது பேச வந்திருப்பவரை இக்கணம் உறவாக ஏற்கும் மனம் அவனுக்கில்லை. சூழலும் சரியானதாக இல்லை.

 

“வார்த்தையால் எட்ட நிருத்திறீங்களோ?” மருதன் உதயனின் பேச்சின் உட்பொருளை புரிந்து கொண்ட்வராக வினவினார்.

 

“எங்களுக்கு, உறவா வரவங்களை எட்ட நிறுத்தும் பழக்கமில்லைன்னு சொல்றேன்.” சொல்லிய உதயனின் அதரங்கள் மூரல்களை வெளிக்காட்டிடாது புன்னகைத்தது.

 

“சரி, நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்” என்ற மருதன், “என் பொண்ணை கட்டிக்கோங்க” என்றார்.

 

“என் விருப்பத்தைக் கேட்கிற மாதிரி இல்லையே.” உதயனின் சிறு முறுவலில் மாற்றமில்லை.

 

“என் பொண்ணு ஆசைப்படுறாள்.”

 

அவ்வளவு தான் உதயன் இருக்கையிலிருந்து எழுந்து தன்னிரு கரம் குவித்து கண்களால் வாசலை நோக்கினான்.

 

உதயனின் அச்செயலில் படக்கென்று எழுந்த மருதன், கோபமாக தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் தோளில் போட,

 

“எய்யா உதயா” என்று பதறினார் கங்கா.

 

“இங்க அவருக்கு பொண்ணோட விருப்பம் மட்டும் தான் முக்கியமாபடுதும்மா. நாம எவ்வளவு தன்மையா பேசினாலும் புரியப்போறதில்லை. அப்புறம் எதுக்கு பேசி நேரத்தை வீணடிக்கணும். அவருக்கும் பல வேலைகள் இருக்குமே” என்றான்.

 

இன்பா தன் அண்ணனின் ஆளுமை கலந்த தோரணையானத் தோற்றத்தில் ரசித்து நிற்க, “நீயும் இப்படி கெத்தா பேசிப்புடு மாமா” என்றாள் தன்யா.

 

“அதெல்லாம் அண்ணாவே பேசிடுவாங்க. நான் உன் கழுத்தில் தாலி கட்டுற வேலையை மட்டும் பார்த்துக்கிறேன்” என்று இன்பா குறும்பாக கண்ணடிக்க, “கடல் தண்ணிக்கும் நோகாமா உப்பெடுக்கலாம் பார்க்குற” என்று கேலி செய்தாள் தனு.

 

“அதே… அதே…” இன்பா சட்டை காலரைத் தூக்கிவிட,

 

“விளங்கிடும்” என்று ஒரு மாதிரி உதடு சுளித்தாள் தன்யா.

 

“விளங்கணும் ஆசை. அதான் அமைதியா இருக்கேன்” என்ற இன்பா, “தாத்தாவை பார்த்து பேசிறதெல்லாம் ஆவாது தனு. அண்ணான்னா பதமா பேசிடுவாங்க” என்றான். 

 

“புரியுது.”

 

“தட்ஸ் மை கேர்ள்.”

 

“ரெண்டு பேரும் வாயை மூடுங்க.” காமாட்சி அதட்டிய பின்னரே, நடப்பதை கவனித்தனர்.

 

“முடிவா என்ன சொல்றீங்க?” பகையெல்லாம் விட்டு தானே இறங்கி வந்ததும், மிதப்பு காட்டுகின்றனர் என்று ஆத்திரம் கொண்டார் மருதன்.

 

“எதுவும் மாத்தமில்லைன்னு சொல்றேன்” என்றான் உதயன்.

 

“இப்படித்தான் சின்ன பையனை முடிவெடுக்கவிட்டு ஒதுங்கி நிப்பீங்களா?” குறி பார்த்து கல்லெறிய முயன்றார் மருதன். 

 

“அவங்க முடிவுக்கு ஒத்த பார்வை மாத்தி பார்க்கமாட்டோம்” என்ற கஜமுகன், “உங்களுக்கு வேணும்னா பெரியவன், சின்னவங்கிறதுக்கு வயசு அடிப்படையா தெரியலாம். ஆனால் எங்களுக்கு குணமும், மனசும் தான் முக்கியம். அது ரெண்டுலையும் எங்க உதயாவை மிஞ்சிட முடியாது. அவங்க முடிவு என்னவோ அதுதான் எங்களுக்கும்” என்றார்.

 

“உன் பொண்ணோட விருப்பம் முக்கியமுன்னு ஒரு தலைமுறை பகையை மறந்து நீயே வந்திருக்க… நாங்க மட்டும் எப்படி எங்க பையன் விருப்பத்துக்கு மாறா முடிவெடுக்கனும் நினைக்கிற” என்ற இளங்கோவனைத் தொடர்ந்து, “உனக்கு உன் பொண்ணுன்னா… எங்களுக்கு சகலமும் எங்க பையன் தான்” என்றார் கஜேந்திரன்.

 

“சரி நான் முறையா கேட்கிறேன். உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டிக் 

கொடுக்க எனக்கு விருப்பம்” என்ற மருதன், “இப்போ உங்க சம்மதம் சொல்லுங்க” என்றார்.

 

“இப்படி தன்மையானப் பேச்சுக்கு பகை வேணும்னா முடிவுக்கு வரலாம்” என்றான் உதயன்.

 

“நானா இறங்கி வந்ததால் அவமானப் படுத்துறீங்களோ?” மூக்கு விடைக்க நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டார் மருதன்.

 

“உங்களை அவமானப்படுத்துறது எங்க நோக்கமில்லை. உங்க விருப்பத்துக்கு எங்க பதிலை சொல்றோம் அவ்வளவு தான்” என்ற உதயன், “இதே சூழல் மாத்தி நடக்குதுன்னு வையுங்க, உங்க பொண்ணுக்கு விருப்பமில்லாம தானே பார்த்த மாப்பிள்ளை வேணாம் முடிவு செய்து இங்க வந்து நிக்கிறீங்க. இதே எங்களுக்கு விருப்பமிருந்து, அண்ணன் பொண்ணுங்கிற உரிமையில் என் அம்மா வந்து உங்ககிட்ட பொண்ணு கேட்டிருந்தால், முதலில் வீட்டுக்குள் அடி வைக்க விட்டிருப்பீங்களா?” என்றான்.

 

அமைதியாய் வார்த்தையால் அடி கொடுக்க முடியுமா? உதயன் செய்திருந்தான்.

 

உதயன் சொல்வது உண்மையே! தங்கையாகவே இருந்தாலும் வாசலோடு அனுப்பியிருப்பார் மருதன். அவருக்கு அவள் மகள் மட்டுமே முக்கியமாகத் தெரிய, உதயனின் மனம் தெரிந்தும், தான் போய் கேட்டால் சம்மதம் சொல்லித்தான் ஆகவெண்டுமென வந்துவிட்டார்.

 

“என் பொண்ணு உங்களை நினைச்சு உசுர விட இருந்தாள்.”

 

கடைசியாக இதயத்தை பதம் பார்க்கும் வார்த்தையை உபயோகித்தார்.

 

“கொஞ்சம் முன்னாடி வரை… பெத்த பொண்ணுக்காக, முப்பது வருட பகை மறந்து எதிராளி வீட்டுக்கு வந்திருக்கிறார் அப்படின்னு உங்க மேல ஒரு மதிப்பு வந்துச்சு. அது இப்போ இல்லை” என்ற உதயன் வார்த்தையில் பெரும் அவமானம் கண்டார் மருதன். சுருக்கென்று தைத்தது.

 

“என்னோட எண்ணம் தெரிந்தும் நீங்க வந்தது வேண்டுமானால் பொண்ணு மீதான பாசமா இருக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க இங்க பேசிய வார்த்தைகள் எல்லாம், உங்களோட பிடிவாதம். நானே இறங்கி வந்துட்டேன் இவனென்ன வேணாம் சொல்றதுங்கிற அகம்பாவம்” என்றான்.

 

உதயன் இவ்வாறெல்லாம் பேசி யாரும் பார்த்ததில்லை. மருதன் பேச வைக்கின்றார் என்று புரிந்து அமைதியாக நின்றனர்.

 

வார்த்தையால் வலிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணம் உதயனுக்குமே இல்லை. ஆனால் பேசும் நிலையில் நிற்கின்றான் உதயன்.

 

அவனுக்காக அவன் மீதான நம்பிக்கையில் ஒருத்தி காதலைக்கூட சொல்லாது, அவனது மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து விலகி நின்று காத்திருக்கும் போது, அடாவடி செய்து உயிரை பணயம் வைத்து மிரட்டி பயம் காட்ட நினைக்கும் வந்தனாவின் காதல் உதயனுக்கு வெறுப்பையேக் கொடுக்கிறது. 

 

அதிலும் வந்தனா செய்யும் பிழை அறிந்தும், அவளுக்கு எடுத்துக்கூறி நல்வழிப் படுத்தாது, அவளது செயலுக்கு துணை போவது போன்று இப்படி வந்து தர்க்கம் செய்கிறாரென்று… இதுநாள் வரை எதிர்த்து நின்றபோதெல்லாம் குறையாத மருதனின் மதிப்பு, இக்கணம் பலபடி உதயனின் மனதில் கீழிறங்கியது.

 

“பொண்ணு தப்பு பண்ணால் எடுத்து சொல்லி திருத்தப் பாருங்க. அந்த தப்புக்கு துணை நிற்கிறேன் அப்படின்னு மேலும் மேலும் தப்பு பண்ண வைக்காதீங்க. உங்ககிட்ட காரியம் ஆவதற்கு இதுதான் சரியான வழின்னு நீங்களே உங்கப்பொண்ணுக்கு பழக்காதீங்க” என்றான்.

 

அதுவரை தலையை நிமிர்த்திக் கொண்டிருந்த மருதன் பார்வையை தழைத்தார்.

 

பிள்ளை தவறு செய்தால் கண்டித்து அறிவுரை வழங்காது இதென்ன உடனிருப்பதைபோன்ற செயல் எனும் கொட்டு அவரின் மனதை நன்கு பதம் பார்த்தது.

 

“புரியுது தம்பி. இவர் இங்க வரண்ணு சொல்லாம கூட்டிட்டு வந்துட்டார். தெரிஞ்சிருந்தா நானே தடுத்திருப்பேன். மன்னிச்சிடுங்க” என்று சகுந்தலா கூறி முடிக்கும் முன்…

 

“அத்தை நீங்க எதுக்கு என்கிட்ட” என்று அவரின் கரம் பற்றி கீழே தாழ்த்தினான் உதயன்.

 

அவனின் அத்தை எனும் வார்த்தையில் உதயனை விலுக்கென்று பார்த்த மருதனுக்கு, இத்தனை நேரம் அவன் தன்னை மாமா என்று விலிக்காததற்கும், தற்போது சகுந்தலாவை அத்தை என்று அழைத்தற்கும் பொருள் விளங்கியது. மௌனமாக வெளி நோக்கி நடந்தார்.

 

Epi 21 and 22

என் ஆயுள் நீயே 21 ம 22

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
25
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்