Loading

இந்திரா மணமக்கள் இருவருக்கும் ஆரத்தி எடுக்க, ஹால் ஓரத்தில் இருந்த  செல்பில் இருந்து ஒரு கார்ப் பொம்மை கீழே விழுந்த சத்தத்தில் அனைவரும் அவசரமாக உள்ளே நுழைந்து பார்க்க, 

அழகாக இருந்த அந்தக் கருஞ்சிவப்பு சிறிய வகைக் கார் உடைந்து சிதறிக் கிடந்தது. அதைக் கண்ட அடுத்த நொடி பிரணவ் “என் பொம்மை…. என் கார் வேண்டும்” என்று பெரும் குரல் எடுத்து அழுக ஆரம்பித்து விட்டான். 

அவன் வீட்டாரைத் தவிர வேற யாரும் அவன் செய்கையின் அர்த்தம் புரியவில்லை. 

‘ஒரு பொம்மைக் கார் தானே’ என்று ப்ரணிதா பார்க்க, அதை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை. கைக் கால் எல்லாம் தரையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தான். 

இந்திரா அவர்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய தன் நிலையை உணர்ந்து நந்தனைப் பார்க்க, அவனும் பிரணவ் அருகே சென்று “பிரணவ் குட் பாய் தானே. உனக்கு நான் இரண்டு கார்ப் பொம்மையை  வாங்கித் தரேன். இப்படிப்  பேட் பாய் மாதிரி அழுகிறதைப்  பார்த்து அவங்க எல்லாம் பயப்படுறாங்க  பாரு” என்று சிறு பிள்ளைக்குச்  சொல்வது போல் சொல்ல,

அவனும் வேகமாகப் ப்ரணிதாவை பார்த்துத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் அருகே சென்றான்.

“ஆண்ட்டி உங்க கழுத்துல இதைக் கட்டினால்  நீங்க என் கூடவே இருப்பீங்கனு  அந்த அண்ணா சொன்னாங்க. நான் இனி அழுக மாட்டேன் என்னை விட்டு போட்டாதீங்க. என் கூட யாருமே விளையாட வர மாட்டாங்க. ப்ளீஸ் போகாதீங்க ஆண்ட்டி” என்று பாவமாக அவளின் முகத்தைப் பார்த்துக்  கொண்டே சொல்ல,

ப்ரணிதா இதயத்தில் வெடி குண்டு போடாதது மட்டும் தான் பாக்கி. ஆறடி உயரத்தில் அதுவும் தாலி கட்டிய கணவன் சிறுபிள்ளைப் போல் தன்னை ஆண்ட்டி என்று அழைப்பதை விழியில் வலியுடன் அவன் பெற்றோரைக் காண,

சுந்தர் “இரண்டு  வருஷம் முன்பு நடந்த ஒரு விபத்தில் இவன் தலையில் பலமான அடி பட்டுடுச்சு. உயிரையே போராடித்  தான் மீட்டோம். அதனால் அவனோட மூளைக்குப்  போகிற நிரம்பு கொஞ்சமா பாதிக்கப் பட்டு இப்படி ஆகிட்டான். என்னை மன்னிச்சிடு மா. இவனை உனக்குக் கட்டி வைக்க வேண்டாம்னு நான்  எவ்வளவோ சொல்லியும் இவன் அம்மா கேட்கவில்லை” என

தீபா “ஐயோ என் பொண்ணோட வாழ்க்கையே போச்சே. ஒத்த பொண்ணு அவளை பூ மாதிரி வளர்த்தது இவனைப் போல ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கவா” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுக,

இந்திரா “என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணது தப்பு தான் எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் நீங்க கவலைப் படாதீங்க. என் பையன் இப்படியே இருந்திட மாட்டான். அவனோட எல்லாப் பிரச்சனையும் கண்டிப்பா மாறும். உங்க பொண்ணோட ஜாதகம் அதை மாற்றும். என்னை நம்புங்க” என

எல்லார்ப் பேசுவதையும் கேட்டுக் கொண்டு இருந்தாள் கண்ணிலிருந்து வழியும் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.

பார்வையோ நந்தன் கொடுத்த வேற ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடும் பிரணவ் மேலே இருக்க, அவன் தோற்றத்திற்கும் அவன் குணத்திற்கும் சற்றும் பொருத்தம் இல்லாமல் இருக்கும் அவன் நிலையை எண்ணி கவலைக் கொள்வதா இல்ல தன்  நிலையை எண்ணி அழுவதா என்று புரியா நிலையிலிருந்தாள். 

தீபா “வேண்டாம் நம்ம பொண்ணுக்கு இப்படி ஒரு சாப வாழ்க்கை வேண்டாம். வந்திடுமா எங்க கூடவே வந்திடுமா. இவங்க எல்லாம் பெரிய மனுசங்க. நம்மால் போராட எல்லாம் முடியாது. நம்ம போய்டலாம்” என்று கண்ணீரோடு அவள் அருகே செல்ல,

தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்  கொண்டு, “இல்ல மா நான் வரல. இது தான் மா என் வாழ்க்கை. என் தலையில் என்ன எழுதி இருக்கோ அது தானே அம்மா நடக்கும். என் மேல நம்பிக்கை வைச்சு நீயும் அப்பாவும் சந்தோசமா போய்விட்டு வாங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று நம்பிக்கையுடன் சொல்ல,

இருவரும் மனமே இல்லாமல் சென்றனர். ப்ரணிதாவிற்குக் கூட தாய் தந்தையை இப்படி வந்ததும் அனுப்ப மனம் இல்லைத் தான். ஆனால் அவர்கள் இங்கே இருந்தால் இன்னும் வேதனைக் கூடத் தான் செய்யும். அதனால் தான் கிளப்பி விட்டாள்.

அவர்கள் கார் அப்படிச் சென்றதும், வேறு ஒரு கார் உள்ளே வந்தது. ‘யார் அது’ என்று இவள் பார்க்கும் போதே அதிலிருந்து இறங்கினான் மாதவ்.

மாதவ்வைக் கண்டதும் அவனுக்குக் காரமான பார்வை ஒன்றைப் பார்சல் செய்து விட்டு உள்ளே செல்ல, அவனுக்கோ தர்ம சங்கடமாக நிலை. தவறே செய்யாமல் துரோகி ஆகிப்  போனான்.

அவன் நினைவோ தாய் அவனிடம் பேசியதை தான் நினைத்தது அந்த நொடி.

 

பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்ததும் அவனுக்குப் பிடித்துவிட இருந்தும்,  “அம்மா நான் கொஞ்சம் நேரத்தில் சொல்றேன்” என்று ஆர்வமாகப் பார்க்கும் தாயிடம் சொல்லிவிட்டு,  

யோசனையோடு வெளியே சென்றவன் மனமோ அவனின் தம்பியை நினைத்து தான் பயந்தது. வரப்போகிற பெண் அவனுக்கு மனைவியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவன் தம்பிக்குத்  தாயாக இருப்பதும் முக்கியம்.

 

காலையே கிளம்பியவன் அன்று தொடங்கப்பட்ட வேலையால் வீடு திரும்ப இரவு ஆனது. ‘சரி இந்தப் பொண்ணுக்கே ஓகே சொல்லலாம்’ என்று நினைத்துக்கொண்டே வர,

 

அவன் தாயோ “உன் கிட்ட ஒரு விஷயம் பேசினோம் மாதவ். நான் சொல்ல போகிற விஷயம் ரொம்பப் பெருசு ஆனால் எனக்கு அது தான் நல்லதுன்னு தோன்றுது”என

 

“என்ன விஷயம் மா  சொல்லுங்க”   என்றதும், 

 

“காலையில் பார்த்த பெண்ணை நான் பிரணவ்விற்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்” என “அம்மா அவனுக்கு கல்யாணம் பண்றது நல்ல விஷயம் தான் நான் இல்லனு சொல்லல. ஆனால் இப்ப வேண்டாமே அவன் சரி ஆகட்டும். இப்ப பொண்ணை கேட்டா கூட யாரும் கொடுக்க மாட்டாங்க” என 

 

“எனக்கு அது எல்லாம் தெரியாது டா. அவனுக்கு இந்த பொண்ணு கூட கல்யாணம் நடக்கணும். நடந்தால் அவன் சரி ஆகிடுவான். கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கணும் இல்லனா நான் செத்துடுவேன் டா” என்று எல்லா தாயையும் போல் மிரட்ட,

 

“சரி நான் அவங்க வீட்டுல போய் பேசி பார்க்கறேன்” என்ற அடுத்த நிமிடம்,  “வேண்டாம் டா நீ யார்கிட்டவும் இதை பற்றி சொல்ல கூடாது. ஊரை பொறுத்தவரை  நீ தான் மாப்பிள்ளை ஆனால் கல்யாணம் நம்ம பிரணவ்விற்கு தான் புரியுதா” என 

 

“தப்பு தான் தெரிஞ்சே தப்பு பண்ண சொல்ற. வேண்டாம் மா சொல்ல போன இது நம்பிக்கை துரோகம் தானே. பெண் பாவம் பொல்லாதது மா” என்று தன் அம்மாவிற்கு எவ்வளவோ சொல்லியும் முடியாமல் கடைசியாக இவன் தான் வில்லனாகி போனான்.  

கோபத்தில் வேகமாக அடி எடுத்து வரும் ப்ரணிதாவைப் பார்த்த பிரணவ் “ஆண்ட்டி விளையாட வாங்க. நான் சொல்லித் தரேன்” என்று அவள் கையிலும் இரண்டு கார்களைத் திணித்தான்.

உள்ளே வந்த மாதவ் காதில் பிரணவ் அவளை ‘ஆண்ட்டி’ என்று அழைத்தது கேட்டு அதிர்ச்சியில் நின்று விட்டான்.

பின் “பிரணவ் குட்டி அவங்களை ஆண்ட்டி எல்லாம் சொல்லக் கூடாது” என அதற்குப் பிரணவ் “அப்ப அக்கா சொல்லவா. உன்னை அம்மா அண்ணா சொல்லச் சொன்னாங்களே அதே மாதிரி” என்று முகம் முழுக்கப் புன்னகையுடன் என்றோ ஒரு நாள் தாய் கூறியதை நினைவு வைத்துக் கூற, 

இதைக் கேட்டு மேலும் ப்ரணிதா அவனை முறைக்க, ‘ஆண்ட்டியே  தேவலாம் போல அக்கா சொல்றதுக்கு’ என்று முணுமுணுத்து விட்டு,

“அத்தை மாமா உங்க பெரிய பையன் கிட்ட சொல்லி வைங்க. நான் கோபத்தில் இருக்கேன். என் முன்னாடி இப்படி நடமாடிட்டு இருக்க வேண்டாம்னு. ஒரு நேரம் மாதிரி எப்பவும் இருக்க மாட்டேன். அப்பறமா நடக்கப் போற சம்பவத்திற்கு என் கிட்ட நியாயம் கேட்க வர கூடாது. நான் கரேத்தாவில் பிளாக் பெல்ட்” என்று பூஜை அறையைத் தேடிச் சென்றாள்.

அவள் செல்வதைப்  பார்த்த பிரணவ் அவள் பின்னே வால் பிடித்துக் கொண்டு செல்ல,

“ஆண்ட்டி …. என்ன செய்யுற” என்ற கேள்விக்கு, “உங்க கிட்ட ஒன்று சொல்றேன். கேட்பிங்களா” என்று அவனின் முகத்தைப் பார்த்துக் கேட்க,

தலையை எல்லாப் பக்கமும் ஆட்ட, அவனின் செயல் அவளின் இறுகிய முகத்தில் சிறு புன்னகையை வர வைத்தது.

“நான் உங்களுக்கு ஆண்ட்டி எல்லாம் இல்ல. என் பெயரைச்  சொல்லியே கூப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டே தீபத்திற்குக் காமாட்சியம்மன் விளக்கில் எண்ணை உற்றி வைக்க,

“பெரியவங்களைப் பெயர்ச் சொல்லிக் கூப்பிடக் கூடாது தானே” என்று அறிவு தனமாகக் கேட்க,

அவனின் புறம் திரும்பி “பாருங்க நீங்க என்னை விட எவ்வளவு உயரமா வளர்ந்து இருக்கீங்க. அப்படி இருக்கும் போது எப்படி நான் உங்களை விட பெரிய பொண்ணா ஆவேன்” என்று அவனுக்குப் புரியும் விதத்தில் சொல்ல,

“அப்படியா” என்று மேல் வாயில் கையை வைத்து யோசித்து விட்டு பின் “உன் பெயர் என்ன” என்று கேட்டுக் கொண்டே அவள் கையில் எடுத்த தீப்பெட்டியை வாங்கிக் கொள்ள,

அதை வைத்து விளையாடி கொண்டு இருக்கும் தன் கணவனைப் பார்த்து கவலையாக ஒரு பார்த்து விட்டு, “ப்ரணிதா” என

“பிர….ணி” என்று  நிறுத்து விட்டு “உனக்கு யாரு பெயர் வெச்சா இவ்வளோ பெருசா. நான் மறந்துட்டேனே” சிறிது யோசித்து விட்டு “ஐடியா… நான் வேணா உன்னை பரினு கூப்பிடவா?” என்று அவளின் முகத்தைப் பார்க்க,

“பரி…. அப்படினா என்னனு தெரியுமா” என்ற அவளின் கேள்விக்கு “தெரியுமே… ஒரு பாட்டி எனக்குக்  கதைச் சொல்லுச்சா அதுல வரத் தேவதைப் பெயர் பரி தான் உனக்குத் தெரியாதா” என

அவனிடம் பேசிக் கொண்டே சாமி பாடங்களுக்குப் பூ வைத்து விட்டு விளக்கில் திரியைப் போட்டுவிட்டுத் தீப்பெட்டிக்காக அவனிடம் கையை நீட்ட,

‘தர மாட்டேன்’ என்று தலையை ஆட்ட, மெல்லிதாகச் சிரித்து விட்டு அவனின் கையை பிடித்துக் கொண்டே விளக்கை ஏற்றினாள். இருவரும் ஒன்றாக விளக்கை ஏற்ற,

எதோ ஒரு சொல்ல முடியாத நிம்மதி அக்கணத்தில் அவளின் மனதில் தோன்றியது. இவனின் தெளிவான பேச்சு அவளுக்கு ஒன்றை மட்டுமே உணர்த்தியது சீக்கிரமே இவன் சரியாகிவிடுவான் என்று.

ஆனால் அதுவரை அவளின் பொறுமைத் தான் அவளின் வாழ்க்கையை மீட்டுத் தரும். அவன் சரி ஆக ஒரு மாதம் ஆகலாம் இல்லை ஒரு வருஷம் ஆகலாம். இல்லை காலம் முழக்கச் சரி ஆகாமல் கூடப்  போகலாம். ஆனால் காதல், அவளின் காதல் மாற வாய்ப்பு இல்லையே. ஆம், காதல் எப்பொழுது எங்கே யாரின் மேல் தோன்றும் என்று எல்லாம் தெரியாது. ஆனால் ஒரு முறைத் தோன்றி விட்டால் சாகும் வரை உயிரோடு இணைந்து பிணைந்து இருக்கும்.   

கண்டதும் காதலா? இல்லை கழுத்தில் ஏறிய மஞ்சள் கயிற்றின் மந்திரமா?

உயிரோட்டங்கள் தொடரட்டும் 

நிலானி தாஸ் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்