Loading

காதல் 3

 

 

ரஞ்சு ரெஸ்டாரன்டில் நடந்த நிகழ்வுகளை தர்ஷுவிடம் கூறிக் கொண்டிருக்க, அதற்கும் அவளிற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சஞ்சுவை வெறுப்பேற்றவே, “அப்பறம் என்னாச்சு?” என்று சிரிப்புடன் தர்ஷு வினவ, “ஹான், சைட்டடிக்கலாம்னு போன எனக்கு ஃபிரீயா ஒரு பிரதர் கிடைச்சான். ஆளைப்பாரு! என்னை கலாய்க்குறதுன்னா மட்டும் ஃபுல் எனர்ஜியோட கலாய்க்க வந்துடுறது.” என்று சிணுங்கினாள் சஞ்சு.

 

“ஊரே அடுத்த மாசம் ரக்ஷாபந்தன் கொண்டாடுனா, உனக்கு இன்னைக்கு தான் ரக்ஷாபந்தன் போல.” என்று ரஞ்சுவிடம் ‘ஹை-ஃபை’ கொடுத்துக் கொண்டாள் தர்ஷு.

 

“யூ டூ ரஞ்சு?” என்று சிணுங்கினாள் சஞ்சு. அதன்பின், தர்ஷுவின் அலைபேசி ஒலிக்கும் வரை அங்கு தலையணை யுத்தம் நடைபெற்றது.

 

தர்ஷுவின் அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்று, ஸ்பீக்கரை ஆன் செய்தாள் ரஞ்சு. தர்ஷுவின் அத்தை மலர்விழி தான் அழைத்திருந்தார். இது வழக்கமாக அவர்கள் உரையாடும் நேரம் தான். வரிசையாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழைப்பு வரும். மலர்விழி மற்றும் வசுந்தராவிடம் மூவரும் அரட்டையடிப்பர்.

 

விஸ்வநாதன் மற்றும் கமலா தம்பதியரிடத்தில் ஏனோ மற்ற இருவருக்கும் ஒரு ஒதுக்கம் இருக்கும். அவ்வளவாக பேச மாட்டார்கள். அதனாலேயே சமீபத்தில் ரஞ்சுவிடம் அவர்கள் காட்டும் ஒதுக்கம், மற்ற இருவருக்கு தெரியாமல் போனது.

 

“ஹலோ, ரஞ்சு, சஞ்சு, தர்ஷு மூணு பேரும் எப்படி இருக்கீங்க? நைட் சாப்பிட்டீங்களா? தர்ஷும்மா, இப்போ காய்ச்சல் இருக்கா?” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தவரை நிறுத்திய சஞ்சு, “ஆன்ட்டி, இப்படி கேப்பே விடாம கேள்வி கேட்டீங்கன்னா நாங்க எப்போ பதில் சொல்றது?” என்று சிரிப்புடன் கேட்டாள்.

 

“சரி, அப்போ நான் என்னென்ன கேள்வி கேட்பேனோ, அதுக்கெல்லாம் நீங்களே பதில சொல்லுங்க பார்ப்போம்.” என்று அவர் சொல்லவும், “மலர் ஆன்ட்டி, நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நைட் நல்லா சாப்பிட்டோம். தர்ஷுக்கு லேசா ஃபீவர் இருக்கு. இன்னைக்கு டேப்லெட் போட்டுட்டா. நாளைக்கும் ஃபீவர் இருந்துச்சுனா ஹாஸ்பிடல் போறோம்.” என்று வரிசையாக ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறினாள் ரஞ்சு.

 

“எங்களை இன்னும் நர்சரி ஸ்கூல் ஸ்டுடெண்ட்ஸ்னு நினைப்பு உங்களுக்கு ஆன்ட்டி.” என்று இடையில் சஞ்சு கிண்டலடிக்க, அவர்களின் உரையாடல் இப்படியே அழகாக சென்றது.

 

மலர்விழியின் நர்சரி பள்ளியில் தற்போது படிக்கும் மழலைகளிலிருந்து, அவர்களின் தெருவில் குட்டி போட்ட நாய் வரை விசாரித்த பின்னரே தர்ஷுவின் அலைபேசிக்கு ஓய்வளித்தனர் மூவரும்.

 

ஆனால், அவர்களுக்கு ஓய்வென்பதே இல்லை என்பதைப் போல அடுத்து வசுந்தரா அழைத்திருந்தார். மலர்விழியிடம் பேசியது போல் ஃப்ரீயாக இல்லையென்றாலும், அவரிடமும் நன்றாகவே பேசினர்.

 

இரவுணவை வெளியே சாப்பிட்டனர் என்பதை அறிந்ததும், “சஞ்சு, நீ தான இதுக்கு காரணம்?” என்று சரியாகவே கண்டுபிடித்தார் வசுந்தரா. பின் அதற்கு அறிவுரை என்று கால் மணி நேரம் சென்றிருக்க, சஞ்சுவின் நிலை தான் பரிதாபமானது.

 

சஞ்சுவைக் கண்ட ரஞ்சு, “ஆன்ட்டி, இனிமே வெளிய சாப்பிட மாட்டோம்.” என்று உறுதிகொடுத்த பின்பே அவர்களை விட்டார்.

 

மேலும், தர்ஷுவை அடுத்த நாள் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கண்டிப்புடன் அலைபேசியை அணைத்தார் அவர்.

 

“ஹ்ம்ம், சரியான போலீஸ் மம்மியா இருக்காங்களே!” என்று சலித்துக் கொண்ட சஞ்சுவை சிரிப்புடன் பார்த்திருந்த ரஞ்சுவிடம், “உங்க வீட்டுலயிருந்து கால் பண்ணி எவ்ளோ நாளாகுது, ரஞ்சு?” என்றாள் தர்ஷு.

 

அவளின் திடீர் கேள்வியில் முழித்த ரஞ்சு, “அது… ஒரு வாரம் இருக்கும்.” என்றவள், சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக, “அப்பா அம்மாக்கு ஹெவி ஒர்க் இருந்துருக்கும்.” என்றாள்.

 

தர்ஷுவோ நம்பாத பார்வை பார்த்தவள், “எத்தனையாவது ஒரு வாரம் ரஞ்சு?” என்றாள்.

 

அதற்கு பதில் கூறாமல், அவஸ்தையாக நின்றிருந்தவளைக் கண்ட சஞ்சு, “எனக்கு தெரியும், இதுக்கெல்லாம் அந்த குட்டி பிசாசு தான் காரணம். எனக்கு மட்டும் அப்படி ஒரு தங்கச்சி இருந்துருந்தா, சின்ன வயசுலேயே மண்டைல கொட்டி, நான் சொல்ற பேச்ச கேட்க வச்சுருப்பேன்.” என்று லேசான கோபத்துடன் கூறினாள்.

 

தர்ஷு ரஞ்சுவின் தோளில் கைவைத்து ஆறுதலாக அழுத்த, அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாத ரஞ்சுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

 

“என்னாச்சுன்னு தெரியல தர்ஷு. ஒரு மாசமாக போகுது அவங்க பேசி. நான் கால் பண்ணாலும், ஒன்னு ‘ஸ்விட்ச்ட் ஆஃப்’ன்னு வருது, இல்லன்னா அட்டெண்ட் பண்ணவுடனே, ‘பிஸியா இருக்கோம்’னு சொல்லி வச்சுடுறாங்க. என்ன பிரச்சனைன்னு ஒன்னும் புரியல.” என்றவளை தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தாள் தர்ஷு.

 

“சுபி கிட்ட பேசுனியா?” என்று தர்ஷு வினவ, விரக்தி சிரிப்புடன், “அவ எப்போ என் கால் அட்டெண்ட் பண்ணிருக்கா?” என்றாள் ரஞ்சு.

 

“ப்ச், ஏன் தான் இப்படி இருக்காங்களோ!” என்று சலித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது சஞ்சுவினால்.

 

“நீ முன்னாடியே சொல்லிருந்தா மலர் அத்தையை பார்க்க சொல்லிருப்பேன்ல.” என்ற தர்ஷுவின் கேள்விக்கு, “ஏற்கனவே, ஒரு தடவை ஆன்ட்டியை அம்மா ஹார்ஷா பேசிட்டாங்கல. திரும்பவும் அவங்களை இதுல இன்வால்வ் பண்ண விரும்பல.” என்றாள் ரஞ்சு.

 

“சரி விடு ரஞ்சு, நம்ம தான் இன்னும் ரெண்டு வாரத்துல ஊருக்கு போறோம்ல, அங்க போய் பாத்துக்கலாம். இந்த தடவை இருக்கு அந்த குட்டி பிசாசுக்கு.” என்று ஏதேதோ பேசி ரஞ்சுவை சமாதானப்படுத்தினர் மற்ற இருவரும்.

 

*****

 

இந்தியாவில் கால் வைத்ததிலிருந்து இப்போது வரை பத்து மணி நேரமாக பிஸியாக சுற்றிக் கொண்டு தான் இருந்தான் எஸ்.ஜே. அவனுடன் சேர்ந்து அவனின் பி.ஏ கோகுலும் புலம்பிக் கொண்டே அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றான்.

 

மும்பையிலிருந்த அவர்களின் ஜவுளி ஆலையில், சில நாட்களாகவே தரமில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதாக அவனிற்கு புகார் வந்து கொண்டிருந்தது. அதனால் அவனிற்கு நம்பகமான ஒருவனை அங்கு வேலையில் சேருமாறு அனுப்பியிருந்தான் எஸ்.ஜே.

 

அவனும் கடந்த இரண்டு மாதங்களாக ஏதாவது கண்ணில் சிக்குமா என்று காத்திருக்க, வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஆதாரம் அவனிற்கு கிடைத்தது. அதை தான் புகைப்படமாக எஸ்.ஜேவுக்கு அனுப்பியிருந்தான்.

 

அதைக் கண்ட எஸ்.ஜே அதிர்ந்தது உண்மை தான். ஏனெனில், அவன் தந்தை காலத்திலிருந்தே அவர்களுக்கு உதவியாக இருந்த ஒருவரின் துரோகம் அல்லவா அதில் அவன் கண்டது.

 

ராஜசேகர், சஞ்சயின் தந்தை கிருஷ்ண பிரசாத் காலத்திலிருந்தே அவர்களின் தொழிலில் உறுதுணையாக இருந்தவர். கே.பி என்றழைக்கப்படும் கிருஷ்ண பிரசாத் உயிருடன் இருந்த காலத்தில், அவருடன் சேர்ந்து இந்தியாவில் இருக்கும் அவர்களின் தொழிலைக் கவனித்தவர், கே.பியின் மறைவிற்குப் பின்னர், சஞ்சயின் வேலைப்பளுவினால், அவர் மட்டுமே இந்தியா முழுவதும் இருக்கும் பல தொழில்களையும் நிர்வகித்தார்.

 

சஞ்சயும் அவரின் மேலிருந்த நம்பிக்கையினால், அவரின் வேலைகளில் எவ்வித குறுக்கீடும் செய்யவில்லை. ஆனால், அதுவே அவரின் துரோகத்திற்கு வழிவகுக்கும் என்பதை அவன் அறியவில்லை.

 

“ஹ்ம்ம், பொண்ணுங்க ஏமாத்துவாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, எல்லாருமே அவங்க சுயநலத்துக்காக ஏமாத்துவாங்கன்னு புரிய வச்சுட்டீங்க.” என்று விரக்தியுடன் கூறியவன், அடுத்த நொடியே வேட்டைக்கு தயாராகும் சிங்கம் போல எழுந்து நின்றான்.

 

“கோகுல், இவரு எங்க இருக்காரு, என்ன பண்ணிட்டு இருக்காரு, இவரோட ஃபேமிலி எங்க இருக்காங்கன்னு மொத்த டீடையில்ஸும் இன்னும் அரை மணி நேரத்துல எனக்கு வேணும்.” என்று உத்தரவிட்டான்.

 

*****

 

காலை வேளை, எப்போதும் போல் ஜாக்கிங்குடன் துவங்கியது ரஞ்சுவிற்கு. தர்ஷுவிற்கும் காய்ச்சல் சரியாகிவிட, அவளும் ரஞ்சுவுடன் வந்திருந்தாள். முதல் நாள் ஜாக்கிங்கில் நிகழ்ந்தவைகளை தர்ஷுவுடன் பகிர்ந்து கொண்டே நடந்தாள் ரஞ்சு.

 

“அப்போ சஞ்சீவை நீ மார்னிங்கே பாத்துட்டீயா? இது மட்டும் சஞ்சுக்கு தெரிஞ்சுது, அதுக்கும் அழ ஆரம்பிச்சுடுவா.” என்று சஞ்சுவையும் இடையில் கலாய்த்துக் கொண்டே சென்றனர்.

 

அந்த பூங்காவை ஒரு சுற்று ஓடிவிட்டு அங்கிருந்த கல் மேடையில் ரஞ்சு அமர, “ரஞ்சு, ரெண்டு நாள் ஓடாதது ஒரு மாதிரி லேசியா இருக்கு. நான் இன்னொரு ரவுண்ட் போயிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு ஓட துவங்கினாள் தர்ஷு.

 

‘சரியான ஃபிட்னெஸ் ஃபிரீக்!’ என்று தர்ஷுவை மனதிற்குள் செல்லமாக அலுத்துக் கொண்டவள், சிறிது நேரம் மூச்சை நன்றாக இழுத்துவிட்டு இலகுவாகிக் கொண்டாள்.

 

அப்போது அவளருகே இருந்த புதரிலிருந்து சத்தம் கேட்க, முகத்தை சுருக்கியவள், ‘காலைலேயேவா!’ என்று மனதிற்குள் புலம்பினாள். யாரோ அதிலிருந்து வெளிவரும் சத்தம் கேட்க, ‘இருக்கவா, செல்லவா’ என்ற யோசனையில் உழன்றவளை கலைத்தான் புதருக்குள் இருந்து வந்த சஞ்சீவ்.

 

அவள் அமர்ந்திருந்த கல் மேடை புதரினால் சூழப்பட்டதால், மற்றவர் கண்களிலிருந்து சற்று மறைந்தேயிருந்தது. அதனால் அங்கு ஒரு கல் மேடை இருப்பதோ, அதில் ரஞ்சு அமர்ந்திருப்பதையோ சஞ்சீவ் எதிர்பார்க்கவில்லை.

 

முதலில் சிறிது அதிர்ந்தவன், பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ஹே… ஹாய்… ஹ்ம்ம்… சாரி…. எப்பவும் இப்படி அன்எக்ஸ்பெக்ட்டடா மீட் பண்றோம்.” என்று மூச்சு வாங்கியவாறே கூறினான்.

 

ரஞ்சுவும் சஞ்சீவை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவன் கூறியதைக் கேட்டவள், “ம்ம்ம் ஆமால.” என்றாள் புன்னகையுடன்.

 

சஞ்சீவின் பேச்சு ரஞ்சுவிடம் இருந்தாலும், அவனின் கண்கள் அடிக்கடி பின்னாடி திரும்பி பார்த்துக் கொண்டேயிருந்தேன.

 

அவன் யாரைத் தேடுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட ரஞ்சு, “என்னாச்சு? உங்க ஃபேன்ஸ் கிளப்பை தேடுறீங்களா?” என்றாள் குறும்பாக.

 

“உஃப், அவங்க தொல்லை தாங்க முடியல. ஜாக்கிங்கோ எக்ஸ்சர்சைஸோ பண்ணிட்டு இருக்கும்போது யாராவது பார்த்துட்டே இருந்தா ஒரு மாதிரி இருக்காதா?” என்று அவன் புலம்ப, “ரிலாக்ஸ், இன்னும் கொஞ்ச நாள் தான். அப்பறம் புதுசா யாராவது வந்தா அவங்களை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.” என்று அவள் சமாதானப்படுத்தும்போதே அங்கு வந்தாள் தர்ஷு.

 

அவள் அருகில் வந்ததும், “தர்ஷு இவரு சஞ்சீவ்.” என்றவள், “சஞ்சீவ், மீட் மை பிரென்ட் தர்ஷு.” என்றாள்.

 

தர்ஷுவிடம் புன்னகையுடன் கூடிய ஒரு தலையசைப்பை கொடுத்தவன், “அப்போ நேத்து வந்த பிரென்ட்?” என்று கேள்வியாக இழுத்தான்.

 

“யாரு, நீங்க இன்ஸ்டன்ட் தங்கச்சி ஆக்குனீங்களே, அவளா?” என்று தர்ஷு சிரிப்புடன் வினவ, அவனும் சிரித்தான்.

 

“நீங்க படிச்சுட்டு இருக்கீங்களா?” என்று அவன் கேட்க, அதிலிருந்து ஆரம்பித்து அவரவர்களின் இருப்பிடம் வரை சென்றது அவர்களின் பேச்சு.

 

அவன் வீடிருக்கும் இடத்தைக் கூற, “அங்க ஒரு பெரிய பங்களா இருக்குமே. ஒரு வின்டேஜ் கார் கூட அங்க நிறுத்திருப்பாங்களே. அதுக்கு பக்கத்துல தான் உங்க வீடா?” என்று ரஞ்சு ஆச்சரியத்துடன் வினவ, லேசாக புன்னகைத்து தலையசைத்தவன், “அதுக்கு பக்கத்துல இல்ல, அது தான் என் வீடு.” என்றான்.

 

அவன் கூறியதைக் கேட்ட இருவரும் திகைத்து தான் போயினர். தோழிகள் மூவரும், வேலை எதுவும் இல்லாத சில சமயங்களில், வெளியே காற்றாட நடக்கும் போது அவ்வீட்டை  கடந்திருக்கின்றனர்.

 

முதன்முதலில் அவ்வழியில் சென்றபோது அந்த பங்களாவை பார்த்து, “ஹ்ம்ம், எவ்ளோ பெரிய பங்களா!” என்று வாய் பிளந்து சஞ்சு கூற, “இதெல்லாம் வெளிய இருந்து பார்க்குறதுக்கு தான் நல்லா இருக்கும். இதுக்கு உள்ள போய் வாழ்ந்தா, கொஞ்ச நாள்லேயே போர் அடிக்க ஆரம்பிச்சுடும்.” என்று தர்ஷு கூறினாள்.

 

இவர்களின் பேச்சுக்களை கவனிக்காமல், அந்த பங்களாவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘ஆல்ஃபா ரோமியோ’ காரையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சு. ரஞ்சுவிற்கு ‘வின்டேஜ்’ பொருட்களின் மேல் ஆர்வம் அதிகம்.

 

சஞ்சு கூட, “உன்னை யாராவது கரெக்ட் பண்ணனும்னு நினைச்சா, ஏதாவது பழைய பொருளை கொடுத்தா போதும். அவன் பின்னாடி போயிடுவ.” என்று ரஞ்சுவை கிண்டலடிப்பாள். அப்படிப்பட்டவள், அந்த காரைப் பார்த்து தன்னை மறந்து நிற்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

 

மற்ற இருவரும் அவளிடமிருந்து எந்த சத்தமும் இல்லையே என்று நினைத்து அவளைப் பார்க்க, அவளோ அவளின் பார்வையில் மூழ்கியிருந்தாள்.

 

“அதான, என்ன டா மேடம் எதையோ வெறிச்சு பார்த்துட்டு இருக்காங்கன்னு பார்த்தா, வழக்கம் போல பழைய பொருளு!” என்ற சஞ்சு, ரஞ்சுவை உலுக்க, அவளின் நினைவுகளிலிருந்து வெளிவந்த ரஞ்சு, “அந்த காரு செமையா இருக்குல?” என்றாள்.

 

“அடிப்பாவி, இவ்ளோ பெரிய வீடு உன் கண்ணுக்கு அழகா தெரியல? அந்த காரு செமையா இருக்கா?” என்று தர்ஷு வினவ, “இவளுக்கு பழைய பொருள் பைத்தியம் பிடிச்சுருக்கு.” என்ற சஞ்சுவை துரத்தினாள் ரஞ்சு.

 

அதன்பின்பு பல முறை அவர்கள் அவ்வழியில் சென்றிருக்கின்றனர். ‘என்ன இந்த பங்களா பூட்டியே இருக்கு? யாரு இதோட ஓனரா இருப்பாங்க?’ என்று ரஞ்சு நினைத்திருக்கிறாள்.

 

இப்போது கூட சஞ்சீவ் அந்த இடத்தைக் கூறும்போது, அந்த பங்களாவிற்கு அருகில் உள்ள ஏதோவொரு வீடாக இருக்கும் என்று நினைத்தாள். அந்த இடத்திலுள்ள அனைத்து வீடுகளும் சற்று பெரிதாகவே இருக்கும். அந்த பங்களா அளவிற்கு பெரியதில்லை.

 

ஆனால், அந்த பங்களாவை தான் அவனின் வீடு என்று கூறும்போது, அதிர்ச்சி தான் ரஞ்சுவிற்கு. அவனின் உடை மற்றும் பழக்கவழக்கங்களிலேயே அவன் மேல்தட்டு வர்க்கத்தவன் என்பது புரிந்தது. ஆனால் இவ்வளவு பெரிய பணக்காரனாக இருப்பான் என்று ரஞ்சு நினைக்கவில்லை. அவனின் இலகுவான பேச்சு அவ்வாறு கற்பனை செய்ய விடவில்லை.

 

அவர்களின் அதிர்ச்சியை கண்டவன், “ஹே, என்ன ஷாக்காகிட்டீங்க?” என்று சஞ்சீவ் கேட்க, இருவரும் ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்தனர்.

 

“உங்களுக்கு அந்த கார் அவ்ளோ பிடிச்சதுன்னா ஏன் வீட்டுக்கு வந்து பார்க்க கூடாது?” என்று ரஞ்சுவை பார்த்து வினவியவன், “ஒரு நாள் வீட்டுக்கு கண்டிப்பா வரணும்.” என்று இருவரையுமே அழைத்தான்.

 

அவனின் செல்வநிலை அறிந்தததிலிருந்தே தர்ஷுவிற்கு ஏதோ உறுத்த, “எல்லாரையும் வீட்டுக்கு இன்வைட் பண்ணுவீங்களா?” என்று கேட்டே விட்டாள்.

 

அவனோ அதே புன்னகையுடன், “என்னை அந்த ஸ்டாகர்ஸ் கிட்டயிருந்து காப்பாத்திருக்கீங்க, எனக்கு உதவி செஞ்சவங்களை கண்டிப்பா இன்வைட் பண்ணுவேன்.” என்றான்.

 

பின்னர் கடிகாரத்தில் நேரம் பார்த்தவன், நேரமாகிவிட்டது என்று அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினான். அவன் அவர்களின் கண்களை விட்டு அகலும் வரை, அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

 

“நினைச்சதை விட பெரிய பணக்காரனா இருக்கான். எதுக்கும் இவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று தர்ஷு கூற, அவளின் முதல் வரியை ஏற்றுக் கொண்ட ரஞ்சுவிற்கு, ஏனோ இரண்டாம் வரியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போதும் அவன் அவளைப் பொறுத்தவரையில் ‘அமுல் பேபி’ தான். ஆனால், அதை தர்ஷுவிடம் சொல்லவில்லை.

 

அப்போது, “யாரு அந்த பையன்?” என்ற குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

 

அங்கு இடுப்பில் கைவைத்து இருவரையும் கூர்ப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தார் ராதா.

 

“ம்ம்ம் சொல்லுங்க, யாரோட பாய்-ஃபிரெண்டு அவன்? என்கிட்ட சொல்லாமலேயே பாய்-ஃபிரென்ட் வச்சுருக்கீங்களா?” என்று கோபமாக கேட்க, “அச்சோ ராதா ஆன்ட்டி எதுக்கு இவ்ளோ கோபம்? எங்க கிருஷ்ணா மாமா இருக்கும் போது வேற பாய்-ஃபிரென்ட் எதுக்கு எங்களுக்கு?” என்று வேண்டுமென்றே அவரை வம்பிழுத்தாள் தர்ஷு.

 

அது சரியாக வேலை செய்ய, “க்கும், உனக்கும் அந்த சஞ்சு பொண்ணுக்கும் என் வீட்டுக்காரர் மேல ஒரு கண்ணு!” என்று நொடித்துக் கொண்டார்.

 

அதன்பின்னர் சிறிது நேரம் ராதா ஆன்ட்டியுடன் பேசியவர்கள் இருவரும் விடுதிக்கு திரும்பினர்.

 

*****

 

அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றவனின் முகமோ இத்தனை நேரமிருந்த மென்புன்னகை மாறி, எதையோ சாதித்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தாண்டவமாடியது.

 

“என் பிளான் எல்லாம் சரியா ஒர்க்-அவுட் ஆகுது. இன்னும் கொஞ்ச நாள் தான். அப்பறம் நான் நினைச்ச மாதிரி என்னோட லைஃப் மாறிடும்.” என்று மனதிற்குள் பேசியபடியே உற்சாகமாக அவனின் வேலைகளை பார்க்கச் சென்றான்.

 

*****

 

சஞ்சய் கூறியது போல, அடுத்த அரை மணி நேரத்தில் ராஜசேகரின் முழு விபரமும் அவன் முன் இருந்தது. அதில் அவருக்கு குடும்பம் எதுவும் இல்லையென்றும், மும்பை புறநகர் பகுதியில் அவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார் என்றும் இருந்தது.

 

மேலும், அவர் முதல் நாளே மும்பையை விட்டு சென்றுவிட்டார் என்றும் அதில் இருந்தது.

 

“ஷிட், அவரு எங்க போயிருக்காருங்கிற இன்ஃபர்மேஷன் இன்னும் எனக்கு ஏன் வரல?” என்று கோகுலிடம் கேட்க, ‘அந்த படுபாவி அதை கொடுக்கலேனா நான் என்ன செய்வேன்?’ என்று மனதிற்குள் புலம்பியவன், பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.

 

அவனின் பாவனையில் கண்களை இறுக்க மூடி கோபத்தை கட்டுப்படுத்திய சஞ்சய், “டென் மினிட்ஸ் தான் உனக்கு டைம். அதுக்குள்ள எனக்கு அவரு எங்க போயிருக்காரு, அவரோட ரீசன்ட் கான்டெக்ட்ஸ் எல்லாமே வேணும்.” என்று உறுமினான்.

 

இவனின் கோபத்திற்கு காரணமான ராஜசேகரோ, மலர்விழியின் வீட்டின் முன் நின்றிருந்தார்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்