Loading

காதல் 2

 

 

ஒருவழியாக சஞ்சுவை சமாதானப்படுத்தியவர்கள், விடுதியில் கொடுத்த காய்ந்த தோசையை சாப்பிட்டுவிட்டு, கல்லூரிக்கு சென்றனர். மூவரும் அதே கல்லூரியில் தான் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு இதோ முதுகலையில் முதல் ஆண்டை வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர்.

 

எங்கு செல்வதாயினும், மூவரும் இணைப்பிரியாமல் ஒன்றாகவே செல்வதால், ‘த்ரீ ரோஸஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர்கள், அக்காரணத்தினாலேயே அக்கல்லூரியில் பிரபலமடைந்தனர்.

 

இன்றும் அதே போல், மூவரும் ஒன்றாக சென்று கொண்டிருக்க, சஞ்சு தான் அவளின் வேலையை துவங்கினாள்.

 

“இன்னைக்கு ஃப்ரசர்ஸ் வந்துருக்காங்க போல. அட அட என்னவொரு கலர்ஃபுல்லான வியூ!” என்று வழக்கம் போல சஞ்சு சைட்டடிக்க, “அட எரும, உன்னை விட சின்ன பசங்களை போய் சைட்டடிக்கிற!” என்று சஞ்சுவின் தலையில் தட்டினாள் தர்ஷு.

 

“ப்ச், சைட்டடிக்கிறதுல சின்ன பசங்க என்ன, பெரிய பசங்க என்ன? அழகை ரசிக்கணும், ஆராய்ச்சி பண்ணக்கூடாது.” என்று அவளின் தத்துவத்தை எடுத்துவிட்டாள் சஞ்சு.

 

“உன் ஃபிலாசஃபில தீயை வைக்க.” என்று கடுப்புடன் தர்ஷு கூற, “இதுக்கு தான் உன்னை மாதிரி ஆன்ட்டிஸ் கூட வரக்கூடாதுன்னு சொல்றது. நீயும் பார்க்கக் மாட்ட, பார்க்குற என்னையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்ப.” என்று அலுத்துக் கொண்டாள் சஞ்சு.

 

அவர்களின் உரையாடல்களை எவ்வித இடையூறும் செய்யாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சு. அப்போது அவர்களை நோக்கி வந்தான் ஒருவன். சற்று முன்னர், சஞ்சு சைட்டடித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்தவன்.

 

அவன் வருவதைக் கண்ட சஞ்சு, “ஹே அங்க பாருங்க, ஒரு ஜுனியர் பையன் வரான். அநேகமா நான் ஜூனியருன்னு நினைச்சு பேச வருவான்னு நினைக்கிறேன். ஆனா நான் அவனுக்கு சீனியர்னு தெரிஞ்சா, டிசப்பாயின்ட் ஆகிடுவான்ல. ச்சு பாவம்!” என்று சஞ்சு அந்த பையனிற்காக வருத்தப்பட, “ரொம்ப ஃபீலிங்கா இருந்துச்சுனா, திரும்ப யூ.ஜி பண்ணி அவனுக்கு கம்பெனி கொடேன்.” என்று தர்ஷு அவளிற்கு மறுமொழி தர, மீண்டும் சண்டை உருவாகும் சூழலில், ரஞ்சு தான், “ஷ், இப்போ ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்களா?” என்றாள்.

 

அவள் அவ்வாறு கூறுவதற்கும், அவன் அவர்களை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது. அவன் நேராக சஞ்சுவிடம் வந்து, “அக்கா, ஃபர்ஸ்ட் இயர் கிளாஸுக்கு எப்படி போகணும்?” என்று கேட்க, “எதே அக்காவா!” என்ற சஞ்சுவின் முகமோ விளக்கெண்ணையை குடித்தது போல இருக்க, தர்ஷுவும் ரஞ்சுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

அவர்களைக் கண்டு மிரண்டவன், மீண்டும் “அக்கா…” என்றழைக்க, இப்போது வெகுண்டு எழுந்தவள், “யாருக்கு டா அக்கா? ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிரு. இன்னொரு தடவை அக்கான்னு வந்த…” என்று அவனை திட்ட அவனோ பயந்து இரண்டடி பின்னே சென்றான்.

 

ரஞ்சுவும் தர்ஷுவும் தான் சஞ்சுவைப் பிடித்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போதும் அவர்களால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை தான். இருப்பினும் சஞ்சுவிற்காக இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

 

அப்போது சஞ்சுவின் பார்வையில் மீண்டும் அவன் பட, “இன்னும் போலயா நீ?” என்று சஞ்சு வினவ, “அக்கா… அந்த கிளாஸ்.…” என்று அவன் இழுக்க, “அடிங்…” என்றவாறே அவனை துரத்தினாள் சஞ்சு.

 

மற்ற இருவருக்கும் சிரிப்பதா இல்லை சஞ்சுவை பிடிப்பதா என்று தெரியாமல், இரண்டையும் ஒருங்கே செய்து அதில் வெற்றியும் கண்டனர். இவ்வாறு அவர்களின் அன்றைய நாள் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் கழிந்தது.

 

மாலை நேரம் கல்லூரி விட்டு வரும்போதே, நூறாவது முறையாக அந்த ரெஸ்ட்டாரண்டிற்கு செல்வதை உறுதிபடுத்திக் கொண்டாள் சஞ்சு.

 

தர்ஷுவிற்கு காய்ச்சல் இன்னும் சரியாகாத காரணத்தினால், அவளை அறையிலேயே ஓய்வெடுக்க சொல்லிவிட்டு மற்ற இருவரும் கிளம்பினர். செல்லும் வழியெல்லாம், “இந்த ட்ரெஸ் ஓகே தான? இன்னும் கொஞ்சம் மேக்-அப் போட்டுருக்கலாமோ?” என்று ரஞ்சுவை கேள்விகளால் குடைந்து விட்டாள் சஞ்சு.

 

“ப்ச், சஞ்சு, சாப்பிட தான போறோம். அதுக்கு இவ்ளோ மேக்-அப்பே ஓவர்.” என்றாள் ரஞ்சு.

 

“சாப்பிட மட்டும் போறோம்னு யாரு சொன்னா? அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் செம ஹேன்ட்ஸமாம். சோ டூ-இன்-ஒன் பர்பஸுக்காக போறோம்.” என்று கண்ணடித்தாள் சஞ்சு.

 

அதைக் கேட்ட ரஞ்சு, வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டு, “உன்னை நம்பி வந்ததுக்கு, ஸ்விகில ஆர்டர் போட்டு சாப்பிட்டுருக்கலாம்.” என்றாள்.

 

“யூ ஆர் மை பெஸ்ட் பிரென்ட் ரஞ்சு.” என்று முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டியவாறு சஞ்சு ரஞ்சுவை கைப்பிடித்து அழைத்து செல்ல, ரஞ்சுவும் சிரித்துக் கொண்டே அவளுடன் சென்றாள், விதி அங்கு தான் அதன் ஆட்டத்தை துவங்கப் போவதை அறியாமல்!

 

*****

 

அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழையும்போதே வேறெங்கோ நுழைந்த உணர்வு தோன்றியது இருவருக்குமே. வண்ண வண்ண விளக்குகள் முதல் மனதை மயக்கும் நறுமணம் வரை அனைத்திலுமே கவனமெடுத்து செய்திருந்தனர்.

 

உள்ளே நுழைந்ததும், மூன்று வரிசையாக நாற்காலிகளும் மேஜைகளும் அடுக்கப்பட்டிருக்க, ஒவ்வொரு வரிசைக்கும் உட்கூரையில் வெவ்வேறு நிற விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, அவை அந்த தங்க வண்ண பின்னணிக்கு அழகாக பொருந்தியிருந்தன. சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கூட சூழலுக்கு பொருத்தமாக, அழகாக இருந்தன. அதனுடன், காற்றில் கசிந்து வந்த மெல்லிசையும் மனதை லேசாக்கியது.

 

இருவரும் சுற்றிலும் ரசித்தவாறே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தனர். “செமையா இருக்குல்ல இந்த இடம்?” என்று சஞ்சு கூற, அதை ஆமோதிக்குமாறு தலையசைத்தாள் ரஞ்சு.

 

“இடமே இவ்ளோ அழகா இருந்தா, இந்த இடத்தோட ஓனர் எவ்ளோ அழகா இருப்பாரு?” என்று கனவில் மிதந்தவாறு சஞ்சு கூற, “ஆரம்பிச்சுட்டியா?” என்றாள் ரஞ்சு.

 

அப்போது அவர்களிடம்  வந்த பேரர், “யுவர் ஆர்டர் ப்ளீஸ், மேம்” என்று மெனு கார்டை கொடுத்தார்.

 

அதை வாங்கி பிரித்து பார்த்த சஞ்சு, ரஞ்சுவின் காதில், “அவ்வ்! இங்க ஸ்டார்டிங் ப்ரைஸே டூ  ஃபிஃபிட்டியாம்.” என்றாள்.

 

“ஷ், அந்த பேரர் நம்மளயே பார்க்குறான். சீக்கிரம் ஏதாவது ஆர்டர் பண்ணு.” என்று ரஞ்சு அவளிடம் முணுமுணுக்க, சஞ்சுவும் மெனு கார்டை அப்படியும் இப்படியும் திருப்பி, ஓரளவிற்கு நியாய விலையிலிருந்த ஷவர்மாவை ஆர்டர் செய்தாள்.

 

“ஜஸ்ட் அ ஷவர்மா, மேம்?” என்று அந்த பேரர் கேட்க, ‘ஐயோ, மானத்தை வாங்குறானே!’ என்று மனதிற்குள் புலம்பிய சஞ்சு, “எஸ்.” என்று கூறினாள்.

 

அந்த பேரரும் சென்று விட, “இதெல்லாம் தேவையா?” என்று ரஞ்சு வினவினாள்.

 

“ஈஈ, ஒரு ஆசைக்கு ரஞ்சு டார்லிங்.” என்று இளித்து வைத்தாள் சஞ்சு.

 

“சரி நம்ம வேலையை பார்ப்போம். வந்ததுக்கு நாலு சாங்ஸாவது டவுன்லோடு பண்ணிட்டு போவோம்.” என்று அவளின் அலைபேசியை எடுத்தவள், “ஹே ரஞ்சு, எங்கயாவது  வைஃபை பாஸ்வர்ட் இருக்கான்னு பாரு.” என்று அவளும் தேட ஆரம்பிக்க, அவளின் தோளை தொட்டு திருப்பிய ரஞ்சு, “அங்க பாரு.” என்றாள்.

 

அங்கு, ‘இது 1990 என்று நினைத்துக் கொண்டு, எதிரில் இருப்பவர்களுடன் பேசுங்கள். ஏனெனில் எங்களிடம் வைஃபை கிடையாத.’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தது.

 

“அடப்பாவிங்களா வைஃபையும் இல்லையா?” என்று சோக மயமானாள் சஞ்சு.

 

ரஞ்சுவிற்கு, அந்த யோசனை பிடித்துப்போக, இதற்காகவாவது அந்த ரெஸ்டாரன்டின் உரிமையாளரை பார்த்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.

 

அடுத்த பத்து நிமிடங்களில், அவர்கள் கேட்ட ஷவர்மா வந்துவிட, அதை ‘ஒன் பை டூ’வாக்கி சாப்பிட்டு முடித்தனர் இருவரும்.

 

அதற்கு பணம் செலுத்தும்போது கூட, “ரோட்டுக் கடைல சாப்பிட்டா, இந்த காசுக்கு மூணு நேரமும் சாப்பிட்டுருப்பேன்.” என்று முணுமுணுத்தாள் சஞ்சு.

 

கிளம்பும் நேரம், “ஹே, ரஞ்சு டூ மினிட்ஸ்.” என்று கூறிவிட்டு ஓடினாள்.

 

ரஞ்சு, மீண்டும் அந்த ரெஸ்டாரண்டை பார்த்துக் கொண்டிருந்தாள். சஞ்சு கூறிய ‘டூ மினிட்ஸ்’, பல ‘டூ மினிட்ஸ்’களான பின்னரும் அவள் வராததால், அவளை தேடி அவள் சென்ற திசையில் சென்றாள்.

 

நடந்து கொண்டே வந்தவள், அந்த ரெஸ்டாரண்டின் பின்புறம் வந்து விட்டாள். அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாததால், ‘சஞ்சு எங்கு சென்றிருப்பாள்’ என்ற கலக்கம் மனதில் எழ, “சஞ்சு…” என்று அழைத்தாள்.

 

முதல் இரண்டு அழைப்பிற்கு எந்த எதிர்வினையும் இல்லாததால், இம்முறை சற்று சத்தமாக அழைக்க, “எஸ்…” என்றவாறு அவளின் முன் வந்தான் அவன், காலையில் அவளால் ‘அமுல் பேபி’ என்று அழைக்கப்பட்டவன்.

 

திடீரென்று அவன் தோன்றவும், பயத்தில் பின் வாங்கினாள் ரஞ்சு. அவளின் பயத்தை கண்டுகொண்டவன், “சாரி சாரி.” என்றான் அவசரமாக.

 

அவனின் ‘சாரி’ கொடுத்த அரை நொடியில் சமாளித்துக் கொண்டவள், அவனை நோக்கினாள். காலையில் தூரத்தில் பார்ப்பதற்கும், இப்போது அருகில் பார்ப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை அவளின் மனது கணக்கெடுத்தது.

 

‘ஹ்ம்ம், நிஜமாவே ‘அமுல் பேபி’ தான் போல. அதுவும் அந்த ‘ஸ்மைல்’…’ என்று அவளின் மனம் வேறெங்கோ செல்ல பார்க்க, அதை தடுப்பதை போல அவன் ஏதோ வினவினான்.

 

அவன் தன்னிடம் ஏதோ கேட்கிறான் என்ற அளவிற்கு தெரிந்தவளிற்கு, அவன் என்ன கேட்டான் என்று தான் புரியவில்லை!

 

அவளின் முழிப்பில் என்ன உணர்ந்தானோ, “ஆர் யூ ஓகே?” என்றான்.

 

இம்முறை அவனின் கூற்றில் கவனமாக இருந்ததால், உடனே ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

 

“சாரி அகேயின், உங்களை பயமுறுத்தணும்னு நினைக்கல. யாரோ என்னை கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு, அதான் வேகமா வந்தேன். நீங்க இங்க நின்னுட்டு இருப்பீங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல.” என்றான் மன்னிப்பு கோரும் பாவனையில்.

 

“இட்ஸ் ஓகே.” என்று அவனிடம் இவ்வளவு நிமிடங்களில் முதல் முறையாக வாயை திறந்து பதில் கூறினாள்.

 

அவனும் சன்ன சிரிப்புடன் அவளை நோக்கியவன், “யாருக்காகவாவது வெயிட் பண்றீங்களா?” என்று கேட்க, “ம்ம்ம் ஆமா, என் பிரென்ட் சஞ்சு, எங்க போனான்னு தெரியல. அவளை தேடி தான் இங்க வந்தேன்.” என்று சுற்றிலும் தேடியபடியே அவனிடம் கூறினாள்.

 

“ஓஹ், அப்போ நீங்க தான் ‘சஞ்சு’ன்னு கூப்பிட்டீங்களா?” என்று அவன் வினவ, எதற்கென்று தெரியாமல் அவளும் “ஆமா.” என்றாள்.

 

இப்போது அவனின் புன்னகை விரிய, “சாரி, என்னை நான் இன்ட்ரோ பண்ணிக்கல. ஐ’ம் சஞ்சீவ்.” என்று அவளின் முன் கை நீட்டினான்.

 

அவன் பெயரை கேட்டவளிற்கு, அவன் விரைந்து வந்ததன் நோக்கம் புரிய, அவளின் இதழ்களும் விரிந்தன.

 

நீட்டிய அவன் கையுடன் தன் கையை கோர்த்து குலுக்கியவள், “ஐ’ம் ரஞ்சனா.” என்றாள்.

 

அவளும் அவனும், கைகோர்த்து சிரிப்பது போன்ற இந்த காட்சி அழகாக புகைப்படமாக எடுக்கப்பட்டது, அவர்கள் அறியாமலேயே! விதி இவர்களின் வாழ்க்கையில் விளையாட, இதையே துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்போகிறது என்பதை அறியாமல், ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

 

அவன் தான் அந்த ரெட்ஸ்ராண்டின் உரிமையாளன் என்பதை அறிந்த பின், அவள் கண்டு ரசித்த விஷயங்களை பற்றி கூறி பாராட்டினாள்.

 

அவனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த ரஞ்சு, எதேச்சையாக அவனுக்கு பின்னால் பார்க்க, அங்கு தன் முட்டைக் கண்களை உருட்டியவாறே இந்த காட்சியைக் பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சு.

 

ரஞ்சுவின் பார்வை திசை மாறி எங்கோ நோக்குவதை கண்ட சஞ்சீவும் அவள் பார்வை சென்ற திசையை நோக்க, அங்கிருந்த சஞ்சுவை கண்டான். அவளை சுட்டிக்காட்டி, “அவங்க தான் உங்க பிரெண்டா?” என்றான்.

 

ரஞ்சு பதில் சொல்வதற்கு முன்பே அங்கு ஆஜரான சஞ்சு, “ஆமா ஆமா, நான் தான் அவளோட பெஸ்ட் பிரென்ட் சஞ்சிதா.” என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

 

“ஓஹ் நைஸ், என் பேரு சஞ்சீவ்.” என்று அவன் கூறியதும், “வாவ்! நம்ம ரெண்டு பேரு பேரும் சஞ்சு.” என்று அவள் புன்னகையுடன் கூறினாள்.

 

ரஞ்சுவை பார்த்து மென்சிரிப்புடன், “அதனால தான் இங்க ஒரே கன்ஃப்யூஷன்.” என்றவன் சஞ்சு புறம் திரும்பி, “ம்ம்ம் ஒரே நேம், உங்களை பார்த்தா கூட, உங்களை மாதிரி சிஸ்டர் இல்லயேன்னு  ஃபீலிங் வருது.” என்றான்.

 

அவ்வளவு நேரம் ‘தௌவ்சண்ட் வாட்ஸ் பல்ப்’ போல பிரகாசமாக இருந்தவளின் முகம் ‘சிஸ்டர்’ என்று அவன் அழைத்ததும் சுருங்கிப் போயிற்று.

 

‘ஒரே நாள்ல எத்தனை பேருக்கு தான் டா நான் தான் சிஸ்டர் ஆகுறது? பொசுக்கு பொசுக்குன்னு ‘சிஸ்டர்’ன்னு கூப்பிட்டு என் மனசை டேமேஜ் பண்ணிடுறீங்களே!’ என்று மனதிற்குள் புலம்பினாள் சஞ்சு.

 

ரஞ்சுவிற்கோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்போது சிரித்தால், சஞ்சீவிற்கும் விளக்கம் கொடுக்க வேண்டுமென்பதால், மறுபுறம் திரும்பி சிரிப்பை அடக்கினாள்.

 

அவர்களின் எதிர்வினையைக் கண்டவன், “என்னாச்சு? எனி ப்ராப்ளம்?” என்று கேட்க, “ச்சேச்சே, ஒரு ப்ராப்ளமும் இல்ல பிரதர்.” என்று இளித்துக் கொண்டே கூறினாள் சஞ்சு.

 

“ஓகே ப்ரோ நாங்க கிளம்புறோம்.” என்ற சஞ்சு ரஞ்சுவை இழுத்துக் கொண்டு செல்ல, ரஞ்சு சஞ்சீவை நோக்கி ஒரு தலையசைப்புடன் விடைபெற்றாள்.

 

*****

 

சஞ்சீவின் வீடு… இல்லை பங்களா! அந்த பங்களா ஆங்கிலேயர் காலத்து கட்டிடக்கலையை பறைசாற்றும் வண்ணம், இருபுறமும் பரந்து விரிந்திருந்தது. அந்த பங்களாவை சுற்றிலும் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளும், உயர்ந்து வளர்ந்த மரங்களும் அழகாக பராமரிக்கப்பட்டிருந்தன.

 

பெரிய ஆர்ச் வடிவ முகப்புடன் கூடிய போர்டிகோவில், ஆல்ஃபா ரோமியோ வகை வின்டேஜ் கார் நிறுத்தப்பட்டிருந்தது. தனது ஹார்ட்லி டேவிட்ஸன் பைக்கிலிருந்து இறங்கியவன், அந்த காரை பார்த்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

 

அவனின் மனம் சமீப காலமாக காணாமல் போயிருந்த சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்தது. அதே மகிழ்ச்சியிடன் தன்னறைக்கு சென்றவன், அங்கு பெரிதாக மாட்டப்பட்டிருந்த தனது குடும்ப புகைப்படத்தைக் கண்டு, “மிஸ் யூ பேட்லி! என்று முணுமுணுத்தான்.

 

பின்னர் அவனின் கோட் சூட்டை கழட்டிவிட்டு, இலகுவான உடைக்கு மாறியவன், எப்போதும் போல் அன்றைய நாள் நிகழ்வுகளை அவனின் குறிப்பேட்டில் எழுத ஆரம்பித்தான்.

 

அப்போது அவனின் குறிப்பேட்டிலிருந்து எதேச்சையாக கீழே விழுந்த புகைப்படத்தை எடுத்தவன் மெல்லிய சிரிப்புடன், “உனக்காக தான் இங்க வந்துருக்கேன்.” என்றான்.

 

அவன் இதழ்கள் சிரிப்பில் விரிந்திருந்தாலும், கண்களோ வெகு தீவிரமாக அந்த புகைப்படத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது. பின் என்ன நினைத்தானோ, அதை குறிப்பேட்டில் வைத்து மூடிவிட்டு, எப்போதும் போல் பால்கனிக்கு சென்று, பரந்து விரிந்த வானத்திலிருந்த நட்சத்திரங்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.

 

*****

 

சிட்னி, ஆஸ்திரேலியா…

 

‘ப்ச், மிட்நைட்டாக இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. இந்த பாஸ், அவரும் கிளம்ப மாட்டிங்குறாரு, என்னையும் கிளம்ப விட மாட்டிங்குறாரு!’ என்று மனதிற்குள் புலம்பிய கோகுல், தன் விதியை நொந்து கொண்டு, அந்த ஏசி அறையில் அவனின் பாஸான எஸ்.ஜேவுடன் இருந்தான்.

 

கோகுலின் புலம்பல்கள் அவனின் செவியை எட்டியது போல நிமிர்ந்து அவனைப் பார்த்த எஸ்.ஜே, “இன்னும் டென் மினிட்ஸ்ல கிளம்பலாம்.” என்று கூறிவிட்டு மீண்டும் கோப்பில் ஆழ்ந்து விட்டான்.

 

‘என்னாது கிளம்பலாமா? அப்போ அவரும் என்கூட வராரா? அய்யயோ, இன்னைக்கு அந்த லிண்டா வேற ஏதோ பார்ட்டி இருக்குன்னு சொன்னாளே. இவரு வந்தா அங்க போக முடியாதே!’ என்று அவனின் அடுத்த புலம்பலை ஆரம்பித்தான்.

 

“இப்போலாம் உன்ன பத்தி நிறைய கம்ப்லைன்ட்ஸ் வருதே.” கோப்பை பார்த்துக் கொண்டே கோகுலிடம்  வினவினான் எஸ்.ஜே.

 

அவன் கூறுவது புரியாமல் விழித்த கோகுல், “பாஸ்ஸ்ஸ்…” என்று இழுக்க, “அடிக்கடி பார்ட்டின்னு வெளிய சுத்துறியாம். அங்கிள் சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருந்தாரு.” என்று கூர்மையாக கோகுலை நோக்கினான் எஸ்.ஜே.

 

‘அச்சோ, இந்த டாடிக்கு வேற ஆளே கிடைக்கலையா? இந்த மனுஷன்கிட்ட போய் சொல்லிருக்காரு!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.

 

“ரொம்ப ஃப்ரீயா இருக்கிறதால தான, இப்படி சுத்திட்டு இருக்க? இனி உன்னோட ஃப்ரீ ஹவர்ஸ் குறைச்சுடுறேன்.” என்று அலுங்காமல் குலுங்காமல் குண்டை தூக்கி கோகுலின் தலையில் இறக்கினான் எஸ்.ஜே.

 

அதைக் கேட்டு அதிர்ச்சியிலிருந்த கோகுல், “பாஸ்…” என்று கத்திவிட்டான். பின்னரே இருக்குமிடம் உணர்ந்து, “இனிமே அப்படி சுத்த மாட்டேன் பாஸ்.” என்றான் இறங்கிய குரலில்.

 

அவன் மனதோ, இதற்கு முன்னர் சென்ற பார்ட்டியில் அவன் அடித்த கும்மாளத்தை ரீவைண்ட் செய்து காண்பித்தது.

 

சற்று நேரம் அமைதி நிலவ, மீண்டும் அந்த அமைதியைக் கலைத்த எஸ்.ஜே, “அப்பறம் உன் பிரெண்டு எங்க இருக்கான்?” என்றான்.

 

ஏற்கனவே பார்ட்டிக்கு போக முடியாத கவலையில் இருந்தவனை, இந்த கேள்வி மீண்டும் பதறச் செய்தது.

 

“பாஸ்ஸ்…” என்று மீண்டும் இழுக்க, “உன் பாஸா இல்ல, உன் பிரெண்டோட அண்ணனா கேட்குறேன்.” என்றான் எஸ்.ஜேவான சஞ்சய்.

 

“சத்தியமா எனக்கு தெரியாது அண்ணா.” என்றான் கோகுல்.

 

அவனை ஒருமுறை பார்த்த சஞ்சய், ஒரு பெருமூச்சுடன் கிளம்புவதற்கு ஆயத்தமானான்.

 

‘ஆஹ், பார்வையே சரியில்லையே! இந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் வேற வேலையே இல்ல. ஆனாவுனா இந்த அப்பாவியை போட்டு பாடாப்படுத்துறது!’ – வழக்கம் போல மனதிற்குள் தான் கூறிக் கொண்டான் கோகுல்.

 

அப்போது சஞ்சயின் அலைபேசியில் செய்தி வந்ததற்கான ஒலி எழும்ப, அதில் வந்திருந்த புகைப்படத்தைக் கண்ட சஞ்சயின் முகத்திலிருந்த அதிர்ச்சியை கண்டுகொண்டான் கோகுல்.

 

இப்போது மீண்டும் எஸ்.ஜேவாக மாறிய சஞ்சய், “கோகுல், இந்தியா போகணும். அடுத்த ஃ பிளைட்ல டிக்கெட் போடு.” என்றவாறே நடந்தவன், ஒரு நிமிடம் நின்று, “என்கூட நீயும் வரணும்.” என்று கூறிவிட்டு, தன் வேக நடையில் சென்று விட்டான்.

 

கோகுலோ தலையில் கைவைத்தவாறே, “போன ஜென்மத்துல இவருக்கு பொண்டாட்டியா இருந்துருப்பேன் போல! இப்படி எங்க போனாலும், என்னையும் இழுத்துட்டே போறாரே.” என்று வாய்விட்டே புலம்பியவன், எஸ்.ஜே தூரத்தில் போவதைக் கண்டு, வேகவேகமாக அவனைப் பின்தொடர்ந்தான்.

 

சஞ்சய்க்கு அலைபேசியில் வந்த புகைப்படம் என்ன? அதைக் கண்டவன் கொண்ட அதிர்ச்சி எதற்காக?  தெரிந்து கொள்ள அவனுடனே நாமும் இந்தியா செல்வோம்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
12
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்