Loading

 

 

ஈர்ப்பு 15

 

“இன்னும் ரெண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்தலையா?” என்ற குரலில் இருவரும் எங்கள் சண்டையை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கினால், அங்கு தாமோ அங்கிள் அவரின் வழக்கமான புன்சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார்.

 

“உங்க க்யூட்டி தான் சண்டை போடுறது!” என்று சாண்டி என்னை மாட்டிவிட நானும் பதிலுக்கு “சாண்டி தான் அங்கிள் என்னை வம்புக்கிழுத்தாள்!” என்றேன் அவளை முறைத்துக் கொண்டே.

 

“ஆஹான், அப்படி என்ன பண்ணேன்னு உன் அங்கிள் கிட்ட சொல்ல வேண்டியது தான.” என்றாள் சாண்டிஎன்னை நோக்கி கண்ணடித்துக் கொண்டே.

 

‘அச்சோ இவ வேற இப்படி கோர்த்து விடுறாளே! இப்போ ராகுலை பத்தியா அங்கிள் கிட்ட சொல்ல முடியும்.’ என்று அவளை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தேன். 

 

அப்போது என்னை காப்பாற்றவென தாமோ அங்கிள், “போதும் போதும், உங்க சண்டையை அப்புறம் கன்டினியூ பண்ணுங்க. இப்போ வாங்க உள்ள போவோம்.” என்று முறைத்துக் கொண்டிருந்த எங்களை பிரித்து உள்ளே கூட்டிச் சென்றார்.

 

அபி அவரைப் பார்த்ததும் சிரிப்புடன் வந்து அவரை அழைத்துச் சென்றான். அங்கிளும் அவனிடம் தன் வாழ்த்தை கூறிவிட்டு ரெஸ்டாரண்ட்டை சுற்றிப் பார்த்தார்.

 

இன்னமும் நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் இருந்தோம். முறைப்புடன் அவளிடமிருந்து பார்வையை அகற்றினால் என் கண்முன்னே தெரிந்தது அது!

 

பார்த்ததும் நாவில் எச்சில் ஊற, அதன் வண்ணம் கண்களுக்கும் சுவையை தூண்ட, அதை அப்படியே எடுக்க கை பரபரக்க என்று என் அனைத்து உறுப்புகளையும் சுறுசுறுப்பாக்கி அங்கே அழகாக வீற்றிருந்தது அந்த ‘ரெட் வெல்வெட் கேக்’!

 

‘ச்சே, இந்த அபி எங்க போனான்? கேக் கட் பண்ணுறதை விட இவனுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை? ஐயோ, நம்ம கண்ணு வேற அங்கேயே போகுதே! நதி மா கண்ட்ரோல்!’ என்று நான் என்னையே கட்டுப்படுத்திக் கொண்டு அபிக்காக காத்திருந்தேன். 

 

பத்தாவது முறையாக அபியை மனதிற்குள் சபித்துக் கொண்டே அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தேன். என்னுடன் சேர்ந்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் என் அப்பா!

 

‘ஹ்ம்ம், அவரவருக்கு அவரவர் கஷ்டம்!’ என்று சலித்துக் கொண்டது என் மனசாட்சி.

 

நானும் ஒரு பார்வை ‘கேக்’கிலும் மறு பார்வை அபி வரும் வழியிலும் வைத்திருந்தேன். இப்படி என் பார்வையை கொண்டு கபடியாடும் போது தான் மறுபடியும் ராகுலிடம் மாட்டிக் கொண்டேன்.

 

‘அச்சோ, இவன் வேற எப்போ இருந்து என்ன பார்க்குறான்னு தெரிலேயே! ஒருவேளை நம்ம கேக்கையே வச்ச கண்ணு வாங்காம பார்த்ததை பாத்திருப்பானோ? க்கும், எப்பவும் நான் இப்படி ஒரு சிசுவேஷன்ல இருக்கும்போதே, இவன் என்னை பார்க்குற மாதிரி இருக்கே. எல்லாம் என் நேரம்!’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டேன்.

 

எங்களையெல்லாம் இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்துவிட்டு அபியோ தாமோ அங்கிளுக்கு ரெஸ்டாரண்ட்டை சுற்றி காண்பிக்க சென்றிருந்தான்.

 

இருவரும் வரும் போது சிரித்துப் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்த என் அப்பாவின் முகம் கடுக்க, ‘விட்டா இந்த ஹிட்லர் இங்கயே ஒரு வேர்ல்ட் வாரை ஸ்டார்ட் பண்ணிடுவாரு!’ என்று எண்ணி வேகமாக அபியிடம் சென்று அவன் காதில் நேரமாகிற்று என்று ஓதினேன். அப்படியே அப்பாவையும் கவனிக்க கூறினேன்.

 

அவனும் புரிந்து கொண்டு, அப்பாவிடம் சென்று, “பார்ட்டியை ஆரம்பிக்கலாமா ப்பா?” என்று கேட்க அவரின் ‘ம்ம்ம்’ என்ற பதிலே போதுமானதாக இருக்க, அனைவரையும் அழைத்தான்.

 

‘ஷப்பா, இவனுங்களை ஒன்னு கூட்டுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு!’ என்று நான் செல்லமாக அலுத்துக் கொள்ள, என் அருகில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தபோது என் அருகில் ராகுல் நின்றிருந்தான். 

 

‘இவன் தான் சிரிச்சானா?’ என்று ஆராய்ந்த போது, அவன் முகத்தில் சிரித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. 

 

‘அடச்சே! போங்க டா நீங்களும் உங்க ‘ரியாக்ஷன்லெஸ்’ முகமும்.’ என்று உதட்டை சுழித்துக்கொண்டே கேக்கின் பக்கம் பார்வையை திருப்பினேன்.

 

மீண்டும் ஓரக் கண்ணில் அவனை நோட்டமிட்ட போது அவன் சிரிப்பை மறைக்க முயன்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

 

‘க்கும், இப்போ திரும்புனா மூஞ்சியை இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உம்முன்னு வச்சுக்குவான்! நம்ம தலையெழுத்து ஓரக் கண்ணாலே சைட்டடிப்போம்.’ என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் கேக்கின் புறம் பார்வையை செலுத்தினேன்.

 

அங்கு அபியோ யாரிடமோ சைகையிலேயே பேசிக் கொண்டிருந்தான். ‘இவன் யாருக்கிட்ட இப்படி பேசிட்டு இருக்கான்?’ என்று அபி சைகை செய்து கொண்டிருந்த திசையில் பார்த்தபோது அங்கு ராகுல் ப்ரியாவின் பக்கத்தில் நின்றிருந்தான்.

 

‘அட நம்ம ஆளு! இவன் இங்க தான நின்னுட்டு இருந்தான். எப்போ அங்க போனான்?’ என்று நான் குழம்ப, ‘நீ வாயில கொசு போறது கூட தெரியாம கேக்கை பார்த்துட்டு இருந்தா, அவன் போகாம உன்கூட நின்னு அவனும் அந்த கேக்கை சைட்டடிப்பானா? லூசு உன் ஆளு உன் பக்கத்துல நின்னுட்டு இருக்கான், அவனைப் பார்த்து ஒரு ரொமான்டிக் லுக் விடாம கேக்கை பார்த்துட்டு இருக்க. நீயெல்லாம் கடைசி வரை சிங்கிள் தான்!’ என்று என் மனசாட்சி சாபமிட்டது.

 

‘ஸ்ஸ்ஸ், இன்னைக்கு நீயேன் அடிக்கடி வெளிய வர? உள்ள போ!’ என்று அதை அடக்கினேன்.

 

அபி எதற்கோ ராகுலை அழைக்க, ராகுல் அதற்கு மறுக்க அங்கு கண்களாலேயே ஒரு நாடகம் நடந்தது.

 

‘கருமம்! பக்கத்துல இருக்க பொண்ணை விட்டுட்டு இவன்கிட்ட ‘ஐஸ் டாக்’ (அதான் கண்ணாலேயே பேசுறது) பண்ணிட்டு இருக்கான் இந்த அபி! நல்ல பிரெண்ட்ஸ்! இவனுங்களயெல்லாம்…’ என்று வேகவேகமாக அபி அருகில் சென்றேன், இன்னும் கேக்கை வெட்டவில்லை என்ற கடுப்புடன்.

 

அவன் அருகில் சென்று மென்குரலில், “டேய், இப்போ ஒழுங்கா கேக் கட் பண்ண போறியா, இல்ல நானே என் கையால அள்ளி சாப்பிடவா?” என்று மிரட்ட, “ஹே இரு டி, நானே கேக் கட் பண்ண தாமோ அங்கிளை கூப்பிட்டேன், அவரு வரலைன்னு சொல்லிட்டாரு. இப்போ ராகுலும் வரலைன்னு சொல்லுறான். இப்போ யாரை கேக் கட் பண்ண கூப்பிடன்னு கன்ஃப்யூஷன்ல இருக்கேன்.” என்றான்.

 

“ஹான், இது பெரிய ஃப்ளைஓவர் பிரிட்ஜ்! ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்க ஆள் தேடுறான். இப்போ நீயே இதை கட் பண்ணி ஃபர்ஸ்ட் பீஸ் எனக்கு கொடுக்குற.” என்று அவன் கையில் கத்தியை திணித்தேன்.

 

அவனோ சுற்றி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த கேக்கை வெட்டினான்.

 

‘ஹப்பா ஒரு கேக்குக்கா இந்த அக்கப்போரு!’ என்று மனதிற்குள் நொந்து கொண்டேன்.

 

சொன்னபடியே முதல் துண்டை எனக்குத் தந்தான். “வெரி குட் ப்ரோ! எங்க எனக்கு தராம போய்டுவியோன்னு நினைச்சேன், பரவால்ல பாசம் இருக்கு!” என்று வாயில் வைத்த கேக்கை சுவைத்துக் கொண்டே கூறினேன்.

 

அவன் ஏதோ கூற வர, “ப்ரோ வெயிட் வெயிட். நீ பாசமா ஏதோ சொல்ல வரன்னு தெரியுது. ஆனா நீ சொல்றதுக்குள்ள கேக் காலியாகிடும். சோ, அதை சாப்பிட்டு வந்து உங்கிட்ட கேட்டுக்குறேன். அதுவரை உன் ‘திடீர்’ பிரென்ட் கூட பேசிட்டு இரு.” என்று அபி பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல் ஓடிவிட்டேன்.

 

அங்கு அபி, ‘இவளையெல்லாம் எங்க அம்மா பெத்தங்களா இல்ல செஞ்சங்களானு தெரியல!’ என்ற முகபாவத்தோடு இருப்பான் என்பதை நினைத்து சிரித்துக் கொண்டே என் பங்கு கேக்கை சுவைத்தேன்.

 

அந்த ரெட் வெல்வெட் கேக் காலியானதும் தான் நான் இருக்குமிடம் உணர்ந்து, ‘ச்சே, இப்படி சாப்பிடாததை சாப்பிடுற மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுத்துட்டு இருக்கேன். யாராவது பாrத்திருப்பங்களோ?’ என்று யோசித்துக் கொண்டே நிமிர்ந்து பார்க்கையில் எல்லாரும் அவரவர் வேலைகளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

‘உஃப்!’ என்ற பெருமூச்சுடன் சாண்டியை தேடுகையில் அவள் அபியுடன் வம்பளந்துக் கொண்டிருந்தாள். 

 

‘சாண்டி அபி கூட நின்னுட்டு இருக்கா, அப்போ நம்ம ஆளு எங்க?’ என்ற யோசனையோடு நான் திரும்புகையில், அங்கு ராகுலோ என் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தான். அதுவும் என் அப்பாவின் முகம் கடுப்பை தொலைத்த பாவனையில் இருந்தது எனக்கு ஆச்சரியமே!

 

‘இவன் மட்டும் எப்படி தான் எல்லாரையும் இவ்ளோ சீக்கிரம் அவன் பக்கம் இழுக்கிறானோ!’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென அவன் என் பக்கம் திரும்பி கண்ணடித்தான்.

 

அந்த ‘நிகழ்வு’ நடந்து இரு நிமிடங்கள் ஆகியும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவராத நான், என் கையில் கேக் சாப்பிட்ட தட்டுடன் வாயை ‘பே’வெனத் திறந்து நடுகூடத்தில் நின்றிருந்தேன்.

 

அப்போது முதுகில் உணர்ந்த வலியில் சிந்தையிலிருந்து வெளிவந்தேன். சாண்டி தான் அவள் எவ்வளவு கூப்பிட்டும் திரும்பவில்லை என்று என் முதுகில் அடித்திருந்தாள். ஆனால், நானோ அவள் அடித்ததைக் கூட பொருட்படுத்தாமல், என் குழப்பத்திலேயே உழன்று கொண்டிருந்தேன்.

 

சாண்டி எதுவோ கூறியிருக்க நானும் மண்டையை மண்டையை ஆட்டினேன். ஆனால், என் மனமோ நடந்த சம்பவத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தது.

 

‘அவன் உண்மையிலேயே கண்ணடிச்சுருப்பானோ!’

 

‘ச்சே, அதெல்லாம் இருக்காது. அவனாவது உன்னை பார்த்து கண்ணடிக்குறதாவது!’ என்று என் மனமே இருவேறாய் பிரிந்து ஆலோசித்துக் கொண்டிருந்தது.

 

இங்கு சாண்டி ஏதோ கேட்க, நான் மனதிற்குள்ளே பதில் சொல்வதாய் நினைத்து சத்தமாக, “இல்ல!” என்று கூறிவிட்டேன்.

 

“என்னது இல்லையா, என்ன டி சொல்ற? நீ தான நேத்து ஓகேன்னு சொன்ன. இப்போ வந்து இல்லன்னு சொல்ற. எங்க அப்பா வேற இப்போ உங்க அப்பா கிட்ட பேசப் போயிருக்காங்க.” என்று அவள் படபடக்க… எனக்கோ கொரியன் சீரியலை சப்டைட்டில் இல்லாமல் பார்ப்பது போல் இருந்தது.

 

‘அச்சோ, இவ என்ன பேசுனானே தெரியலையே. இதுல இல்லன்னு வேற சொல்லி வச்சுருக்கேன். விஷயம் தெரிஞ்சா என்ன கத்து கத்துவாளோ! கடவுளே இங்க வச்சு என் மானம் போகாம இருக்க நீ தான் ஹெல்ப் பண்ணனும்.’ என்று அவசரமாக கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு சாண்டியை பார்த்து கேவலமாக இளித்து வைத்தேன்.

 

என் முகபாவனையை வைத்தே நான் அவளை கவனிக்கவில்லை என்பதை அறிந்த சாண்டி என்னை முறைத்து, “மேடம் ரொமான்டிக் மூட்லயிருந்து இறங்கி சாதா மோடுக்கு வாங்க.” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டே.

 

‘உள்ள வந்து அவனை சைட்டடிச்சது இவளுக்கு தெரிஞ்சுருக்கோமோ?’ உள்ளுக்குள் லேசான பயமிருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை.

 

என் இளிப்பை அதற்குமேல் தாங்க முடியாத சாண்டி, “இப்போவாச்சும் நான் சொல்றதை மேடம் கேட்பீங்களா?” என்று வினவ, அதற்கும் சிரித்துக் கொண்டே, “சொல்லு டி.” என்றேன்.

 

“நாளைக்கு என்ன நாள் தெரியுமா?”

 

“ஏன் டி, நம்ம செட்ல யாருக்காவது பர்த்டே வா?”

 

“நம்ம ஒரு ‘பொடிக்’ ஆராம்பிக்க பிளான் பண்ணோம். அதுவாச்சும் உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றாள் அவள் முறைத்துக் கொண்டே.

 

“ஸ்ஸ்ஸ், சாரி டி. அதை மறந்துட்டேன். அச்சோ தாமோ அங்கிள் அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்லிருக்காருல. சுத்தமா நினைப்பே இல்ல!” என்று நான் படபடக்க, “உனக்கு ஞாபகம் இருந்துட்டாலும்!” என்று அவள் முணுமுணுத்து விட்டு, “நாளைக்கு தான் லோன் வாங்குறதுக்கு பேங்க் போய் விசாரிக்கணும். அதுக்கு தான் நீ நாளைக்கு வருவியான்னு கேட்டேன்.” என்றாள்.

 

“நாளைக்கு கண்டிப்பா போகலாம் டி. இப்போ அப்பாவை தாமோ அங்கிள் சமாதானப்படுத்திருவாரான்னு கொஞ்சம் பயமா தான் இருக்கு.” என்றேன் கவலையாக.

 

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது டி. தோ அங்க பாரு எல்லாரும் வந்துட்டாங்க.” என்று கூறிக் கொண்டே அவர்களை நோக்கி சென்றாள்.

 

நானோ சாண்டியை பின் தொடர்ந்து சென்றேன். அங்கு முதலில் அபியும் ராகுலும் வர, அவர்களை தொடர்ந்து  தாமோ அங்கிள் அவரின் என்றும் மாறாத சிரிப்புடன்  வந்தார். இவ்வளவு நடந்தும், என் அப்பாவின் முகம் குழப்பத்தையே பிரதிபளித்தது.

 

நான் மெதுவாக தாமோ அங்கிள் காதில் “என்னாச்சு?” என்று முனகினேன்.

 

அவரோ ‘தம்ப்ஸ் அப்’பைக் காட்டி சிரித்தார். நானும் மகிழ்ச்சியோடு அங்கு சுற்றி வந்தேன்.

 

ஒரு வழியாக அன்றைய பார்ட்டியும் வெற்றிகரமாக முடிந்தது. பார்ட்டி முடிந்து அனைவரும் சென்றதும், அங்குமிங்கும் ஊழியர்கள் பார்ட்டிக்கான ஏற்பாடுகளை கலைத்துக் கொண்டிருந்தனர்.

 

அபியோ ‘ப்ரொஃபிட், லாஸ் செட்டில்மெண்ட்’ என்று சிறு வயது கணக்கில் மூழ்கிப் போனான். நான் அவன் அருகில் அமர்ந்து ‘கேன்டி க்ரஷ்’  விளையாடிக் கொண்டிருந்தேன்.

 

அப்போது அங்கு வந்த ராகுல் அபியிடம் கிளம்புவதாகக் கூறினான். அவனைப் பார்த்ததும் என் கன்னங்கள் தானாகவே சிவந்தன. 

 

‘இப்போ அவன் என்னை பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணனும்?’ என்று மனத்திற்குள்ளேயே ஒரு ஒத்திகை பார்த்துக் கொண்டேன். ஆனால் அவனோ என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.

 

அவன் பின் நின்றிருந்த ப்ரியா, சிறிது நேரத்திற்கு முன் ஃப்ரெஷ் ஆப்பிளாக இருந்தவள், இப்போதோ வாடி வதங்கி இருந்தாள்.

 

அவள் வேகவேகமாக ரெஸ்ட்ரூமிற்குள் நுழைந்ததும், அவளிடம் அதைப் பற்றி வினவ வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் மற்ற கொண்டாட்டங்களால் ப்ரியா விஷயம் பின்னுக்குச் சென்றது.

 

இப்போது அவளிடம் அதைப் பற்றி கேட்பது சரிவராது என்று தோன்றியதால் அவளிடம் எதுவும் பேசாது வழியனுப்பி வைத்தேன்.

 

அவள் அபியை நிமிர்ந்து கூட பார்க்காமல் என்னைப் பார்த்து ‘பை’ சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். இருவரின் நடவடிக்கையே அவர்களுக்கு இடையே உள்ள மோதலை வெளிக்காட்டியது.

 

அப்படி என்ன தான் இருவருக்கும் இடையே நடந்திருக்கும்?

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
19
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments