Loading

மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

 

அனுபல்லவி, “பி…பிரணவ்…” எனத் தயக்கமாக அழைக்கவும், “பவி… நி…நிஜமாவே உனக்கு சம்மதமா?” என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம் அனுபல்லவியின் கன்னத்தை வெட்கத்தில் சிவக்கச் செய்து முகத்தில் மென் முறுவல் தோன்றச் செய்தது.

 

அனுபல்லவியின் முகமே அவளின் பதிலைக் கூறவும் மகிழ்ந்த பிரணவ் மறு நொடியே தன்னவளை முத்தங்களால் அர்ச்சிக்கத் தொடங்கினான்.

 

சில நிமிடங்களில் திடீரென அனுபல்லவியை விட்டு விலகிய பிரணவ்வைப் புரியாமல் பார்த்த அனுபல்லவி, “எ… என்னாச்சு?” எனக் கேட்டாள் தயக்கமாக.

 

‌அவளின் கேள்விக்கு பதிலளிக்காது எழுந்து கொண்ட பிரணவ் அவ் அறையில் இருந்த கப்போர்டைத் திறந்து எதையோ எடுத்து‌ வந்தான்.

 

அனுபல்லவியின் அருகே வந்தவன் அவளை கைப் பிடித்து எழுப்பி அவ் வீட்டில் இருந்த ஒரு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றான்‌.  

 

அனுபல்லவி அவனின் செயல்களை புரியாமல் நோக்க, பிரணவ் தன் இடக் கரத்தால் அவளின் கரத்தைப் பற்றியவன் தன் வலக் கரத்தை விரித்தான்.

 

அவனின் உள்ளங்கையில் மின்னிய பொன் தாலியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அனுபல்லவி.

 

“உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணும் போது இதைக் கொடுத்து தான் பண்ணணும்னு ஆசை ஆசையா ரெடி பண்ணேன் பவி… ஆனா அன்னைக்கு பார்ட்டில நடந்த பிரச்சினையால அதுக்கு வாய்ப்பு இல்லாம போயிடுச்சு… இப்போ தான் அதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு…” என பிரணவ் கூறவும் அனுபல்லவி அவனைக் கலங்கிய கண்களுடன் நோக்கினாள்.

 

பிரணவ், “மனசு ரொம்ப அடிச்சிக்கிது பவி… ஏதோ தப்பா நடக்க போறது போல…” என வருத்தமாகக் கூறவும் அவனின் கரத்தை அழுத்திய அனுபல்லவி, “எதுவும் நடக்காது பிரணவ்… என்ன நடந்தாலும் உங்களுக்காக நான் இருப்பேன்…” என்றாள் ஆறுதலாய்.

 

“பவி… ஐ நீட் யூ பேட்லி…” எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவியின் காது மடல் சிவக்க, “பட் என்னால உன்ன யாரும் தப்பா பேசிட கூடாது…” எனப் பிரணவ் கூறவும் அவனைப் புரியாமல் நோக்கினாள் அனுபல்லவி.

 

“எனக்குன்னு யாரும் இல்லயே… என் மேல யாருக்கும் நிஜமான அக்கறை இல்லயே… காதலிக்க நான் தகுதியானவன் தானா? இப்படி பல எண்ணங்களோட நான் இருக்கும் போது தான் நீ என் வாழ்க்கைல வந்த… உனக்காக நான் இருப்பேன்னு நம்பிக்கை தந்த… அதே போல இருக்க… நீ என் லைஃப்ல கிடைச்ச மிகப் பெரிய வரம்… என்னோட தேவதை… இந்த தேவதை எனக்கே எனக்கா என் கடைசி மூச்சு வரை இருக்கணும்னு விரும்புறேன்…” என்ற பிரணவ் தன் கரத்தில் இருந்த தாலியை அனுபல்லவியின் கழுத்தின் அருகே கொண்டு செல்ல, அனுபல்லவியோ தன்னவனையே அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

 

“சபை கூட்டி, மந்திரம் சொல்லி, எல்லாரோட ஆசிர்வாதத்தோடும் உன் கழுத்துல மூணு முடிச்சிட்டு ஊரறிய உன்ன என் மனைவியா ஏத்துக்கணும்னு தான் எனக்கும் ஆசை… ஆனா இப்போ இந்த தாலியைக் கட்ட சொல்லி தான் என் மனசு சொல்லுது… உன் விஷயத்துல இது வரைக்கும் நான் என் மனசு சொல்றத மட்டும் தான் கேட்டு இருக்கேன்… இப்பவும் அதையே செய்ய விரும்புறேன்…” என்ற பிரணவ் அனுபல்லவியின் முகத்தை சம்மதத்தை எதிர்ப்பார்த்து நோக்க, இதழ்கள் புன்முறுவல் பூக்க கண்களை மூடி சம்மதமாக தலை குனிந்து நின்றாள் அனுபல்லவி.

 

மறு நொடியே புன்னகையுடன் தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான் பிரணவ்.

 

கண்கள் மகிழ்ச்சியில் கண்ணீரை சிந்த, கண்களில் காதலும் மகிழ்ச்சியும் போட்டி போட, இருவரின் விழிகளும் தம் இணைகளுடன் சங்கமித்தன.

 

பிரணவ் தன்னவளின் முகத்தை ஏந்தி அவளின் நுதலில் தன் காதல் சின்னத்தைப் பதிக்க, “லவ் யூ பிரணவ்…” என அவனை அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.

 

பதிலுக்கு தன்னவளை இறுக்கி அணைத்த பிரணவ், “ஐ லவ் யூ பவி…” என முதல் முறை வார்த்தையாலும் தன் காதலை வெளிப்படுத்தினான்.

 

“ரொம்ப சீக்கிரமா சொல்லிட்டீங்க…” என அனுபல்லவி அவனின் அணைப்பில் இருந்து விடுபடாமலே குறைபட, “வெறும் வார்த்தையால சொல்லுறத விட என் காதலை ஒவ்வொரு பார்வையிலும் செயலிலும் உன்ன உணர வைக்க நினைச்சேன்… ஆனா என் பொண்டாட்டியோட மனசுல இருக்குற குறை எனக்கு தெரியாதா? எத்தனை தடவ நான் லவ் யூ சொல்லலன்னு ஃபீல் பண்ணி இருப்ப…” என்றான் பிரணவ் தன்னவளை சரியாகக் கணித்து.

 

அவனின் நெஞ்சில் முகம் புதைத்த அனுபல்லவி, “நீங்க பொண்டாட்டின்னு சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க… இனிமே நான் பெருமையா சொல்லிக்கலாம் நான் தான் பிரணவ் ராஜோட வைஃப்னு…” என்றாள் கண்கள் மின்ன.

 

“ம்ஹ்ம்…” என அனுபல்லவியைத் தன்னிடம் இருந்து விலக்கிய பிரணவ், “எனக்கு தான் பவியோட புருஷன்னு சொல்லிக்க பெருமையா இருக்கு…” என்றான் காதலுடன்.

 

அனுபல்லவியின் இதழ்கள் விரிய, அதனை ஆசை தீர ரசித்தவன் அனுபல்லவியின் இடையைப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, “பொண்டாட்டின்னு சொன்னா பிடிச்சிருக்குன்னு சொல்ற… பொண்டாட்டியோட கடமைய செய்ய மாட்டியா அப்போ?” எனக் கேட்டான் பிரணவ் குறும்பாக.

 

பிரணவ்வின் கண்களில் இருந்த குறும்பை அ

கவதானிக்காத அனுபல்லவி, “என்ன கடமை? டெய்லி உங்களுக்கு சமைச்சு போடணுமா?” எனக் கேட்டாள் புரியாமல்.

 

அவளின் நெற்றியோடு நெற்றி முட்டிய பிரணவ், “அட மக்குப் பொண்டாட்டி… புருஷனுக்கு சமைச்சு கொடுக்குறது தான் பொண்டாட்டியோட கடமையா? அதுக்கு எதுக்கு பொண்டாட்டி? நான் பேசாம வேலைக்காரியே வெச்சிருப்பேனே… இது வேற டிப்பார்ட்மென்ட்…” என்றவன் அனுபல்லவியின் காதில், “இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆச்சு… அதனால இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்…” எனக் கிசுகிசுக்கவும் அனுபல்லவியின் முகம் செவ்வானமாய் சிவந்தது.

 

“என்ன பதிலையே காணோம்?” என தன் மீசையால் அனுபல்லவியின் கழுத்து வளைவில் குறுகுறுப்பு ஊட்டியபடி பிரணவ் கேட்கவும் கூச்சத்தில் நெளிந்த அனுபல்லவி, “போங்க பிரணவ்…” என்று விட்டு அதற்கு எதிராய் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

 

அதனை சம்மதமாக ஏற்ற பிரணவ் அனுபல்லவியைப் பூக்குவியலைப் போல் தன் கரத்தில் ஏந்திச் சென்று மஞ்சத்தில் கிடத்தினான்.

 

அனுபல்லவி விழிகளைத் திறவாமல் இருக்க, “பவி… ஓப்பன் யுவர் ஐஸ்…” எனப் பிரணவ் கட்டளையிட, அவளோ மறுப்பாகத் தலையசைத்தாள்.

 

“சரி அப்போ நான் கிளம்புறேன்… உனக்கு இஷ்டம் இல்லை போல…” எனப் பொய்யாகக் கூறவும் சட்டென விழிகளைத் திறந்த அனுபல்லவி, “எனக்கு ஓக்கே பிரணவ்…” என்றாள் பதட்டமாக.

 

மென் புன்னகை பூத்த பிரணவ் பதட்டத்தைத் தத்தெடுத்து இருந்த அனுபல்லவியின் விழிகளில் மெதுவாக இதழ் பதிக்கவும் அனுபல்லவியின் விழிகள் மீண்டும் நாணத்தில் மூடிக்கொள்ள, தன்னவளின் இதழ்த் தேன் பருகி இல்லறத்தை நல்லறமாகத் துவங்கி வைத்தான் பிரணவ்.

 

************************************

 

ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு பிரணவ்வின் அலுவலக அறை அமைதியாக இருந்தது.

 

அனுபல்லவி மற்றும் பிரணவ்வின் திருமணச் செய்தி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

 

வெகுநேரம் தலை குனிந்து நின்றிருந்த அனுபல்லவி, “மாமா… நாம கிளம்பலாம்… ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு…” எனக் கதவை நோக்கி நடக்க, “நான் இன்னும் பேசி முடிக்கல…” என்றான் பிரணவ் அழுத்தமாக.

 

ஒரு நொடி அவனின் குரலில் நின்ற அனுபல்லவி மீண்டும் கதவை நோக்கி நடக்க, “இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சாலும் அதுக்கு அப்புறம் நடக்குறதே வேற…” என்றான் பிரணவ் பல்லைக் கடித்துக்கொண்டு.

 

அனுபல்லவியோ அவனின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாது மேலும் முன்னேறவும் இரண்டே எட்டில் அவளை நெருங்கி, “சொல்லிட்டே இருக்கேன்… கொஞ்சம் கூட கண்டுக்காம போற…” என்று விட்டு அனுபல்லவியின் கரத்தைப் பிடித்து இழுத்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் பிரணவ்.

 

பிரணவ்வின் அடியில் அனுபல்லவி தள்ளிச் சென்று விழுக, உதட்டோரம் கிழிந்து இரத்தம் வடிந்தது.

 

“டேய்…” “பிரணவ்” “பாஸ்” என்ற அதிர்ச்சியான குரல்கள் ஒரே நேரத்தில் அறையில் ஒலித்தன.

 

கீழே விழுந்து கிடந்த மனைவியின் கரத்தை அழுத்தப் பற்றித் தூக்கிய பிரணவ், “எனக்கு தானே பழசு மறந்து போச்சு… உனக்கு என்ன டி வந்தது? சொல்லு… உனக்கு என் கிட்ட சொல்லி இருக்க முடியும்ல… என்ன தைரியத்துல நீ என் பையனையும் என் கிட்ட இருந்து பிரிச்சு அவன அப்பா பாசத்துக்காக ஏங்க விட்டிருப்ப?” எனக் கேட்டான் ஆவேசமாய்.

 

“பிரணவ்… அனு மேல எந்தத் தப்பும் இல்ல… என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்…” எனப் பிரதாப் குறுக்கிட, அவனைத் திரும்பி எரிப்பது போல் பார்த்த பிரணவ், “நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு இருக்கேன்…” என்றான் அழுத்தமாய்.

 

பின் மீண்டும் அனுபல்லவியிடம் திரும்பி, “சொல்லு டி… ஏன் இன்னும் அமைதியா இருக்க? என்ன மனசுல வெச்சிட்டு இதெல்லாம் பண்ண? உன் முழு சம்மதத்தோட தானே உன் கழுத்துல இந்தத் தாலிய கட்டினேன்…” என அவளைப் போட்டு உலுக்கினான்.

 

அனைவரும் பார்வையாளர்களாக வாய் மூடி அமைதியாக இருக்க, அனுபல்லவி குனிந்த தலை நிமிரவே இல்லை.

 

ஆனால் கண்ணீர் மட்டும் அவளின் அனுமதியே இன்றி வழிந்தது.

 

“ஓக்கே… நீ பதில் சொல்ல மாட்டேல்ல… நானே உனக்கு முக்கியம் இல்லாதப்போ நான் கட்டின தாலி மட்டும் எதுக்கு டி?” எனக் கோபமாக கேட்ட பிரணவ் அனுபல்லவியின் கழுத்தின் தொங்கிய தாலியில் கை வைத்து இழுக்க முயல, சட்டென பிரணவ்வின் கரத்தைப் பற்றித் தடுத்த அனுபல்லவி மறுப்பாகத் தலையசைத்து அவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள் கண்ணீருடன்.

 

தன்னவளின் கண்களில் இருந்த வலி பிரணவ்வை ஏதோ செய்ய, மறு நொடியே அனுபல்லவியை விட்டு விலகியவன் தலையை அழுத்தக் கோதி தன்னை சமன் செய்ய முயன்றான்‌.

 

பின் பெருமூச்சு விட்டவன் ஆகாஷிடம் திரும்பி, “ஆகாஷ்… நான் என் பையன கூட்டிட்டு என் வீட்டுக்கு கிளம்புறேன்… அவளுக்கு என் மேல தான் காதல் இல்ல… அட்லீஸ்ட் பையன் மேலயாச்சும் கொஞ்சமாவது பாசம் இருந்தா அங்க வர சொல்லு… ஆனா என் பையன இனி ஒரு நிமிஷம் கூட என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது…” என அழுத்தமாகக் கூறிய பிரணவ் அங்கிருந்து சென்று விட, அதிர்ச்சிக்கு மேல் ஏற்பட்ட அதிர்ச்சியில் அனுபல்லவியை ஒரு பார்வை பார்த்து விட்டு பிரணவ்வைப் பின் தொடர்ந்தனர் மூர்த்தி மற்றும் லக்ஷ்மி.

 

பிரணவ்விற்கு பழைய நினைவுகள் மீண்டதில் அவர்கள் இருவரின் மனதிலும் வேறு ஒரு பயம் எழுந்திருந்தது.

 

பிரணவ் நினைவுகளை இழக்கும் முன் தாம் அவனைப் பெற்றவர்கள் இல்லை என்ற உண்மை தெரிந்து அவன் கோபப்பட்டு அங்கிருந்து சென்று தான் அனைத்தும் நடந்திருந்தது‌.

 

இப்போது மீண்டும் பழைய நினைவுகள் திரும்பியதில் எங்கு தம்மை வெறுத்து விடுவானோ எனப் பயந்தனர் இருவரும்.

 

அவர்கள் சென்றதும் அனுபல்லவியை முறைத்த அர்ச்சனா, “அத்த… மாமா…” எனக் கத்திக்கொண்டு அவர்களைத் தொடர்ந்து ஓடினாள்.

 

அனைவரும் சென்ற பின்னும் அனுபல்லவி குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, “இதை எனக்கு சொல்ல உரிமை இருக்கா இல்லையான்னு தெரியல… நீங்க என்னை எப்படி பார்த்தீங்களோ எனக்கு தெரியாது… மதிக்கு நீங்க ஃப்ரெண்ட் அப்படிங்கிறத தாண்டி நான் உங்கள என் கூடப் பிறக்காத தங்கச்சியா தான் பார்த்தேன்… உங்க அளவுக்கு எனக்கு என் பாஸும் முக்கியம்… நீங்க ஒருவேளை இங்கயே இருந்திருந்தா நானே பாஸ் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி இருப்பேன்… ஆனா நீங்க சொல்லாம கொள்ளாம போனதுக்கு அப்புறம் அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்து என் பல்லவி எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்… அதனால தான் எதையும் சொல்லல… 

 

அவருக்கு உங்க நினைவுகள் வேணா மறந்து இருக்கலாம்… ஆனா இந்த அஞ்சி வருஷமா எதைத் தேடுறேன்னே தெரியாம தான் தொலைச்ச எதையோ ஒன்ன தேடி எங்க எங்கயோ அலைஞ்சிட்டு தான் இருந்தார்… வெளிய சொல்லவும் முடியாம யார் கிட்ட கேட்குறதுன்னும் தெரியாம என்னன்னே தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டார்… ஹைதரபாத்துக்கு போறோம்னு சொன்னதும் தான் நான் அவர் முகத்துல அந்த பழைய சிரிப்ப பார்த்தேன்… அது எதனாலன்னு எல்லாம் எனக்கு தெரியல… அவரோட மூளை தான் உங்கள பத்தின நினைவுகள மறந்ததே தவிர அவர் மனசுல எப்பவும் நீங்க மட்டும் தான் இருந்தீங்க…

 

அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் தான் காதலிக்கிறதா சாரையும் மேடமையும் நம்ப வெச்சி பாஸ் கிட்ட சொன்னப்போ கூட காதலின்னு சொல்லப்பட்டவள கூட அவர் தன்னை நெருங்க விடல… வெளிய சொல்லலன்னாலும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு அன்பா இருந்தீங்கன்னு நானே பல தடவ உணர்ந்து இருக்கேன்… உங்களோட இந்த அமைதிக்கு பின்னால நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும்… பட் அதைத் தெரிஞ்சிக்குற உரிமை பாஸுக்கு இருக்கு… 

 

நான் சொல்ல எதுவும் இல்ல… யோசிச்சு நடந்துக்கோங்க… இனியாவது பாஸை கஷ்டப்படுத்தாதீங்க… மனசுளவுல அவர் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கார்… அதனால தான் இவ்வளவு ஆத்திரம்… ஆனா ஒரு அண்ணனா என் தங்கச்சி வாழ்க்கை நல்லா அமையணும்னு ஆசைப்பட்டு கேட்குறேன்… எதுவா இருந்தாலும் பாஸ் கூட பேசி தீர்த்துக்கோங்க… ரெண்டு பேரும் இனிமேலாவது ஒன்னா சந்தோஷமா வாழுங்க…” என்று விட்டு அங்கிருந்து சென்றான் ஆகாஷ்.

 

ஆகாஷ் சென்றதும் அனுபல்லவி தலையில் அடித்துக்கொண்டு கதற, “அனு… ப்ளீஸ்… அழாதே… வா நாம பிரணவ் வீட்டுக்கு போகலாம்… நீ இந்த நிலமைல இருக்க நானும் ஒரு விதத்துல காரணம்… நானே பிரணவ் கிட்ட எல்லா உண்மையையும் சொல்றேன்… நான் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் தேட ஒரு வழி கிடைச்சிருக்கு… தயவு செஞ்சி எனக்கு ஒரு வாய்ப்பு கொடு…” எனக் கேட்டான் பிரதாப்.

 

சில நிமிடங்கள் கண்ணீர் விட்ட அனுபல்லவி ஏதோ ஒரு முடிவுடன் நிமிர்ந்து தன் கண்களை அழுத்தத் துடைத்துக்கொண்டு, “வாங்க மாமா கிளம்பலாம்…” என வெளியேறினாள்.

 

அனுபல்லவி எங்கு செல்லப் போகிறாள் எனப் புரியாமலே அவளைப் பின் தொடர்ந்தான் பிரதாப்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்