Loading

காவ(த)லன் 29

கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு அரை மயக்க நிலையில் தரையில் விழுந்து கிடந்த அமரி மெல்ல கண் விழித்தாள்.

பகல் பொழுது தான் இருப்பினும், செங்கதிரோன் உள் நுழைந்திடாது அவ்விடம் கருமை பூசியிருந்தது.

இருட்டிற்கு மெல்ல பார்வையை பழக்கியவள் சுற்றி பார்க்க, மரத் தூண்களை தவிர புழுதி படிந்து நான்கு பக்க சுவர்களோடு வெறுமையாகக் காட்சியளித்தது அவ்விருட்டறை.

வாயில் திணித்திருந்த துணியை வெளியே உமிழ்ந்தவளுக்கு, தொண்டை வறட்சியின் காரணமாக இருமல் வர… அவ்வொலியில் வெளியிலிருந்து ஒருவன் உள் நுழையும் காலடி சத்தம் கேட்க, அத்திசையில் பார்த்த அமரியின் கண்களுக்கு… உள்ளே வந்தவன் மீண்டும் வெளியேறும் நிழலுருவக் காட்சி தான் புலப்பட்டது.

அவன் வெளியேறிய இரண்டு வினாடிகளில் அறையின் நான்கு மூலையிலும் சன்னல்கள் திறக்கப்பட,  சுள்ளென்று உட்புகுந்தான் கதிரோன். மை இருட்டு வெளுத்துப்போக, நீண்ட எட்டு வைத்து உள் நுழைந்தான் ரத்தினம்.

ரத்தினம் அமரியின் முன் வந்து நிற்க, அவனை அலட்சியமாக ஏறிட்டவள்… முயன்று, கட்டப்பட்ட நிலையிலேயே எழுந்து அமர்ந்தாள்.

அவளின் கண்கள் ரத்தினத்தை ஆராய்ச்சியாக அளவிட்டது.

பின் ஐம்பதுகளில் இருக்கும் உருவத் தோற்றம். படிய வாரியிருக்கும் கேசமும், முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடியும் நிச்சயம் பார்ப்போரின் கண்களுக்கு அப்பாவி போல் தோற்றுவிக்கும்.

அமைதியான பார்வை தானாக மரியாதை செலுத்திடத் தூண்டும்.

‘பெரிய மனுஷங்களுக்கெல்லாம் மக்களை ஏமாத்துறதுக்கு இந்த மாதிரி லுக்கு தானா வந்திடும் போல’ என்று மனதில் நினைத்தவள் உதடு சுழித்தாள்.

“பார்க்க ஆளு நல்லா அம்சமாவே இருக்க, அதான் அந்தப்பய வருசக்கணக்கா உன் பின்னாடி சுத்தியிருக்கா(ன்) போல” என்று தன் வயதை மறந்து மகள் போன்ற பெண்ணிடம் அருவருப்பாக பேசினான்.

அமரியிடம் ரத்தினத்தின் பேச்சிற்கு எவ்வித எதிர்வினையும் இல்லை. அவள் நேரடியாக விடயத்திற்கு வந்திருந்தாள்.

“என்னை எதுக்கு கடத்துன?”

“நீ யாருங்கிறது தானே இந்த மாதிரி நேரத்துல மொத கேள்வியா இருக்கும். அப்போ நான் யாருன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு, உன் கண்ணுல பயமில்லை… அதனால உன்னை கடத்தப் போறது உனக்கு முன்னுக்கவே தெரிஞ்சிருக்கணும். அப்படியில்லைன்னா, உன் புருசன் வந்து காப்பாத்திடுவான்னு அவன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கணும்… ஆனால் இது நடக்காது” என்ற ரத்தினம்,

“எவ்ளோ நேரமா நின்னுட்டே பேசுறது, கால் வலிக்குது” என திரும்பி குரல் கொடுக்க, ஒருவன் ஓடி வந்து நாற்காலி போட்டான்.

“வயசாயி போச்சு இல்லையா, அதான் ரெம்ப நேரம் நிக்க முடியறதில்லை.” அமரியை பார்த்துக் கூறியவாறே நாற்காலியில் அமர்ந்த ரத்தினம்,

“அந்த வெற்றிப்பய கண்ணுல இருக்க அதே திமிரு உன் கண்ணுலையும் தெரியுது” என்றார்.

“கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”
நீ பேசியதெல்லாம் நான் காதில் வாங்கவில்லை என்கிற ரீதியில் அமரி நடந்து கொண்டாள்.

“என்ன கிடைக்காதா?”

“எந்த துணியை வாயில திணிச்சானோ நா’லாம் கசக்குற மாதிரி இருக்கு” என்று தன் போக்கில் பேசினாள்.

“என்னடி உன் திமிரை எங்கிட்டவே காட்டுறியா?.” அமரியின் கண்டுகொள்ளாத தன்மையில் கோபம் வரப்பெற்ற ரத்தினம் சினந்தார்.

‘உன் கோபமெல்லாம் என்னை ஒன்னும் செய்திட முடியாது போடா’ எனக் கூறிக்கொண்ட அமரி “நீ என்ன அம்புட்டு பெரிய அப்பாடக்காரா” என்று சாதாரணமாக வினவினாள்.

“நான் எவ்ளோ பெரிய அப்பாடக்கருன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு தெரிஞ்சிடும்” என்ற ரத்தினம் தனது அடியாள் ஒருவனை நோக்கி பார்வையை செலுத்த அவன் ஏதோ ஒன்றை ரத்தினத்தின் கையில் கொடுத்தான்.

“இதென்னான்னு பாக்குறியா?” என்று அமரியிடம் கேட்டவாறு, தன் கையிலிருந்த ஊசியை பரவசாமாக பார்த்தான்.

“என்னதான் சிலை கடத்தல், விலங்குகள் கடத்தலுன்னு தொழில் செஞ்சு பணம் சம்பாதித்தாலும்… பொண்ணுங்களை வச்சு சம்பாதிச்ச மாதிரி வரல” என முகத்தில் சிறு வருத்தம் படரக் கூறினான்.

“ச்சீய்…”

ரத்தினம் எதை கூறுகிறானென்று அறிந்த அமரி முகம் திருப்பினாள்.

“என்னடி ரொம்பதான் வேசம் போடுற, எல்லோரும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரைதான் நல்லவனுவ” என்ற ரத்தினம் தனது கையிலிருக்கும் ஊசியில் மெல்ல போதை மருந்தினை ஏற்றினான்.
அது என்னயென்று அமரி பார்த்திருக்க,

“உன் புருஷனால நான் விட்ட என்னோட தொழிலை உன்னை வச்சு திரும்பத் தொடங்கப் போறேன்” என்று வெடி சிரிப்பு சிரித்த ரத்தினம்,

“ஒரு பெரும் புள்ளி உனக்காக ரொம்ப ஆவலா காத்திட்டு இருக்கான்” என விகாரமாகக் கூறி அமரியை நெருங்கினான்.

மருந்தினை அமரியின் உடலுக்குள் செலுத்த அவளின் கை கட்டினை அவிழ்த்து புஜத்தை ரத்தினம் பிடிக்கை முயல்கையில்,
ரத்தினத்தின் தொடுகையிலும் அவனின் எண்ணத்திலும் அருவருப்பை உணர்ந்த அமரி அவனின் முகத்தில் துப்ப, அதில் ஆத்திரம் வர பெற்றவன் அமரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்.

ரத்தினம் அறைந்த வேகத்தில் அமரி கீழே விழ, அவள் அணிந்திருந்த சங்கிலி புடவைக்கு வெளியே குதித்து விழுந்தது. கன்னம் தீயாய் காய்ந்த போதும் தன்னை சுதாரித்தவள் ரத்தினத்தை நோக்கி அனல் கக்கும் பார்வையை வீசினாள்.

“என்னடி முறைக்கிற, இன்னும் கொஞ்ச நேரத்துல பல கண்ணு உன் மேல மேய்ஞ்சிருக்கும்” என்ற ரத்தினம் அமரியின் கூந்தலை கொத்தாகப் பற்றி அவளை தூக்க கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியை கண்டு உறை நிலைக்கு சென்றான்.

அமரியின் மீதான அவனின் பிடி தானாக தளர்ந்தது.

ரத்தினத்தின் அசைவற்ற நிலையை வினோதமாக நோக்கிய அமரி, அந்நொடியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது கால் கட்டினை அவிழ்த்துக் கொண்டாள்.

ரத்தினத்திற்கு முன் அமரி சொடக்கிட, தன்னிலை மீண்ட ரத்தினம்…

“யார் நீ?” என்று அமரியிடம் வினவிய போதும் அவரின் பார்வை முழுக்க அவளணிந்திருந்த சங்கிலியின் மீதே நிலைத்திருந்தது.

“இந்த சங்கிலி உனக்கெப்படி… உன் கழுத்தில்…” அவரின் பேச்சு திணறியது.

“நீ… நீ… என் பையன் உயிரோடு இருக்கானா?”

ரத்தினம் என்ன சொல்கின்றார் என்று அமரிக்கு சுத்தமாக புரியவில்லை. குனிந்து தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியை பார்த்தவள்,

‘இது சசி அவங்க அம்மா அவனுக்கு போட்டதுன்னு எனக்கு கொடுத்தான்… அப்போ இந்த ஆளு…’ என சிந்தித்தாள்.

_________________________

“சார் மேடமுக்கு ஒன்னும் ஆகியிருக்காதே.”

அமரியின் கடத்தலில் வெற்றியை விட ராம் தான் அதிக பயம் கொண்டிருந்தான். தன்னுடைய மனைவியை கடத்த சதி நடக்கிறது என்று தெரிந்தும் நீ கடத்திக்கோ என அமைதியாக இருந்ததோடு சாவகாசமாக இனிப்புக் கட்டியை வேறு  சுவைத்துக் கொண்டிருந்தால் ராமும் என்ன தான் செய்வான்.

கதிர் அழைத்து “அமரியோடு சேர்ந்து சசியும் காணவில்லை” என்று சொல்லிய பிறகும் வெற்றியின் நிலையில் எந்தவொரு பதட்டமோ பயமோ வருத்தமோ கொஞ்சமும் இல்லையே. அப்போதும் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவன் சற்றும் அசையவில்லை.

வெற்றியின் அழுத்தமான அமைதியே அவன் எதையோ எதிர்பார்த்து காத்திருக்கிறான் என்பதை ராமிற்கு உணர்த்தியது.

“என்ன சார் ரொம்ப அழுத்தமா இருக்க மாதிரி தெரியுது சில்லுன்னு எதனா வாங்கி வரட்டுமா?”
மூர்த்தியின் குரலில் கேலி இருந்ததோ!

“ஏண்ணே, நீங்க வேற நேரங்காலம் தெரியாம… கடத்தியிருக்கிறது அவரோட மனைவி, அது தெரிஞ்சும் மனுசன் அசராம உட்கார்ந்திருக்காரு… எனக்கே என்ன நடக்குமோன்னு பயமா இருக்குண்ணே, அந்த பயம் அவருக்கு இருக்கிறது தானே நியாயம்.”

“அதுதான் சார்… வெற்றி சார்” என்ற மூர்த்தி வெற்றியின் கண்ணசைவிற்காகக் காத்திருந்தார்.

அந்நேரம் வெற்றியின் அலைபேசி அதிர்வை ஏற்படுத்தியது.

வெற்றி மற்றும் கதிரின் மொத்த குடும்பமும் கோவில் மண்டபத்தில் கூடியிருந்தது. தங்களால் கூடியிருக்கும் பக்தர்களின் கொண்டாட்டத்திற்கோ, நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவிழாவிற்கோ எவ்வகையிலும் தடங்கல் ஏற்பட்டு விடக் கூடாதென்பதற்காக அமரி மற்றும் சசி காணாமல் போனதை யாருக்கும் சந்தேகம் எழும்பிடா வகையில் தங்களுக்குள்ளே வைத்து கொண்டனர். முடிந்த வரை திருவிழா கூட்டத்தை அலசி இருவரைப் பற்றியும் எவ்வித தடயமும் இல்லாமல் போகவே வெற்றிக்கு தகவல் அளித்தனர்.

“ஏய்யா… வெற்றி போன் போட்டனாய்யா?”

செண்பகம் கதிரிடம் விசாரித்தார்.

“ஜோசியம் அது இதுன்னு என் புள்ளைய கூடவே வச்சு பாக்கலியே, கல்யாணத்துக்கு பொறவுதான் அவ(ள்) மொகம் கொஞ்சம் கலையா இருந்துச்சு… அது பொருக்குளையாடி ஆத்தா உனக்கு. இப்போ எங்க போனா(ள்)ன்னு தெரியலையே.” பஞ்சு பாட்டி அம்மனிடம் புலம்பியவாறு கண்ணீர் வடித்தார்.

வெற்றி பார்த்துக் கொள்ளுவான் என்கிற நம்பிக்கை இருந்த போதும் வீட்டின் ஆண்களின் மனமும் கலங்கித் தானிருந்தது.

ஜானகியும் அன்னமும் வெளியே சொல்ல முடியாது மௌனமாக அழுகையில் கரைந்தனர்.

“ஆத்தா என் பேரனையும் பேத்தியையும் உன் தேர் நகரதுக்குள்ள இங்க கூட்டியாந்துரு… உனக்கு முப்பூசை செய்யுறேன்” என்று செண்பகம் வேண்டுதல் விடுத்தார்.

அருவிக்கு அருகிலிருக்கும் சிறு காட்டுப்பகுதியில் இருவரையும் தேடிச்சென்ற கதிரும் சக்தியும் சோர்ந்து வருத்தத்தோடு வர அடுத்து என்ன செய்வதென்று புரியாது மொத்த குடும்பமும் நிலை குலைந்து நின்றது.

_______________________________

“சொல்லு இந்த சங்கிலி உனக்கெப்படி கிடைச்சது?”
ரத்தினம் அமரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.” அமரியின் பதில் திமிராக வெளிவந்தது.

“ஏய்” என்று அமரியை அடிக்க கை ஓங்கியவர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, “என் பையன உனக்குத் தெரியுமா?” என கண்ணீரோடுக் கேட்டார்.

‘என்னடா இது, என்னை அழ வைக்குறேன்னு இந்தாளு அழுவுறான்’ என்று மனதில் நினைத்த அமரி ‘உண்மை எதுவும் தெரியாது சசியைப் பற்றி எதுவும் சொல்லிட்க் கூடாது’ என்று உறுதியெடுத்தாள்.

தன்னால் முயன்ற வரை தன்னிலை இறங்கிக் கெஞ்சிய ரத்தினம் அமரி சொல்லப்போவதில்லை என்றதும் அவளை மிரட்டத் தொடங்கினார்.

“இப்போ சொல்லப் போறீயா இல்லையா?

“நீ சொல்லல, இங்கவே உன்னை கொன்னுடுவேன்.”

அமரியை பின்னால் வளைத்து பிடித்து அவளின் கழுத்தில் கத்தியை வைத்தார்.

“ஏய் சொல்லு” என்று உரும்பியவர் கழுத்தில் வைத்திருந்த கத்தியில் அழுதத்தைக் கூட்ட,

“அதை நான் சொல்லுறேன்” என்ற குரல் அவ்வறையை நிறைத்தது.

“நீ எப்படி இங்க, என் ஆளுங்க…”
திடீரென அங்கு சசியை கண்டதும் ரத்தினம் தடுமாறினார்.

“உன் ஆளுங்க என் அண்ணன்கிட்ட அடி வாங்கிட்டு இருக்கானுங்க” என்ற சசி காதில் கை வைத்து ஒலியை உள்வாங்குவதைப் போல் சைகை செய்து, “அடி வெளுக்குற சத்தம் கேட்குதா” என நக்கலாக வினவினான்.

“வெற்றியா? அவன் எப்படி இங்க?” ரத்தினம் வெற்றியை நினைத்து பயத்தில் பதட்டம் கொள்ள அமரியின் மீதான அவரின் பிடி தளர அமரி வேகமாக சசிக்கு அருகில் வந்து நின்றுகொண்டாள்.

பல ஏக்கரை விழுங்கிய தென்னந்தோப்பின் நடுவில் வீற்றிருந்த அச்சிறிய ஓட்டு வீட்டைச் சுற்றி காவலுக்கு நின்றிருந்த ஆயுதம் ஏந்திய தடியர்கள் பலரை ஒவ்வொருவராக வெற்றி வீழ்த்திக் கொண்டிருந்தான்.

அடி வாங்கும் தடியர்களின் கதறல் ஒலியை கேட்ட ரத்தினம் ‘தான் தப்பிக்க முடியாது’ என்பதை உணர்ந்தே இருந்தார். இருப்பினும் தனது கேள்விக்கு விடையறிந்திட முற்பட்டார்.

அமரியின் அருகில் வந்தவர், “என் மகனை நான் பார்க்கணுமே, அவனை நான் தேடாத இடமில்லை… நான் செய்யுற தொழிலு தெரிஞ்சு என்னை வெறுத்து, என்னை விட்டு என் பொஞ்சாதி போகும் போதும் என் மவனுக்கு ஏழு வயசு, நீ போட்டிருக்கியே இந்த சங்கிலி என் மவனுக்கு நானும் என் பொஞ்சாதியும் ஆசை ஆசையாய் வாங்கினது” என்று அமைதியாக கதை சொல்லியவர்,

“இப்போ நீ சொல்லல நான் உன்னை உயிரோடு விட மாட்டேன்” என்று வெறி பிடித்தவர் போல் கத்தினார்.

ரத்தினம் சொல்லியதைக் கேட்ட அமரி சசியை அர்த்தமாக பார்க்க, அவனோ உணர்ச்சிகள் துடைத்து வெறுமையாக நின்றிருந்தான்.

தன் மகனை ஒரு நொடி கண்டுவிட மாட்டாமோ என்று ரத்தினத்தின் முகத்தில் ஏக்கம் அப்பட்டமாக வழிய, அமரியிடம் கத்தலோடு மன்றாடினார்.

மகனை பிரிந்த இத்தனை வருட ஏக்கம் அழுத்தமாக உருமாற்றம் பெற, பித்து பிடித்தவரை போல்… “சொல்லு, என் மகன் எங்கே” எனக் கேட்டுக்கொண்டே இருந்தவர் ஒரு கட்டத்தில் பிதற்றலோடு மயங்கி சரிந்தார். வயதானவர், உடல் நிலையில் சட்டென்று அதிகரித்த இரத்த அழுத்த மாற்றம், அவரை மயங்கச் செய்தது.

ரத்தினம் மயங்கியதும் அவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்க முயன்ற அமரியை தடுத்த சசி,

“இப்போ அவன் எழுந்து என்ன பண்ணப்போறான்… விடு அப்படியே மயக்கத்திலேயே செத்துப்போவட்டும்” என்று கோபமாக வெடித்தான்.

“அவரு உன் அப்பா சசி.”

“கொலைகார அப்பன்…” என்று விரக்தியாக மொழிந்த சசி தனது கடந்த காலத்தைக் கூறினான்.

அப்போது சசிக்கு ஏழு வயது இருக்கும். பணத்தின் மீது ஆசை கொண்ட ரத்தினம் தனது சகோதரன் சிதம்பரத்தோடு சேர்ந்து அனைத்து விதமான தவறான செயல்களையும் செய்திருக்கிறான். பணத்திற்காக ஆட்களை மிரட்டுவது, கொள்ளையடிப்பது என்று செய்து கொண்டிருந்தவன் முதல்முறையாக கொலையும் செய்ய அதனையறிந்த அவரின் மனைவி எவ்வளவோ தடுத்தும் அதனை ரத்தினம் கேட்கவில்லை. அப்படி ஒருமுறை இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற, ஆத்திரத்தில் அவரின் மனைவியை சுவற்றில் முட்டியே சாகடித்திருந்தார். இதனை நேரடியாக பார்த்த சசி பயத்தில் ஓர் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். அன்று முதல் தந்தையென்றால் சசிக்கு பயம், வெறுப்பு, கோபம். நாளுக்கு நாள் ரத்தினத்தின் பண மோகம் அதிகமாக பெண்களை கடத்தி வெளி மாநிலங்களுக்கு விற்கும் வேலையை செய்யத் தொடங்கினான். இதனை அறிந்த சசிக்கு, அவ்வயதில் என்னவென்று புரியாவிட்டாலும் தனது தாயை கொன்றவனோடு தானிருக்கக் கூடாதென்று தீர்மானித்து, இரவோடு இரவாக ரத்தினத்திற்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு வருடத்திற்கு மேல் எங்கெங்கோ அலைந்து திரிந்து… இறுதியில் பசியினால் ஏற்பட்ட மயக்கத்தால் நல்லு மற்றும் சேதுவின் கைகளில் கிடைத்தான்.

அதன் பிறகு ஒரு வருடத்திற்கு முன்பு வெற்றி ரத்தினத்தின் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது… அவ்வழக்கு அடங்கிய கோப்பினை தற்செயலாக பார்த்த சசி… அதிலிருக்கும் புகைப்படம் தனது தந்தையென நினைவு வர பெற்று வெற்றியிடம் வழக்கைப்பற்றி மேலோட்டமாக அறிந்துகொண்டான்.

“இன்னும் நீயெல்லாம் திருந்தலயில்லை” என்று ரத்தினத்திடம் மானசீகமாக கேள்வி கேட்ட சசி தனக்கொரு தந்தை உயிரோடு இருக்கிறார் என்பதையே ஆழ் மனதில் புதைத்தான்.

இதனை முற்றிலும் அறிந்தது வெற்றி ஒருவனே. அப்போது காயப்பட்ட சசிக்கு இன்று வரை மனதளவில் வெற்றி ஆறுதலாக இருப்பினும் ஒருபோதும் சசியை ரத்தினத்தின் மகனென்று எந்த இடத்திலும் பிரித்து வைத்ததில்லை.

வெற்றியை பொறுத்தவரை சசி அவர்களின் இளைய வாரிசு. அதனால் சசியை பற்றி அறிந்தும் அதனை நல்லுவிடம் கூட இதுநாள் வரை வெற்றி சொல்லியதில்லை. சசியையும் சொல்ல அனுமதிக்கவில்லை.

“இப்போ சொல்லு இவன் உயிரோடு இருக்கணுமா?” அனைத்தையும் கூறி முடித்த சசி கோபமாகக் கத்தினான்.

“உனக்கு வேணுன்னா இவரு உயிரோடு இருக்க வேணாம், ஆனால் போலீசுக்கு இவன் உயிரோடு வேணும்” என்ற அமரி ரத்தினத்தின் முகத்தில் தண்ணீர் தெளிக்க… பட்டென்று எழுந்து அமர்ந்தவர் அமரியின் கழுத்தை பிடித்துக்கொண்டு நெறித்தவாறு,

“சொல்லு… என் மகன் எங்கே” எனக்கேட்டு வெறி பிடித்து கத்தினார்.

அமரி ரத்தினத்தின் பிடியில் உயிருக்கு போராட, அவளை விடுவிக்க சசி முயற்சித்துக் கொண்டிருந்தான். வேகமாக தன் பலம் கொண்டு ரத்தினத்தை பிடித்து இழுத்துத் தள்ளினான்.

சசி இழுத்து வீசியதில் சுவற்றில் மோதி தடுமாறிய ரத்தினம் கத்தியை எடுத்துக்கொண்டு அமரியை நோக்கி ஓடிவந்தார். நடப்பதை சசி உணர்வதற்குள் ரத்தினம் அமரியை நெருங்கியிருந்தார்.

பயத்தில் அமரி அசைவற்று நிற்க,

“என் பையன் எங்கிருக்கான்னு நீ சொல்ல மாட்டல” என்று கேட்டவர் ஆவேசமாக அமரியின் வயிற்றை நோக்கி கத்தியை ஓங்க, துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு அவரின் கையை பதம் பார்த்தது.

கையில் ரத்தம் ஒழுக ரத்தினம் திரும்பி பார்க்க துப்பாக்கி ஏந்திய அய்யனாராக வெற்றி நின்று கொண்டிருந்தான். வலியில் துடித்தவர் கையை உதரியவாறு தரையில் சரிந்தார்.

 

வெற்றியை கண்டதும் ஓடி வந்த அமரி ஆதரவாக அவனின் நெஞ்சில் சாய்ந்துக்கொள்ள வெற்றியும் தனது சிறு அணைப்பால் தன்னுடைய எழிலுக்கு ஆறுதல் அளித்தான்.

“கையில சுட்டதுக்கு பதிலா, அவன் நெத்தியிலேயே சுட்டிருக்க வேண்டியதுதானே” என்று வெற்றியிடம் சசி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ராம் உள் வந்தான்.

“என்ன ராம் எல்லா அடியாட்களையும் காவல் நிலையம் அனுப்பிட்டீங்களா?” அமரியை தனது கை வளைவில் வைத்துக்கொண்டே ராமிடம் வெற்றி வினவினான்.

“ம்ம்… மூர்த்தி அண்ணா வண்டியில கூட்டிட்டு போறாரு, கூட ரெண்டு கான்ஸ்டபிள் இருக்காங்க” என பதிலளித்த ராம் ரத்தினத்தை பார்க்க,

“இவரை மருத்துவமனை அழைச்சிட்டுப்போங்க… நான் திருவிழா முடிச்சிட்டு இரவு வந்து பார்க்கிறேன்” என்ற வெற்றியிடம், வழக்கம்போல் ராம் எதையோ கேட்கத் தயங்கினான்.
அதனை சரியாக புரிந்த வெற்றி,

“என்ன கேட்கணுமோ கேளுங்க ராம்” என்றான்.

“உங்க மனைவியை கடத்தப் போறங்கன்னு தெரிஞ்சும் எப்படி சார் அமைதியாக இருந்தீங்க?” எனக் கேட்ட ராம்,

“அமரியை கடத்த திட்டம் போட்டது ரத்தினமில்லை நான்” என்ற வெற்றியின் பதிலில் அதிர்ந்தான்.

சரியாக மூன்று மணி நேரத்திற்கு முன்பு,

ஜெயிலரின் அலைபேசி பதிவினை வைத்து ரத்தினம் மற்றும் சிதம்பரத்தின் உரையாடல் வழியாக, அவர்களின் அடுத்த குறி தான்தான் என்பதை வெற்றி தெரிந்து கொண்டான்.

அந்நேரம், “மீண்டும் ஒரு தவறு செய்தால் அந்த ரத்தினத்தை பிடித்து விடலாம்” என்று ராம் சொல்ல வெற்றி மனதளவில் திட்டம் வகுத்தான்.

‘தன்னை கலங்கச் செய்ய தனது குடும்பத்தை சேர்ந்தவர்களைத்தான் ஏதேனும் செய்வான்’ என யூகித்த வெற்றி காத்தவராயனை அழைத்து “திருவிழா கூட்டத்தில் சந்தேகப்படும்படி யாராவது ஆட்கள் தென்படுகின்றனரா” என கண்காணிக்கக் கூறினான்.

சிதம்பரத்தின் வழக்கில் காத்தவராயன் உயிர் பயத்தை பக்கத்தில் உணர்ந்ததால் மனதளவில் மாற்றம் பெற்று முடிந்தளவு கெட்டது செய்யக்கூடாதென்கிற நோக்கில் வாழ்க்கையை புதிதாக துவங்கியுள்ளான்.

நீதிமன்ற தண்டனையிலிருந்து வெற்றி காப்பாற்றியதால் இப்போது அவனுக்கு கடவுள் வெற்றி தான். வெற்றிக்கு நன்றி செலுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்று காத்துக்கொண்டிருந்த காத்தவராயன் வெற்றியிட்ட  பணியை எவ்வித பகையும் பாராட்டது செய்தான்.

அதன்படி யாரென்று தெரியாத சிலர் திருவிழா கூட்டத்தில் கலந்திருப்பதும் அவர்கள் வெற்றியின் குடும்பத்தில் தனியாக சிக்கும் ஒருவரை கடத்த திட்டம் போட்டிருப்பதையும் வெற்றி அறிந்தான்.

உடனடியாக அமரியை அழைத்த வெற்றி,

“நீ கோவிலின் பின்புறம் தனியாக செல், அங்கேயே கொஞ்ச நேரம் நில்லு. யாராவது உன்னிடம் எதையாவது தற்செயலா சொல்லுவதைப்போல் சொன்னால் அதை செய்” என்று கூற,

“என்னை கடத்தப்போறங்களா காவலரே?” என்று அசராது வினவினாள் அமரி.

“ஆமா” என்று சொல்லிய வெற்றியின் குரலில் நடுக்கம் உணர்ந்த அமரி,

“என்ன காவலரே பொண்டாட்டி மேல அவ்ளோ காதலா?” எனக் கேட்டு கேலி செய்தாலும், “நீங்க இருக்கும்போது எனக்கு ஒன்னும் ஆகாது, தெரிஞ்சே என்னை எதிரியிடம் அனுப்புறிங்கன்னா அவன் உங்களுக்கு எவ்வளவு முக்கியமுன்னு தெரியுது… நீங்க என்னை நினைச்சு பயப்படமா உங்க வேலையை செய்யுங்க” என்று வெற்றிக்கு ஆறுதல் அளிக்கவும் தவறவில்லை.

“எழிலு.” வெற்றியின் குரல் கரகரப்பாக ஒலித்தது.

“உனக்கு பயமில்லையே?”

“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு காவலரே” என்ற அமரி மேற்கொண்டு வெற்றியின் நடுக்கம் நிறைந்த குரலை கேட்கும் துணிவற்று அலைபேசியை அணைத்தாள்.

மனைவியின் வார்த்தையில் தைரியம் பெற்று தன்னை திடப்படுத்திய வெற்றி முழுதாய் காவலனாக நிமிர்ந்து நின்றான்.

அடுத்து சசிக்கு அழைத்தவன்,

“இன்னும் கொஞ்ச நேரத்துல எழிலை ஒருத்தன் கடத்தப் போறான்” என்க,

“என்னது?” சசி அதிர்ந்தான்.

“ஆமா” என்று சாதாரணமாக மொழிந்த வெற்றி, “நீ யாருக்கும் தெரியாம எழில் பின்னுக்கவே இரு, அவளை கடத்தியதும் அவர்களை பின் தொடர்ந்து… அவர்களின் இருப்பிடம் தெரிந்ததும் எனக்கு தகவல் கொடு” என்றான்.

“அமரியை வைத்து இந்த ரிஸ்க் வேணுமா?” என்று சசி கேட்க,

“பெண்களை கடத்துறதுலதான் அவனுக்கு ஆர்வம்” என்ற வெற்றி, அது ரத்தினம் என்க… அடுத்து ஒரு வார்த்தை மறுத்து பேசாது வெற்றியின் திட்டத்திற்கு சசி கட்டுப்பட்டான்.

வெற்றியின் திட்டப்படியே அமரி தனித்து செல்ல அவள் இருவரால் யாருக்கும் தெரியாது கடத்தப்பட, அவர்களுக்கேத் தெரியாது பின்தொடர்ந்து வந்த சசி அவர்களின் இருப்பிடம் தெரிந்ததும் வெற்றிக்கு அழைத்து தகவல் அளித்தான்.

வெற்றி சொல்லி முடித்ததும்,

“பலே திட்டம் சார்… நான் இன்னும் உங்ககிட்டயிருந்து நிறைய கத்துக்கணும் சார்” என்ற ராம் கீழே கிடந்த ரத்தினத்தை தூக்கி நிற்க வைத்து

“சார் இந்நேரத்தில் நீங்க ஏதாவது பன்ச் பேசுனா நல்லாயிருக்குமே” என்று சொல்ல

“பன்ச் பேசுறதுலாம் சீனுல இல்லை ராம், அதோடு எனக்கு அதெல்லாம் செட்டாகாது” எனக்கூறி கம்பீரமாக புன்னகைத்த வெற்றியை நோக்கி விறைப்பாக சல்யூட் ஒன்றை வைத்தவன் ரத்தினத்தை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

“எல்லாம் முடிஞ்சுது” என்ற வெற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பி அவனது எழிலை பார்க்க அவளோ காளியாய் அவனை உருத்து விழித்தாள்.

அதனை கண்ட சசி, ‘இருக்கு இங்கு சம்பவம் ஒன்னு இருக்கு’ எனக் கூறிக்கொண்டு, “நான் வண்டியை ஸ்டார்ட் பன்றேன் சீக்கிரம் வந்து சேருங்க” என்று சொல்லி வெளியேறினான்.

“என்னாச்சு எழில்?”

“அவனை கடத்த வைக்கணும் திட்டம் போட்டிங்க சரி, அது ஏன் என்னை கடத்தனுமுன்னு அனுப்பி வச்சீங்க?” என்று அமரி கோபமாகக் கேட்டாள்.

மனைவியின் தோளில் கை போட்ட வெற்றி அவளின் தாடையை பற்றி கொஞ்சியவாறு, “அதில்லடாம்மா… அம்மா, அத்தை, பாட்டியெல்லாம் வயசானுவங்க… வாணியும் இந்த மாதிரி நேரத்துல அனுப்புறது பாதுகாப்பில்லை, அத்தோடு நீ ரொம்ப தைரியமான பொண்ணு… வெற்றியோட பொண்டாட்டி வேற, அதான் உன்னை வச்சு திட்டம் போட்டேன்” என்றுக் கூறிய வெற்றி,

“உன்னை அனுப்பிட்டு பயத்தை உள்ளுக்குள்ளே வச்சிக்கிட்டு வெளியே சாதாரணமா இருந்த வலி என்னக்குதான் தெரியும் எழில்” என லேசாக கண் கலங்க, கணவனின் கலங்கியத் தோற்றத்தில் தனது பொய் கோபம் நீங்கிய அமரி வெற்றியை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அமரியின் முகம் நிமிர்த்திய வெற்றி,

“ஐ லவ் யூ எழில்” எனக்கூறி ரத்தினம் அடித்ததால் சிவந்திருந்த அமரியின் கன்னத்தில் தனது இதழால் மருந்திட்டான்.

இருவரின் மோன நிலை நீடிக்க, அவர்களை கலைத்தது சசி அழுத்திய வண்டியின் ஹாரன் ஒலி.
வெட்கப் புன்னகையோடு இருவரும் வந்து வண்டியிலேறுவதைக் கண்ட சசி,

“செம ரொமான்சா?” எனக் கேட்க,

“கரடி” என்று அமரி சொல்ல அங்கே சிரிப்பொலி எழுந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
54
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்