காவ(த)லன் 14
“வணக்கம் சார்.”
வெற்றியின் அறைக்குள் நுழைந்த வாணி மரியாதை அளிக்கும் விதமாக வணக்கம் வைத்தாள்.
‘அலைபேசியில் தானொரு காவல் அதிகாரியாக பேசியதால், அவளும் பத்திரிகையாளராக வந்திருக்கிறாள்’ என்பதை வாணி தெரிவித்த வணக்கத்திலேயே வெற்றி புரிந்து கொண்டான்.
வாணியை போல் அவளுடன் வந்திருந்த கதிரால் நொடியில் யாரோ போன்று தனது நண்பனிடம் பாரா முகம் காட்ட முடியாது தயங்கி நின்றான்.
வந்து இரண்டு நிமிடங்கள் ஆகியும் தன்னை ஏறிட்டு பார்க்காத கதிரின் வருத்தம் வெற்றிக்கு புரியத்தான் செய்தது. ஆனால் அவன் இப்போது வந்திருப்பது வாணியின் கணவனாக, ஆதலால் அவனும் கதிரிடம் பேச முயற்சிக்கவில்லை.
அவனுக்குமே தனக்கு முன்னிருக்கும் தன்னுடைய நண்பனிடம் அந்நிய பார்வையை செலுத்துவது கடினமாகத்தான் இருந்தது.
“என்ன விடயமா வர சொன்னீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” வாணி வினவ அவளை உறுத்து விழித்தான்.
அவள் செய்த தவறின் அளவை வெற்றியின் பார்வையே கதிருக்கு உணர்த்தியது.
“அதற்குள் என்ன அவசரம் திருமதி.கதிர், முக்கியமான ஒருத்தர் வர வேண்டி இருக்கு அவரும் வந்து விடட்டுமே” என வெற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆசிரியர் பேரறிவாளன் அங்கு வருகை தந்தார்.
வெற்றியும் பேரறிவாளனும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொள்ள மூவரையும் அமரச் செய்த வெற்றி,
“உங்க பத்திரிக்கையில் இன்று வெளியாகியிருக்கும் செய்தி உண்மை என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கூர் பார்வையுடன் வினவினான்.
பேரறிவாளன் இதற்கு பதில் சொல்லாது வாணியை பார்க்க, இது தெரிந்தே வாணி செய்திருக்கிறாளென்று வெற்றிக்கு புரிந்தது.
கதிருக்கு என்ன செய்தி என்று தெரியாததால் நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
செய்தித்தாள் ஒன்றையெடுத்து அவர்களின் முன் வைத்தான்.
“இந்த செய்தியை போடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரிடம், அதாவது என்னிடம் தெரியப்படுத்தி இது உண்மைதானாயென விசாரித்தீர்களா?”
வெற்றியின் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.
“நீங்க உயர்ந்த பதவியில் இருக்கலாம். அதற்காக பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவது சரியில்லை”, தன்னை தனது ஆசிரியரிடம் அவமானப்படுத்துவதாக எண்ணிய வாணி கோபம் அடைந்தாள்.
வாணியின் வார்த்தைகளில் வெற்றியின் இதழோரம் நெலிந்தது.
“பத்திரிகை சுதந்திரம் என்பது ஒருவரின் வாழ்வை, சமூகத்தை மாற்றியமைத்ததாக இருக்க வேண்டுமேத் தவிர… அழித்ததாக இருக்கக் கூடாது”, மென் குரலில் ஆனால் அதிக அழுத்தத்துடன் கூறியவன்… “உங்களுக்கு முன்னால் இத்துறையில் பணியாற்றிய தலைவர்களின் நெறிமுறையை படித்துப் பாருங்களேன்” என்று ஒரு கொட்டு வைத்தான்.
“சார் வந்து… வாணி நன்கு விசாரித்து தான் செய்தி எழுதினார்கள். அவர்களுக்கு யாரென்று கூடத் தெரியும்.” தங்கள் மீது தவறு இருக்காது என்கிற நம்பிக்கையில் ஆசிரியர் பேசினார்.
“ஓகே ஃபைன்… என்னோடு வந்த பெண் யார்?, அப்பெண்ணை யாரின் கவனத்திற்கும் செல்லாது உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தியது ஏன்?… இதுதானே உங்களது பத்திரிகை உயர் புள்ளிக்காக நீங்க வெளியிட்ட செய்தி” என்று வினவிய வெற்றி ஆசிரியரை நேர்பார்வை பார்த்தான்.
அப்போதுதான் கதிருக்கு என்ன விடயமென்றே ஓரளவிற்கு புரிந்தது. உடனடியாக மேசையில் தங்கள் முன் வெற்றி வைத்த பத்திரிகையை எடுத்து பிரித்து படித்து பார்த்தவன் தன் மனைவியை ‘உன்னிடம் இதை நான் எதிர் பார்க்கவில்லை’ எனும் விதமாக நோக்கினான்.
கதிரின் இத்தகைய செயலே அவனுக்கு நடந்தது தெரியவில்லை எனவும், அவன் வாணியிடம் நடந்ததைக் கூறியிருக்க மாட்டான் என்கிற அவனின் எண்ணம் உண்மையென்பதும் புரிந்தது.
வெற்றி கேட்ட கேள்விக்கு ஆசிரியர் தயங்கிய குரலில் ஆமாமென தலையசைத்தார்.
“வெல்… அங்கு எனக்கு முன்பே, அதாவது காட்டில் நான் செல்வதற்கு முன்பே காட்டிலாக்கத் துறையை சேர்ந்த திரு.கதிர் அங்கிருந்தார். நீங்கள் குறிப்பிட்டு உள்ளதை போல் ஏதேனும் நடந்ததா, நீங்களே அவரிடம் கேட்டுப்பாருங்கள்” என்ற வெற்றி சிறு இடைவெளி விட்டு “கதிர் அவர்களின் கணவர் தானே” என வாணியை சுட்டிக்காட்டிக் கூறினான்.
ஆசிரியர் கேள்வியாக கதிரை பார்க்க, அவனோ “அப்படி ஏதாவது நடந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்குமே!” என்று சொல்லி வாணியை அதிர வைத்தான்.
அதுவே ஆசிரியருக்கு போதுமானதாக இருந்தது,
“திருமதி.வாணி இதை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை… நான் உங்களிடம் விரைந்து இதனை முடியுங்கள் எனக் கூறினேன் தான் ஆனால் இல்லாத ஒன்றை இருக்கு என்று பொய் செய்தி எழுத சொல்லவில்லை” என அடக்கிய குரலில் தனது கோபத்தைக் காட்டியவர், வெற்றியிடம் அவனது பெயரை தவறாக பயன்படுத்திவிட்டதாக மன்னிப்பு வேண்டினார்.
“ஒரு விடயம் உண்மையென்று தெரிவதற்கு முன்பே, அதுவும் ஒரு பெண்ணுடன் தொடர்பு படுத்தி இனி எழுதாதீர்கள்…” என சொல்லியவன் “நல்லவேளை உங்களது உயர் புள்ளிக்காக மக்களுக்கு எதிர்பார்ப்பினை தூண்டும் வகையில் இருக்க வேண்டுமென எந்தவொரு பெண்ணின் பெயரையும் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டீர்கள்” என்று அந்நிகழ்வில் எந்தவொரு பெண்ணுமே இல்லையென தன் புத்திக்கூர்மை வாய்ந்த பேச்சினால் நம்ப வைத்தான் வெற்றி.
“இனியொரு முறை இப்படி நடக்காது” என்ற பேரறிவாளன் அங்கிருந்து விடைபெற்றார்.
கதிருக்கு தன் தங்கையின் பெயர் ஒரு கொலை வழக்கில் வெளி வந்திருந்தால் தன்னுடைய குடும்பத்திற்கு எவ்வளவு மரியாதை குறைவினையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்தவன் வெற்றியை பார்வையாலே ஆரத் தழுவினான்.
வெற்றிக்கு தன் நண்பனின் நிலை புரிந்ததோ ஒற்றை கண்ணடித்து இதழில் தன்னுடைய வழக்கமான புன்னகையை படர விட்டான்.
“சபாஷ்” என கைத்தட்டிய வாணி, “ரொம்ப சூப்பரா இருக்கு… மக்களை பாதுகாக்குற காவல்துறை அதிகாரியும், வனப்பகுதியை பாதுகாக்குற காவலரும் நடந்த ஒன்றை இல்லையென சாதிச்சிட்டிங்க” என்று கைத்தட்டினாள்.
செய்யாத தவற்றிற்காக தன்மீது குற்றம் சுமற்றியதாக ஆத்திரம் அடைந்திருந்தாள் வாணி.
வெற்றி அவளை சமாதானம் செய்ய முற்படவில்லை. அவனுக்குத் தெரியும் வாணி தெரிந்து தான் அமரியை உள்ளிழுத்திருக்கின்றாள் என்று, வாணி காவல் நிலையம் வந்ததுமே வெற்றி புரிந்து கொண்டான். அவன் செய்தித்தாளினை முன் வைக்கும் போது அவளின் முகத்தில் தோன்றிய அலட்சிய பாவம், அவன் கேள்வி கேட்கும்போது நடந்ததை தானே எழுதினேன் என்கிற மிதப்பு அனைத்தும் வெற்றிக்கு சொல்லாமல் சொல்லியது.
இது எதுவும் அறிந்திடாத கதிர் மனைவியை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. கோபத்தில் வெடிப்பவளை அவனால் கட்டுப்படுத்த முடியாது போனது.
“கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இது உங்க வீடு இல்லை, நீங்க செல்லலாம்” எனக்கூறிய வெற்றி கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்தான்.
“இப்போவே என்னால அந்த பொண்ணு யாருன்னு சொல்ல முடியும்.”
வாணியின் வார்த்தையில் அடுத்த அடி எடுத்து வைக்காது வெற்றி விறைத்து நிற்க, நண்பனின் கோப முகம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்த கதிர்,
“வாணி சும்மா உளறாதே, அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சா நீயே அமைதியாகிடுவ” என்றான்.
“தெரிஞ்சாயென்ன தெரிஞ்சா… உன் தங்கச்சின்னு தெரிஞ்சுதான் பேசிட்டு இருக்கேன்” என்று வாணி கத்தியதும் கதிர் அதிர்வில் உறைநிலைக்கே சென்று விட்டான்.
கணவனின் நிலையெல்லாம் அவளுக்கு கருத்தில் படவில்லை, சிந்தனை முழுக்க அவளது பணி நிமித்தமாகவே இருந்தது.
“கதிர் அமரியை பாதுகாக்க அவனுக்கு அவ(ள்) தங்கச்சிங்கிற காரணமிருக்கு, உனக்கு என்ன காரணமிருக்கு” என வெற்றியை பார்த்து கேட்டவள், “உன் பெயரை இழுத்ததற்கெல்லாம் நீ எங்களை கூப்பிட்டு பேசவில்லை… நாளைய செய்தியில் எங்கு அமரியின் பெயரை எழுதி விடுவேனோ என்று தானே நடந்ததை நடக்கவேயில்லைன்னு நம்ப வச்சிட்ட” என்று எள்ளலுடன் முடித்தாள்.
வெற்றியால் ஒரு நொடியில் அமரி தனக்கு என்ன உறவென்று சொல்ல முடியும்… ஆனால் அதனால் வீட்டில் அமரிக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுமோ என எண்ணியே தனது கோபத்தை முயன்று அடக்கியவன் அங்கிருந்து வெளியேறினான்.
‘என் தங்கைக்கு ஒன்றென்றால் அது உனக்கு ஒன்றுமில்லையா’ என்று மனைவியின் வார்த்தையில் உள்ளுக்குள் நொறுங்கிய கதிர் வெற்றி வெளியேறிய காலடி ஓசையில் உணர்வு பெற்று, வாணியை பாராது சென்றிருந்தான்.
கணவனின் அத்தகைய சிறு ஒதுக்கத்தில் தான் வாணி தனது தவறினை உணர்ந்தாள்.
‘இதே அமரியிடத்தில் தானிருந்திருந்தால்?’ என நினைக்கும் போதே காவல் நிலையம், நீதிமன்றம் என்று கற்பனைகள் விரிந்து பயம் கொண்டாள். அப்போதுதான் ஒன்று தெளிவாக புரிந்தது, கற்பனையில் தோன்றியதெல்லாம் தாண்டி குடும்பத்தின் நிலை?
ஒவ்வொருவரும் எந்த வகையில் பாதிப்படைவர். புரிந்த நொடி தான் செய்த செயல் அதுவும் கதிருக்கு தெரியாமல் செய்தது எவ்வளவு பெரிய தவறென்று உணர்ந்தாள்.
கதிர் சென்று சில நிமிடங்களுக்கு பிறகு வேகமாக காவல் நிலையம்விட்டு ஓடிய தங்கையை ராமிடம் பேசிக்கொண்டிருந்த வெற்றி கவனித்தான். செய்த தவறை உணர்ந்து கொண்டாளென்று அவளது வேகத்திலேயே தெரிந்து கொண்டான்.
வாணி வெளியில் வந்து பார்க்க வண்டியினை இயக்கி, ஆக்சலேட்டரை உறும விட்டவனாக முகத்தினை இறுக்கமாக வைத்து வாணிக்காக காத்திருந்தான்.
ஒன்றும் பேசாது அவனுக்கு பின்னால் அமர வண்டியை சீரான வேகத்தில் செலுத்தினான்.
“நான் எந்நிலையிலும் கணவன் என்கிற கடமையிலிருந்து தவற மாட்டேன்” என்பது போலிருந்தது அவனது செயல்.
__________________________
“என்னடா எவனாவது சிக்கினானா?”
தன் சகாக்களிடம் அமைச்சர் வினவினார்.
“ஐயா அந்தவூருல அவனுவக்குள்ள அடிச்சிக்கிறானுங்களேத் தவிர வெளியில ஒண்ணுன்னாக்கா எல்லாம் ஒண்ணு கூடிடுறானுங்க… எப்பவும் தனித்தனி பிரிவா செஞ்சுக்கிட்டு வந்த கோவில் திருவிழாவை இம்முறை ஒண்ணா சேர்ந்து செய்றானுங்க போல” என்று ஊருக்குள் சென்று கண்காணித்து வந்த தடியன் ஒருவன் பதிலளித்தான்.
“அப்புறம் எப்புடிடா அங்க போறது?” அமைச்சர் யோசிக்கலானார்.
“ரெண்டு பிரிவும் பிரிஞ்சிருந்தா அவனுங்களுக்குள்ள ஏதாவது கிளப்பி விட்டு நாம நம்ம காரியத்தை சாதிச்சிக்கலாம்… ஆனால், இப்போ ஒண்ணா கூடிக்கிட்டானுங்க சொல்லுற என்ன பண்ணுறது?”
“ஐயா.”
அமைச்சர் புலம்ப அவரது கூட்டத்திற்கு பின்னால் ஒரு குரல் ஒலித்தது.
“யாருடா இவன்?”, “இவனை இதுக்கு முன்னுக்க இங்க பார்த்தது இல்லையே!” ஆளாளுக்கு அவர் யாரென்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். அவரது தோற்றம் அப்படி. பார்த்ததும் சொல்லிவிடலாம் பணத்தில் செழித்தவர்.
அமைச்சரும் அவரை இதுவரை பார்த்ததில்லை என்பதால் சந்தேகப் பார்வை பார்த்தார்.
“என்ன அமைச்சரே, நான் யாருன்னு யோசிக்கிறீங்களோ… நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது ஆனால் நீங்க யாரு, எதுக்கு எங்க ஊருக்குள்ள ஆளனுப்பி வேவு பார்த்தீங்க எல்லாம் தெரியும்” என்று அவர் கூறியதும்,
“நீ அந்த போலீசு ஆளா” என அமைச்சர் கேட்டார்.
அதற்கு வந்திருந்தவர் பதிலேதும் சொல்லாது வெடி சிரிப்பு சிரித்து…
“அவன் மொத்த குடும்பமும் எனக்கு எதிரி” என ஒருவித குரூரத்துடன் கூறினார்.
“புரியலையே”, ஒருவித சந்தேகத்துடன் அமைச்சர் அவரை ஆராய்ந்தார்.
“என் பேரு காத்தவராயன்… அந்த வெங்கடாசலம் பிரிவுதான், நானும் அந்த வூரில் பெரிய தனக்காரன்… இருந்தாலும் அந்த குடும்பத்துக்கு இருக்குற மரியாதை எனக்கில்லையே, எல்லாத்துலயும் அவனுங்களுக்கே முதல் மரியாதை, அவனுங்கல விட்டா அந்த தங்கவேலு குடும்பம்… நானெல்லாம் எங்க போறது” என்று சினத்துடன் பேசியவர்,
“அந்த குடும்பம் ஒடிஞ்சி உட்கார்ந்துட்டா, அடுத்து நாந்தான்… எப்பவுமே அடிச்சிக்கிட்டு திரியுற கூட்டம் தேர் இழுக்கிறேன், சாமி கும்பிடுறேன்னு ஒட்டுக்கா சுத்திட்டு இருக்கானுங்க, எனக்கு மரியாதை தராம இருக்குறவனுவ எப்பவும் அடிச்சிக்கிட்டுதான் இருக்கணும். அப்போதான் எனக்கு கொண்டாட்டம்” என்று முடித்தார்.
“உனக்கான காரணம் அதுமட்டுமில்லைன்னு நல்லா தெரியுது” என்ற அமைச்சர் ”நீ சொல்லாது விட்ட விடயம் எனக்குத் தெரியனும்” என்கிற அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார்.
“உங்ககிட்ட சொல்ல எனக்கொன்னும் இல்லை, போன முறை ரெண்டு பிரிவுக்கும் சண்டை நடந்தப்போ ஒருத்தன் என் மேலயே கை வைக்க வந்தான்… என்மேல கை வச்சா என்னா நடக்குன்னு அந்த ஒன்னுமில்லா பயலுவளுக்கு தெரியணுமில்ல அதான் அவனை போட்டுத் தள்ளிட்டேன்.” கொலை செய்ததை சர்வ சாதாரணமாகக் கூறினார்.
“சண்டையில ஊர் மக்கள் கூடி அடிச்சிகிட்ட நேரம் நடந்த கொலைங்கிறதால ரொம்ப சுலுவா அதிலிருந்து வெளிய வந்துட்டேன். ஆனா பாருங்க, அந்த பயலுவயெல்லாம் வெங்கடாசலம் கூட சேர்ந்துட்டு என்னை ஒதுக்கி வச்சிட்டானுங்க… இப்போ தேர் கூட, ஊர் பெரிய மனுசங்கிற முறையில என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கல… அதான் நானில்லாம அந்த திருவிழா நடக்கக் கூடாது. அதுக்காக நான் என்ன வேணாலும் செய்யிறேன்” என ஒருவித குரூரத்துடன் மொழிந்தார்.
“சரியான ஆளுதான் நீங்க” என்ற அமைச்சர் தனக்கு அம்மன் சிலை வேண்டுமென்று சொல்ல,
“இப்போ இரு பயலுவளும் ஒட்டுக்கா எல்லாம் செஞ்சிட்டு இருக்கானுங்க கொஞ்சம் சிரம்மந்தான். ஆனால் இதுதான் சரியான சந்தர்ப்பம்” என்ற காத்தவராயன் “முதலில் ஒன்னு சேர்ந்திருக்க பயலுவல முட்டிக்க வைப்போம்” என தன் திட்டத்தைக் கூற அமைச்சரும் சரியென காத்தவராயனின் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார்.
அவர்களின் திட்டம் இதுதான்,
“இன்று கொடி கம்பம் நட்டு, மாலை காப்பு கட்டும் விழா நடைபெற இருக்கு. காப்பு கட்டிட்டா வெளியில் இருந்து யாரும் ஊருக்குள்ள ரா(இரவு) தங்கக்கூடாது அதேபோல ஊருக்காரங்களும் வெளியில் தங்க அனுமதியில்லை. எல்லாம் கோவிலில் கூடியிருப்பாங்க, அப்போ தங்கவேலு ஆளுவ வெங்கடாசலம் தோட்டத்தை கொளுத்திட்ட மாதிரி செய்யணும்… அதை அந்த நல்லுவை நம்ப வச்சிட்டாக்கா போதும் பழைய மாதிரி ரெண்டு பிரிவும் அடிச்சிக்கிட்டு ஊரு ரெண்டு பட்டுடும். அப்போ சிலையை நீங்க கடத்திக்கோங்க, எனக்கு அவங்க ரெண்டு பட்டா போதும். ஒட்டுக்கா செய்ய நினைச்ச காரியம் பாதியிலேயே நின்னு போனதால ஆத்தாவே கோச்சிட்டு கோவிலைவிட்டு எங்கோ போயிட்டான்னு அவுனவல நம்ம வச்சிடலாம்.” பெரியதாக சொல்லி முடித்த காத்தவராயன் சற்று இளப்பாறினார்.
“பலே திட்டந்தான்… சிலை காணாம போனாக்கா எப்புடி சாமி வெளிய தானா போயிட்டான்னு நம்புவாங்க?” அமைச்சர் தனது சந்தேகத்தை முன் வைத்தார்.
“அவனுவளுக்கு அந்த கல்லுக்கு உசிர் இருக்கிறதா நெனைப்பு, அதெல்லாம் நம்புவாங்க… நீங்க அவன் தோட்டத்தை கொளுத்த ஏற்பாடு செய்யுங்க” என்ற காத்தவராயன் அங்கிருந்து செல்ல,
“அந்த போலீஸ்காரன் ஏதும் குடைச்சல் கொடுத்திட மாட்டானே” எனக் கேட்டார் அமைச்சர்.
“அவந்தான் குடும்பத்தை விட்டு பிரிஞ்சிருக்கானே, இப்போ அவன் ஊருக்குள்ளவே இல்லை” என்று காத்தவராயன் பதிலளிக்க இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் அர்த்த பார்வை பார்த்தனர்.
“ஐயா.”
காத்தவராயன் அங்கிருந்து சென்றதும் ஏதோ கேட்க வாய்திறந்த தனது அடியாள் ஒருவனை கை நீட்டி தடுத்த அமைச்சர்,
“நீ என்ன கேட்கப்போறன்னு தெரியும், இவன்லாம் ஒரு ஆளுன்னு நம்மக்கூட ஏன் கூட்டு சேர்க்குறேன்னா… மாட்டிகிட்டா கோத்து விட ஆள் வேணுமில்ல அதான்” என்றுக் கூறி, “ஆடு வலிய வந்து தலையை குடுத்துட்டு போவுது” என வெடி சிரிப்பு சிரித்து அந்த பங்களாவை ஆதிர வைத்தார்.
“நம்ம விடயத்தை தெரிஞ்சிக்கிட்டான், காரியம் முடிஞ்சதும் அவனை தீத்து கட்டிடுங்கடா, அவன் மாட்டிக்கிட்டா சிலை கடத்தியது நாமதான்னு சொல்லிட வாய்ப்பு இருக்கு” என்று காத்தவராயனின் உயிருக்கும் நாள் குறித்தார் அமைச்சர்.
எண்ணம் போல் வாழ்வென்பது இறப்பிற்கும் பொருந்தும் அதனை காத்தவராயன் மறந்ததால் தன் உயிரையே அமைச்சரின் கையில் அடமானம் வைத்து விட்டார்.
மீண்டும் ஊர் ரெண்டு பட போகிறது என்ற மகிழ்வில் உல்லாசமாக சென்று கொண்டிருந்த காத்தவராயனை பார்த்து விதி சிரித்தது.
___________________________
செல்லச்சாமி மற்றும் ராசு… மதி மற்றும் சக்தியின் திருமணத்தினை பற்றி பேசுவதற்கு வெங்கடாசலம் இல்லம் வந்தனர்.
அந்நேரம் தான் செண்பகமும் ஜானகியும் சக்தியை விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வருகையை ஏற்ற இருவரும் சக்தியின் விசாரணையை மறந்தவர்களாக அவர்களை உபசரிக்க, வெங்கடாசலமும் நல்லுவும் அங்கு வந்து சேர்ந்தனர்.
“என்ன நாட்டாமை… கொடி நட கோவிலில் இருக்காம இங்க” என்று வெங்கடாசலம் செல்லச்சாமியிடம் வந்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் நோக்கில் பேச்சினை ஆரம்பித்தார்.
“ஐயா… எங்களுக்குன்னு இருக்க ஒரே சொந்தம் என் பொண்ணு தாங்க, அவ கல்யாணத்தை சீக்கிரமா செய்துடலான்னு எனக்கு தோணுதுங்க…” என்று வந்த செய்தியை முடிக்காது தொக்கி நிறுத்தினார்.
“சக்தி உனக்கு சீக்கிரம் ஆப்பு தயார் பண்றாங்க டா” சசி சக்தியின் காதில் கிசுகிசுக்க…
“இந்த ஆப்புல தெரிஞ்சே உட்கார எனக்கு விருப்பந்தான்” எனக் கூறி சக்தி சசியை அதிர வைத்தான்.
அவரின் பேச்சிலிருந்து முடிவு என்னவாக இருக்குமென்று கணித்த பெரியவர், “திருவிழா முடியட்டுன்னு நினைச்சேன்… வெரசா முடிக்கனுன்னா எங்களுக்கும் சம்மதந்தான்” என்றுக் கூறி அவர்களை மகிழ செய்தார்.
“அப்போ பொண்ணு பார்க்க வாரீங்களா?” ராசு கேட்டார்.
“எல்லாம் நாம பார்த்து வளந்த பொண்ணு தாங்களே, இதுல புதுசா பார்க்க என்ன இருக்கு” என்ற ஜானகி “அதெல்லாம் வேண்டாங்க” என்றார்.
சேதுவும் வந்து அமர,
“உனக்கு விருப்பம் தானேடா” என நல்லு தன் தம்பியிடம் வினவினார்.
“பையன் பொண்ணு மனசு ஒத்து போச்சுன்னா பண்ணிட வேண்டியது தாங்க” என்ற சேது சக்தியை பார்த்தார்.
மற்றவர்களும் அவனிடம் விருப்பம் கேட்க,
“எனக்கு சம்மதங்க” என்றவன்…
“ஆனால்” என்று சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்த அனைவரும் அவனையே ஏறிட்டனர்.
“என்னடா பாதியிலேயே நிறுத்திட்டு தயங்குற… எதுவா இருந்தாலும் சொல்லு” என செண்பக பாட்டி கூற,
“எனக்கு முன்ன வெற்றி இருக்கும்போது நான் மொத கல்யாணம் கட்டிக்கிறது சரி வராதுங்க” என்றான்.
“இனி உன் கல்யாணம் நடந்த மாதிரிதான்” என்று மெல்ல முணங்கிய சசியை முறைத்த சக்தி,
“நான் சொன்னது தப்பில்லைன்னு நினைக்கிறேன்” என அனைவரையும் பார்த்துக் கூறினான்.
“அவங்களை(வெற்றி) யோசிக்காமல் இல்லை, அவங்க உங்க பெரியப்பாரு மகந்தான்… அவங்களுக்கு முன்ன உங்களுக்கு கல்யாணம் நடக்கிறது தப்பில்லை” என்று சொல்லிய நல்லு தானே பஞ்சாங்கம் பார்த்து வெங்கடாசலத்திடம் நல்ல நாள் நான்கினை கூறி அனைவரையும் கலந்து ஒரு தேதியை குறித்தனர்.
அன்றைக்கு நிச்சயம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
வந்த வேலை நல்ல விதமாக முடிந்ததால் செல்லச்சாமியும், ராசுவும் மன நிறைவுடன் வெளியேறினர்.
“வாங்க, கோவிலுக்கு போலாம்… நேரமாகுதே” என அனைவரையும் அழைத்தபடி துண்டினை உதறி தோளில் போட்ட நல்லு யாரும் வராததை கண்டு, என்ன எனும் விதமாக பார்க்க,
“வெற்றி என் மகந்தான்” என சேதுவும்,
“புதுசா குடும்பத்தை பிரிக்கிறீங்களோ” என தாத்தாவும்,
“அவனுக்கு தாய்ப்பால் கொடுத்து வளத்தது நான் மாமா” என ஜானகியும்,
“அப்போ நான் உங்களுக்கு மகன் இல்லையாங்க” என சக்தியும்,
ஆள் மாற்றி ஒருவர் நீ சொல்லிய பெரியப்பாரு மகந்தான் என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்பதை தங்களின் சிறு கோபத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
‘அடப்பாவிகளா’ என நொந்துகொண்ட நல்லு சசியை பார்த்து, “நீயும் ஏதாவது சொல்லேண்டா” என்க…
“நான் என்ன சொல்லுறது, அதான் நீங்க சொல்லிட்டிங்களே” என்று வருத்தமாகக் கூறினான்.
“என்ன நீங்களெல்லாம் புரிஞ்சிகிட்டது அவ்வளவு தான்டா” என்ற நல்லு சக்தியின் அருகில் சென்று,
“நீ ஆம்பள பையன்லே, எவ்வளவு நாள் வேணாலும் ஒரு பொண்ணுக்காக காத்துகிடக்கலாம் ஆனால் ஒரு பொண்ணு… கூடாது, ஊர் வாய் சும்மா இருக்காது.”
“திருவிழா முடிஞ்சு பேசிக்கலான்னு பெரியவங்க நாங்க நேருல பார்த்துக்கூட பேசிக்கல, சின்ன பையன் அவன்(சசி) கிட்ட சும்மா தகவலா சொல்லி அனுப்பினோம்… நாம சொன்னதை செய்வோமா மாட்டோமான்னு பெத்தவங்களான அவுங்களுக்கு பயமிருக்குமா இல்லையா, அதான் அப்படி செஞ்சேன்… இப்பவும் நிச்சயம் மட்டுந்தான் பேசினேன், கல்யாணத்துக்கு நாள் குறிக்கலையே… அவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கேன்” என்ற நல்லு,
“எனக்கு வெற்றியை விடவே என் பின்னாலையே சுத்தி வர உன்னதான்டா ரொம்ப பிடிக்கும்” என்க, சக்தி நல்லுவை அணைத்து தன் மன்னிப்பை வேண்டினான்.
“என்னை மன்னிச்சிடுங்க பெரியப்பா.”
“என்னையும் தாங்க” என்ற சேதுவை முதுகில் ஒரு தட்டு தட்டிய நல்லு,
“உன் மவன வேணுன்னாக்கா சக்தி நிச்சயத்துக்கு கூப்டுக்கோ, அப்புறம் என்னாலதான் கூப்பிடலன்னு என் மேல பழி போடாதே” என்றவராக சன்னமான சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் நல்லு.
________________________
எவ்வளவு முயன்றும் முகத்திலிருக்கும் வேதனையை கதிரால் மாற்ற முடியவில்லை. வண்டியை நிறுத்தியவன் வாணி இறங்கி விட்டாளா என்பதை கூட உணராது வேகமாக வீட்டிற்குள் சென்றவன் எதிரே வந்த தங்கவேலுவை பார்த்து நின்றாலும் எதுவும் பேசாது தனது அறை நோக்கி சென்றான்.
“கதிரு.”
தன்னுடைய தாத்தா அழைத்ததும் அவர் அருகில் வந்தவன் அவரது முகம் காணாது அருகிலமர்ந்தான்.
“கோவிலுக்கு போகனுப்பா, போயி கிளம்பி வா” என்றுக் கூறியவர் செய்தித்தாளை பிரித்து படிக்க ஆரம்பித்தவர் அடுத்த ஐந்தாவது நிமிடம் கதிர் என்று வீடே நடுங்க அழைத்தார்.
அமரியை தவிர மொத்த குடும்பம் வரவேற்பறையில் கூடியது.
“இதில் சொல்லப்பட்டிருப்பது அமரியை தானே” எனக் கேட்டவர் வாணியை அழுத்தமாக நோக்கினார்.
“என்ன செய்தி?” என்றவாறு விநாயகம் வாங்கி பார்க்க, தலையை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்து விட்டார்.
“எனக்கு பதில் வேணும் கதிர்” என ஒலித்த தாத்தாவின் கர்ஜனையானக் குரலில் அதிர்ந்த வாணி…
“அது… அது வந்து தாத்தா” என்று தந்தி அடித்தபடி சொல்ல வருவதை சொல்லாது கைகளை பிசைந்தபடி நிற்க,
“அது நம்ம அமரின்னு தெரியாமதான் வாணி செய்தி போட்டுட்டா(ள்) தாத்தா” என்றவன் வெற்றி அழைத்தது முதல் எங்கும் இதில் வாணிக்கு அமரியைப் பற்றி தெரிந்து தான் செய்தி போட்டதாகக் காட்டிக்கொள்ளாது அனைத்தும் கூறினான்.
“இனி இதில் அமரியின் பெயர் எங்கும் வராது தாத்தா, அப்படியே வந்தாலும் எப்படி சமாளிக்கிறது என்பதை வெற்றி பார்த்துப்பான்” என்று குடும்பத்தாருக்கு தைரியம் அளித்தான்.
“உன் கூட்டாளிக்கு நன்றி சொன்னேன்னு சொல்லிடு” என்றவர் கோவிலுக்கு செல்ல அனைவரையும் துரிதப்படுத்தினார்.
அறைக்குள் கதிருக்கு பின்னால் நுழைந்த வாணி மன்னிப்பு வேண்ட அவளிடம் பதிலேதும் பேசாது கிளம்பியவன் அமரியைத் தேடி அவளது அறைக்குச் சென்றான்.
கணவனின் பாராமுகம் அவளது தவறின் அளவை மேலும் மேலும் குத்திகாட்டியது. தன்னிடம் கலகலத்து பேசி, வீட்டையே அமளி துமளி செய்யும் அமரியை நினைத்தவள், “தானெப்படி இப்படியொரு செயலை செய்தேன்” என்று வருந்தினாள்.
‘அமரியின் உண்மையான அன்புக்கு நீ அவள் மீது காட்டிய பதில் நேசம் அவ்வளவுதானா’ என எண்ணியவளின் கண்கள் உடைப்பெடுத்தன.
அமரியிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டியவள்… இனி எந்தவொரு இடத்திலும் அமரியை விட்டுக்கொடுக்க கூடாதென முடிவெடுத்தாள்.
அமரியின் அறை கதவு திறந்தே இருந்தது. மெத்தையில் கால்களை கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் சன்னலின் வழியே நீல வானினை வெறித்திருக்க அவளின் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.
இரு தினங்களாய் உணவு கூட இல்லாது அறையிலேயே முடங்கியிருக்கின்றாள். தன்னை பார்க்க வந்ததால் தானே தனது தோழிக்கு இந்நிலையென்று அவளின் மனம் குற்றவுணர்வில் தவித்தது. யாரென்றே தெரியாவிட்டாலும் வெற்றி செய்த உதவிக்கு அவனிடம் நன்றி சொல்ல வேண்டுமென அவளின் மனம் நொடிக்கு ஒரு தரம் அவனின் நினைவினை அவளுக்கு அளித்தது.
அவன் செய்த காரியம் எவ்வளவு பெரியதென்று எண்ணி பார்த்தவளுக்கு மேலும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
“பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக் கூடாதுன்னு, அண்ணா அழைத்ததும் வந்து விட்டோமே… அவர்(வெற்றி) மட்டுமில்லாது போயிருந்தால் கலையின் உடல் அனாதை பிணமாகிப் போயிருக்குமே” என்று அவளின் குடும்ப சூழ்நிலை அறிந்த அமரியால், நடந்ததை நினைக்கும் போதெல்லாம் மனம் குமுறியது.
வெற்றியை பற்றி ஒன்றுமே தெரியாத போதிலும் அவனின் செயலால் அமரியின் உள்ளத்தில் பல படிகள் உயர்ந்து நின்றான்.
தங்கையின் அறைக்குள் நுழைந்தவன் அவள் அமர்ந்திருக்கும் தோற்றம் கண்டு வேதனை கொண்டாலும் அதனை பிரதிபலிக்காது அவளின் அருகில் சென்று அமர்ந்து பரிவுடன் முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றையை ஒதுக்க, தன்னுணர்வு பெற்றவள் கதிரின் மடியில் தலை சாய்த்தாள்.
“எல்லாம் சரியாகிடும் டா.”
தங்கைக்கு ஆறுதலளிக்க முயன்றான்.
“எது சரியானாலும் கலை திரும்பி வரப்போவதில்லையே அண்ணா” என்றவள் மீண்டும் அழுகைக்கு செல்ல அவளின் கண்கள் துடைத்தவன்,
“கலை வரப்போவதில்லைதான், ஆனா எங்களுக்காக கொஞ்சம் எழுந்து நடமாடலாமில்லையா? நீ இப்படி முடங்கியிருப்பது வீட்டில் எல்லோருக்கும் அதிக வருத்தத்தைக் கொடுக்குது. பாட்டி கூட வெசனப்பட்டு கிடக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஏத்தா அமரி” என்றழைப்புடன் பஞ்சு பாட்டி கையில் தட்டுடன் அங்கு வந்தார்.
“ஏன் அப்பத்தா உனக்குதான் மூட்டு வலிக்குமே, நீ எதுக்கு மாடியேறி வந்த” என்று எழுந்த கதிர் அவரின் கையிலிருக்கும் உணவு அடங்கிய தட்டினை வாங்கி, அருகிலிருக்கும் மேசை மீது வைத்தான்.
அமரிக்கு மறுபுறம் வந்தமர்ந்த பஞ்சு, “குளிச்சிட்டு கெளம்புத்தா கோவில் வரை போயிட்டு வருவோம்… உனக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும்” என்றார்.
இப்போது தானிருக்கும் நிலையில் முடியாதென கருதியவள் கதிரை நோக்க அவன் இமை மூடி திறந்து தானிருப்பதாகக் கூற சரியென தலையசைத்தாள்.
“வருத்தப்பட்டுகிட்டே இருந்தா அடுத்தடி எடுத்து வைக்க முடியாது ஆத்தா,” என்றவர் அவளின் கன்னம் வழித்து சென்றார்.
சற்று நேரத்திற்கு முன்பு கதிர் சொல்லியதை போன்று வீட்டிலிருப்போரின் மன வருதத்திற்கு தான் காரணமாகிவிட்டோமோ என்று சிந்தித்தவள் கட்டிலை விட்டு இறங்கினாள்.
தங்கையின் கை பிடித்து மீண்டும் அமர வைத்த கதிர்,
“ரொம்ப நன்றிடா” என்றதோடு “முதலில் நீ சாப்பிடு” எனக்கூறி பஞ்சு கொண்டு வந்த உணவினை முழுவதும் ஊட்டி முடித்த பின்னரே அவளை விட்டான்.
ஒட்டு மொத்த ஊர் மக்களும் அருவிக்கரை செல்லியம்மன் கோவிலில் கூடியிருந்தனர்.
இம்முறை விநாயகம் மட்டுமல்லாது தங்கவேலுவும் நல்லுவை நன்றி பார்வை பார்த்தார். தனது மகனின் உயிரை நல்லு காப்பாற்றினார் என்றால் தன்னுடைய பேத்தியை பெரிய சிக்கலிலிருந்து அவரது மகன் காப்பாற்றியிருக்கிறார் என்ற நன்றி உணர்வு அவரது பார்வையில் இருந்தது.
அந்நொடி அவருக்கு ஒன்று புரிந்தது பகையின்றி ஒற்றுமையாக இருந்தால் தங்களுக்கு மட்டுமில்லாது ஊருக்கும் எவ்வளவு நன்மைகள் நடக்கும். ஆனால், எப்படி அவர்களிடம் சென்று உறவு கொள்வது போன்று பேசுவது என்கிற தயக்கம் இருக்கத்தான் செய்தது.
“இத்திருவிழா முடிவதற்குள் எப்படியும் உனக்கு செய்யும் எல்லாவற்றையும் சேர்ந்து செய்யும் சாக்கில் ரெண்டு பிரிவினரையும் ஒன்னு சேத்துடு ஆத்தா” என அம்மனிடம் வேண்டுதல் வைத்தார் தங்கவேலு.
அம்மனுக்கு அபிடேகம் நடைபெறுவதால் அனைவரும் காணும் வகையில் கோவிலினுள் தரையில் மக்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
அமரியின் கண்கள் வெற்றியை தேடியது. நன்றி சொல்லிவிட வேண்டுமென்று எண்ணி அவள் அவனைத் தேடினாள், அவளது மனமோ அன்று பார்த்த கம்பீர தோற்றத்தை மீண்டும் கண்டுவிட துடித்தது.
‘பஞ்சாயத்துல வந்து முன்னுக்க நின்னு பேசினாங்க, அப்போ இதே ஊராதான் இருக்கணும்… இன்னும் வரல போலிருக்கே’ என மனதில் பேசியவளாக கோவிலை சுற்றி விழியை சுழற்றியவளின் கண்ணில் பட்டான் வெற்றி.
காக்கி உடை அன்றி அவன் எப்போதும் விரும்பி அணிவது வேட்டி சட்டையை தான். அவ்வுடை தனியொரு கம்பீரத்தைக் கொடுக்கும் என்பது அவனின் எண்ணம்.
வேட்டி சட்டை அணிந்து மீசையை முறுக்கியவாறு கோவிலினுள் நுழைந்தவனை கண்டு அன்று போலவே இன்றும் சைட் அடிக்க துடித்த கண்களை அடக்கி வேறு பக்கம் திரும்பினாள்.
வெற்றி நல்லுவின் அருகில் சென்று அமர்ந்தான். உள்ளே வரும்போதே தன்னவளை கண்டு விட்டான்.
அவனை கண்டதும் அவசரமாக பார்வையை திருப்பியவளை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்தான். அவள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாள் என்பதே அவனின் மகிழ்விற்கான காரணம்.
“என்ன எனக்கு முன்ன என் தம்பிக்கு கல்யாணம் பண்றீங்களாம்?” வேண்டுமென்றே தந்தையை சீண்டினான் வெற்றி.
யாவரும் அறியா வண்ணம் பற்களைக் கடித்த நல்லு, “யாரு அந்த சசி பய சொன்னானா” எனக் கேட்டவாறு தன்னிலிருந்து மூன்றாவதாக உட்கார்ந்திருந்த சசியை முறைத்தார்.
“ஆத்தி இவரு மொறைக்கிறதா பார்த்தாக்கா அடி உறுதி போலிருக்கே” என்று முணுமுணுத்தவன் ஜானகியின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான்.
“நானெல்லாம் கல்யாணம் கட்டிக்கிட மாட்டேன்னு முடிவே பண்ணிட்டிங்களோ?” என்றவனின் வார்த்தை நல்லுவிற்கு அந்த பக்கம் உட்கார்ந்திருந்த சேதுவுக்கும் கேட்க,
“என்ன தம்பி இப்புடி சொல்லிட்ட, இப்போ இங்கவே உனக்கு எந்த பொண்ணாவது பிடிச்சிருக்குன்னா சொல்லு இந்த நொடியே கல்யாணத்தை நடதிடலாம்” என்று உற்சாகமாக பேசியவர் நல்லுவின் பார்வையில் அமைதியாகினார்.
“பேச்சு மாறக்கூடாது, நாளைக்கே கூட நான் பொண்ணை கூட்டிட்டு வந்து கட்டி வையுங்கன்னு சொன்னாலும் சொல்லுவேன்” என்ற வெற்றி தன்னை முறைத்த தந்தையை பார்த்து ஒற்றை கண்ணடித்து வழக்கமான புன்னகையை சிந்தினான்.
“பேசுறது பார்த்தாக்கா பொண்ணுலாம் பார்த்தாச்சு போலவே”, வெளியில் விறைப்பாக கேட்டாலும் உள்ளுக்குள் தன்னுடைய மகனின் நெருக்கமான பேச்சில் தந்தையாய் மகிழ்ந்தார் நல்லு.
“பார்த்தாச்சு பார்த்தாச்சு” மெல்ல நல்லுவிற்கு மட்டும் கேட்கும் வகையில் கிசுகிசுத்த வெற்றி
“புதுசா கூட்டாளிலாம் கிடைச்சிருக்காங்க போல” என்று தங்களுக்கு எதிரில் அமர்ந்திருக்கும் விநாயகத்தை பார்த்துக்கொண்டே வினவ,
மகனின் பார்வையை வைத்தே அவன் விநாயகத்தை தான் கூறுகிறான் என்பதை புரிந்து கொண்டவர்,
“ஊருக்குள்ளவே ஆளில்லை, அப்புறம் எப்புடிடா இங்குள்ள விடயமெல்லாம் உனக்குத் தெரியுது” எனக் கேள்வி கேட்க வெற்றியின் பதில் சிறு புன்னகை தான்.
வந்ததிலிருந்து வெற்றியை கவனித்துக் கொண்டிருந்த தங்கவேலு, முதல் முறையாக வெற்றியை நல்ல விதமாக எண்ணினார். அவனின் தீர்க்கமான பார்வை அளவான புன்னகை தந்தையுடனான நெருக்கம், வீட்டினரிடம் காட்டும் அன்பான முகமென அனைத்தும் அவருக்கு பிடித்தது.
யாரோ தன்னை கூர்ந்து கவனிப்பதைப்போல் உணர்ந்த வெற்றி, பஞ்சாயத்தன்று அமரி உற்று பார்த்ததை அறிந்திருந்தவன் இன்றும் அவள் தானோ என நினைத்து அமரியை காண்க அவளோ அம்மனுக்கு நடந்து கொண்டிருந்த அபிடேகத்திலேயே மூழ்கியிருந்தாள்.
“வேறு யாராக இருக்கும்” என்று பார்வையை அலசியவன் தங்கவேலுவை கண்டு கொண்டான். எப்போதும் போல் அவரை சீண்ட நினைத்து கண்ணடித்து முத்தம் ஒன்றை பறக்க விட்டான்.
வெற்றியின் செயலில் அவனை உருத்து விழித்தாலும், ‘நல்ல பயதேன்… ஆனால் கொஞ்சம் இந்த சேட்டையை விட்டா நல்லாயிருக்கும்’ என்று மனதில் நினைத்தார். அன்று பஞ்சாயத்தில் அவனின் இதே செயலுக்கு கோபம் கொண்டவர், இன்று விளையாட்டாக எடுத்துக்கொண்டார்.
வெற்றியை பார்க்கும் வரை அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமென நினைத்திருந்த அமரி அவன் உள்ளே வரும் போது பார்த்ததோடு எல்லாம் மறந்தாள்.
அவனை பார்க்கும்போது மனதில் ஏற்படும் குறுகுறுப்பை தவிர்க்க அவன் பக்கமே பார்வையை செலுத்தவில்லை.
அம்மனையே விழியகலாது நோக்கியவள், “கலை இறப்பிற்கான காரணத்தை நான் தெரிந்துக்கொள்ள எனக்கு உறுதுணையா இரும்மா தாயே” என்ற வேண்டுதலோடு ஒரு விபரீத முடிவை எடுத்தாள்.
“வெற்றி காப்பு கட்டிடா இப்போ இருக்க மாதிரி நீ வெளியில இருந்து இங்க வந்து போக முடியாது… இங்கவே இருந்திட, நீயில்லாமா என் வாழ்க்கையில எதுவும் நடந்ததில்லை, இன்னும் மூணு நாளில் நிச்சயம் வச்சிருக்காங்க… நீயில்லாம எப்படி”, என தனது திருமணத்தை சாக்காக வைத்து வெற்றியை எப்படியாவது மீண்டும் வீட்டிற்குள் வர வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசினான் சக்தி.
சகோதரனின் உள்ளர்த்தம் வெற்றிக்கு நன்கு புரிந்தது.
“ஏற்கனவே வீட்டுக்கு போயி என் உடைமையெல்லாம் வச்சிட்டு தான்டா கோவிலுக்கே வந்தேன்” என்று சக்தியிடம் கூறிய வெற்றி உள்ளுக்குள் வேறு கணக்கு போட்டான்.
“வாணியை தன் குடும்பத்துடன் சேர்த்து வைத்த பின்னரே வீட்டிற்குள் அடி வைக்க வேண்டும்” என்று எண்ணியிருந்த வெற்றியின் மனதை மாற்றியது அவன் இப்போது கையிலெடுத்திருக்கும் வழக்கு.
‘தன்னுடைய ஊர் அமைந்திருக்கும் காட்டுப்பகுதியில் பிரச்சினை உருவாகியிருப்பதால் ஊருக்குள் தங்கியிருப்பது வழக்கிற்க்கு உதவியாக இருக்கும்’ என கருதியதால் இன்று கோவிலுக்கு வருவதால் காவலர் குடியிருப்பில் இருந்த தனது உடைமைகளையும் கையோடு கொண்டு வந்திருந்தான்.
‘இரவு நேரங்களில் காட்டிற்குள் செல்வதற்கு சுலபமாக இருக்கும்’ என்று நினைத்தான்.
“ரொம்ப சந்தோஷம் வெற்றி” என்ற சக்தி, வெற்றி தங்களுடனே இருக்க போவதை சசி மற்றும் ஜானகியுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டான்.
அம்மனுக்கு அபிடேகம் முடிந்து அலங்காரம் மற்றும் பூஜை நடத்திய பின்னர் கோவில் கம்பத்தில் பூசாரி, செல்லச்சாமியுடன் ஊரின் தலக்கட்டுகள் வெங்கடாசலம், தங்கவேலுவுடன் அவர்களது வாரிசுகள் நல்லு, சேது, விநாயகம் ஆகியோர் ஒன்றாக இணைந்து கொடி ஏற்றினர்.
பின்னர் கம்பத்திற்கு அருகிலேயே விரல் அளவு பருத்த நீண்ட மூங்கில் குச்சியை நட்டு வைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு… பட்டு துணி சுற்றி மஞ்சளில் நனைத்த நூலில் முடிச்சிடப்பட்ட மஞ்சள் கிழங்கினை குச்சியில் கட்டி காப்பு கட்டுதல் நிகழ்வினை முடித்தனர்.
மக்கள் அனைவரும் பக்தியுடன் அம்மனை வழிபட்டு, பிரசாதம் பெற்று வீடு திரும்பினர்.
ஊரின் பெரிய தலைகள் மட்டும் கோவிலில் கூடியிருந்தனர்.
அடுத்து நடக்க வேண்டியவற்றை அனைவரும் கலந்தாலோசிக்க யாரின் கவனத்தையும் திசை திருப்பாது கதிரினை அழைத்துக் கொண்டு கோவிலின் பின்பக்கம் சென்றான் வெற்றி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
42
+1
5
+1
3
வாணி நீ செய்த செயலோட வீரியம் இப்போவாது புரிஞ்சுதே
புரியனுமே