இமை 11
“ங்காஆஆ!!.. ங்காஆஆ!!..” என்ற மழலையின் சத்தம் அந்த வீட்டை இசை இல்லமாக மாற்றி இருந்தது.. அந்த மழலையின் குரலுக்கு பதில் கொடுத்தவாறே பதில் கொடுத்து கொண்டிருந்தான் விஜயேந்திரன்..
“அடே விஜி!!.. நீ காலேஜ் கிளம்பாம இன்னும் என்ன செஞ்சிட்டு இருக்க?.. அங்க உன் தங்கச்சி இந்நேரம் கிளம்பி இருப்பா.. அவ வந்து உன்னை திட்ட போறா பாரு..” என்று விளையாட்டாக மிரட்டியபடி சுமித்ரா விஜய் படுக்கையறைக்குள் வந்து அங்கு மெத்தையில் கால் மேல் கால் போட்டுகொண்டு பால் சிப்பரில் பால் குடித்து கொண்டிருந்த குழந்தையின் அழகில் சொக்கி போனவர்,
“விஜி இங்க பாரேன்!.. இவ எப்படி படுத்திருக்கான்னு.. ரொம்ப அழகா இருக்காடா..” என்று ரசனையாக குழந்தை முகத்தை வழித்து திருஷ்டி கழித்தபடி கூற, “அவ யாரு பேபி?.. என்னோட பேபியாச்சே இப்படி தான் கம்பீரமாக இருப்பா..” என்று குழந்தையின் மூக்கோடு மூக்கை உரசி படி கூறிய விஜய்யின் மீசை குழந்தை முகத்தில் குறுகுறுப்பூட்ட, தன் பார்ப்பற்கள் கொண்டு அவன் மீசையை கடிக்க விஜய்க்கு உடன் சிலிர்த்தது..
குழந்தையின் எச்சில் அமிழ்தம் அவன் இதழ் மீது பட, “அடே பாப்பா.. உன் மேல் வீசும் பால் வாசம் வச்சே புது செண்ட் தயாரிக்கலாம் போல..” என்று குழந்தையை தூக்கிக் கொண்டே கூறியவன், அன்னையிடம் திரும்பி, “மா நாங்க கிளம்பறோம்.. ஃப்ளவருக்கு இன்னிக்கு எக்ஸாம் கொஞ்சம் முன்னாடி போனால் தான் அவ பதட்டமில்லாம இருப்பா..” என்று கூறிக்கொண்டே வெளியே வர,
“பாப்பாவை இங்க விட்டு போங்கன்னா கேட்கிறிங்களா?.. நீங்க பாப்பாவ பாத்துக்க தான் நானும், மலர் அம்மாவும் இருக்கோம்ல.. அப்பறம் ஏன் டா விட மாட்டிகிறிங்க?.” என்று அலுத்து கொள்ள, “ம்மா ஃபிளவருக்கு தான் பாப்பாவை விட்டு இருக்க முடியலை சொல்றாளே.. எனக்கும் இந்த பேபி விட்டு இருக்க கஷ்டமா இருக்கு மா..” என்று குழந்தையை பார்த்துக் கொண்டே கூறிய மகனை வியப்பாக பார்த்த சுமித்ரா
“விஜி ரொம்ப பாசம் வச்சிடாதடா.. மலருக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா அவ குழந்தையோடு போயிடுவா!!.” என்று நிதர்சனம் எடுத்து சொல்ல, “அது என்ன அமைந்தால்?.. என்று சந்தேகமாக சொல்றிங்க.. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.. நான் அமைச்சு கொடுப்பேன் அவ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து அவளையும், குழந்தையையும் உயிராக பார்த்துக்கிற ஒருத்தர் கண்டிப்பாக கிடைப்பார்..” என்று ஆருடம் கூற அதே நேரத்தில்
இவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த அவுட் ஹவுஸில் பூஜையறையில் இருந்து மணி சத்தம் கேட்க, “நீ சொன்னதெல்லாம் நடந்துரும் போல இருக்குடா நல்ல சகுனம்!!” என்று சுமித்ரா வியப்பாக கூற, சரி சரி பேசிக்கிட்டே இருந்தா நேரம் ஆகிட்டே இருக்கும் நான் கிளம்புறேன்..” என்றபடி விஜய் வெளியே வர, அவன் எதிரே மலர் புத்தம் புது மலராக நடந்து வர,
“அடேங்கப்பா ஃப்ளவர் இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வந்துட்ட?.. நான் கூட எக்ஸாம் பயந்து ஃப்ளவர் எஸ்கேப் ஆகிருப்பாளோ என்று நினச்சு பயந்துட்டேன்..” என்று கேலி பேச, அவன் அத்தனை கேலிக்கும் அமைதியான சிறு புன்னகையுடன், பயப்பட மாட்டேன் அண்ணா நான் நிறைய பிட் எழுதி வச்சிருக்கேன்..” என்ற மலரை வியப்பாக பார்த்த விஜய்,
தன் வியப்பை மறைத்து கொண்டு “பிட் எழுதி மாட்டினா மேடம் என்ன செய்விங்க?..” என்று விளையாட்டாக கேட்க, “என் அண்ணன் இருக்கும் போது எனக்கு என்ன கவலை?.. நான் மாட்டினால் என் அண்ணன் அப்படியே விட்ருவிங்களா?.. என்ன.. அடுத்த நிமிடமே அந்த காலேஜ்ஜை விலைக்கு வாங்கிட மாட்டிங்க?..” என்று கேலி பேச
“அப்போஸ் தங்கச்சிக்கு ஒரு துன்பம் என்றால் அண்ணன் அகிலத்தையே அழிச்சிடுவேன்..” என்று விஜய் வசனம் பேச, மலர் தன் பையில் இருந்து அழிப்பான் ஒன்றை எடுத்து கொடுக்க, விஜய் புரியாமல் பார்க்க, அகிலத்தை அழிக்க வேணாமா அதுக்கு தான் இந்த எரேசர்..” என்றபடி மலர் அதை கொடுக்க, “பூ ஒன்று புயல் ஆகும் என்று கேள்வி பட்டிருக்கேன்.. ஆனால் இது பூகம்பமால்ல மாறி இருக்கு..” என்ற விஜய்யின் தோள் தட்டிய சுமித்ரா,
“அண்ணனு தங்கச்சியும் இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி எக்ஸாம் எழுத போறீங்க என்று நானும் பார்க்குறேன்..” என்று சுமித்ரா கூறவும், “அச்சோ ஆமால்ல.. இருவரும் ஒரு சேர கூறிவிட்டு அவசரமாக வெளியே வர ஒரு நொடி நின்ற மலர் வேகமாக சுமித்ராவின் அருகில் வந்து “என்னோட நெடுநாள் கனவு என்று நிறைவேறப் போகுது.. அதுக்கு நீங்களும் அண்ணாவும் தான் காரணம்.. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா..” என அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வேகவேகமாக விஜய் காரில் அமர்ந்து கொண்டாள்..
கல்லூரியில் மலரை இறக்கி விட்ட விஜய், அங்கு அவர்களுக்கு முன் வெண்பா நின்று இருப்பது பார்த்தவன் அவளிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, இருவருக்கும் வாழ்த்து கூறி எக்ஸாம் ஹாலுக்கு அனுப்பி வைத்தான்..“நல்லா எக்ஸாம் எழுது ஃப்ளவர் ஆல் த பெஸ்ட்..” என்று வாழ்த்தி அனுப்ப, அவனுக்கு நன்றி கூறி விட்டு, குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர, இருவரும் எக்ஸாம் ஹால் உள்ளே சென்றனர்..
கல்லூரி பேருந்தில் அமர்ந்திருந்த எழில் சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டே வர, அவள் அருகில் யாரோ அமர எழில் திரும்பி பார்க்கவே இல்லை.. அந்த உருவம் அவளை உரசிக் கொண்டே வர, அந்த உருவத்தை முறைத்துப் பார்த்து விட்டு மீண்டும் தள்ளி அமர்ந்து கொண்டாள்..
அந்த உருவம் மீண்டும் அவளை இடிக்க, கண்களால் எரித்தபடி இருக்கையில் இருந்து எழுந்து அடுத்த இறக்கைக்கு செல்ல போக அவள் கைப்பிடித்து தடுத்து அந்த உருவம் அவளை மீண்டும் இருக்கையில் அமர்த்தி கொண்டு, “ரொம்ப பண்ணாதடி.. நேத்து கோவிலுக்கு வர்றேன் சொல்லிட்டு வர முடியல அதுக்காக என்மேல இவ்வளவு கோபம் ஆகாது டி..” என்று ஆதங்கமாக கூறிய தன் தோழி சங்கவியை முறைத்துப் பார்த்த எழில்,
“நீ கோவிலுக்கு வராம போனது கோபம் இல்ல.. ஆனா என்னால வர முடியாதுன்னு ஒரு இன்ஃபார்ம் கூட செய்யாமல் இருந்த இல்ல அது தாண்டி கோபம்.. உனக்காக நான் அங்க அவ்வளவு நேரம் காத்துட்டு இருந்தேன் தெரியுமா?..” கோபமும் வருத்தமுமாக பேசிய எழிலிடம் “சாரிடி மொபைல் சார்ஜர் போட மறந்துட்டேன்.. அது ஆஃப் ஆகிருச்சு.. அதோட..” என்று சங்கவி தயங்கி பேச்சை நிறுத்த
“அதோட உன் பாய் பிரண்டை பார்த்ததும் இந்த உலகமே மறந்து போயிருக்கும்.. நான் மட்டும் உன் நினைப்பில் இருப்பேனா என்ன?.. என்று நக்கலும் கேலியுமாக கூறிய எழிலை குழப்பமாக பார்த்த சங்கவி “ஏன் எழில் காதல் பண்றது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?.. என்று கேட்க, “என்னை பொறுத்தவரை ஆம்பளைங்க எல்லாரும் அழகு இருக்கிற வரைக்கும் தான் அன்பா பேசுவாங்க அழகு போயிருச்சுனா அப்படியே கை கழுவி விட்ருவாங்க.. உனக்கு இப்போ புரியாது..
ஒரு நாள் உன்னை நடு ரோட்டுல விட்டு போவாங்க அப்ப புரியும்.. நான் சொல்றது ஆம்பளைங்கள நம்பாதே..” என்று முகத்தை இறுக்கமாக வைத்தபடி கூறிய எழிலை திகைத்துப் பார்த்த சங்கவி, “நீ சொல்ற மாதிரி எல்லா ஆண்களும் பெண்களை அழகுக்காக நேசிக்கிறது இல்லை எழில்..
உண்மையான மனதை மட்டும் பார்த்து நேசிக்கிறவங்களும் இருக்காங்க.. நீ அந்த மாதிரி ஆண்களை பார்த்ததில்லை போல அதனால தான் நீ இப்படி பேசுற.. நிச்சயமா ஒரு நாள் உனக்கு இந்த உண்மை புரியும் அதை புரிய வைக்க ஒருத்தர் வருவாரு அப்போ நீ என்னை நினைச்சுக்கோ..” என்ற சங்கவியை
ஏளனமாக பார்த்த எழில், “எனக்கு யாரும் எந்த உண்மையும் புரிய வைக்க வேண்டாம் சங்கி.. நான் நானாக இப்படியே இருக்கேன்..” என்று அழுத்தமாக கூறிய எழில், “அப்பறம் இனி என்னை எங்கேயும் வெளியே கூப்பிடாத நான் வர மாட்டேன்..” என்று உறுதியாக கூறி விட்டு சாலையை வேடிக்கை பார்க்க தொடங்க “சாரி..சாரி டி இனி இப்படி நடக்காது.. எழில் இந்த ஒரு தடவை மட்டும் சாரி..” என்று மன்னிப்பு கேட்டு எழிலை வெகுவாக சமாதானம் செய்ய, அதன் பிறகே எழில் சமாதானம் ஆனாள்..
இருவரும் பேசிக் கொண்டே கல்லூரி உள்ளே வர, சங்கவிக்கு ஃபோன் வரவும், “நீ போ எழில் நான் வர்றேன்..” என்று சற்று தள்ளி நின்று செல்போனில் பேசி கொண்டு இருக்க அவளை உதடு வளைத்து நக்கலாக பார்த்த எழில் சில எட்டுக்கள் நடக்க
“அம்மு குட்டி அம்மா எக்ஸாம் எழுத போயிருக்காங்க.. ரெண்டு மணி நேரம் சமத்தாக இருந்திங்கன்னா.. நான் இன்னொரு செரலாக் வாங்கி தருவேனாம்.. நம்ம அம்மாக்கு தெரியாமல் மம்ம சாப்பிடலாம்.. இப்ப சொல்லுங்க அம்மா வர வரைக்கும் அழாமல் சமத்தாக என்கூட இருப்பிங்களா?.. என்று குழந்தையிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த ஆண் குரலில் திகைத்து அந்த குரல் வந்த திசையை திரும்பி பார்த்த எழில் அங்கு கையில் குழந்தையுடன் நின்றிருந்த விஜய்யை பார்த்ததும் வியப்பும் திகைப்புமாக பார்த்து நின்றாள்..
இத்தனை வருடங்கள் கழித்தும் இவங்க குரல் எப்படி எனக்கு ஞாபகம் இருக்கு?. தனக்கு தானே யோசித்து கொண்டு இருக்க, அவள் சிந்தனையை கலைப்பது போல் மேலும் விஜய்யின் பேச்சும், அவனுக்கு பதில் சொல்வது போல் குழந்தையின் மழலை பேச்சும், கேட்டிருந்த எழிலிற்கு சில வருடங்களுக்கு பிறகு அவள் இதழ் அவள் அறியாமல் புன்னகையை உதிர்த்தது..
விஜய் பேசிக் கொண்டே காரை நோக்கி செல்ல, எழில் கால்கள் அவள் அறியாமல் விஜய்யை நோக்கி சென்றது.. அவன் பின்னே வந்து கொண்டிருந்த எழில், விஜய் ஓரிடத்தில் சட்டென்று நிற்கவும், அவன் பின்னே வந்து கொண்டிருந்த எழில் அவன் முதுகில் நச்சென்று மோத போகும் கடைசி நொடியில் தன்னை சுதாரித்து விலகி நின்றாள்
எதிர்பாராத இந்த நிகழ்வில் எழில் அதிர்ந்து இரண்டு அடி தள்ளி நிற்க.. விஜய்யும் சில நொடிகள் அதிர்ந்து நின்றவன், அவள் முகத்தை பாராமல் “சாரி மேடம் ரொம்ப சாரி மேடம், பாப்பா உச்சா போய்ட்டா.. அதான் அப்படியே நின்னுட்டேன்.. சாரி மேடம் என்று” மன்னிப்பு கேட்க அந்த பக்கமிருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்த விஜய்,
அவள் தன்னை கடந்து செல்வதை கண்டதும் அவள் தன்னை அலட்சியப் படுத்துவதாக நினைத்து கோபமாக, “ஏம்மா சிகப்பு சேலை ஒருத்தன் தொண்டை வலிக்க நீளமா பேசி மன்னிப்பு கேட்கிறேன் நீங்க கண்டுக்காம போனால் என்ன அர்த்தம்?..” என்று கோபம் கேட்க
நடந்து கொண்டிருந்த எழில் சட்டென்று அப்படியே நின்று ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, எழில் முகத்தை பார்த்த விஜய் அதிர்ந்து நின்றான்..
சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் வலது கன்னத்தில் காயம் ஏற்பட்டதில் அதன் தழும்பு கண் ஓரத்தில் தொடங்கி உதட்டின் விளிம்பு வரை சற்று விகாரமாக காட்ட, விஜய் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.. அவனின் அதிர்ச்சி பார்வையில் எழிலிற்கு அத்தனை நேரம் அவள் உதட்டில் உறைந்து இருந்த புன்னகை மறைந்து, மீண்டும் இறுக்கம் வந்து ஒட்டிக் கொள்ள,
எழில் விஜய்யிடம் ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று அலட்சியமாக கேட்க, அவளின் அந்த பாவனையில் பேச்சு வராமல் தடுமாறியவன், தன்னை மறந்து ஒன்றுமில்லை என்று தலையாட்ட, அலட்சியமாக புன்னகைத்தபடி எக்ஸாம் ஹால் சென்ற எழிலின் விஜய்யின் இந்த அதிர்ந்த பார்வை கண்டு,
“மனதை மட்டும் பார்த்து நேசிக்கிற உண்மையான ஆண்மகனை நீ பார்க்க தான் போற” என்ற சற்று முன் சங்கவி கூறிய வார்த்தை காதில் ஒலிக்க இந்த ஜென்மத்துல அது நடக்காது சங்கி..” என்று மானசீகமாக கூறி கொண்டு நடந்து கொண்டிருந்த எழிலை விஜய் ஏதோ சிந்தனையோடு பார்த்து கொண்டு இருந்தான்
இமை சிமிட்டும்..