Loading

மகிழ் கேட்டதில் சற்று திடுக்கிட்ட சித்து உடனே சுதாரித்து, “ஏன் இப்படி கற்பனை பண்ணிட்டு இருக்க. அப்படியெல்லாம் ஒன்னுமே இல்ல வதனி.” என்றான் பொறுமையாக. அவளோ, “இல்ல கண்டிப்பா இருக்கு. நீங்க எப்ப அவங்களுக்கு ஃபோன் பண்ணீங்க. அதோட உங்க ஃப்ரண்ட்ஸ்க்கு எப்படி இந்த வீடு தெரியும்”  என்றாள்.

“இப்படித்தான்” என அவன் தனது அலைபேசியை காட்ட, அதில் இந்த இருப்பிடம் வாட்ஸப்பில் பகிரப்பட்டு இருந்தது. “இதை நான் இறங்கி வந்து சந்தேஷை பார்த்ததுமே அனுப்பிட்டேன். எப்படியும் அவனை போலீஸ்ல பிடிச்சு குடுக்கனும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். உன்ன ரெண்டு நாள் அங்க தங்க சொன்னதும் அதுக்குதான். இங்க மஃப்டில போலீஸ் இருந்தாங்க.

ஆனா அவன் நல்ல நேரமோ என்னவோ, அந்த டைம்ல அவன் இந்த பக்கமே வரல. நீயும் கோவிச்சுக்கிட்டு ரிட்டன் வந்துட்ட. அதுக்கு அப்பறம் இன்னைக்கு தான் மாட்டினான் அவன். அதான் உடனே தகவல் குடுத்துட்டேன்.” என்றான் சித்து. அப்போதும் மகிழ் குழப்பத்தோடே இருந்தாள்.

அவனே தொடர்ந்து, “அப்பறம் அவங்க நிஜமாலுமே இன்ஜினீயர் பண்ணிட்டு தான் போலீஸ்ல செலக்ட் ஆனாங்க. சைபர் கிரைம்க்கு சாப்ட்வேர் ரொம்ப முக்கியம் தெரியும்ல.” எனவும், “சரி சந்தேஷ் அப்பாக்கு எப்ப இன்பார்ம் பண்ணீங்க?” என விடாமல் கேட்டாள் மகிழ்.

“அவனைப்பத்தி நீ சொன்னதும் விசாரிச்சதுல சில தகவல் கிடைச்சது. அவங்கப்பாவை ஏமாத்த அப்பப்ப ஏதோ முக்கியமான வேலை விசயமா போறதா தகவல் சொல்லிட்டு காணாம போய்டுவான். அப்பறம் மூனு நாளு மாசம் கழிச்சு வீட்டுக்கு வருவானு சொன்னாங்க.

அவன் ஃபோனை என்கிட்ட ஃபோட்டோ காட்ட குடுத்ததும், நான் உன்னை அடிச்சேனா, உடனே அவன் கவனம் உன் மேல திரும்பிடுச்சு. நான் அதை யூஸ் பண்ணிக்கிட்டேன். நம்பு அந்த மெஸேஜை நான் டைப் கூட பண்ணல. ஏற்கனவே அவன் அனுப்புன மெஸேஜை காப்பி பேஸ்ட் பண்ணி அனுப்பினேன். அவ்ளோ தான்” என்றான் சித்து.

மகிழ், “எல்லாமே கரெக்டா தான் இருக்கு. ஆனா ஏதோ ஒன்னு தப்பாயிருக்கு. சரி இவ்ளோ தூரம் சொல்றதால நான் நம்பறேன்.” எனவும், “நீ டாக்டருக்கு படிச்சதுக்கு பதிலா வக்கீலா ஆகியிருக்கலாம். நீ இப்படிதானே நடந்ததுனு அழுத்தி கேட்டன்னு வைச்சுக்க, தப்பே பண்ணாதவன் கூட ஆமா நான்தான் பண்ணேனு ஒத்துகிட்டு சரண்டர் ஆகிடுவான்.” என்றான் சித்து.

“அப்படி இருந்தாலும். உங்களை மாதிரி கிரிமினல்கிட்ட உண்மையை வாங்க முடியாது. இப்பக்கூட சொல்றேன். நீங்க எதையோ மறைக்கிறீங்க.” என்றவளை பாவமாக பார்த்தவன், “நான் பாவம்டி. விடேன். பிளீஸ். பசிக்குது. வெளில பிரியாணி வாசம் வருது. போலாமா?” எனவும், “பார்த்தீங்களா. இப்பக் கூட எனக்கு வாசம் வரல. ஆனா உங்களுக்கு வெளில நடக்கிறதுல கவனம் போகுது” என்றாள் மகிழ்.

சித்து, “அடப்போடி. திடீர்னு ஊருக்கு போறாளே. நாம வேற அடிச்சிட்டமேனு பாவம் பார்த்து உள்ள வந்தா, இவ பேசியே ஆளை காலி பண்ணீடுவா போல.” எனவும், “ஹலோ. என்ன வார்த்தைக்கு வார்த்தை டீ போடறீங்க. நான் இன்னும் சரின்னே சொல்லல.” என்றாள் மகிழ்.

 

“ஆமாமில்ல. ஒன்னும் பிரச்சனை இல்ல. இரண்டாவது பையனை ஸ்கூல் சேர்க்கும்போது சொல்லு. சரியா” என்றுவிட்டு அவன் கதவை திறந்தான். “இரண்டாவது பையன்னா. அப்ப முதல்ல” என மகிழ் கேட்டது அறையை ஒட்டி அமர்ந்திருந்த இசையின் காதிலும் விழுந்தது.

 

சித்து அதைப் பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்போடு வேறுபக்கம் சென்று விட, அவன் பின்னேயே வந்த மகிழை கண்டு இசை சிரித்தாள். அவளை அருகில் இழுத்தவள், “இந்தாக்கா சாப்பிடு” என ஒருவாய் ஊட்டி விட்டு, “முதல்ல பொண்ணுனா எனக்கு ஓகே அக்கா” என்றதும் மகிழுக்கு புரையேறி விட்டது.

உடனே தண்ணீர் எடுத்து கொடுத்த ஆகாஷ், “எப்ப பாரு உனக்கு விளையாட்டுதான். அப்படி என்ன ஜோக் சொன்ன. பாரு சிரிச்சே புரையேறிடுச்சு” என்றதும், “அதெல்லாம் லேடீஸ் சீக்ரெட் சொல்ல முடியாது” என அவனிடம் கூறியவள், தனது வேலையை அதான் சாப்பிடுவதை தொடர்ந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் சற்று நேரத்திலேயே தனது பொருட்களை எடுத்துக் கொண்டு மகிழ் கிளம்ப, பாவம் அகல்யாவுக்கு தான் கண்ணீரே வந்து விட்டது. மகிழின் பள்ளித்தோழிதான் அகல்யா. கல்லூரியில் மகிழ் மருத்துவப்படிப்பை தேர்ந்தெடுக்க, அகல்யா பொறியியல் படிப்பை தெரிவு செய்தாள்.

எனினும் நேரம் கிடைக்கும் போது எப்படியும் தோழிகள் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவர். பயிற்சி பணிக்கு மகிழ் தேனி செல்லும் போது, அகல்யாவிற்கு கேம்பஸில் சென்னையிலேயே வேலை கிடைத்தது. அதற்கு பின்பு இருவரும் பார்த்துக் கொள்வது அரிதாகி போனது.

 

அவ்வபோது அலைபேசியில் பேசுவதோடு சரி. ஆனால் மகிழ் தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் அகல்யாவிற்கு தான் அழைத்தாள். அகல்யாவுடன் தங்கி இருந்த பெண்ணுக்கு அதே நேரம் பணி மாறுதல் கிடைத்து கிளம்புவதாக கூறி எதைப்பற்றியும் யோசிக்காமல் இங்கு கிளம்பி வர சொல்லி விட்டாள்.

 

சித்து அலுவலகத்தில் வேலை இருப்பதையும் அவள்தான் கூறி, அந்த பணி கிடைக்குமாறும் செய்தாள். தோழிகள் இருவரும் ஓரளவு சமாதானம் ஆக, அனைவரும் கிளம்பினர். வெளியே வந்து பார்த்தால் சிறிய வண்டியை டிரைவரிடம் கொடுத்துவிட்டு, பெரிய வண்டியை ஓட்டுவதற்காக அமர்ந்திருந்தான் சித்து.

 

“டேய் நீ எங்க கிளம்பிட்ட, நாளைக்கு ஆபிஸ் இருக்கு.” என்க, “ஆபிஸை பார்த்துக்க தானே நீ இருக்க, நான் இரண்டு நாள்ல வந்திடுவேன். நீ அந்த கார்ல வீட்டுக்கு போய்டு. ஓகே” என்ற சித்து கவின் பேச வருவதை கவனியாமலே காரை எடுத்து விட்டான்.

மாறி மாறி காரை ஓட்டிக் கொண்டும், கலகலப்போடும் அனைவரும் சாயங்காலமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மகிழை வெளியேவே நிற்க சொன்ன மீனாட்சி, உள்ளே சென்று ஆரத்தி எடுத்து வந்து ஆலம்சுற்றி மகளை உள்ளே அழைக்கையில் கண்கள் கலங்கி விட்டது அவருக்கு. குணசேகரனும் கண்கள் கசிய அதை பார்த்திருந்தார்.

உடனே அனைவருக்கும், டீயும், பக்கோடாவும் போட்டு எடுத்து வந்து உபசரித்தார் மீனாட்சி. “அப்பாடா.. உன் கையால டீ குடிச்சு ரெண்டு நாள் ஆகிடுச்சுமா. ஏலம் மணக்கும் மீனாவின் அருமையான தேநீரை சுவைத்து பருகுவீர். என விளம்பரம் செய்துக் கொண்டே இசை தேநீரை எடுக்க, “ரெண்டு நாள் எங்க ஆச்சு. நேத்து பத்து மணிக்கு மேலதானே கிளம்புனோம். இன்னைக்கு ரிடர்ன் வந்துட்டோம்” என்றான் ஆகாஷ்.

“விடு ஆகாஷ். அவளை பத்தி தெரியாதா உனக்கு. ஆனா ரெண்டு நாள் கூட முடியல. ஆனா எவ்வளவு விசயம் நடந்திருச்சுல்ல..” என்ற மீனாட்சி மகிழை பார்க்க, அவளோ எதுவும் பேசாமல் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ஹேய் இசை டீயை குடிச்சிட்டல்ல. அக்காவை ரூம்க்கு கூட்டிட்டு போ.” என்றார். “இல்லைங்ம்மா பரவால்ல” என மறுத்த மகிழ், “உங்க வீடு எங்க இருக்கு ஆகாஷ்” எனக் கேட்டாள். அவன், “நான் அண்ணாநகர்ல ப்ளாட்ல இருக்கேன்.” எனவும், சித்து, “சரி ஆகாஷ் அப்ப நாம கிளம்பலாம்” என்றதிலே சற்று துணுக்குற்றான் சந்துரு.

 

“ம்ம். போகலாம்.” என்றவன் அவர்களிடமும் கூறிக் கொண்டு விடைபெற்று வெளியில் வந்தனர். அதற்கு முன் சித்து மகிழிடம் ஃபோன் செய்யுமாறு சைகை காட்டி விட்டு கண்களாலே விடைபெற்றான். அதுவரையிலும் பெற்றவர்கள் அவர்களது உறவை பற்றி எதுவுமே கூறவில்லை.

 

அதைப்பற்றிய பேச்சும் எடுக்கவில்லை. அவர்கள் சென்றபிறகு, “வாக்கா. வீட்டை சுத்தி காட்டறேன்” என இசை அவளை அழைத்துச் சென்றாள். வெளியே வந்தபின் சந்துரு, “அப்ப நீ நம்ப வீட்டுக்கு வரலயாண்ணா” எனக் கேட்க, “இல்ல கொஞ்சம் வேலை இருக்கு. ஆகாஷோட இருந்தா பெட்டர். நீ கிளம்பு.” என்றான் சித்து.

அதற்கு மேல் வற்புறுத்தினாலும் சித்து கேட்க மாட்டான் என நினைத்த சந்துரு, கசங்கிய முகத்தோடு சென்றுவிட, ஆகாஷோடு அவனது வீட்டிற்கு வந்தான் சித்து. அப்போது வரும் வழியில், “ஆமா. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க. நான் வந்தா எதுவும் சொல்ல மாட்டாங்களா?” எனக் கேட்டான் சித்து.

 

“நான் தனியாத்தான் இருக்கேன். சோ யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க சார்.” என்றான் சித்து. “நீயும் எனக்கு சந்துரு மாறிதானே இன்னும் என்ன சார். சும்மா பேர் சொல்லிக் கூட கூப்பிடு. நோ பிராப்ளம்” என்ற சித்து, “அப்ப அம்மாப்பாலாம் எங்க இருக்காங்க” என விசாரிக்க, தன்னைப் பற்றி கூறிவிட்டான் ஆகாஷ்.

 

“சாரிடா. கேட்டு உன்னை கஷ்டப்படுத்திட்டேன். நீ கவலைப்படாத. அதான் அண்ணன் நான் இருக்கேன்ல. எல்லாம் பார்த்துக்கலாம்” என தைரியம் கூறினான் சித்து. வீட்டிற்கு வந்ததும், “இப்ப அந்த முகிலனுக்கு ஃபோனை போட்டு, நான் வீட்டுக்கு வந்துட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வரியான்னு கேளு.” என்றான் சித்து.

 

“நீங்க இங்க வரேனு சொல்லும் போதே யோசிச்சேன்.” என்றவாறே ஃபோன் செய்து அவன் கூறியபடியே கூறி வைக்க, அவனும் வருவதாக கூறினான். பிறகு உணவு ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டு முடித்ததும், மகிழுக்கு அழைப்பு விடுத்தான் சித்து.

 

மறுமுனையில், “சொல்லுங்க. வீட்டுக்கு போயாச்சா” என மெதுவாக ஒரு குரல் கேட்க, “அதெல்லாம் அப்பவே வந்துட்டேன். சும்மாதான் ஃபோன் பண்ணேன். உனக்கு புது இடம்ல.” என்றான் சித்து. “ஆமா நானே நினைச்சேன். தூக்கமே வரல” என்றாள் ஹஸ்கி குரலில்.

அப்போதுதான் குரல் ஏதோ வித்தியாசமாக பட, “ஏன் மெதுவா பேசற. உன் குரல் வித்தியாசமா இருக்கு ஏன்?” என்க, “அது எல்லாரும் இருக்காங்க. அதான்” எனும்போதே சித்து, “ஏய். பேசறது இசைதானே.” என கண்டுபிடித்து விட்டான்.

 

“இதை கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா மாம்ஸ்” என சலித்துக் கொண்டாள் இசை. “முதல்லயே டவுட்டா தான் இருந்தது. அதான் கேட்டேன்” என்ற சித்து மகிழை கேட்டான்.

“நீங்களே இந்த கொடுமையை கேளுங்க மாம்ஸ். இத்தனை வருஷமா இந்த வீட்ல இருக்கேன். ஒரு நாளாவது உனக்கு என்ன வேணும்னு கேட்டுருப்பாங்களா? இப்ப என்னனா, மகி இது சாப்பிடுவியா, அது அலர்ஜியான்னு கேட்டு என்ன சமைக்கிறதுனு யோசிக்கவே எட்டு ஆகிடுச்சு. இப்பதான் ஒரு முடிவுக்கு வந்து  சமைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. சரி நீங்க முடிச்சிட்டு சொல்லுங்கன்னு ஒரு ஆப்பிள் எடுத்துட்டு உள்ள வந்துட்டேன்” என்றதில் சித்து சிரித்து விட்டான்.

“ஆமாமா, நீதான் மாட்டுக்கு போடற புல்லுல இருந்து கழுதைப் பாலே குடுத்தாலும் கலங்காம சாப்பிடுவ. அதனால கேட்டுருக்க மாட்டாங்க. பட் என் வதனி தாங்குவாளா” என அவன் இவளை கலாய்க்க, இசை கூறியது அவளை அழைக்க வந்த மகிழுக்கும் கேட்டது.

 

“உங்க ஆளு வந்தாச்சு. நான் ஃபோனை குடுக்கறேன். இதுக்கெல்லாம் இன்னொரு நாள் பதில் சொல்லியே ஆகனும் நீங்க.” என்றாள் இசை. சித்து, “இப்பவே சொல்றேன்மா.” என்க, “ஆனா நான் கேட்கல. ஏன்னா எனக்கு பசிக்குது. பிடி” என ஃபோனை குடுத்து விட்டு சென்று விட்டாள் இசை.

மகிழிடம், “எல்லாம் ஓகே தானே. ஏதாவது பிரச்சனைன்னா கூப்பிடு. கடைசி வரைக்கும் நீ என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லவே இல்லைல” என்றான் சித்து. “அதைப்பத்தி இன்னொரு நாள் பேசலாம் அபி. நிறைய ஷாக் ஒரே நாள்ல” எனவும், அவளது மனநிலையை புரிந்தவன் சரியென்று அழைப்பை துண்டித்தான்.

இங்கு அனைவரும் சேர்ந்து உணவருந்தியதும், இன்று இசையின் அறையிலே மகிழை தங்கிக் கொள்ளுமாறும், நாளைக்கு மற்றொரு அறையை தயார் செய்து தருவதாகவும் மீனாட்சி கூற, மகிழும் சரியென்றாள்.

 

மீனாட்சியிடம் ஏதோ பேசிவிட்டு சற்று கழித்து அறைக்கு வந்த இசையிடம், “நான் வந்ததால உனக்கு இங்க முக்கியத்துவம் குறைஞ்ச மாதிரி ஃபீல் பண்றீயா. சாரி இசை” என மகிழ் கூற, இசைதான் அவளை வெறித்து பார்த்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்