Loading

            ஆகாஷ் தனது வீட்டை பற்றி மகியிடம் கூற அதில் வேதனையுற்றவள் பணி நேரம் முடிந்ததும் ஆகாஷை தன்னுடன் வருமாறு அழைத்தாள். அவனும் மறுப்பேதும் கூறாமல் அவளுடன் அமைதியாக வர மகிதான் அவனை மாற்றும் பொருட்டு ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள்.

பிறகு ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றவர்கள், “அப்பாம்மா பண்ணது சரின்னு சொல்லல. ஆனா அவங்க உன் மேல பாசமா தானே இருக்காங்க. நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கலாம்ல.” எனக் கேட்டாள் மகி. “எப்படி எனக்கு தேவையான பணத்தை கொடுத்து பெரிய காலேஜ்ல படிக்க வைக்கிறது தான் பாசமா மகி.” எனக் கேட்டான் ஆகாஷ்.

“ஹேய். நான் அப்படி சொல்லல. இப்பவும் மாசம் ஒருமுறை பார்க்க வராங்கன்னு சொன்னல்ல. அதை தான் சொன்னேன்.” என்றாள் மகி. “பாசம்லாம் ஒன்னும் இல்ல மகி. எல்லாம் வேஷம். அப்பறம் ஈகோ. எங்க தாத்தாவோட பூர்வீக நிலம் கொஞ்சம் இருக்கு. அதை என் பேர்ல எழுதி வைச்சிருக்காங்க.

இவங்க ரெண்டு பேருக்கும் அந்த லேண்ட் மேல ஒரு கண்ணு. எவ்வளவு வேணா பணம் தர ரெடியா இருக்காங்க. என்கிட்ட கேட்டு பார்த்தாங்க. நான் தரமுடியாதுனு சொல்லிட்டேன். அதுனால முன்னாடி அக்கவுண்ட்ல வந்துட்டு இருந்த பணம் இப்ப நேர்ல வருது அவ்ளோதான்.” என்றான் வெறுமையாக.

பிறகு அவனே, “ரொம்ப சின்ன வயசில அவங்க விட்டுட்டு போயிருந்தா கூட அது எனக்கு கஷ்டமா இருந்திருக்காது மகி. ஆனா நான் செவன்த் படிக்கறப்ப தான் இது நடந்தது. ரெண்டு பேருக்கும் வேற வேற அஃபேர் இருந்திருக்கு. ஆனா அது ரெண்டு பேருக்குமே தெரியல.

தெரிஞ்சப்ப எந்த வித குற்ற உணர்வும் இல்லாம அவங்களோட போயிட்டாங்க.. இது தெரிஞ்சப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லு.” என்ற ஆகாஷூக்கு கண்கள் கலங்கி நிற்க, ஆதரவாக அவனது கரம் பற்றிய மகி, “இப்படில்லாம் கூட நடக்குமா ஆகாஷ். நான் கேள்விப்பட்டதே இல்ல.

இனிமேலும் என்ன அவங்களை முறை வைச்சு கூப்பிடற. விட்டு தள்ளு. அவங்களுக்கு நீ வேணாங்கற மாதிரி உனக்கும் அவங்க வேணாம். வா போகலாம்.” என அவனது வீட்டிற்கு அழைத்து சென்றவள், சில பொருட்களை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

ஆகாஷ், “இப்ப எங்க கூட்டிட்டு போற?” என கேட்டவனை கண்டு கொள்ளாமல் கூட்டி வந்த இடம் அவளது வீடு. “என்னடி இன்னைக்கு இவ்ளோ லேட்டு” என்றபடியே வெளியில் வந்த மீனாட்சி அவளுடன் நின்றிருந்த ஆகாஷை பார்த்து திகைத்தார்.

மகி, “என்னம்மா. அப்படி பார்க்கிற. இதுதான் ஆகாஷ். நான் சொல்லியிருக்கேன்ல.” என்க, அவரும் அவனை வரவேற்று உள்ளே அழைத்தார். மகியின் தந்தையும் அன்று சீக்கிரமே வந்திருக்க, ஆகாஷை அவரும் வரவேற்றார்.

பிறகு மீனாட்சி தண்ணீர் கொடுக்க அப்போது மகி, “அம்மா இனிமே ஆகாஷ் இங்கதான் இருக்க போறான்.” என்றதில் இருவரும் அதிர்ந்தனர். அதே நேரம் ஏதோ கேட்க வந்த எதிர் வீட்டு அம்மா மகி கூறியதை கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்ததை யாரும் பார்க்கவில்லை.

“மகி.. என்ன பேசிட்டு இருக்க நீ. கொஞ்சம் பொறுமையா இரு.” என்றான் ஆகாஷ் அவளிடம். “மகி நீ என்ன சொல்ல வரன்னு முழுசா சொல்லு. நீ என்ன பேசறன்னு புரிஞ்சுதான் பேசறீயா?” என்றார் மகியின் தந்தை குரலை உயர்த்தாமல் அதே நேரம் கண்டிப்பாக.

“நீ இங்கையே இரு ஆகாஷ் இப்ப வந்திடுவோம்.” என தனது பெற்றோரை உள் அறைக்கு மகி அழைத்து செல்ல ஆகாஷ்தான் தர்மசங்கடமாக உணர்ந்தான்.

உள்ளே சென்றதும் மீனாட்சி, “என்ன பண்ணிட்டு இருக்க மகி. ஆகாஷ் எதுக்கு இங்க தங்கனும். உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்படிதான் பண்ணுவியா. நீ இங்க இருக்கப்ப அவன் எப்படி இங்க தங்க முடியும். பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?” என்றார்.

“அவன் என்னோட ஃப்ரண்ட்மா. இதுக்கு முன்னாடியும் என் ஃப்ரண்ட்ஸ் நிறைய பேரை நான் கூட்டிட்டி வந்திருக்கேன்ல. இப்ப மட்டும் ஏன் நீ டென்ஷன் ஆகற?” என புரியாமல் கேட்டாள் மகி. “ஆமா. ஆனா யாரையாவது இங்க தங்க வைச்சிருக்கியா. அப்படி என்ன ஆகாஷ் மட்டும் உனக்கு ஸ்பெஷல்” எனக் கேட்டார் மகியின் தந்தை.

“எனக்கு ஆகாஷ் ஸ்பெஷல் தான்பா. என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். வேற யாரையும் தங்க வைக்கல. ஏன்னா எல்லாருக்கும் வீடு இருந்தது. அதுல அப்பாம்மா இருந்தாங்க. ஆனா ஆகாஷூக்கு அப்படி யாருமில்ல. அதான்பா இங்க கூட்டிட்டு வந்தேன்.

அவங்கப்பாம்மா இரண்டு பேரும் சரியில்ல. ஆனா நீங்க நல்ல பேரண்ட்ஸ். எனக்கு மட்டும் இல்ல. அவனுக்கும் அந்த பாசம் வேணும்பா. நீ அவனுக்கும் அம்மாவா இருக்கனும்மா. நாம மூனு பேர் மட்டும்தானே இங்க இருக்கோம். கூட அவனும் இருக்கட்டும். நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா. நீங்க என்கூட வர மாட்டீங்க.

வீட்டோட மாப்பிள்ளையும் பார்க்க முடியாது. ஆனா ஆகாஷ் உங்களையும், நீங்க அவனையும் பார்த்துப்பிங்க. எனக்கும் அண்ணன் மாதிரி ஒரு சொந்தம் கிடைக்கும்ல.” என மகி பேசியதும் இருவருக்கும் கலவையான உணர்வுகள் தோன்றி மறைந்தன.

சிறு பெண் என நினைத்திருந்தவள் இவ்வளவு யோசித்திருக்கிறாளா எனவும், இவளை போய் ஒரு நிமிடம் தவறாக எண்ணி விட இருந்தோமே எனவும் நினைத்த அவளது பெற்றவர்களுக்கு நடைமுறை சிக்கலும் புரியாமலில்லை. அவளுக்கு எப்படி புரியவைப்பது என யோசித்துக் கொண்டே வெளியில் வந்து பார்த்தபோது ஆகாஷ் அங்கு இல்லை.

             கவின் வீட்டிற்கு வந்தபோது அங்கு நடந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியாகி கோபத்தின் உச்சத்திற்கே சென்றான். “டேய். என்னடா பண்ணிட்டு இருக்க?” என சித்துவிடம் வேகமாக கேட்டவன், மகிழிடம் ஒரு பையை கொடுத்தான்.

அதில் அவளது பொருட்கள் இருக்க இதை எதற்கு இங்கு எடுத்து வர வேண்டும் என்ற கேள்வியோடு கவினை பார்க்க, அவனோ சாப்பிட்டு கொண்டிருந்த சித்துவை முறைத்து கொண்டிருந்தான். “ஏன் இப்ப நீ முறைக்கற. ஓ உன்ன விட்டுட்டு சாப்பிடறேனா. சாரிடா. வா உட்காரு. மகிழ் அந்த தட்டு எடு” என்றான் சித்து.

“நீ சாப்பிடறன்னு தெரியுது. என்ன சாப்பிடுற.” என கவின் கேட்க, “பார்த்தா தெரியல. உப்புமாடா. செம டேஸ்டா இருக்கு மச்சி. நீயும் சாப்பிட்டு பாரேன்.” என அக்கறையாக கூற.. மகிழும் “சாப்பிடுங்க.” எனவும், அவள் முன் எதுவும் கூறாமல் சாப்பிட்டு முடித்தவன் எதுவும் பேசாமல் அறைக்கு சென்றான்.

அவன் சென்றதும் மகிழ் சித்துவிடம், “எதுக்கு என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர சொன்னீங்க? அவன் போயாச்சுன்னு மெஸேஜ் பண்ணியிருந்தாளே அகல்.” எனக் கேட்டாள் மகிழ். “இல்ல மகிழ் அவன் இன்னும் போகல. ஒரு டூ டேய்ஸ் மட்டும் நீ இங்க இரு. அதுக்கப்பறம் அங்க போகலாம். உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லல்ல. இங்க ஸ்டே பண்றது.” எனக் கேட்டான் சித்து.

“ம்ம்” என மகிழ் தலையாட்ட அவளுக்கு ஒரு அறையை காட்டியவன் கவின் சென்ற அறைக்கு செல்ல, அவனோ அதே கோப முகத்தோடு அமர்ந்திருந்தான். “என்னாச்சு மச்சி. ஏன் ஒரு மாதிரியே இருக்க.” என சித்து கேட்கவும், “அது ஒன்னுமில்ல. உப்புமா எப்ப உன் பேவரைட் ஃபுட்டா மாறுச்சு. ரசிச்சு சாப்பிடற.” என்றான் கவின்.

“அது அப்படில்லாம் மாறலடா. பர்ஸ்ட் டைம் சமைச்சிருக்கா. பிடிக்கலன்னு சொன்னா மனசு கஷ்டப்படும்ல.” என்றான் சித்து. “மச்சி நீ மகிழை லவ் பண்றீயா?” என கவின் நேரடியாகவே கேட்க, அதற்கு பதில் ஏதும் கூறாமல் அமைதி காத்தவன், “அதை பத்தி அப்பறம் பேசலாம்டா. அங்க எதுவும் பிரச்சனை இல்லல்ல அகல்யா என்ன சொன்னாங்க.” எனக் கேட்டான் சித்து.

“ஆமா. கரெக்டா கேட்டீங்க சார். அபின்னா யாரு.” என கவின் நக்கலாக கேட்க, “நான்தான்டா. தெரியாத மாதிரி கேட்கற. மகிழ் எப்பவும் அப்படிதானே கூப்பிடுறா.” என சித்து கூறவும், “ஆனா உங்க மகிழ் அகல்யாகிட்ட நீ ஒரு பொண்ணுனு ஏன் சொல்லி இருக்காங்க.” என்றான் கவின்.

“என்னடா உளர்ற. மகிழ் ஏன் அப்படி சொல்லனும்” என கேட்கவும் அங்கு நடந்ததை நினைவு கூர்ந்தான் கவின். சித்து கவினுக்கு ஃபோன் செய்து பிரச்சனை பற்றி கூறிவிட்டு  அகல்யாவிடம் மகிழுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருமாறு கூறவும் அவனும் சரியென்று அங்கு சென்றான்.

நடுவிலே ஒருவன் வழி மறித்து, “யாரை பார்க்கனும்” எனக் கேட்க, “என் ஃப்ரண்ட் அகல்யா இங்க இருக்காங்க. ஆமா நீங்க ஏன் அதை கேட்கறீங்க?” எனவும், “இல்ல சும்மாதான். போங்க.” என வழிவிட்டான். அகல்யாவோ இவனை கண்டதும், “நீங்க கவினா?” எனக் கேட்க தலையாட்டினான்.

அகல்யா, “இப்பதான் மகிழ் மெஸேஜ் பண்ணா. அபி வீட்ல தான் இருக்கேன். கவின்னு ஒருத்தர் வருவாங்க. என் திங்க்ஸ் லாம் கொஞ்சம் குடுத்து அனுப்புனு. நீங்க அபியோட பிரதர்தானே சார். நான் கூட பயந்துட்டே இருந்தேன். எனக்கு முதல்லயே உங்க சிஸ்டர் நியாபகம் வரல. இல்லனா அவ வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்” என்க, கவின் ஏதோ கூற வந்தான்.

அவளோ அதை கவனியாமல், “ஓகே சார். நீங்க ரொம்ப நேரம் இங்க இருக்க வேணாம். அவளை கொஞ்சம் பார்த்துக்கோங்க. உங்க சிஸ்டர்கிட்டயும் சொல்லுங்க.” என அவனை பேசவே விடாமல் கிளப்பினாள். கவின் இதை கூறி முடித்ததும் சித்துவின் நெற்றியில் சிந்தனை கோடுகள் உருவானது.

“ஏண்டா மகிழ் அப்படி சொன்னதெல்லாம் இருக்கட்டும். அந்த அகல்யா ஏன் பேசவே விடாம ஓயாம பேசுது. மகிழ் அமைதியா இருக்கு. எப்படிதான் ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸோ. ஒன்னு மட்டும் சொல்றேன்டா. இன்னைக்கு அது பேச்சை கேட்காம மகிழ் நிம்மதியா தூங்கும்.” என்ற கவின் படுத்துவிட சித்துவும் அருகில் படுத்தான்.

அடுத்தநாள் ஸ்ரேயாவை வர சொல்லி வழக்கம்போல சித்து கவினின் எண்ணில் இருந்து செய்தி அனுப்ப.. ஸ்ரேயாவும் வந்தாள். சரியாக மூவரும் கிளம்பி வெளியில் வர ஸ்ரேயாவை கண்டதும் கவின், “ஓ நியூஸ் போயாச்சா. சரி மச்சி. நான் அப்படியே கிளம்பறேன்.” என அவளது வண்டியில் ஏறப்போனான்.

அப்போது சித்து, “இரு மச்சி. ஸ்ரேயா மகிழை பிக்கப் பண்ணட்டும். நீ என்கூடவே வா. சரியா?” என்ற சித்து வண்டியை எடுக்க, “ஏன் மச்சி. நேத்து மகிழ் உப்புமால ஏதாவது கலந்துருச்சோ?” என்றான் கவின் யோசனையாக.

“ஏண்டா அதை நீ விடவே மாட்டியா?” என சித்து கடுப்பாக, “இல்ல மச்சி. நல்ல பிள்ளையா மகிழை ஸ்ரேயா கூட அனுப்பறீயே அதான் கேட்டேன்.” என்றான் கவின். சித்து, “நீ நல்லா வாங்க போறடா.” என்க, கவின், “பார்த்துக்கலாம் போடா.” என்றான்.

ஆனால் சித்து கூறிய நேரமோ என்னவோ அலுவலகத்தில் சித்துவின் அறையில் கவின் இருக்க, ஒரு பெண் வேகமாக உள்ளே நுழைந்து ஒரு கத்தியால் கவினை குத்த வர கவின் அதிர்ச்சியாகி விலக முயன்றான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்