இதயம் 32 : (இதயத்திலே காதல் யுத்தம்)
“தேவா…”
வீட்டிற்கு முன் கார் வந்து நிற்கவும், உள்ளிருந்து வேகமாக வந்த வரு முதலில் இறங்கிய ஆதியை கண்டு உற்சாகமாகக் கூவினாள்.
கரம் விரித்து தன் அன்பு மருமகளை அணைத்தவர் உச்சியில் முத்தமிட்டு, தலை வருடி கொடுத்தார். வருவின் மீதான அதீத பாசத்தின் வெளிப்பாடு.
“இப்போ யாது இருந்திருக்கணும்” என்றவாறு பின்னிருக்கையிலிருந்து ஹரியுடன் இறங்கிய ஆதினி… “டாட் அதான் உங்களுக்குத்தான் மாம் இருக்காங்க தானே, ஷீ இஸ் மைன்… ஸ்ட்ரிக்ட்லி மைன் அப்படின்னு சொல்லியிருப்பான்” என்று தன் தம்பி போலவே சொல்லிக்காட்ட, இவர்களின் வருகை அறிந்து வீட்டிலிருந்து வருவிற்கு பின்னால் வந்த சூர்யா கல்பனா உட்பட அனைவரும் ஒரு சேர சிரித்து வைத்தனர்.
“வாங்க மாமா.
வாங்கண்ணா, வாங்கண்ணி…
வாப்பா ஹரி, ஆதும்மா…”
சூர்யா கல்பனா தம்பதியினர் ஒன்றாக தங்களது உறவை வரவேற்று உள் அழைத்துச் சென்றனர்.
“யாது அண்ட் விஷ் எங்க மாமா?”
“கேம்ப் லாஸ்ட் டே… ஃபைனல் பண்ணிட்டு வரேன்னு சொன்னாங்க. இந்நேரம் வந்திட்டு இருக்கணும்.”
“வந்தாச்சு…” என்றபடி அவர்களின் பேச்சுக்கு காரணமான இருவரும் உள் நுழைய, விஷால் ஆர்ப்பரித்திருந்தான்.
“ஆதுக்கா” என்றவாறு ஓடி வந்தவன் ஆதினியை அணைத்து விடுவித்து, “என்ன மாம்ஸ் ஃபாரின்ல செட்டிலாகப் போறீங்களாம்?” என்று அவர்களின் பயணத்தைப்பற்றி வினவினான்.
ஆதியின் அருகில் அமைதியாக வந்தமர்ந்த யாது… தந்தையின் கையை இறுகப்பற்றிக் கொண்டு அவரின் தோள் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
“ஹெவி வொர்க்கா யாது கண்ணா?” மகனின் இந்த சோர்வு உடலால் அல்ல மனதால் என்பது பாசமிகு தந்தையாய் அவருக்கு நொடியில் புரிந்துதான் இருந்தது.
“நத்திங் டாட்” என்றவன்,
“கொஞ்சம் ரெஃபிரஷ் பண்ணிட்டு வரேன் மாம்” என்று நிரலியிடம் சொல்லியவனாக தன்னறை நோக்கிச் சென்றான்.
யாதவ் உள்ளே வந்தது முதல் இப்போது அவன் மாடியேறி செல்லும் வரை வருவின் கருவிழிகள்அவனையே வட்டமிட்டிருந்தன.
கலங்கும் நெஞ்சத்தை மற்றவர்களுக்காக திடப்படுத்தி அமர்ந்திருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வரு கேட்ட கேள்விக்கு யாதவ் இன்னும் பதில் அளித்திருக்கவில்லை. அவனாக அவளை நெருங்கவில்லை. நெருங்கி செல்லும் வருவையும் தவிர்த்தவனாக யாதவ்.
எதை நினைத்து விலகி செல்கிறான்? அவனிடம் எதற்காகத் தடுமாற்றம் அவன் மட்டுமே அறிந்தது.
வருவை பரிசோதித்த தேஜ் கூறியவற்றை நன்கு கேட்டு… தன்னுடைய சந்தேகங்கள் பலவற்றையும் கேட்டு எந்தெந்த நேரம் என்ன மாத்திரை கொடுக்க வேண்டுமென அறிந்து வந்தவன் அதன்படி வருவை நன்றாக பார்த்துக்கொண்டான்.
நேரம் தவறாது அவள் உண்ணுகிறாளா என்பது முதல், மாத்திரைகளை சரியான நேரத்திற்கு தானே சென்று எடுத்து கொடுத்து விழுங்கச் செய்வான். அப்படி அவன் வருவின் அருகில் செல்லும் போதெல்லாம், எனக்கு பதில் சொல்லேன் என்று அவளின் விழிகள் கெஞ்சும். இருந்தும் சிறு வார்த்தையும் உதிர்க்காது சென்றிடுவான்.
இதற்குமேல் எப்படி கேட்பதென்று வருவும் அவனுடனான தன் பேச்சிற்கு பூட்டிட்டுக்கொண்டாள்.
வந்திருந்தவர்கள் பயண அலுப்புத் தீர, உணவு உண்டதும் தத்தம் அறைக்குள் சென்று முடங்கினர்.
வரு தூக்கம் வராது விழித்திருக்க, ஆதினியிடம் சிறிது நேரம் கதைத்திருந்தாள்.
“உன் முகத்தில் தனியா ஏதோ ஒன்னு தெரியுது வரு. என்னன்னு கண்டுபிடிக்க முடியல, ஆனால் அதுவும் அழகாத்தான் இருக்கு.” ஆதினி சொல்ல வருவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘எப்படி இது? அப்படியா முகத்தில் தெரிகிறது?’ அது தாய்மையின் பூரிப்பு. தாய்க்கே உண்டான வரமல்லவா அது. பெண்களுக்கு அழகே தாய்மை தானே. சொல்லாவிட்டாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுமே!
‘இன்னமும் ஏன் சொல்லாமல் இருக்கணும்?’ அந்நொடி சொல்லிவிடலாமென்று நினைத்தாலும், யாதவுடன் இணைந்து ஒன்றாக எல்லோரிடமும் சொல்ல வேண்டுமென்ற ஆசை முகிழ்க்க, ஆதினியிடம் சொல்ல துடித்த நாவினை வாயிற்குள்ளாவாகவே கட்டிப்போட்டாள்.
ஹரி அழைக்க ஆதினியின் கவனம் வருவிடமிருந்து கணவனிடம் சென்றதால், வருவின் முகத்தில் ஓடிய தீவிர ஆராய்வை அவளறியாது போனாள்.
“சரி வரு காலையில் பேசலாம்” என்ற ஆது உறங்கச் சென்றாள்.
வருவும் இதற்கு மேல் கூடத்தில் அமர்ந்திருந்தால் என்னயென்ற பேச்சு வரும் என்பதற்காக அங்கிருந்து செல்ல எத்தனிக்க…
“அம்மாடி வரு” என்ற சூர்யாவின் விளிப்பு அவளின் நடையை நிறுத்தியது.
“சொல்லுங்கப்பா…” சூர்யா ஏதோ கேட்க வருவதுமாக தடுமாறவுமாக இருக்க… இப்போதைக்கு அவர் கேட்க மாட்டாரென்று எண்ணிய கல்பனா அவரே கேட்டிருந்தார்.
“எங்ககிட்ட எதாவது மறைக்குறியா வரு?”
“ம்மா…”
“உண்மையை சொல்லு… உண்டாயிருக்கியா?” என பானையை உடைத்தது போல் பட்டென்று வார்த்தையை உதிர்த்திருந்தார்.
வருவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
ஆதினி வருவிடம் கேட்கும்போது அப்பக்கம் எதற்கோ வந்த கல்பனாவின் செவிகளிலும் ஆதினி கேட்டது நன்கு விழுந்தது.
அதன் பின்னர் அவரும் சில நிமிடங்கள் மகளின் முகத்தையே ஆராய்ந்தவாறு நின்றுவிட்டார்.
தாய் அறியாமல் இருக்க முடியுமா? பெண் பிள்ளைகளின் முகத்தை வைத்தே மகளின் மாற்றத்தை அறிந்திடும் வல்லமை தாய்க்கு உண்டு. சுருங்கச் சொன்னால், தாய் அறியா சூலா. அப்போதுதான் வருவின் முகத்தில் சில நாட்களாக தென்படும் சோர்வும், உணவு உண்ணும் நேரம் ஏற்படும் குமட்டலும் கல்பனாவிற்கு எதையோ எடுத்துக்கூற, ஆதினி சொல்லிய அழகு… தாய்மை தந்த பொலிவென அவர் மனம் நொடியில் கண்டுபிடித்தது.
உடனடியாக தங்களது அறைக்கு விரைந்தவர், சூர்யாவிடம் சொல்லி வருவிடம் கேட்க… கூட்டி வந்திருந்தார்.
“சொல்லுடி…”
“சொல்லுடாம்மா… அம்மா கேட்கிறது உண்மையா?”
பெற்றவர்கள் இருவரிடமும் மெல்லிய ஏக்கம். இதன் மூலமாவது தங்கள் பிள்ளையின் வாழ்வு நேர் பெற்று விடாதா என்று.
“எதுக்குடி இப்படி வாய் திறக்காமல் நின்னுட்டு இருக்க… பதில் பேசுடி.”
கல்பனா சற்று குரலுயர்த்தி கேட்டிட… அனைவரும் அறையிலிருந்து கூடத்திற்கு வந்திருந்தனர்.
“கல்பனா… என்னம்மா? ஏன் குட்டிம்மாவை திட்டிட்டு இருக்க?”
மருமகளுக்கு ஆதரவாக வருவின் அருகில் வந்து, அவளின் தோளில் கையிட்டு அணைத்து நின்ற ஆதி கல்பனாவிடம் வினவினார்.
“அதிகமா செல்லம் கொடுத்துதான் கெடுத்து வச்சாச்சுண்ணா. உங்க மருமகள் என்ன பண்ணான்னு நீங்களே கேளுங்க” என்ற கல்பனா வருவை நன்றாக முறைத்தார்.
“சூர்யா என்னடா… என்ன நடந்தது?”
வரு தலை குனிந்திருக்க… ஆதி சூர்யாவிட கேட்டார்.
வரு வாய்திறந்து சொல்லாமல் அவரால் கல்பனாவின் வார்த்தையை எந்தளவிற்கு உண்மையென ஏற்பதென்று குழம்பியிருக்க, ஆதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவார்.
சூர்யாவின் முகத்தை வைத்தே, அவர் பதில் சொல்லும் நிலையில் இல்லையென யூகித்த ஆதி…
“யாருக்கு எப்போ சொல்லணும் தோணுதோ அப்போ சொல்லுங்க” என்று கோபம் கொண்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.
ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் நின்றிருக்க…
“அதான் மூணு பேரும் வாய் திறந்து பதில் சொல்லுறது மாதிரி தெரியலையே! எதுக்கு இப்படி பேய் மாதிரி நைட் டூட்டி பார்க்கணும். பேசாமல் போய் தூங்கலாமே!” என்று விஷால் ஹரியின் காதில் கிசுகிசுத்தான்.
அது அனைவர் காதிலும் தெளிவாக விழ… எல்லோரின் முறைப்பிற்கும் காரணமானான் விஷால்.
“இதுக்கு வாய் மூடிட்டு வேடிக்கையே பார்த்திருக்கலாம் இல்லையா?” ஹரி விஷாலை கேலி செய்ய, விஷ் சிரித்து சமாளித்தான்.
“அண்ணி என்னன்னு நீங்க சொல்லுங்க ப்ளீஸ்…” நிரலி வேண்ட, ‘தன் கணிப்பு தவறாக இருந்துவிட்டால் அனைவரும் இச்சூழலில் ஏமாறும் வாய்ப்பிருக்கிறது’ என நினைத்த கல்பனா,
“அதை உங்க மருமகள் தான் சொல்லணும்” என்று மகளை உருத்து விழித்துக்கொண்டு கூறினார்.
நிரலிக்கு ஆயாசமாக வந்தது.
“வரு…”
“பேபி யாருக்கும் சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு… வா போய் தூங்கலாம்.”
நிரலி வருவிடம் கேட்க வருகையில் ஆதி மனைவியை தடுத்தவராக இருக்கையிலிருந்து எழ,
அதுவரை மேலிருந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த யாது கீழே வந்து, மனைவியின் தோளோடு தன் புஜம் உரச நின்று, தன்னுடைய இடது கையால் வருவின் வலது கையை கோர்த்து… விரல்கள் ஒன்றோடொன்று பிண்ணிக்கொள்ள இறுக்கி பிடித்தவன்,
நிமிர்ந்து நின்று…
“மாம் அண்ட் டாட், அத்தை அண்ட் மாமா” என்று நால்வரைச் சுற்றியும் பார்வையை ஓட்டியவன்,
“வீ ஆர் பிரெக்னென்ட்.”
“நீங்க தாத்தா பாட்டி ஆகிட்டீங்க. உங்க பேரக்குழந்தைக்கு வயது டூ மந்த்ஸ்” என்று உண்மையை உடைத்தான்.
அந்நொடி வருவின் பார்வை உயர்ந்து யாதுவின் முகத்தை சந்தித்தது.
நிரலி வருவின் அருகில் வந்து அவளின் கன்னம் ஏந்தி… உதட்டில் புன்னகை, கண்களில் நீர் நிறைய உண்மையா எனும் விதமாக பார்வையால் வினா தொடுத்திட.. ஆமென்று தலையாட்டினாள் வரு.
ஆதியும் சூர்யாவும் உணர்வு குவியலாக மாறியிருந்தனர்.
கல்பனா தன் மகளை அணைத்து உச்சி முகர்ந்தார். நிரலி வருவின் நெற்றியில் முத்தம் வைத்து விலகினார்.
விஷாலும், ஹரியும் யாதவினை தூக்கிச் சுற்றி ஆர்ப்பரித்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் கிடைத்திட்ட மகிழ்வில் அனைவரும் திக்கு முக்காடினர். பேச வார்த்தைகளின்று ஒவ்வொருவரும் மகிழ்வு தந்த இதத்தை அனுபவித்தபடி இருந்தனர்.
அந்த அமைதியை கலைத்தது கல்பனாவின் குரல்.
“இது உனக்கு எப்போ தெரியும்?”
வரு யாதவை பார்த்தாள்.
“அங்கென்ன பார்வை. கேள்வி கேட்டது நான்.”
“அத்தை விடுங்க அதான் சொல்லியாச்சே. அப்புறமும் எதுக்கு அவளை அதட்டுறீங்க?” அன்னையே ஆகிணும் தன் மனைவியை அதட்டுவது பிடிக்காது பரிந்து வந்தான் யாதவ்.
“சரி யாது உனக்கெப்போத் தெரியும்?” யாதவிடம் ஆதி வினவினார்.
“நான் இங்கு வருவதற்கு முன் டாட். எனக்கு வருவோடு சேர்ந்து சொல்லணும் இருந்துச்சு அதான் உங்களிடம் சொல்லாமலே வந்துவிட்டேன். சாரி டாட்” என்றான்
ஆதி கேட்காமலே தான் சொல்லாமல் விட்டதற்கான காரணத்தையும் சேர்த்தே கூறினான்.
“எனக்கும் அதே காரணம் தான். எனக்கு மாமாவிடம் சொல்லாமல் யாரிடமும் சொல்லத் தோணலை” என்ற வருவின் மீதான முன்பே சொல்லவில்லை என்கிற வருத்தம் அவளின் நியாயமான காரணத்தினால் எல்லோருக்கும் மட்டுப்பட்டது.
“அதான் என்னன்னு தெரிஞ்சுப்போச்சே பிறகும் எதற்கு உட்கார்ந்திருக்கீங்க…போய் தூங்குவோம் வாங்க.” இம்முறையும் கூறியது விஷாலே.
“தூங்குவதிலே இருடா” என்று விஷாலின் முதுகில் அடியொன்றை வைத்த சூர்யா…
“காலையில் பேசிக்கலாம் மாமா. இப்போ அறைக்கு போங்க” என்று சொல்ல ஆதியும் ஒப்புதலுடன் அறைக்குச் சென்றார்.
விட்டால் போதுமென்ற விஷாலும்,
“பேசுவதற்கும் ஒரு நேரங்காலம் வேண்டாம்” என்ற முணுமுணுப்போடு ஓடிவிட்டான்.
நிரலி உறங்கும் வரை கண்மூடி படுத்திருந்த ஆதி… மனைவியின் உறக்கத்தை உறுதி செய்து கொண்டு மெல்ல எழுந்து… சத்தமிடாது யாதவின் அறை நோக்கிச் சென்றார்.
*****
“உங்களுக்கு ஞாபகம் வந்திருச்சுல?”
அறையில் ஜன்னலின் கம்பியை இரு கைகளாலும் பிடித்தபடி வெளியில் இருளில் அசைந்தாடி சலசலக்கும் மரத்தின் கிளையில் பார்வையை பதிந்தபடி இருந்த வருவின் ஒரே கேள்வி இதுதான்.
இரண்டு தினங்களுக்கு முன்பே மனதில் தோன்றியதை கணவனிடம் கேட்டும் விட்டாள்.
பதில் சொல்ல வேண்டியவனோ சொல்லாது… நாள் கடத்தி வருகிறான்.
அவனின் பார்வையிலும் பேச்சிலும் மாற்றங்கள். கடந்த தினங்களில் இருந்த அதட்டல் இப்போது இல்லை. பார்வையில் பழைய காதலை வருவால் உணர முடிகிறது.
மனம் படபடக்க அவனின் அருகில் விதிர்த்து வந்தது அவளுக்கு. அது உண்மை தெரிய வேண்டுமே என்பதற்கான வெளிப்பாடு.
அங்கிருந்து மேசையில் சாய்ந்தவாறு மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, அவ்வறையின் அரை வெளிச்சத்தில் வரிவடிவமாக தெரிந்த தன்னவளை ரசித்தவனின் தேக அதிர்வை… உள்ளுக்குள் பாயும் அதிவேக ரத்த ஓட்டத்தை அவனால் உணர முடிந்தது.
“இப்பவும் என்னை ஏமாற்ற பார்க்காதீங்க மாமா. இப்போ எனக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.” அவ்வளவு உறுதி அவளிடம். இதற்குமேலும் இந்த கனத்தை தன்னால் அனுபவிக்க முடியாது என்ற நிலை.
அவனின் நிலையில் மாற்றமில்லை. வாய் திறக்காது மௌனத்தின் துணை கொண்டு மனைவியை ரசிப்பது மட்டுமே இப்போது தனக்கிருக்கும் தலையாய கடமை எனும் விதமாக பார்வையையும் உதட்டில் தவழ்ந்திருந்த புன்னகையையும் மாற்றாது நின்றிருந்தான்.
யாது பதில் பேசாது இருக்க… அவன் புறம் திரும்பியவள், “எனக்கு பதில் சொல்லுங்க மாமா… யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம்.” ஒரு மன்றாடல், சொல்லிவிடேன் இதற்குமேல் முடியாது எனும் யாசிப்பு.
வருவின் கலங்கி நிற்கும் தோற்றம் யாதவின் மனதை பிசைய… அவனின் சிந்தை சற்று நேரத்திற்கு முன்பு ஆதியிடம் உரையாடியதை நினைத்து பார்த்தது.
“யாது…”
வரு அறைக்குள் செல்லும்வரை நின்று பார்த்திருந்தவன், அப்போதுதான் மாடியேறி தன்னறைக்குள் செல்ல கதவில் கை வைத்தான். ஆதி அழைத்திருந்தார்.
“டாட்” என்று திரும்பியவன் ஆதியின் யோசனையான முகத்தை பார்த்து…
“என்ன டாட்” என்று கேட்டிருந்தான்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் யாது!”
“ஷ்யூர்… பேசலாம் டாட்” என்றவன் அப்படியே மொட்டை மாடி நோக்கிச் செல்ல, ஆதியும் மகனை பின் தொடர்ந்தார்.
யாதவிடம் பேசவேண்டுமென்று வந்தவர் இருள் படிந்த இயற்கையிடம் தன் சிந்தையை கொடுத்துவிட்டு அமைதியாக நின்றிருந்தார்.
அவரையே பார்த்து நின்ற யாது… அவரின் வாய் திறப்பதற்காகக் காத்திருந்தான்.
“இனியும் நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருப்பது சரிவராது யாது.” தான் வந்த விடயத்தை ஒளிவு மறையின்றி பேசினார்.
“என்னாலும் வருவை விட்டு இருக்க முடியாது டாட். நானே நாளை அவளுடன் சென்னை வரத்தான் பிளான் பண்ணியிருந்தேன்” என்றான் யாதவ்.
“எப்போலிருந்து இந்த எண்ணம்?”
என்னாலும் வருவை விட்டு இருக்க முடியாது என்று சொல்லியதைத்தான் கேட்கிறார் என்று யாதவிற்கும் புரிந்தது.
“உங்களுக்குத் தெரியாதா டாட்…” என்று பதில் கேள்வி அவரிடமே கேட்டவன் புன்னகைத்துக் கொண்டான்.
“எதுவாக இருந்தாலும் மனசு திறந்து வருவிடம் பேசுப்பா… உட்கார்ந்து பேசினாலே அனைத்தும் சரியாகிவடும். உன்னை எந்நிலையிலும் வருவால் விட முடியாதுப்பா.”
“மருமகளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களே! மகனை பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சிக்கோங்க” என்ற யாது…
“என்னாலும் என் வருவை விட முடியாது டாட். எல்லாமே அவள் தான்னு இங்க சொல்லிக்கிட்டே இருக்கு டாட்” எனக்கூறி இதயப்பகுதியை சுட்டிக்காட்டினான்.
“எனக்கு உன்னோட மனம் புரியுது யாது. பட் அதுக்காக விலகியிருப்பது சரி வராது. போ, வருவிடம் பேசு. உன் லவ்வை சொல்லு. புதுசா காதலிக்கத் தொடங்குங்க… நீ சொன்னதுமே அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வருவின் மனம் ஒரு நிலையில் அமைதியாகிவிடும். அதுவே உங்களை ஒன்றிணைத்து விடும்” என்ற ஆதி மகனை அணைத்து விடுவித்தார்.
“நான் சொல்லாமலே என்னோட நிலை உங்களுக்கு எப்படி தெரிந்தது டாட்.”
“நீ என்னோட மகன்டா.”
யாதவின் கேள்விக்கு ஆதியின் பதில் அதுதான். மீண்டும் ஒருமுறை வருவிடம் பேசுமாறு கூறிச் சென்றுவிட்டார்.
இப்போது தான் ஆதிக்கு முழு நம்பிக்கையே வந்தது. மகனின் தெளிவு அத்தகைய திடத்தை அவருக்கு அளித்தது.
“இப்பவும் சொல்ல மாட்டீங்களா மாமா?”
வருவின் கேள்வியில் நினைவு மீண்டான் யாதவ்.
“நான் உங்களுக்கு அந்த பழைய நினைவுகள் வந்தே ஆக வேண்டுமென்று நினைக்கல மாமா. வந்தால் நன்றாக இருக்குமென்று தான் எண்ணினேன். எனக்கு என் மாமா வேண்டும். அவர் எப்படியிருந்தாலும் போதும். இப்போ இருப்பவருக்கு என்மீது காதலில்லை என்றாலும் பரவாயில்லை… நம்மோட வாழ்க்கைக்கு என் காதல் ஒன்றே போதும்” என்று அதுவரை கலங்கியிருந்த கண்களை அழுந்த துடைத்து யாதவைநேருக்கு நேர் பார்த்து நிமிர்ந்து கூறினாள்.
“நீங்க மட்டும் போதுமென்று சொல்லிவிட்டு… உங்களுக்கு நினைவு வந்துச்சா இல்லையான்னு கேட்கிறேன்னு யோசிக்கிறீங்களா?” ஆமென்று கண் மூடி திறந்தான்.
“உங்களுடைய உணர்வுகளை புரிந்து நடந்தக்கணும் இல்லையா, அதற்குத்தான்.
நான் ஏதாவது சொல்லிட்டு, அது உங்களை தொலைந்த நினைவிற்குள் போராட வைத்துவிட்டால்…” சொல்லியவளின் முகத்தில் மிதமிஞ்சிய வேதனை.
“லவ் யூ.”
தன் மூரல்கள் மின்ன எவ்வித வெளிப்பூச்சுமின்றி… அழுத்தத்திலும் அழுத்தமாக பளிச்செனக் கூறியிருந்தான்.
“மாமா…” நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவளவனிடம் எதிர்பார்த்து காத்திருந்த வார்த்தைகளை அவளின் செவி தீண்டிட தேகம் முழுவதும் சில்லென்று தாக்கிய அதிர்வுக்குள் உள்ளானாள்.
“எஸ்… அம் இன் லவ் வித் யூ” என்றவனின் கைகள் அவனவளின் நிலா முகத்தை ஏந்தியிருந்து. கண்கள் அவளின் கண்களோடு கலந்திருந்தது. இருவரின் இதயமும் ஒன்றோடு ஒன்று உரசியிருந்தது.
“எனக்கு எதுவும் ஞாபகம் வரலடி.”
“யாதவ் தனக்கு எல்லாம் நினைவு வந்துவிட்டது. என்னிடம் குழந்தை விடயத்தை மறைத்தாய் என்பதற்காகத்தான் நான் உன்னிடம் விளையாடினேன்” என்று சொல்வானென்று எதிர்பார்த்தாளோ?
அவனுக்கு இன்னும் நினைவுகள் மீளவில்லை என்று அவன் சொல்லியதும் அதன் தாக்கத்தால், அவளின் ஒற்றை கண்ணில் கோடென கண்ணீர் வழிந்தது. சட்டென்று அதனை துடைத்தவள்,
“பரவாயில்லை மாமா. நாம் புதிதா காதலிக்கலாம். புதிதாக வாழலாம்” என்று ஆதி கூறியதையே கூறினாள்.
‘என்ன மாதிரியான அன்பு இது.’ வருவின் காதலை எண்ணி அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
உன்னுடன் வாழ்ந்த வாழ்வு நினைவில்லை என்ற போதும், உன்னுடன் வாழும் வாழ்வுதான் பெரிதென்று வாழப்போவதை மட்டும் சொல்லுபவளை தன் இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.
மூச்சு முட்டும் அளவிற்கு தன் அணைப்பில் இறுக்கத்தை கூட்டிக்கொண்டு இருந்தான்.
அணைப்பின் அழுத்தத்தில் உடலில் வலி பரவிய போதும் இன்பமாய் அவனுள் கட்டுண்டு நின்றாள்.
“பட் ஸ்டில், நான் அதே யாதவ் தான். உன்மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்திருக்கும் அதே யாதவ் தான் செல்லம்மா. மூளையின் நினைவுகள் மட்டுமே மரித்துப்போயின. உன்னை போற்றி நான்கொண்ட காதல் என் மனதின் ஆதி அந்தம் வரை வேர் பிடித்து விருட்சமாய் வளர்ந்துள்ளது. நானே இல்லையென்றால் கூட, என் காதல் இல்லாமல் போகாதுடி.
இதை நான் தெரிந்து கொண்டது, உன் அறையில் நாம் வாழ்ந்த வாழ்வின் பொக்கிஷமாக மாறியிருக்கும் புகைப்படங்களை பார்த்துதான்.
அவை எனக்கு என் மறந்த நினைவுகளை மீட்டுத் தரவில்லை என்றாலும், என் காதலை மீட்டுத் தந்துள்ளது.
உன் கண்களில் வழியும் காதல்… உன் பார்வையில் கட்டுண்டு அடிமையாகிப்போகும் நான். அவைதான் என் இதயத்தை தட்டி யுத்தம் புரிந்து என் காதலை எனக்கு உணர்த்தின.
உன்னை நான் எந்தளவிற்கு காதலித்திருக்கிறேன் என்ற எண்ணமே என் மனதை மீண்டும் உன்னிடம் சரணடையச் செய்தது.
பழைய மாதிரி என்னால் உன்மீது காதலை காட்டிட முடியுமா தெரியாது. ஆனால் அதற்கும் மேல் என்னால் காதலை உன் பாதத்தில் கொட்டிட முடியும்” என்றான். அவனின் குரல் கரகரத்தது.
யாதவின் வார்த்தைகளில் நெகிழ்ந்திருந்தாள் வருணவி.
“என்னையும் அறியாது மனதிற்குள் அந்நேர உந்துதலில் நான் சொல்லும் ஒன்று, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளில் இடம் பெற்றிருப்பது விஷாலிடம் இன்று ஜானைப்பற்றி பேசும்போது தான் நான் தெரிந்துகொண்டேன்.
இந்த காதல் உதித்தது கூட நினைவு மீண்டதால் அல்ல… உன் அறையில் நம் வாழ்வை பார்த்ததால்.” காதலில் கரைந்து காதலாக பிதற்றினான்.
“மறந்த நிலையில் என்னையும் அறியாது, பழைய நினைவுகளின் தாக்கம் என் பேச்சில் வெளிப்படுகிறது.
இதுவும் நல்ல அறிகுறிதான். சீக்கிரமே என் நினைவுகள் மீண்டிடும்.”
யாதவின் வார்த்தைகள் மொத்தமும் வருவின் மீதான காதலாகத்தான் அவளுக்குத் தெரிந்தது. நினைவில்லா பொழுதும், அவன் காட்டிடும் காதல் ஒன்றே போதுமென்று எண்ணினாள் பேதை.
“எனக்கு உங்க காதல் மட்டும் போதும் மாமா” என்றவளை தன்னிலிருந்து பிரித்தவன்,
வருவின் இரு புஜங்களையும் பற்றி தன்னிடமிருந்து இரண்டடி தள்ளி நிற்க வைத்து…
“இட்ஸ் கில்லிங் மீ டி. இது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. எனக்கு அது மேல் கிஸ் கொடுக்கணும் தோணுது” என்று ஆள்காட்டி விரல் நீட்டி அவளின் கழுத்துக்கு கீழ் காண்பித்து சொல்ல… வரு தாவி அவனை அணைத்துக் கொண்டாள். இம்முறை ஆனந்தத்தில் அவளின் கண்கள் வெளிப்படுத்திய கண்ணீரை அவனின் இதயம் சில்லென்று உணர்ந்தது.
முதல் முறை அவர்களது வீட்டுத் தோட்டத்தில் பெருங்கொன்றை மரத்துக்கு கீழ் ஊஞ்சலில் வரு அமர்ந்திருந்த போது… அவளிடம் யாதவ் பேசிய வார்த்தைகள் அது. இப்போது இந்நிலையில் கூட அவன் அதை சொல்லவும், தன்மீது அவன் வைத்திருக்கும் காதலின் ஆழம் எத்தகையதென்று வியந்து உணர்வுகளின் எல்லைகள் கடந்து அவனுள் சுயமிழக்கத் தவித்தாள். ஏங்கினாள்.
தன்னில் அவளின் ஈரம் உணர்ந்தவன், “என்னடா?” என்று வினவ, தன் தலை பதித்திருந்த யாதவின் இதயத்தில் அழுத்தமாய் இதழ் தீண்டினாள்.
நினைவுகள் மறந்த நிலையில் அவனறிந்த முதல் சபரிசம் இது. அந்நொடி முற்றிலும் அவளுள் தொலைந்து போனான்.
மனைவியின் நுண்ணுணர்வுகள் தெள்ளென அவனுள் இறங்க, நீண்ட கொடும் பிரிவிற்கு பிறகு… தன்னவளை தனக்குள் அடக்கி ஆள, தன் காதல் இதயத்தோடு யுத்தம் புரிய மெத்தையெனும் போர்க்களம் நோக்கி நகர்ந்தான்.
அங்கு அவர்களின் இதயங்கள் முழுவதும் காதல் காதல் காதல் அம்புகள் கொண்டு தாக்கப்பட்டு தாங்கப்பட்டு… முடிவிலா யுத்தமாக மாற்றப்பட்டிருந்தன.
எந்நிலையிலும் நீ மட்டும் போதுமென்று சொல்லும் உறவு கிட்டுவது வரம். அரிதிலும் அரிது. இங்கு அத்தகைய வரம் பெற்றவர்களாயினர் யாதவ் வருணவி.
*இதயம் களமாகிட
பார்வை அம்புகள்
மனதை துளைத்திட
விரல் ஸ்பரிசம்
நின்னுயிர் தீண்டிட
கொஞ்சல் பேச்சுக்கள்
வாய் பிதற்றிட
தேகங்கள்
தனலாய் பற்றிட
முடிவிலியாய்
காதல் யுத்தம்…
ஆட்சி செய்வது
நீயும் நானும்.
(யாதவும் வருணவியும்).*
இதயம் 33 : (நிறைவு)
கிராமத்திலிருந்து சென்னை வந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தன. வருவிற்கு இப்போது ஆறாம் மாதம் துவக்கம்.
“நான் ஒரு ஒன் ஹவர் வெளியில் போயிட்டு வரேன்டா பத்திரமா இரு” என்று மனைவியிடம் சொல்லிய யாதவ்… அவளின் வயிற்றுக்கு நேராக குனிந்து, “செல்லம், அப்பா போயிட்டு இப்போ வந்திடுவேன்… நீங்க அம்மாவை தொல்லை பண்ணாது சமத்தா இருக்கணும் சரியா” என்றான்.
“உங்களை விட உங்க குழந்தை ரொம்ப சமத்துதான். என்னை நல்லாவே பார்த்துக்கும். உங்க அளவிற்கு குழந்தை தொல்லை செய்வதில்லை.”
வரு கணவனின் அதீத அக்கறையை தொல்லை என்று குறிப்பிட, யாதவ் இடுப்பில் கை வைத்து நின்று அவளை பார்த்தான்.
“என்ன பார்வை… ஆங்” என்று கேட்டவளாக வரு வேகமாக எழ,
“ஹேய் அம்மு… இப்போ எதுக்குடி இவ்வளவு வேகமா எழுந்துக்குற?” என்று யாதவ் பதறிவிட்டான்.
“உங்களை பற்றி தெரிந்தும் வேகமாக எழுந்தது என் தப்புதான்” என தன்னையே நொந்தவளாக வரு மீண்டும் மெத்தையில் அமர்ந்தாள்.
வெளியில் செல்வதற்கு ஏற்றவாறு உடை அணிந்து கிளம்பியிருந்தவன், எதையும் பார்க்காது சட்டென்று தரையில் அமர்ந்து வருவின் பாதத்தினை தன் மடியில் வைத்து மெதுவாக அவளுக்கு நோகுமோ எனும் விதமாக மென்மையிலும் மென்மையாக பிடித்துவிட்டான்.
இது எப்போதும் நடப்பதுதான். சாதாரணமாக காலில் கை வைத்துவிட்டாலும், “வலிக்குதாடா?” எனக் கேட்டு அவள் மறுக்க மறுக்க சில நிமிடங்கள் இதமாக பிடித்துவிட்ட பின்னரே விலகிச் செல்வான்.
“வெளியில் போகத்தானே கிளம்புனீங்க? இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” கோபமாகக் கேட்க நினைத்தும் அவளால் முடியாது போனது. யாதவின் காதலில் அவன் காட்டிடும் சிறு செய்கையிலும் கரைந்து தொலைந்து போனாள் பெண்ணவள்.
“இதைத்தான் மாமா தொல்லைன்னு சொன்னேன். வேகமா எழுந்தால் கால் வலிக்குமா?”
“கால் வலிச்சா தான் பொண்டாட்டி காலை பிடிக்கணுமா என்ன? என் பொண்டாட்டி எனக்கு தோணும் போதெல்லாம் பிடிப்பேன். யூ ஆர் மைன். மை சோல் பிராப்பர்ட்டி. ஸ்ட்ரிக்ட்லி மைன். சோ, நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இப்படி கிஸ் கூட கொடுப்பேன்” என்றவன் குனிந்து அவளின் பாதத்தில் முத்தமிட்டே எழுந்தான்.
யாதவ் சொல்லிய வார்த்தைகள் அவளின் நெஞ்சத்தை நிறைக்க… தன்னையும் அறியாது கண் கலங்கினாள்.
இந்த யாதவ் அவ்வார்த்தைகளை காதலாக உணர்ந்து சொல்லிய போதும்… இதையே பழைய யாதவ் சொல்லிய விதம் ஒரு கணம் அவள் கண்முன்னே வந்து போனது.
இரு நினைவுகளாகக் கொண்டாலும், யாதவின் காதலில் மட்டும் சிறு வித்தியாசமும் இல்லை.
யாதவ் சொல்லியதைப்போல் தினமும் அவளை தன் காதலால் திணற வைத்தான். நாளுக்கு நாள் தான் கொண்ட காதலின் எல்லையை நீட்டிக்கொண்டேச் சென்றான்.
மனைவியின் பனித்த கண்களை கண்டவன்,
“என்னடா… பழைய நினைவில் எதையும் நினைவு படுத்திட்டேனா?” என்று அவளருகில் அமர்ந்து பரிவுடன் வினவினான்.
யாதவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு…
“லவ் யூ ஃபார் எவர் அண்ட் எவர் மாமா” என்று குரல் கரகரக்கக் கூறினாள்.
வருவின் நெற்றியோடு தன் நெற்றி முட்டியவன்,
“எனக்கு மறந்து போனது நினைவு வந்தாலும் வரலன்னாலும் என் காதல் மட்டும் எப்போதும் மாறாதுடி செல்லம்மா” என்றவனின் கண்களில் கூட கண்ணீர் எட்டிப்பார்த்தது.
அந்த யாதவ் நொடிக்கு பல முறை செல்லம்மா என்று விளித்த போதும்… இந்த யாதவ் முற்றிலும் தன்னை மறந்து நெகிழ்ந்திருக்கும் போது மேட்டுமே அவனறியாது மனதின் வெளிப்பாடாய் செல்லம்மா என்று அழைப்பான்.
அப்படி அவன் செல்லம்மா என்றழைக்கும் போதெல்லாம் இருவரும் தங்களது காதல் உலகில் ஊர்வலம் சென்று கொண்டிருப்பர்.
இப்போதும் சுற்றம் மறந்து தங்களது அணைப்பில் நெகிழ்ந்திருக்க, யாதவின் அலைபேசி ஒலித்து அவர்களின் நிலையை கலைத்தது.
“விஷ் தான்டா கால் பண்றான். நான் போயிட்டு சீக்கிரம் வந்துவிடுறேன்” என்று வருவிடம் சொல்லியவனாக அறையைத்தாண்டிச் சென்றவன், வேகமாக மீண்டும் அவளருகில் வந்து நெற்றியில் இதழொற்றி வெளியேறினான்.
அவன் சென்ற பின்னரும் அவனின் குரல் ஒலித்தது.
“மாம் ஜூஸ் கொடுப்பாங்க… வேண்டாம் சொல்லாமல் ஒழுங்கா குடி.”
ஓடும் தண்ணீராய் கணவன் காதலை அவள் பாதத்தில் சமர்ப்பிக்க பேதையவளுக்கு வேறென்ன வேண்டுமாம். அவனுக்கு நினைவுகள் திரும்பினால் நன்றாக இருக்குமென்ற எண்ணம் கூட அவளைத் தீண்டிடாது முன்பைவிட அதிகமாக அவள்முன் தன் காதலை கொட்டி கவிழ்க்கின்றான். எந்நிலையிலும் அவ்வளவு எளிதில் ஒருவரின் ஆழ் மனதில் பதிந்து போன நேசம் அவர்களைவிட்டு விலகாது என்பதற்கு வருவின் யாதவே சான்று.
கணவனின் அதீத காதல் தந்த மகிழ்வில், முகத்தில் நிலைத்த புன்னகையோடு மெத்தையில் படுத்தவள் உறங்கிப்போனாள்.
“என்னடா சொல்லுறான் அவன்?”
“ம்ம்ம்… பன்னுல பட்டர் இல்லை. ப்ரெட்ல ஜாம் இல்லைன்னு சொல்லுறான்.”
யாதவ் கேட்ட கேள்விக்கு விஷால் கடுப்பாக பதில் வழங்கினான்.
“என்னடா தேஜ் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் போடலையா… இப்படி பன்னு பட்டருன்னு புலம்புற” என்றான் யாதவ்.
“ஏன்டா?” என்ற விஷ்… “கல்யாணமாகி ஒன்றரை மாதம் ஆகுதுடா… இன்னும் ஹனிமூன் கூட போகலை. எப்போ பாரு ஹாஸ்பிட்டலே கதின்னு கிடக்கிறாள். நேற்று ஈவ்னிங் கூட பக்கத்துல எங்காவது போயிட்டு வரலாம் சொன்னதும் கிளம்பினவ, லாஸ்ட் மினிட் ஒரு கேஸ்… ஹாஸ்பிட்டல் கால் அப்படின்னு சொல்லி போயிட்டாள்.” நான் அவளுக்கு முக்கியமில்லையோ… அவங்க அம்மா சரி சொல்லியதால் மட்டுமே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாளோன்னு தோணுது மச்சான்” என்றான். மெல்லிய வருத்தம் இழையோடியது அவனுள்.
விஷால் பேசியதற்கு யாதவ் எவ்வித பதிலும் கொடுக்காது அமைதியாக காரினை செலுத்தியபடி இருந்தான்.
“என்னடா ஒன்னுமே சொல்லாம இருக்க?” என்று கேட்ட விஷாலை ஏற இறங்க பார்த்த யாதவ்…
“நீ லவ் பண்ண தானே?” என்று அர்த்தமாக வினவினான்.
“உனக்குத் தெரியாதா?” ஆயாசமான எதிர்கேள்வி.
“நீ தேஜூவை லவ் பண்றங்கிறதோட அர்த்தம்… அவளை மட்டும் நேசிப்பது இல்லை. அவளைச் சார்ந்த எல்லாம்… இந்த எல்லாமில் எல்லாமே அடங்கும். அவளின் குறைகளைக்கூட நீ விரும்ப வேண்டும்.
எதிர்பார்ப்பின் மறுபெயர் ஏமாற்றம். எதிர்பார்ப்பு பல நேரங்களில் பொய்த்து மட்டுமே போகக்கூடியது. அதில் சிலது மட்டுமே விதிவிலக்கு.
சோ, நீ அவளிடம் காதலை எதிர்பார்க்காதே! காதல் என்பதே கொடுப்பதுதான்… அதை அளவில்லாது கொடு… கொடுத்துக்கொண்டே இரு. இங்கு அன்பை மட்டும் தான் எல்லையின்றி கொடுக்க முடியும். அப்படி நீ கொடுக்கும் பட்சத்தில், நிச்சயம் உனக்கான அன்பு இரு மடங்காகத் திரும்பி கிடைக்கும்.” சொல்லிய யாதவ் சாலையில் கவனமாகினான்.
யாதவ் சொல்லியதில் தெளிந்த விஷாலின் மனதில் அந்நொடி அவனின் மனைவி மீது காதல் பெருக்கெடுத்தது.
சற்று சிந்திக்கத் துவங்கினான்.
மருத்துவத்துறையில் எதிர்பார்க்காது உழைக்க வேண்டும் என்பது அவனுக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே நேற்று தனக்கு கேஸ் வந்திருந்தாலும், இப்படித்தான் அவளை போல் மருத்துவமனைக்குச் சென்றிருப்போம் என்பது புரிய சற்று நேரம் பிரண்ட தன் மனதை தானே கடிந்து கொண்டான்.
‘இனி அவளுக்கு என் காதலை காட்டுவது மட்டுமே என் வேலை’ என்று உள்ளுக்குள் சபதமே எடுத்தான் விஷால்.
அதன் பின்னர் தான் விஷாலின் மனம் அமைதியானது.
நண்பனின் முகத்தில் தெரிந்த தெளிவே… இனி அவன் தேவையில்லாது வருத்தம் கொள்ளமாட்டானென்று யாதவிற்கு விளங்கிற்று.
“ஹாஸ்பிட்டலிலே அவனிடம் பேசியிருக்கலாமே யாது?”
“நாம் தான் பேச போனாலே, பேஷண்ட் இருக்காங்க ரீசன் சொல்லிட்டு எஸ் ஆகிடுறானே” என்ற யாதவிற்கு ஜானை நினைத்து கோபம் கோபமாக வந்தது.
ஊரிலிருந்து வந்ததும் ராகவ் மற்றும் ஸ்வேதாவிடம் விஷாலின் காதலை சொல்லி அடுத்த நாளே தேஜூவின் அம்மாவை சென்று பார்த்து அவரின் சம்மதத்தையும் பெற்று… அடுத்த முகூர்த்தத்திலேயே விஷால் தேஜூ திருமணம் அனைவரின் ஆசீர்வாதங்களோடு மிக விமர்சையாக நடைபெற்றது.
அதுமுதல் கொண்டு ஜானிடம் பேச யாதவும், விஷாலும் எவ்வளவோ முயற்சித்தும் ஜான் பிடிகொடுக்கவில்லை. இருவரையும் பார்த்தாலே நோயாளிகளை காரணம் காட்டி தப்பித்து ஓடுவதையே வேலையாக கொண்டுள்ளான்.
ரூபி தன் தந்தையின் மிரட்டலுக்கு பயந்து அடுத்த நான்கு நாட்களில் இந்தியா வந்திருந்தாள்.
வந்தவள் வீட்டிற்கு சென்றால் தந்தையின் கண்காணிப்பில் இருக்க நேரிடும்… அதன் பின்னர் வீட்டிலிருந்து வெளியில் வருவதுகூட கடினமாகி விடுமென்று எண்ணி… ஜானை பார்க்க நேராக மருத்துவமனை வந்து சேர்ந்தாள்.
நல்ல வேளையாக தான் இன்று வருவதை ரூபி தன் தந்தையிடம் குறிப்பிடவில்லை.
அப்போதுதான் மன அழுத்தம் கொண்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சை முடித்து தன்னறைக்குள் வந்த ஜானிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் அமரும் இருக்கைக்கு நேரெதிர் இருக்கையில் ரூபி அமர்ந்திருந்தாள்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு தன்னவளை ஆசை தீர கண்களில் ரசித்து நிரப்பியவன், அவள் திரும்பவும் சட்டென்று தன் பார்வை உடல் மொழிகளை மாற்றிக்கொண்டான்.
தான் வந்த விடயத்தை மறந்து தன்னவனை கண்டிட்ட மகிழ்வில் ரூபி ஜானையே இமைக்க மறந்து பார்த்திருக்க… அவளின் பார்வை உள்ளுக்குள் ஜானை வதம் செய்தபோதும் ஒன்றும் நடவாதவனைப் போல் தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தவன், அவளை அந்நியபார்வை பார்த்து வைத்தான்.
அப்பார்வை ரூபியின் இதயத்தை கத்தியின்றி குத்தி கிழித்தது.
கலங்குவதை போலிருந்த மனதையும் கண்களையும் சரி செய்தவள், ‘ கலங்கும் நேரம் இதுவல்ல திடமாக நிற்க வேண்டிய தருணம்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு ஜானை நேருக்கு நேர் சந்தித்தாள்.
“சொல்லுங்க… உங்களுக்கு என்ன பிராப்ளம்?”
ரூபியை தன்னை காண வந்திருக்கும் நோயாளியாக நடத்தினான்.
அவளுக்கு அவனின் மூன்றாம் மனிதனின் நடத்தை வலி கொடுத்த போதும்… இன்று ஒரு முடிவு தெரிந்தே ஆக வேண்டுமென்று அவனையே வைத்த கண் எடுக்காது பார்த்திருந்தாள்.
ரூபியின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டை ஜான் இழந்து கொண்டிருந்தான்.
‘அய்யோ இப்படி இம்சிக்கிறாளே!’ உள்ளுக்குள் அவள்முன் அவஸ்தையாக பிதற்றினான்.
“உங்களுக்கு இப்படியே உட்கார்ந்திருக்கணும் தோணுச்சுன்னா வெளியில் போய் உட்காருங்க… எனக்காக பேஷண்ட்ஸ் வெயிட்டிங்” என்று கத்தரித்தார் போல் பேசினான்.
அவனின் வார்த்தைகளிலிருந்தே ரூபி தன் பேச்சினைத் துவங்கினாள்.
“வெளியில் தான் போகணுமா? இல்லை மொத்தமாக உங்க வாழ்க்கையிலிருந்தே போகணுமா?”
“ரூபி…” அவளின் பேச்சில் அதிர்ந்து அவளறிந்து அவளை பெயர் சொல்லி விளித்திருந்தான்.
“என் பெயர் கூட தெரியும் போலிருக்கே!” நக்கலாகக் கேட்டவள், “அப்போ நான் எதற்கு வந்திருக்கன்னும் உங்களுக்கு தெரிந்திருக்கணும்?” என்றாள்.
ஜான் அமைதியாக தலை கவிழ்ந்தான்.
அவனின் மனம் உள்ளுக்குள் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.
‘சத்தமாகக்கூட பேசத் தெரியாது… இப்போ என்ன பேச்சு பேசுறாள்?’ மனதோடு தன்னவளை வைய்தான்.
ஜான் மௌனமாக இருக்க… நீடித்த அந்நிலையை ரூபியே கலைத்தாள்.
ஜானின் மனம் சாமுவேலுக்கும் ரூபிக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தது.
‘எத்தனை வருடங்கள்… கெஞ்சி காதலை வரவழைக்க முடியுமா என்ன? இதற்கு மேலும் கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது. அது தன்னுடைய காதலுக்கு அழகில்லை என்று’ நினைத்தவள், “கட்டாயம் என் திருமணத்திற்கு நீங்க வரவேண்டும்” என்று சொல்லிவிட்டு அவனைத் தன் கண்களில் நிறைத்து வெளியேறினாள்.
கண்களில் கண்ணீர் வழிய தன்னவள் பிரிந்து செல்லும் அந்நொடி கனம் தாங்காது தொய்ந்து இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடி வலி மறக்க முயன்றான்.
ஜம்பமாக அவனிடம் சொல்லிவிட்டு வந்தாயிற்று. ஆனால் சொன்னதைப்போல் வேறொருவனை அவளால் மணக்க முடியுமா? அக்கேள்வியே அவளை கொன்று புதைக்கும் போலிருந்தது. வீட்டிற்குச் சென்றால் நிச்சயம் திருமணம் நடந்துவிடும் என்று எண்ணியவள் சற்றும் யோசிக்காது அம்முடிவை எடுத்திருந்தாள்.
மருத்துவமனையை விட்டு வெளியில் வந்தவள், நொடியும் கடக்காது வாகனங்கள் சீரிப்பாய்ந்துக் கொண்டிருந்த சாலையில் இறங்கி கண்களை மூடிக்கொண்டு நடக்க… இவள் இப்படி குறுக்கே வருவாளென்று அறியாத பேருந்து ஓட்டுநர் நொடியில் பயம் கொண்டு கட்டுப்பாட்டை இழக்க, பேருந்து மோதி ரத்த வெள்ளத்தில் மிதந்தாள் ரூபி.
ஜானிடம் ரூபி பேசிவிட்டு செல்வதை பார்த்த யாதவ், அவளிடம் பேச அவள் பின்னே வர வழியில் ஒரு நோயாளி யாதவை பிடித்துக்கொண்டு தன் சந்தேகத்தைக் கேட்க… அவருக்கு தகுந்த விளக்கம் கொடுத்து அவன் வருவதற்குள் விபத்து நடந்திருந்தது.
உடனடியாக செயல்பட்டு ரூபிக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்த யாதவ் ஜானை திட்டி தீர்த்துவிட்டான்.
யாதவ் ஜானை திட்டுவது விஷாலிற்கே ஒரு மாதிரியாக இருக்க… “விடு யாது அவனுக்கென்ன தெரியும் இப்படியாகுமென்று. தெரியாமல் நடந்துவிட்டது” என்று பரிந்து வந்தவனை தீயாக முறைத்த யாது…
“தெரியாமல் நடக்கல… ரூபியிடம் இவன் என்ன பேசினானோ… அவள் வேண்டுமென்றே தான் பேருந்துக்கு முன் சென்றாள்” என்றான்.
ஜான் அந்நொடி மரித்துப்போனான்.
அதன்பின்னர் ஜான் ஒருவரிடமும் பேசவில்லை. தனக்குள் சுருண்டுகொண்டான்.
விடயம் கேள்விப்பட்டு வந்த ரூபியின் தந்தை அவளை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டார்.
செல்லும்போது ஜானிடம், “உன் மூச்சுக்காற்று என் பெண் மீது பட்டால் கூட அந்த சாமுவேல் உயிரோடு இருக்க மாட்டான்” என்று மிரட்டியேச் சென்றார்.
‘இவரின் மிரட்டலுக்கா ரூபியை வேண்டாமென்கிறாய்?’ என்று பார்வையால் வினவிய யாதவின் கேள்விக்கு ஜானால் பதில் சொல்ல முடியவில்லை.
அதோடு இன்று தான் ஜான் இருவரையும் சந்திக்க அனுமதி கொடுத்திருக்கிறான். ரூபிக்கு ஒன்றுமில்லை நலம் பெற்றுவிட்டாள் என்றாலும், அவள் நலமுடன் வந்த பிறகு இத்திருமணம் நடந்தே தீருமென்று அவளின் தந்தை சொல்லியது ஜானின் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க… மனதின் அழுத்தம் தாங்காது இன்று எப்படியும் நண்பர்களிடம் மனம் திறந்து பேசிட வேண்டுமென்று வரவழைத்துவிட்டான். ஆனால் எப்படி தொடங்குவதென்று தெரியாது ஜான் அமைதியாக நிற்க… அவனின் முதுகை வெறித்தபடி நண்பர்கள் நின்றிருந்தனர்.
“சரிடா நீ இப்படியே நின்னுட்டு இரு. நாங்க நாளைக்கு வரோம்” என்ற விஷால் யாதவிடம் “வாடா போவோம்” என்க,
“எனக்கு ரூபி வேணும்” என்று முதல்முறையாக தன் மனதை வெளிப்படுத்தினான் ஜான்.
“அது முடியாது” என்ற யாதவ்… “வாடா போகலாம்… இவன் நினைச்சா வேணும் இல்லைன்னா வேண்டாம். அவளுக்கும் மனசிருக்கு” என்று ஜானிற்கு வார்த்தையால் கொட்டு வைத்தவன் “நாங்க நாளைக்கு ரூபி திருமணத்திற்கு போகிறோம் நீயும் வருவதென்றால் வரலாம்” என்று சொல்லி திருமணம் நடக்கவிருக்கும் மண்டபத்தின் பெயரைச் சொல்லி விஷாலை இழுத்துக்கொண்டு அவ்வளவுதான் பேச்சு என்பதைப்போல் சென்றுவிட்டான்.
****
மறுநாள்…
“ஜான் அண்ணாகிட்ட பேசிட்டீங்களா மாமா? கண்டிப்பா வருவாரா?”
தான் கட்டியிருக்கும் புடவையை கீழே சரி செய்து கொண்டிருக்கும் கணவனிடம் வினவினாள்.
“கட்டாயம் வருவான். அப்படியே அவன் வரவில்லை என்றாலும், சாம் அங்கிள் அழைத்து வந்திடுவார்” என்று அவளுக்கு பதில் சொல்லியவன் புடவையை சரி செய்து நிமிர்ந்தான்.
மனைவியின் நெற்றியில் குங்குமமிட்டு… இதழ் பதித்தவன், தன்னவளை கைகளில் ஏந்தி படியிறங்கினான்.
ஒருமுறை படியேறி வந்தவள், மூச்சு வாங்க நிற்பதை பார்த்தவன் அன்றே வீட்டிற்குள் மின்தூக்கி வைத்தான். இருப்பினும் மனைவியைத் தூக்குவதில் சுகம் கண்டவன் அதனை விரும்பியே செய்கின்றான்.
எல்லோர் முன்பும் அவன் செய்வதை முதலில் மறுத்தவள்… அவனின் பிடிவாதம் அறிந்து வரு தான் விட்டுக்கொடுப்பதாக ஆயிற்று.
“வள்ளி ஆண்ட்டி” என்று அவரை அழைத்தவன் அவர் கொண்டு வந்த பெரிய குவளை நிறைய அடங்கிய பழச்சாற்றினை வரு மறுக்க மறுக்க திணற திணற குடிக்க வைத்துவிட்டே எழுந்தான்.
“உங்களால் குழந்தை வயிற்றுக்குள்ளே ஜூஸில் நீச்சலடிக்கப்போறான்” என்று கேலி பேசிய வருவிற்கு உண்மையிலேயே கழுத்து வரை ஜூஸ் இருந்தது.
“ரொம்ப பண்றீங்க மாமா!” என்று குறைப்பட்டுக்கொண்டவள் கணவனின் தோளில் அடி ஒன்றை வைத்தாள்.
“அப்படி என்ன பண்ணாங்களாம்?” என்று அவள் காதில் ரகசியம் பேசியவன்,
பேறு காலத்தில் காலுக்கு இதமாக இருக்கும் வகையில் உள்ள சாண்டல்ஸை அவளின் பாதத்தில் அணிவித்தான்.
“அச்சோ மாமா இதைக்கூட என்னால் போட முடியாதா?” என்று கேட்டவளிடம், “உனக்கு இதெல்லாம் செய்யும்போது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு செல்லம்மா” என்று சொன்னவனின் கண்களில் அத்தனை காதல்.
“லவ் யூ மாமா” என்றவள் தாங்கள் இருக்கும் இடம் மறந்து யாதவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“கொடுத்து முடிச்சாச்சின்னா நாம் கிளம்பலாம்” என்ற ஆதியின் குரலில் வரு யாதவின் நெஞ்சுக்குள் முகம் மறைக்க, மனைவியை அணைத்துக்கொண்ட யாதவ்… “உங்களுக்கும் வேண்டுமென்றால் உங்க பேபியிடம் கேளுங்க” என்று ஆதிக்கு அருகிலிருக்கும் நிரலியை காண்பித்தான் யாதவ்.
“அப்படியே உன் டாட்க்கு ஒன்னுமே தெரியாது பாரு” என்று நொடித்த வரு “தேவையில்லாமல் என்னை ஏன்டா இழுக்குறாய்” என்று ஆதியைப்பற்றி அறிந்தவர் அவசரமாக வெளி வாயிலை நோக்கிச் சென்றார். ஆதியின் அட்டகாசமான சிரிப்பு நிரலியை பின் தொடர்ந்தது.
****
ஆதி மற்றும் ராகவின் குடும்பம் ரூபியின் திருமணத்திற்கு ஒன்றாக வந்திருந்தனர்.
முந்தைய வருத்தம் எதுவுமின்றி ரூபி புன்னகை முகமாக அவ்வளவு சந்தோஷமாக அமர்ந்திருந்தாள்.
எங்கே தன் காதல் தன்னைவிட்டு சென்றிடுமோ என்று வியர்த்து வழிய அரக்கப்பறக்க மண்டபத்திற்குள் நுழைந்த ஜான் ரூபியின் முகத்தில் தெரிந்த மகிழ்வில் இதயம் நொறுங்க நின்றான்.
ரூபியின் மகிழ்வு இத்திருமணத்தில் அவள் கொண்டுள்ள சம்மதத்தை ஜானிற்கு உணர்த்த, “உனக்கு நான் வேணாமாடி?” என்று வாய்விட்டு முணுமுணுத்தவன் திரும்பி செல்ல முயல்கையில்,
“மாப்பிள்ளையே இவ்வளவு லேட்டாவா வருவாங்க” என்று யாதவ் ஜானின் கை பிடித்து மணமகன் அறைக்குள் இழுத்துச் சென்றான்.
அங்கு விஷால் ஜானிற்கான உடையுடன் தயாராக இருந்தான்.
இருவரும் சேர்ந்து ஜானை தயார் செய்ய… என்ன நடக்கிறதென்று புரியாத நிலையில் ஜான்.
“டேய் என்னடா பண்றீங்க?”
“பார்த்தால் தெரியல, பொண்ணு ரெடியானா மட்டும் கல்யாணம் நடந்திடுமா? மாப்பிள்ளை ரெடியாக வேண்டாம். அதான் ரெடி செய்றோம்.” யாதவ் ஜானின் இதயத்தில் இதத்தை வாரி இறைத்தான்.
“மாப்பி… நான்… நான்… மாப்பிள்ளையா?” அதிர்வுடன் வினவினான்.
“ஆமாம்டா” என்ற விஷால் ஜானின் சிகையை சரி செய்தான்.
அந்நேரம் சரியாக சாமுவேல் அங்கு வந்தார்.
“அப்பா… எனக்கு…” ஜான் சொல்ல முடியாது திணறினான்.
“எனக்குத் தெரியும்பா. என் சம்மதத்துடன் தான் எல்லாம் நடக்குது” என்றவரை ஜான் அணைத்துக் கொண்டான்.
“நீ எனக்காக யோசிக்கும்போது நான் உனக்காக யோசிக்க மாட்டேனா” என்றவர் அவனின் தோள் தட்டி வெளியேறினார்.
“யாது…” ஜான் ஏதோ சொல்லவர, அவனை கை காட்டி தடுத்த யாதவ்… “சாம் அங்கிள் உன் அப்பாவே இல்லை. அவர் உன்னுடைய சித்தப்பா. உன் அப்பா அம்மா சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். உனக்காக திருமணம் கூட செய்துகொள்ளாது நீயே உலகமென்று வாழ்ந்தவரின், இது ஒத்துவராது என்ற வார்த்தைக்காக ரூபியின் மீது காதலிருந்தும் வேண்டாமென்று இருந்துவிட்டாய்” என்று எங்களுக்கு எல்லாம் தெரியுமென்று தன் பேச்சில் காட்டினான்.
“ரூபி அப்பா…” ஜானின் அடுத்த கேள்விக்கு விஷால் பதில் வழங்கினான்.
“அவனெல்லாம் ஒரு ஆளு. ஆதிப்பா அவனை டீல் செய்துவிட்டார்” என்றவன், “அவர் நிறைய சட்டத்திற்கு புறம்பா பிஸ்னெஸ் பண்ணுகிறார் போல்… அவரின் ஆடிட்டர் ஆதிப்பாவின் ஜூனியர். சோ, அந்த வகையில் அவரை லாக் பண்ணியாச்சு” என்றான்.
அடுத்த சில நிமிடங்களில் ஜான் திருமதி.ரூபி ஜானின் கணவனாக மாறியிருந்தான்.
கிட்டிடாதென்று நினைத்த காதல் திருமணத்தில் கரை சேர்ந்திட்ட மகிழ்வு அவர்களிடம்.
தாலி கட்டியதும் அனைவர் முன்பும் மண்டியிட்டு ரூபியிடம் தன் காதலை யாதவ் சொல்ல… மண்டபம் உறவினர்களின் உற்சாகக் கூச்சலில் அதிர்ந்து அடங்கியது.
*****
மூன்று வருடங்களுக்குப் பின்னர்…
அனைவரும் கிராமத்திலிருக்கும் ஆதியின் குல தெய்வ கோவிலில் கூடியிருந்தனர்.
வரு மற்றும் யாதவின் ஆண் மகவு தேவிதன் காதணி விழா மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஜானின் மடியில் அமர்த்தி மொட்டை அடிக்க, விஷாலின் மடியில் வைத்து காது குத்தினர்.
குழந்தை கத்தலில் யாதவ் வருவின் கையை இறுக பற்றிக்கொண்டான்.
“இதுக்குத்தான் இந்த காது குத்துவது வேண்டாமென்றேன்” என்றான் அருகிலிருந்த தன் அன்னையிடம்.
“நீ ரொம்ப ஓவரா பண்ற யாது… இப்படித்தான் வருவுக்கு வலிக்குமென்று ஒரு மருத்துவராக இருந்தும் இன்னொரு குழந்தை வேண்டாமென்று பிடிவாதமாக இருக்கிறாய்” என்று குறைப்பட்டவர்,
“உனக்கு சாமர்த்தியம் போதலை வரு. ஆதி மாமாவும் இப்படித்தான் ஆதினி மட்டும் போதுமென்றார். நான் விட்டேனா. நானும் அப்படியிருந்திருந்தால் உன் புருஷனே பிறந்திருக்க மாட்டான்” என்று மருமகளையும் கடிந்து கொண்டார்.
“அதுதான் வரு இன்னமும் உன் அத்தை எப்படி என்னை ஏமாற்றினாலென்று தெரியவில்லை” என ஆதி கூற அங்கிருந்த அத்தனை பேரும் சிரித்து வைத்தனர்.
காது குத்து முடிந்ததும் கோவிலில் ஒரு பக்கம் பெரிய பந்தலிட்டு அங்கு பந்தி துவங்கியது. குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறி உபசரித்தனர்.
“நீயெதுக்கு இப்போ குழம்பு வாலி தூக்கிட்டு சுத்திட்டு இருக்க… போய் அப்படி உட்காரு” என்ற யாதவ் வருவின் கையிலிருந்த வாலியை வாங்கிக்கொண்டான்.
“என் பொண்டாட்டி கூடத்தான் ரசம் ஊற்றுகிறாள்… பட் இதெல்லாம் கொஞ்சமில்லை ரொம்பவே ஓவர் யாது” என்று கிண்டல் செய்த ஜானை முறைத்த யாதவ், “வேண்டுமென்றால் நீயும் உன் பொண்டாட்டியை வேலை செய்யவிடாது தாங்கு” என்று கூறினான்.
“அவனைப்பற்றித் தெரிந்தும் ஏன்டா?” என்ற விஷால்… “நீ காலம் முழுக்க லவ் பண்ணிட்டே இருப்பா. நாங்க ஒன்றும் சொல்லவில்லை” என்று விட்ட வேலையைத் தொடர்ந்தனர்.
அனைத்தும் முடித்து வீட்டிற்கு வர மாலை ஆயிற்று.
“ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பு கல்பனா.” செல்வி பாட்டி சொல்ல கல்பனா குழந்தைக்கு ஆரத்தி எடுத்த பின்னரே அனைவரும் உள் சென்றனர்.
கோவிலில் ஓடியாடி வேலை செய்தது சோர்வாக இருக்க அனைவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து கொண்டனர்.
அந்நேரம் ஆதினி வீடியோ கால் செய்ய எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தங்களது முகங்களை ஆதினி மற்றும் ஹரிக்கு காட்டினர்.
“நாமளும் போவோமென்று சொன்னேன். யார் கேட்டா! லீவில்லை அதில்லைன்னு சொல்லியாச்சு. இப்படி எல்லாரும் ஒன்னு சேருவது அடிக்கடி நடக்குமா?” என்று அங்கு எல்லோருடனும் இல்லாத குறையை ஆதங்கமாகக் கொட்டினார் மாமி.
“மிஸ் யூ ஆல்.” ஆதினி சொல்ல ஹரி அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
அதன் பின்னர் அனைவரும் உற்சாகமாக ஆதினி மற்றும் ஹரியிடம் மாற்றி மாற்றி அன்றைய நிகழ்வை பேசிக்கொண்டிருக்க…
தேவிதன் தூங்கிவிட்டதாக வரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குச் சென்றாள்.
“இப்போ பாரேன் யாது வரு பின்னாலே போவான்.” விஷால் ஜானிடம் சொல்லி முடிக்கவில்லை யாதவ் வருவின் பின்னாலே சென்று, “கை வலிக்கும் செல்லம்மா” எனக்கூறி தன் பிள்ளையை தன் கையில் வாங்கிக்கொண்டான்.
“யாதுண்ணா மாதிரி உங்களால் உங்க மனைவியை லவ் பண்ண முடியல சொல்லுங்க. அதைவிட்டு அவரை எதுக்கு கிண்டல் பண்றீங்க?”
முதுகுக்கு பின்னால் ஒருசேர ஒலித்த தத்தம் மனைவியின் குரலில் அதிர்ந்த திரும்பிய விஷாலும் ஜானும் ஒன்றாக அசடு வழிய… “இவளுங்க இருப்பதை மறந்துட்டோமேடா” என்று இளித்து வைத்தனர்.
தேஜூவும், ரூபியும் தலையில் தட்டிக்கொண்டு நகர்ந்தனர்.
அறைக்குள் வந்த யாதவ் குழந்தையை அதற்கு உண்டான மெத்தையில் இட்டு அணைவாக தலையணைகளை வைத்தவன்… வருவை கட்டிலில் அமர வைத்து அவளின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.
கணவனின் தலை கோதிய வரு முன்னெற்றியில் வழிந்த அவனின் சிகையை ஒதுக்கி குனிந்து நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தாள்.
வருவின் இதழை பெருவிரல் கொண்டு வருடிய யாதவ்… சுட்டுவிரலைக் கொண்டு அவளின் கழுத்தில் கோலமிட்டு… “ஐ ஃபீல் கம்ப்ளீட்டி செல்லம்மா. எல்லாம் உன்னால் தான்” என்று நெகிழ்ந்து கூறினான்.
வழக்கம்போல் யாதவ் காட்டும் காதலில் மூச்சுமுட்டத் திணறிப்போனாள். மெல்ல அவன் வார்த்தைகளில் கரைந்து கொண்டிருந்தாள்.
“யூ ஆர் மை சன் ஷைன் மாமா” என்றவள் அவனின் முகத்திற்கு நேராக குனிந்து… அவனின் கண்களோடு தன் கண்களை கலக்கவிட்டாள்.
இதழ்கள் இரண்டும் உரசி நின்றன.
முத்தமிடும் வகையில் அவளின் உதடுகள் துடிக்க… அவனின் இதழ்கள் தன் இணைக்காக ஏங்கி நின்றது. கணவனின் ஏக்கம் புரிந்து… அவனின் இதழ் அருகே சென்றவள் எதிர்பாராத விதமாக அவனின் மீசையை பிடித்து பற்களால் இழுத்தாள்.
“அடியேய்…” என்று வலியில் அவளை விலக்கியவன்… சிரித்துக் கொண்டிருப்பவளின் இதழை வன்மையாக சிறை செய்திருந்தான்.
குழந்தை சிணுங்களில் மனைவியை விட்டவன், அவள் குழந்தையை உறங்க வைத்துவிட்டு வந்ததும் மீண்டும் மனைவியின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.
“டான்ஸ் ஸ்கூல் எப்போ போகணும்?”
“அல்ரெடி ஃபோர் டேஸ் ஆச்சு மாமா. நாளை சென்னை போயிட்டாலும் அதற்கும் மறுநாள் ஸ்கூல் போகணும்” என்றாள்.
“ஆமாமாம்… நீயே இவ்வளவு நாள் போகவில்லை என்றால் அவ்வளவுதான்” என்ற யாதவ்… “இப்போவெல்லாம் என்னைவிட உனக்கு உன் டான்ஸ் ஸ்கூல் தான் முக்கியமாகப்போச்சு” என்று முகம் சுருக்கினான்.
ஆம் இப்போது வரு டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நிறுவி அதனை திறம்பட நிர்வகித்து வருகிறாள்.
தேவிதன் பிறந்ததும் ஆறுமாதம் கழித்து தன் மனைவிக்காக அப்பள்ளியை யாதவ் அன்பு பரிசாக வழங்கினான். மனைவியின் விருப்பம் எதுவென்று அறிந்து செயல்பட்டான். டான்ஸ் ஸ்கூல் நடத்துவது அவளின் கனவென்று அவன் அறிவான். அதனால் அதனை அவள் மறுக்க மறுக்க அவனே முன்னின்று ஒவ்வொன்று தன் மேற்பார்வையில் அவளுக்காக செய்து கொடுத்திருந்தான். அதற்கு முன்பு அவள் அரங்கேற்றத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தான்.
“வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல டான்ஸ் ஸ்கூல் வச்சி கொடுத்திட்டு என்ன பேச்சு பேசுறீங்க” என்று அவனின் புஜம் மார்பென்று அடிகளை கொடுத்தவள் அவனின் இடையில் கிள்ள துள்ளி குதித்து எழுந்து அமர்ந்தான்.
யாதவ் எழுந்த வேகம் கண்டு இரண்டடி தள்ளி கட்டிலோடு ஒன்றினாள் வரு.
“வர வர கை ரொம்ப நீளுது” என்றவன் அவளின் இரு கரங்களையும் தன் ஒற்றை கரத்தில் அடக்கி அவளை நெருங்கினான்.
கணவனின் பார்வை இன்று புதிதாக இருக்க… வரு மருண்டு விழித்தாள்.
அவள் மூக்கோடு அவனின் மூச்சு பட…
“இட்ஸ் கில்லிங் மீடி. இது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. எனக்கு அது மேல் கிஸ் கொடுக்கணும் தோணுது”என்று அவளை தன்னுள் அடக்கும் வித்தைக்கு வழி அமைத்தவன்… கருநிற கார்மேகப் புள்ளியில் தன் அச்சாரமிட்டு தன்னவளை தனக்குள் மொத்தமாக வாரி சுருட்டிக்கொண்டான். களவாடியவனே கொள்ளை கொள்ளையாய் கொடுத்திடவும் கொட்டிடவும் செய்தான்.
காதல் கொண்டு இதயத்தில் யுத்தம் புரிந்தவர்கள்… காதலாய் தங்கள் வாழ்வை ஒவ்வொரு நொடியும் இனிக்க இனிக்க வெவ்வேறு அத்தியாயங்களுக்கு கொண்டுச் சென்றனர்.
*நீளும் இரவு பகல்
ஓடிடும் நொடிகள் யாவும்
உன் நினைவின்றி
உன் காதலின்றி
கடந்திட
கரைந்திட
மறுக்குதடி(டா)!*
காதலாய் இதயத்தில் நிகழ்ந்திட்ட ஒரு யுத்தம்… வருணவி யாதவால் நிறைவுகொண்டது.
_____________ * * * _____________
இக்கதையோடு என்னுடன் பயணித்த அனைத்து வாசக தோழமைகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் பல.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
54
+1
2
+1