இதயம் 25 : (உயிர்வதை நேசம்)
காரை கிளப்பிய யாதவினுள் அப்படியொரு வேகம்.
அவனின் செல்லம்மாவை கண்டிட அவனது கண்கள் ஏங்கின. இதயம் அதி வேகத்தில் துடித்தது. மூன்று நாட்களும் மூன்று யூகங்களாகத் கடந்திருக்க… இன்னும் சில மணி நேரங்களில் கடந்திடக் கூடிய பயணத்தை அவனால் கடக்க முடியாது தவித்தான்.
அதீத நேசம் கொண்டவர்களின் ஒரு மணி நேர பிரிவு கூட உயிர்வலி தான். அதை அனுபவிப்பவர்களே அறிய கூடிடும்.
இன்னும் சற்று நேரத்தில் தான் வந்துவிடுவாதாகவும், அதுவரை காத்திரு எனவும் புலனம் வழி தகவல் அனுப்பியவன்… ஒரு குறுஞ்சிரிப்புடன் அவள் அனுப்பிய பதிலை பார்த்துவிட்டு… மனதில் எழும்பிய உற்சாகத்தோடு காரினை இயக்கியவன்… கரிய தார் சாலையில் காற்றை கிழித்துக்கொண்டு பறந்தான்.
வருவிடம் கொண்டுள்ள காதல் தீவிரத்தை காரின் வேகத்தில் காட்டினான்.
“உன்னை எப்போ பார்ப்பேன்னு இருக்குடி செல்லம்மா” என்று கத்தியவன் காரின் ரூஃபினை திறந்து விட்டு… வானில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த நிலவில் தன் வருவின் முகத்தை தேடினான்.
“பால் நிலவும் தோற்று
கொள்ளை போகுமடி
உன் பால் வண்ண
மதி முகத்தில்.”
தனக்குத் தோன்றியதை மனைவியின் நினைவில் மிழற்றினான்.
“அச்சோ… செல்லம்மா! என்னை என்னடி பண்ணி வச்சிருக்க.
பாரு, நான் கவிதையெல்லாம் சொல்லுறேன்” என்று புலம்பியவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து தன்னவளின் முகத்தை பார்த்து “லவ் யூ டி” சொல்லியவனின் முகம் புன்னகையில் விரிய அவனின் வேகம் குறைந்தது.
“சீக்கிரம் என்கிட்ட வந்திடுங்க மாமா.” கிளம்பும் அன்று அவள் சொல்லிய வார்த்தைகள் மனதில் எழ, மீண்டும் அவனின் வேகம் கூடியது.
‘அழைக்கலாமா? வேண்டாமா?’ வருவிடம் பேசிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தால் என்ன என்று யாதவ் நினைத்த நொடி,
“ட்ரைவ் பண்ணும்போது கால் பேசாதீங்க மாமா” என்று வரு அதட்டும் குரல் காதில் ஒலிக்க அவ்வெண்ணத்தை கைவிட்டான்.
“எதுக்கு மாமா இவ்வளவு வேகம் போறீங்க?” அன்றொரு நாள் அவளுடன் நள்ளிரவில் கடற்கரை சாலையில் அதீத வேகத்தில் பயணம் செய்த போது அவள் கேட்ட கேள்வி இப்போது கேட்டது போல் தோன்ற சீரான வேகத்தில் தொடர்ந்தான்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் அவனின் பயணம் முடிவடைய இருக்கும் தருவாயில்…
மியூசிக் பிளேயரில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றவாறு ஸ்டியரிங்கில் தாளமிட்டுக்கொண்டே இருந்தவன் அப்போது தான் கவனித்தான்.
தனக்கு முன்னே வரும் கன்டெய்னர் கட்டுப்பாடின்றி வருவதை. பிளையோவரில் சென்று கொண்டிருப்பதால் வண்டியை நிறுத்தவும் வழியின்றி போனது.
‘இங்கு கன்டெய்னர் என்ட்ரி அல்லோவ் கிடையாதே’ என யாதவ் சுதாரித்து விலகும் முன்னே வளைந்து வளைந்து கட்டுப்பாடின்றி பிளையோவர் பக்கச் சுவற்றுகளில் முட்டி மோதி சீறி வந்த கன்டெய்னர் லாரி யாதவின் காரினை இடித்தது.
டமால் எனும் சத்தம் நிசப்தமான இரவில் எங்கும் எதிரொலித்தது.
இடித்த வேகத்தில் காருக்குள்ளிருந்த காற்று பை முன் வந்து யாதுவை பாதுகத்தாலும், வண்டியின் முன் பகுதி லாரியில் வலுவாக மாட்டிக்கொண்டது.
டிரைவர் குடியின் பிடியில். முழு போதையில் இருந்தவன், சற்றும் கவனியாது மேலும் தன் வேகத்தை கூட்ட லாரியின் வேகத்திற்கு யாதவின் காரும் இழுபட்டுச் சென்றது.
பிளையோவர் முடிந்து சாலையில் செல்லும் போது… எதிரே இருந்த மின் கம்பத்தில் யாதவின் கார் இடித்து லாரியிலிருந்து விடுபட்ட வேகத்திற்கு யாதவ் காருக்குள்ளிருந்த தூக்கி எறியப்பட்டான்.
எறிந்த வேகத்திற்கு குறிப்பிட்ட உயரம் மேலே சென்றவன், பொத்தென்று கீழே தார் சாலையில் மல்லாந்த நிலையில் விழ… பின்னந்தலை நன்றாக அடிபட்டது. அடுத்த நொடி தலைப்பகுதி முழுவதும் குருதியில் நனைந்தது.
கன்டெய்னர் ஓட்டுநர் இது எதையும் கருத்தில் கொள்ளும் நிலையில் இல்லாது சென்றுவிட்டான்.
இரவு நேர சாலையோர தேநீர் கடையிலிருந்த சிலர் நேரில் கண்ட கோர விபத்தில் நடு நடுங்கிப் போயினர். அவர்கள் தன்னிலை அடைய சில நிமிடங்கள் பிடித்தது.
அவர்கள் ஆம்புலன்ஸிற்கு அழைத்து விபத்தினை சொல்ல அவர்கள் வருவதற்கு முன்னரே யாதவ் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றிருந்தான்.
கண்கள் மூடும் தருணத்திலும் அவனின் வாய் மெல்ல முணுமுணுத்தது…
“செல்லம்மா!”
*****
அருகில் அரசு மருத்துவமனை இல்லாததால், விபத்து நடந்த இடத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் யாதவ் அனுமதிக்கப்பட்டான்.
இங்கு கண் விழித்த வரு யாதுவை உடனடியக பார்த்தாக வேண்டுமென கதறி துடிக்க…
ஆதி மீண்டும் மீண்டும் யாதவிற்கு அழைத்து தோற்றுப்போனார்.
வரு தனது இதயத்துடிப்பின் வேகத்தை வைத்தே யாதவிற்கு ஏதோ சரியில்லையென உணர்ந்தாள். ஏனோ அவன் நலமுடன் இல்லை என்ற எண்ணம் மட்டும் அவளின் சிந்தனையில் நொடிக்கு நொடி வலுப்பெற்றது.
வருவின் தோற்றமே ஏதோ சரியில்லை என கருதிய ஆதி தன்னுடைய காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் நண்பர் ராஜீவிற்கு அழைத்து யாதவ் கிளம்பிய நேரத்தை கணக்கிட்டு இந்நேரம் அவன் எங்கு வந்திருப்பான் என்று சொல்ல… ராஜீவ் அப்பகுதி காவல் நிலையத்திற்கு அழைத்து விடயத்தைக் கூறினார்.
அடுத்த இருபது நிமிடங்களில் யாதவ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் பெயரை ராஜீவ் ஆதியிடம் தெரிவிக்க… கனத்த மனதுடன் வரு மற்றும் நிரலியிடம் யாதவிற்கு என்ன ஆனது என்பதை சொல்லாது யாதவ் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
வரும் வழியெல்லாம் ஆதிக்கு வரு கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது போனது.
“மாமா எங்கே போறோம்?”
“அவங்க நல்லாதானே இருக்காங்க?”
“அவங்களுக்கு ஒன்றுமில்லையே?”
“மாமா ப்ளீஸ் சொல்லுங்க?”
கண்ணீர் நிற்காது வழிந்து கொண்டே இருந்தது.
“மாமா உண்மையை சொல்லுங்க… என் யதுக்கு ஒன்றுமில்லையே?”
அவளின் மூளை கண்டதையும் யோசித்து அவளை கலவரப்படுத்தியது. அதைவிட ஆதியின் மௌனம் அவளை கொல்லாமல் கொன்றது. பயத்தை அதிகரித்தது.
ஆதியின் முகத்தில் காணப்பட்ட பேரமைதியே நிரலிக்கு முற்றிலும் சரியில்லாத ஒன்று… எதிர்பாரா ஒன்று யாதவிற்கு நேர்ந்துள்ளது என்பதை புரிந்துகொண்ட நிரலி ஆதியை போலவே வருவிற்காக தன் துக்கத்தை மறைத்துக்கொண்டு மௌனமாக வந்தார்.
அவரின் வருத்தமும், அழுகையும் வருவிற்கு மேலும் துக்கமாக அமைந்திடக் கூடாதென்று கருதினார்.
மருத்துவமனை வளாகத்தில் கார் நின்றதும், வருவின் இதயம் நின்று துடித்தது.
“மாமா!”
காரிலிருந்து இறங்கியவள் ஆதியின் கையினை இறுக்கமாக பற்றிக்கொள்ள… விடயம் அறியும் முன்னே பயம் கொள்ளும் அவளின் நிலையை கையின் நடுக்கத்தை வைத்து உணர்ந்தவர் வருவை தன் கை வளைவிலேயே வைத்தபடி உள்ளே கூட்டிச் சென்றார்.
நிரலிக்கு வருவைவிட ஆதியை எண்ணியே கலக்கமாக இருந்தார். எவ்வளவு திடம் வாய்ந்தவராக இருந்தாலும் தன் பிள்ளைகளுக்கு ஒன்றென்றால் ஆதி முற்றிலும் உடைந்திடுவார். அந்நேரத்தில் நிரலிதான் அவரை தேற்றுவதாக இருக்கும். அதற்காக இப்போதும் நிரலி ஆதிக்காகத் தன்னை திடப்படுத்திக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தார்.
அங்கு, அப்பகுதி காவல்துறை அதிகாரி நின்றிருக்க அவரிடம் ஆதி தன்னை முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“ஐஜி.ராஜீவ் சார் சொன்னார் சார்” என்று கூறியவர், “ஹெவி ஹெட் இன்ஞ்சுய்ரி அண்ட் பிளட் லாஸ் சார். கை, கால்களில் சிறு சிறு காயங்கள் சிராய்ப்புகள். ஃபர்ஸ்ட் எய்டு பண்ணியிருக்காங்க. உடனடியாக ஆபரேஷன் செய்யணுமாம், உங்களுக்காக வெயிட்டிங்” என்றவர் நகர்ந்திட, அவர் காட்டிச்சென்ற அறை நோக்கி மூவரும் சென்றனர்.
மருத்துவமனை என்றதுமே வரு யாதவிற்குத்தான் ஏதோ என்று பயந்து தன் சுயம் தொலைத்திருக்க காவல் அதிகாரி சொல்லிய எதுவும் அவள் செவிகளில் விழவுமில்லை. கருத்தில் பதியவுமில்லை.
மகனின் நிலை கேட்ட ஆதி கலங்கும் கண்களை பெண்கள் இருவருக்கும் தெரியாது துடைக்க… மெல்லிய விசும்பலுடன் தன்னுடைய அழுகையை சேலை தலைப்பில் மறைத்தார் நிரலி.
தீவிர சிகிச்சை பிரிவில் யாதவிற்கு சிகிச்சை நடைபெற… அவ்வறைக்கு முன் வந்தவர், பிரம்மை பிடித்ததைப்போலிருந்த வருவை இருக்கையில் அமர வைத்தவர், நிரலியிடம் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி சற்று தள்ளிச் சென்று ஜான் மற்றும் விஷாலிற்கு அழைத்து விடயத்தை சொல்ல… அவர்களும் நண்பனின் நலன் அறிய விரைந்து வந்திருந்தனர்.
மருத்துவர் யாதவின் நிலையை கூற, ஜான் தங்களுடைய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூற, அவர்களும் ஒப்புக் கொண்டனர். அவர்கள் உடனடியாக சம்மதித்ததற்கும் காரணம் உள்ளது.
எந்தவொரு மருத்துவரும் தான் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளி உயிர் பிழைக்க வேண்டுமென்றுதான் நினைப்பர்.
எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் விலகிவிடத் தான் எண்ணுவர். இப்போது யாதவின் நிலையும் அதான்.
அதனாலே ஜான் கேட்டதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டு தங்களது ஆம்புலன்ஸினிலேயே யாதுவை அவர்களது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யாதவ் வருவதற்கு முன்பு அறுவை சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. அனைத்தையும் அவர்களுக்கு முன்னதாகவே விரைந்து வந்து விஷால் பார்த்துக்கொண்டான்.
நகரத்திலேயே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் மற்றும் நியூரோ சர்ஜனில் தனக்கு குருவாக யாதவ் கருதும் குமரநாதன் அவர்களை அந்நேரத்திலேயே தொடர்பு கொண்டு அழைத்து வந்திருந்தார் ஸ்வேதா.
படிக்கும் காலத்திலேயே நரம்பியல் பிரிவில் யாதவ் கொண்டுள்ள ஆர்வத்தை நன்கு அறிந்திருந்தவர். அத்தோடு தன்னுடைய மாணவர்களிலேயே யாதவ் மிகச்சிறந்த மாணவன் என்று ஆவன்மீது அன்பு கொண்டவர் ஸ்வேதா விடயத்தை சொல்லியதும் வர சம்மதித்து மருத்துவமனை வந்து தயாரும் ஆகியிருந்தார்.
நேராக அறுவை சிகிச்சை அறைக்குள் யாதவ் கொண்டு செல்லப்பட்டான்.
வரு பித்துப்பிடித்த நிலையில் ஆதியின் இழுப்பிற்கு வந்து கொண்டிருந்தாள்.
“நிச்சயம் என்னால் முடியாது?”
ஜான் சொல்லியதற்கு விஷால் பிடிவாதமாக மறுத்துக் கூறிக்கொண்டிருந்தான்.
“என்னால் வருவை இப்படி பார்க்க முடியலடா ஜான். நானெப்படி இதில் கையெழுத்திட சொல்லுவேன்” என்ற விஷால் ஜானின் தோள் சாய்ந்து யாதவின் நிலையை எண்ணி அழுதான்.
என்ன தான் ஜான் திடமாகக் காட்டிக்கொண்டாலும் அவனும் உள்ளுக்குள் கலங்கிபோய்தான் இருக்கின்றான். இருப்பினும் அனைத்தையும் முன்னின்று செய்யும் இடத்தில் அவனிருப்பதை உணர்ந்தவன் தன்னுணர்வுகளை முயன்று கட்டுப்படுத்தினான்.
“இதில் சைன் வாங்கினால் தன் ஆபரேஷன் ஸ்டார்ட் ஆகும்.”
“நீ போய் வாங்கு.” சிறுபிள்ளையென அழுகையில் துடித்த குரலில் கூறினான் விஷால்.
“என்னால முடியலடா… ஆதிப்பாவை இப்படி பார்க்க முடியல, எங்கே நானும் உடைஞ்சிடுவேனோ பயமா இருக்குடா!” அதுவரை கட்டுப்படுத்தியிருந்த ஜானின் குரல் அழுகையில் கரகரத்தது.
ஜான் திடமாக இருக்கின்றானென்று தன் சோகத்தை அவனிடம் காட்டிய விஷால்… இப்போது அவனுமே அழ, தன் அழுகையினை நிறுத்தி ஜானை அணைத்து ஆறுதல் படுத்தினான்.
“யாது உயிரோடு வேணும்டா! அவனில்லாமால் நாமெப்படி?”
ஜானின் அவ்வார்தை விஷாலிடம் வேலை செய்தது.
காகிதங்களை கொண்டு வந்த விஷால் வருவிடம் நீட்டி கையெழுத்துக் கேட்க, வரு பேந்த பேந்த விழித்தாள்.
அவளின் நிலை அங்கிருப்போருக்கு பரிதாபத்தை உண்டாக்கியது.
“ஜஸ்ட் பார்மாலிட்டிஸ் ஆதிப்பா!”
வருவிற்கு அருகிலிருந்த ஆதியின் பார்வை உணர்ந்து தானாக பதில் சொல்லிய விஷாலிடம் விரக்தி புன்னகை ஒன்றை சிந்தியவர், அவன் காட்டிய காகிதங்களில் தான் கையெழுத்திட்டார்.
இந்த கையெழுத்து எதுக்கென்று அவருக்காத் தெரியாது?
யாதவிற்கு அறுவை சிகிச்சை தொடர்ந்தது…
நேரம் நீண்டுகொண்டே சென்றது.
அவ்வறையின் கதவினையே வெறித்தபடி இருந்தாள் வருணவி. யாதவின் செல்லம்மா.
அவளை காண காணத்தான் மற்றவர்களின் துன்பம் இன்னும் அதிகமாகியது.
நிரலியை ஸ்வேதா தேற்றிக்கொண்டிருக்க, ஆதியை தேற்றும் வழி தெரியாது ராகவ் அவரின் அருகில் அமர்ந்திருந்தார்.
சற்று நேரத்திற்கு முன்பு தான் கிராமத்திற்கு அழைத்து சூர்யாவிடம் யாதவின் நிலையை பகிர்ந்திருந்தார்.
விடயம் கேள்விப்பட்டதும் அங்கிருப்போரும் சென்னையை நோக்கி கிளம்பியிருந்தனர்.
அப்போதுதான் விடயமறிந்து மருத்துவமனை வந்தனர் ஹரி மற்றும் ஆதினி.
மகளை கண்டதும் கட்டிக்கொண்டு அழுதுவிட்டார் நிரலி.
“இந்தபொண்ணு இப்படி இருக்கிறதுதான் இன்னும் பயத்தை கொடுக்குது” என்று அவர் மகளிடம் முறையிட
வருவின் அருகில் வந்தாள் ஆதினி…
“அழுதிடுடா… இப்படி நீ இருந்தன்னு தெரிந்தாலே யாது அவ்வளவு கவலைப்படுவான்.”
யாருடைய பெயரை சொன்னால் அவள் தெளிவாளோ அதனை நன்கு அறிந்து கூறினாள்.
“நான் ஏன் டார்லிங் அழணும்?” எனக் கேட்ட வரு, “நான் உயிரோடு தானே இருக்கிறேன்? என் சுவாசம் சீராகத்தானே இருக்கிறது? அப்போ மாமாவுக்கு எதுவும் ஆகாது” எனக்கூறி தன் பார்வையை மீண்டும் கதவிலேயே பதித்துக்கொண்டாள்.
அவள் சொல்லிய பதில் மற்றவர்களுக்கு எத்தகைய உணர்வினை கொடுத்தது அவர்களுக்கே தெரியவில்லை. வார்த்தைகளற்ற நிலை.
இப்படியும் காதலிக்க முடியுமா? ஒருவரின் சுவாசத்தில் இன்னொருவரின் சுவாசம் நிறைந்துள்ளது என்பது எத்தகைய வலிமையான காதல். மற்றவர்களுக்கு வருந்துவதா மகிழ்வதா எனும் நிலை.
கிட்டத்தட்ட ஐந்தாறு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவர் வெளியில் வந்தார்.
அனைவரின் பார்வையும் அவர் மீதே.
ஆனால் அவர் சொல்லுவதை கேட்கும் திடம் ஒருவருக்குமில்லை.
ஜான் தான் அவரை நோக்கிச் சென்றான்.
“ஆபரேஷன் ஓவர் மிஸ்டர்.ஜான். பட் இப்போ எதுவுமே சொல்ல முடியாது.” சொல்லியவர் நகர்ந்து விட்டார்.
ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை.
“மாமா வந்திடு மாமா.” வருவின் மனம் ஓலமிட்டுக்கொண்டே இருந்தது.
யாதவிடம் எவ்வித எதிர்வினையுமின்றி போக குமரநாதனே அவனின் நிலையில் பயம் கொண்டார்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன.
ஊண் உறக்கமின்றி அனைவரும் மருத்துவமனை வளாகத்திலேயே யாதவிற்காக காத்திருந்தனர்.
ஜான் மற்றும் விஷாலை அழைத்த குமரநாதன்… “யாதவ் அளிக்கும் சிகிச்சையை ஏற்காமல் இந்நிலையே நீடித்தால் பிரெய்ன் டெட் ஆக வாய்ப்பிருக்கு. கோமா என்றால் கூட ஓரளவு சரிசெய்திட வாய்ப்பிருக்கு, ஆனால் மூளைச்சாவு” என்று நிறுத்தியவர் கை விரித்திருந்தார்.
“யாதவின் ஆழ் மனசில் இருக்கும் ஏதோ ஒன்று தான் அவரை பிடித்து வைத்திருக்கு. சோ, அதை வெளிக்கொண்டு வரணும். மாற்றி மாற்றி உங்களில் ஒருவர் அவருடன் பேசிக்கொண்டே இருங்கள்.”
மருத்துவர் சொன்னதை ஏற்று ஒவ்வொருவராக யாதவின் அருகில் அமர்ந்து பேச்சினைத் துவங்கினர்.
யாரின் குரலுக்கும் யாதவிடம் பலனில்லை.
“எல்லாரும் போய் பார்த்தாச்சு நீ மட்டும் தான். போம்மா!” ஜான் சொல்ல அவனை பார்த்தவள்,
“பயமா இருக்குண்ணா?” என்றாள் நலிந்துபோன குரலில்.
அனைவரின் இதயமும் ஒன்றாக கனத்தது.
“இந்த உலகத்திலேயே அவனுக்கு ரொம்ப பிடிச்சது நீதாம்மா! அதை இந்த ரெண்டு மாதத்தில் எங்களுக்கு புரிய வச்சிட்டான். இப்போ கூட உன்னை நினைச்சிட்டு தான் உள்ளுக்குள்ளே உறைந்து போயிருப்பான். நீ போய் பேசும்மா. நம்ம யாது நமக்கு வேணும். எல்லாமே இப்போ உன் கையில் தான்” என்றவன் வருவின் இரு உள்ளங்கையிலும் தன் கைகளை பதித்து கண்களில் வைத்துக்கொண்டு கதறினான்.
ஜானிடம் யாருமே இதனை எதிர்பார்க்கவில்லை. அவன் கண்ணீர் சிந்திடுவானென்று யாருமே எண்ணவில்லை.
இறுதியில் ஆதிதான் அவனை தேற்றும்படி ஆனது.
வர மறுத்த கால்களை கடனப்பட்டு நகர்த்திக்கொண்டு யாதவிருந்த அறைக்குள் சென்றாள் வரு.
இறைவனை காண சொர்க்க வாசலில் நுழையும் பக்தனின் நிலை வருவிடம்.
முகமெல்லாம் வீங்கி… யாதுவா இதென்று பிறர் கேட்கும்படி, கை கால்களில் ஆங்காங்கே மருந்திடப்பட்டு, தலையில் பெரிய கட்டுடன்… பல வயர்களின் நடுவே புயலில் சிக்கி வேரோடு சாய்ந்திட்ட ஆலமரம் போல் கிடந்தான் அவளவன்.
நடுக்கத்துடன் அடி வைத்து கணவனின் அருகில் சென்றவள்…
“மாமா” என்று உச்சரித்தபடி நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்திட… அவனுள் மாற்றம். சுயம் இழந்த நிலையிலும் தன்னவளின் சபரிசத்தை உணர்ந்திட்டானோ… உடல் முழுக்க ரத்தம் சூடாக பாய்ந்திட… மெல்லிய சிலிர்ப்பு ஓடியது.
மானிட்டரில் யாதவின் பல்ஸ் ரேட் உயர்ந்தது.
யாதவுடன் இருக்கும் செவிலி அதனை கவனித்தவராக வருவின் அருகில் வந்து, “பேச்சுக்கொடுத்துட்டே இருங்க மேம்” என்று சொல்லிவிட்டு மருத்துவரை அழைத்துவர ஓடினார்.
மருத்துவர் யாதுவை பரிசோதித்து நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி வெளியில் வந்தார்.
“இனி பயப்பட ஒன்றுமில்லை. கொஞ்ச நேரத்தில் கண் விழித்திடலாம்” என்றவர் தன்னுடைய அசிஸ்டெண்ட் ஒருவரை அறிமுகம் செய்து ” இனி இவர் பார்த்துப்பார்” என்று சென்றுவிட்டார்.
அதன் பிறகும் மருத்துவர் சொல்லிய நேரம் கடந்து… அனைவரையும் ஒருவழி செய்தே யாதவ் கண் விழித்தான்.
யாதவ் கண் திறக்கும்போது அவனருகில் வரு மட்டுமே இருந்தாள்.
வரு அவன் கண் விழித்திட்டான் என்கிற சந்தோஷம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய “மாமா” என்றழைக்க நெற்றி சுருக்கியவன் அவளிடம் அந்நியப் பார்வை வீச வரு உயிரோடு மரித்திட்டாள்.
அதற்குமேலும் அவனருகில் இருக்க மனமின்றி அழுகையோடு வெளியில் வந்தவள் ஆதியிடம் அப்படியே கூற, அவரின் மனமும் யோசனைக்குச் சென்றது.
வரு வெளியில் சென்றதுமே அறையை முழுக்க பார்வையால் அலசியவன் அங்கு மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியை கண்டு அதிர்ந்தான்.
ஒரு மருத்துவனாக அவனின் நிலை அவனே அறிவதாய்.
மாலை வேளையில் வயல்களுக்கு நடுவே பம்ப் செட்டிலிருந்து நீர் கொட்டும் தொட்டியின் சுவற்றின் மீது உடலை சுருக்கி கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த வரு தன்னுடைய இரண்டு மாத கால வாழ்க்கையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள்.
அதற்கு மேலும் மனம் அதனையே எண்ணி எண்ணி வருந்த மனதின் கனம் தாங்காது கண்கள் உடைப்பெடுக்க அமர்ந்தவளின் தோற்றம் இயற்கைக்கும் வலி கொடுத்ததோ… மழையென தரையிறங்கி அவளை ஆறுதல் படுத்த விழைந்தன.
*நீயில்லா நிஜம்
உன்னுடன் நிழலாய்.
நீயில்லா வாழ்வு
உன்னுடன் மாயையாய்.
நீயில்லா உலகம்
உன்னுடன் வீழ்வதாய்.
நீயில்லா உயிர்
உன்னுடன் மரிப்பதாய்.*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
43
+1
1
+1