கூச்சலிட்டு மகிழும் கோடிப் பேர் எனக்குத் தேவையில்லை… என் உணர்வுகளை எந்த ஒரு ஒழிவு மறைவுமே இல்லாமல் வெளிப்படுத்த உண்மையான ஒரு நபர் இருந்தாலே போதுமானது….அந்த குறை எனக்கு இல்லை… எனவே அதைப்பற்றி பேசுவதும் நினைப்பதும் வீண் என்று விட்டுவிட்டேன்….
அதே சமயத்தில் என்னுடை குட்டி உலகில் பங்கு கொண்ட ஒவ்வொருவரும் குணம் மாறாமல் இருக்க வேண்டும் என்ற பேராசையை மட்டும் என்னுடன் இருந்து பிரிக்கவே முடியவில்லை… அந்த எதிர்பார்ப்பை என்னால் தவிர்க்க முடியாது…அது நேர்ந்தால் அந்த வலியையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது…
எனக்கான வாழ்க்கையின் சிறப்புகளையும் அம்சங்களையும் அணு அணுவாய் ரசித்து வாழ விரும்பும் வாழ்க்கையின் பெரும் ரசிகை நான்… என்னடா வாழ்க்கை இது என்று புழம்பும் கூட்டத்துக்கு நடுவில் நான் வளர்த்த செடியில் சிறு பூ பூத்து விட்டாலே இந்த பூமியே எனக்குத்தான் என்ற அளவிற்கு துள்ளி குதிக்கும் குணம் உடையவள்….
நொடிக்கு நொடி மாறும் உணர்வுகளை ஏற்ற வகையில் கையாண்டு வெற்றி ருசி அறிபவள்….
அவன் என்ன நினைத்தால் எனக்கென்ன என்னைப் பொறுத்தவரையில் ஏதோ ஒரு வகையில் அவன் எனக்கு சிறப்பாகவும் முக்கியமாகவும் தெரிகிறான்…. என்னுடைய பக்கத்தில் எந்த தவறும் நேராது…நான் அவனை ரசிக்கும் தன்மையும் ஒரு போதும் மாறாது….
என் இதய சிம்மாசனத்தில் ஆட்சி அமைத்த அந்த இம்சை அரசனின் நினைவுகளை ரசித்தபின் எழுத நினைத்தால் வார்த்தைகளே முட்டி மோதிக் கொண்டு என் இதயத்திலேயே பதுங்கி விடுகின்றன… அதனுடன் போராடி வெளிக்கொணர முயன்று பல முறை முயன்றும் தோற்றுப் போனதுதான் மிச்சம்….
ஆனால் இந்த பிடிவாதக்காரி ஒன்றும் குறைந்தவள் இல்லையே….அவள் பள்ளிப் பையில் தஞ்சம் கொண்ட எத்தனையோ கசங்கிப் போன காகிதங்கள் சுமந்து கொண்டிருக்கும் கவிதை எல்லாம் அவனைப் பிறப்பிடமாகக் கொண்டவை…. அவற்றை யார் வேண்டுமானாலும் படித்திட முடியும்…ஆனால் புரிந்து கொள்வது சற்று கடினம்….சில நேரம் என்னாலே அது முடியாது…. அவனைப் போலவே அவன் பேர் சொல்லும் கவிதைகளும் கல் நெஞ்சுடையவை…
எப்போதாவது இரக்கப் பட்டு தன் கடினங்களை கட்டவிழ்த்துவிடும் அப்போது ரசித்தால்தான் உண்டு….அதை எழுதிய எனக்கே அதுதான் விதி… ஏனென்றால் அது முழுவதும் அவனுக்கானது…
என் கவிதைகள் குடிகொண்ட காகிதங்களும் என் காதலைப் போலவே ரகசியமானது…. தனிமையில் பரந்து விரிந்தாலும் மற்ற சமயங்களில் பதுங்கிக் கொள்ளும் என் வீட்டுத் திருட்டுப் பூனை போல…
ஒரு கட்டத்திற்கு மேல் உணர்வுகளை ஒழித்து வைக்க முடியாது…வெளிப்படத் தொடங்கிவிடும்….அது நம் அனுமதியைக் கேட்பதே இல்லை….நம்மை விட நம் கூட இருக்கும் நபர் அதை தெளிவாக பார்வையிலேயே படம்பிடித்து நம்மிடம் போட்டுக்காட்டி நாணமடைச் செய்துவிடுவார்கள்…..
அப்படித்தான் ஒரு நாள்…சற்றும் எதிர்பாராத விதமாக காலையில் இருந்தே கனத்த மழை…பள்ளி விடுமுறையை அறிவிக்கட்டும் மீண்டும் போர்வையைப் போத்தி சாய்ந்து விடலாம் என்று கவனம் சிதறாமல் டிவிப் பெட்டியை உத்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்….நான் மட்டும் இல்லை என் கூட்டாளியும்தான்…அப்படி பார்த்து என்ன பயன் கடைசியில் ஏமாற்றம் மட்டும்தான் எங்களுக்கு எஞ்சியது…
பள்ளி வேலை நாள்தான் அன்று சோகத்தோடு சென்றோம்…பள்ளி செல்லும் வரைக்கும் பொறுமையுடன் இருந்த மழை அதன் பிறகு வெளுத்து வாங்கத் தொடங்கியது….சடசடவென சத்தம் காதைக் கிழிக்க வகுப்பிற்கு வந்த ஆசிரியரோ இன்று உங்கள் நாள்….என்ஜாய் பண்ணுங்க…ஆனா வெளிய வராம மழைல நினையாம என்ன வேணாலும் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார்….
அத்தனை பேரும் அரட்டை அடிக்கத் தொடங்கினோம்…மழையின் சத்தத்திற்கு டஃப் குடுப்பம்லன்ற அளவுக்கு அலப்பறைய கூட்டிகிட்டு ஒரே சிரிப்பு….
இத்தன நாளா இருக்கிட்டு இருந்த இடத்துல கட்டுக்கள் அவிழ்த்து விடும்போது பறக்காம வேற என்ன பண்றது….
கொஞ்ச நேரத்திலே சோர்வாகி சொக்கிப் போய் புத்தகத்தின் மீது தலை சாய்த்திருந்த என்னிடம் வந்து என் தோழியோ அவளது சேட்டையைத் தொடங்கினாள்….
“அம்மு…அம்மு….அம்மு”
“யேய் என்னடி வேணும் உனக்கு…அம்மு அம்முனு காது கிட்ட வந்து கத்துற”
“அதுக்கு ஏன் நீ மூஞ்ச இப்படி வச்சிட்டு பேசுற…நான் பாசமாதான கூப்பிட்டேன்…..”
“ம்ம்ம் உன் பாசம்தா எனக்குத் தெரியுமே…சரி விஷயத்துக்கு வா சும்மா எதையாவது பேசாம”
“இல்ல நான் ஒன்னு கேட்பேன் நீ சொல்லனும்”
“கேளு சொல்றேன் “
“பதில் மட்டும்தான் சொல்லனும் என்னையத் திட்ட கூடாது சரியா “
“அம்மா தாயே…சரிமா….”
“நீ யாருக்காக இந்த ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தனு எனக்குத் தெரிஞ்சாகனும்…அதுவும் இன்னைக்கே இப்பவே…”
“ஏன்டி உனக்கே இதுக்கு பதில் தெரியும் இருந்தாலும் பரவாயில்ல… இன்னொரு டைம் சொல்றேன்… என் அப்பா கடன் வாங்கி கஷ்டப்படுறது எனக்கு புடிக்கவே இல்ல…அது மட்டும் இல்லாம நீ இங்க இருக்க…இங்க வந்தா நீ என்னைய பாத்துப்ப அதுக்காகத்தான் இங்கயே வந்தேன் “
“யேய் யேய்…நீ நடிக்காதடி…முதல்ல சொன்ன காரணத்தக்கூட ஒரு வகையில ஏத்துக்குவேன்….ஆனா ரெண்டாவதா ஒரு காரணம் சொன்ன பாத்தியா அதத்தான் என்னால ஜீரணிக்க முடியலடி யம்மா….”
“ஏன்டி லூசு…. பைத்தியக்காரத்தனமா பேசாத….நம்புனா நம்பு இல்லனா போ….”
“நம்புறேன்….உனக்கும் அந்த அப்புவுக்கும் ஏதோ ஒன்னு இருக்குனு நம்புறேன் “
“யாரு அப்பு “
“எல்லாமே தெரிஞ்சும் எதுவுமே தெரியாத மாதிரி சீன் போடுற பாத்தியா…சத்தியமா முடியலடி…. போகும் போதும் வரும்போதும் அவன் கிளாஸ எட்டிப் பாக்குறது என்ன…அவன் லீவ் போட்டா அவன் கிளாஸ்ல போய் விசாரிக்குறது என்ன…ஸ்கூல் விட்டு அரை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லனு அவன் போன பிறகு அவன் பின்னாடியே சைக்கிள்ல போறது என்ன….ஸ்கூல் பிரேயர்ல அவன் கண்ணுல படுற மாதிரி நிக்குறது என்ன….ஆத்தாடியாத்தா என்ன ஒரு புத்திசாலித்தனம்…..ஆனா என் கிட்ட மட்டும் கிருக்கு மாதிரி பேச வேண்டியது….நடக்குற எல்லாத்தையுமே நான் கவனிச்சுட்டுதான் இருக்கேன்….. ஒன்னும் சரியாப்படல….”
“லூசு லூசு வேற எதாவது வேலை இருந்தா பாரு…தேவையில்லாத ஸ்டோரி எல்லாம் நீயா கற்பன பண்ணிட்டு இருக்காம…”
“யாரு நான் ஸ்டோரி கிரியேட் பண்றனா?…. சரி உன் பேக்க மட்டும் எடுத்து குடு….உண்மை என்னனு நான் காட்றேன்…யாரு பொய் சொல்றாங்க… யாரு பழைய பிளாக் அன்ட் ஒயிட் படத்துல வர்ற மாதிரி கண்டுக்காத ஒருத்தரையே உருகி உருகி காதலிக்குறாங்கனு தெளிவா புரிய வைக்குறேன்….”
…கதை தொடரும்…