Loading

அத்தியாயம் 11

 

” உனக்கு லவ் மேரேஜ்ஆஆஆ!! ” என்று கத்திய அருணின் வாயை மூடி,  “ஏன்டா கத்துற?. யாரு காதுலயாவது விழுந்தது அவ்வளவு தான். நான் லவ் பண்ணேனு சொன்னாளாடா அவ. எருமை எருமை. ஒன்லி சைட் மட்டும். அது சும்மா. அதை அப்படியே மனசுல போட்டு புதைச்சுட்டு அமைதியா இருடா” என்று மிரட்டினாள் மதி.

 

” அடியே வைஷூ ஏதோ நான் அவனை விரட்டி விரட்டி காதலிச்சு, மனசுல அவனை வச்சுக்கிட்டு மருகிக்கிட்டு இருந்த ரேன்ஜ்க்கு ஏன்டி பில்டப் பண்ற. அவனை பார்த்த நேரம் அன்னைக்கு நடந்ததெல்லாம் ஞாபகம் இல்லை. அதான் சொல்லலை போதுமா ” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

 

அதன் பிறகு வந்த இரண்டு நாளும் விருந்து என்று அதிலே பொழுது கழிந்தது. மூன்றாவது நாள் மதியின் தாய் தந்தை சென்னைக்குக் கிளம்புகிறோம் என்று சொல்லவும் அதுவரை எதுவும் தோன்றாமல் சந்தோஷமாக சுற்றித் திரிந்தவள் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது. தன் தாயை அணைத்து விட்டு ” போயிட்டு வாங்கமா”  என்றாள். தன் தந்தை தன்னை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததால் அவர் மேல் கோவமாக இருந்தாள். அவள் பேசாமல் முகத்தைத் திருப்புவது ரவிக்கும் கஷ்டமாகவும் அவளைப் பிரிந்து செல்வதால் வருத்தமாகவும் இருந்தது.

 

” அவளுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. சொல்லிக் கொடுத்தா கத்துப்பா. பாத்துக்கோங்க” என்று சிவகுரு மற்றும் கனமொழியிடம் சொல்லி விட்டு புறப்பட்டனர் அவர்களுடன் அருணும் வைஷூவும்.

 

அவர்கள் சென்ற பின் மதி, பசிக்கவில்லை என்று சாப்பிடக்கூட செய்யாமல் அமைதியாக அறையில் அடைந்து கொண்டாள். அவர்கள் சென்ற பிறகு வெற்றி வழக்கம் போல் அவன் தோட்ட வேலைகளை முடித்து விட்டு சோர்வாக வந்தமர்ந்தான்.

 

” மதி அவங்க அம்மா அப்பா ஊருக்குப் போன பிறகு ரூம்க்குள்ள போனவ சாப்பிடக்கூட வெளியே வரலபா. நீ போய் கூப்டு வா. ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க” என்றார் கனிமொழி.

 

” சரிம்மா” என்று மாடியில் தனதறைக்குச் சென்றான்.

 

உள்ளே வந்தவன் “மகாராணியை சாப்பிடக் கூப்டா தான் வருவேங்களோ?. உங்க வீடு மாதிரி எல்லாமே உன் கைக்கு வராது. உன் வேலையை நீ தான் செஞ்சுக்கனும் ” என்றான்.

 

” நான் ஒன்னும் நீ கூப்டா தான் சாப்ட வருவேன்னு சொல்லல”.

 

அவள் குரலில் சோகம். கன்னத்தில் கண்ணீர் கோடுகளின் தடத்தை பார்த்து விட்டு ‘ சே அவ அப்பா அம்மா ஊருக்கு போனதால் பீல் பண்ணிட்டு இருந்திருப்பா. நாம வேற அதிகமா பேசிட்டோமோ’ என்று நினைத்து விட்டு “பின்ன ஏன் சாப்டாம இருக்க வா சாப்பிடலாம்” என்றான்.

 

அவள் எதுவும் பேசாமல் அவன் பின்னே சென்று சாப்பிட அமர்ந்தாள். வெற்றி சாப்பிடாமல் சாதத்தை பிசைந்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

 

” என்னபா வெற்றி என்னத்தை யோசிச்சுட்டு சோறை அளந்துட்டு இருக்க. காலைல இருந்து வேலை செஞ்ச உடம்பு. நல்லா அள்ளி சாப்பிடுயா. அப்போ தான் உடம்பு நல்லா இருக்கும். சாப்பிடுற நேரத்துல கண்டதை நினைக்காத ”  என்றார் முத்தம்மாள் பாட்டி அவன் சாதத்தை அளந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு.

 

” என்ன வெற்றி என்னாச்சு” என்றார் சிவகுரு.

 

” இல்லப்பா இந்த ராமசாமி மாமா மகன் சுரேஷ் இருக்கான்ல, அவன் சென்னைல வேலையை விட்டுட்டு விவசாயம் பண்ணப் போறேனு வந்துட்டான் போல. காலையில் அவங்க வீட்டுப் பக்கம் ஒரே பிரச்சனையா இருந்துச்சு. சரி என்ன ஏதுனு கேட்கலாம் அங்கன நின்னேன். அவங்க அப்பா வேலையை விட்டுட்டு வந்துட்டியேனு அவனை அடிச்சுப் போட்டாரு. அவன் அங்கன போயி வேலை பாக்கவே பிடிக்கலனேனு பொலம்புறான். கூறுகெட்ட பையன் தான் படிச்சுட்டு விவசாயம் பண்ணுவானு என்னையை வேறக் குத்தி காம்பிக்கிற மாதிரி பேசிட்டாரு. எனக்கு சுர்றுனு கோவம் வந்து நானும் பதிலுக்கு  பேசிப்புட்டேன். ஏன்பா படிச்சுட்டு விவசாயம் பண்றது அவ்வளவு பெரிய அசிங்கமா??” என்றான் ஆதங்கமாய்.

 

” விடு வெற்றி. சில மக்கள் அப்படித்தான். படிச்சவன் பகட்டா தான் இருக்கனும் அந்த மாதிரி சொல்லி சொல்லியே அப்டியே மனசுல பதிஞ்சுப்போச்சு. அதைப் பத்திலாம் கவலைப்பட்டுட்டு இருக்காத” என்றார் சிவகுரு.

 

“உலகத்துல இருக்குற எல்லார் தட்டுலயும் சாப்பாடைக் கொண்டு வர்ற விவசாயியோட விவசாயத்தோட அருமை தெரியலையா ராசா அவனுக்கு.. நீ எதுக்குயா சோர்ந்து போற?” என்று பேரனைத் தேற்றினார் முத்தம்மாள் பாட்டி.

 

மதி அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவள் வெற்றியுடன் அவர்களின் அறைக்குச் சென்றாள். அறைக்கு வந்தும் அவன் யோசனையின் பிடியிலே இருப்பதைப் பார்த்து விட்டு ” ஏன் காட்டான் உனக்கு பிடிச்சு தான் இந்த விவசாயத்தை பண்ற. மத்தவங்களைப் பத்தி ஏன் யோசிக்கிட்டு இருக்க. நாம மனசுக்கு பிடிச்ச வேலையை பண்ணா தான் நாம சந்தோஷமா இருக்க முடியும்”  என்றாள் மதி.

 

அவளைக் கூர்ந்து பார்த்தவன் “என்ன பண்ண எல்லாரும் உன்னை மாதிரி தான் இருக்காங்க. நீ மட்டும் என்ன விவசாயம் பண்றவனை கல்யாணம் பண்ண மாட்டேனு தான சொன்ன?” என்றான் கொஞ்சம் நக்கலாக.

 

” இங்க பாரு நான் நீ பார்க்குற தொழிலையோ உன்னையோ தப்பா எதுவும் பேசல. எனக்கு கிராமத்துல இருக்க பிடிக்கலனு தான் சொன்னேன்” என்றாள்.

 

” அப்போ என்னை பிடிக்குமா?” என்றான் கண்களில் எதிர்பார்ப்போடு.

 

“அது அது… அப்படி இல்லை… சரி அதை விடு. உனக்கு எதுக்கு மூக்குக்கு மேல கோவம் வருது. மத்தவங்களுக்காக நீ ஏன் டென்ஷன்ல இருக்க”.

 

அவள் சமாளிப்பதை அறிந்து கொண்டு ” ஒரு பிரச்சனை அடிக்கடி நமக்கு வரும் போது இந்த மனசும் அதைப்பத்தி அதிகமா யோசிக்க ஆரம்பிச்சுடுது. என்ன பண்ண” என்றான் விரக்தியாக.

 

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் கண்களைச் சுருக்கினாள்.

 

” நான் படிச்சுட்டு விவசாயம் பண்ணனும்னு சொன்னப்போ சொந்தக்காரங்க எல்லாருமே இவன் என்ன லூசாங்குற மாதிரி தான் பார்த்தாங்க. அதை விட நான் படிச்சுட்டு இருக்கும் போது அத்தைக்கு பூங்குழலியை எனக்குக் கட்டி வைக்கனும்னு ஆசை. ஆனால் படிச்சு முடிச்சு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சதும் இவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்து என் பொண்ணு காட்டுலையும் மேட்டுலையும் கஷ்டப்படவானு இஷ்டமில்லாம தான் இருந்தாங்க” என்றான்.

 

” அப்போ பூங்குழலியை உனக்கு பிடிக்குமா?” என்றாள் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு.

 

அவள்‌ எதைக் கேட்கிறாள் என்று தெரியாமல் ” ம் பிடிக்குமே. அழகான முயல்குட்டி மாதிரி. எப்பவுமே சந்தோஷமா வீட்டையே சுத்தி சுத்தி வருவா துறுதுறுனு. அம்மாவுக்கு அவளை தான் எனக்குக் கட்டி வைக்கனும்னு ஆசை”.

 

” பிடிக்கும்னா அப்போ அவளையே கல்யாணம் பண்ணிருக்கலாமே” என்றாள் மெதுவாக உதட்டைச் சுழித்து.

 

அதன் பிறகே அவள் என்னக் கேட்கிறாள் என்றுணர்ந்து அவளை வம்பிழுக்கும் பொருட்டு ” கல்யாணம் பண்ணிருக்கலாம். என்ன பண்ண என் தலைல நீதானு எழுதிருக்கு போல” என்றான் உதட்டிற்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

 

” ஆமா ஆமா நாங்க தான் உங்க காலுல வந்து விழுந்தோமாக்கும். என்னையக் கல்யாணம் பண்ணச் சொல்லி. அன்னைக்கே பிடிக்கலனு சொல்ல சொன்னேலடா. இப்போ வந்து பெரிய இவனாட்டம் என்னைக் குறை சொல்ற. இனி உனக்கு வேற வழியே இல்லை. காலம் பூரா என்னை சகிச்சுக்கிட்டு தான் வாழனும்” என்றாள் கோவமாக.

 

அவள் கோவத்தில் சிரித்து விட்டு ” அவ ரொம்ப சின்ன பொண்ணு. அதுவுமில்லாம சின்ன வயசுல இருந்து தூக்கி வளர்த்துட்டு கல்யாணம் பண்ற அளவுக்கு நினைச்சுப் பார்க்கலை. சும்மா சொன்னேன். பரவாயில்லை புருஷன்னு நினைப்பு மனசுல இருக்கு போலயே” என்றான் ஆச்சர்யமாக.

 

” ம்க்கும் மாமன் மக மேல ரொம்ப தான் அக்கறை. நாங்க புருஷனு நினைப்பு இல்லாம தான் இருக்கோமாக்கும். அப்படியே இவரு பொண்டாட்டினு நினைப்போட என்ன செய்யுறா ஏது செய்யுறானு என் நினைப்பாவே இருந்த மாதிரி” என்றாள் வாயைக் கொணட்டி.

 

பின் இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு ” நான் உன்னை அப்போ திட்டுனதுக்குலாம் சேர்ந்து பழி வாங்கிற மாட்டியே?..” என்றாள் கேள்வியாக.

 

அவள் எதைப்பற்றி கேட்கிறாள் என்று முதலில் புரியாதவன் பின் புரிந்து கொண்டு ” நீங்க தான் பெரியாளாச்சே. அதுக்குலாம் பயந்தவளா நீ” என்றான் சற்று நக்கலாக.

 

” பயம்லாம் இல்லை. இருந்தாலும்…” என்று இழுத்தாள்.

 

‘எந்த மாதிரி தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள்!’ என்று நினைத்து விட்டு ” இங்க பாரு இதுக்கு முன்ன நடந்ததுலாம் நான் பெரிசாவே எடுத்துக்கல. ஏதோ நீ சின்னப் புள்ளைத்தனமா பேசுற மாதிரி தான் எனக்கு இருக்கும். நீ பயப்படுற அளவுக்கு முன்ன நடந்ததுக்கு இப்போ உன்மேல நான் கோவத்தைக் காண்பிக்குற அளவுக்குக் கெட்டவன்லாம் இல்லை” என்றான் சற்று காட்டமாக.‌

 

” அதுவரைக்கும்…” என்று அவள் திரும்பவும் இழுக்கவும் ” நான் உன்னைக் கடிச்சுத் திண்ற மாட்டேன். போய் படு” என்றான்.

 

அவளும் ‘இதுக்கு மேல் ஏதாவது கேட்டால் அடித்தாலும் அடித்து விடுவான். கம்முனு படுத்துடலாம்’ என்று கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள். இருவரும் எதிரெதிரே முதுகுக்காட்டி படுத்துக் கொண்டிருந்தனர். கண்மூடி படித்திருந்தார்களேத் தவிர தூங்காமல் ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டு நினைவுகள் தங்களுக்குள் இதுவரை நடந்த நிகழ்வுகளுக்குச் சென்றது.

 

பருவ இளைஞனாக அரும்பு மீசை‌ முகத்தில் துளிர்த்திருக்க துள்ளிக்குதிக்கும் காளையாக கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தான் வெற்றி. கல்லூரி படிப்பின் போதும் தந்தைக்கு அவ்வப்போது உதவியாக அனைத்து வேலைகளையும் செய்து பழகிக் கொள்வான். நண்பர்களுடன் இளைஞர்களுக்கே உரிய கேலி கிண்டல்களுடனும் ஜாலியாக இருப்பவன்.

 

நம் நாயகி மதி பதினைந்து வயது பருவ மங்கையாக துள்ளி ஓடும் மானாக இருந்தாள். ஒருதடவை ரவிச்சந்திரன் சொந்த ஊரில் சிவராத்திரிக்கு குலதெய்வம் கோவிலிற்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தோடு வந்திருந்தனர். குலதெய்வம் கோவிலில் தரிசனம் முடித்து விட்டு சிவகுரு அவரை அங்கு கண்டுவிட்டு கையோடு தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

 

முதன்முறையாக தன் வீட்டிற்கு வருவதால் மதிக்கு புது பட்டு பாவடை சட்டை எடுத்து வந்து கொடுத்தார். இதுவரை மாடர்ன் உடை அணிந்தவள் விவரம் தெரிந்து முதன் முறையாக பட்டு பாவடை சட்டை அணிந்து கனிமொழி அவளுக்கு ரெட்டை ஜடை பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைத் தொங்க விட்டிருந்தார். அவளுக்கே அவளை மிகவும் பிடித்துப் போய் வெற்றியின் அறையில் கண்ணாடியில் கண்ணுக்கு மையிட்டு தன்னை மேலும் அழகேற்றிக் கொண்டிருந்தாள்.

 

அன்று சிவகுருக்கு வேலை இருந்ததால் வெற்றி தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு மண் கரைபடிந்த லுங்கியுடனும் அழுக்குச் சட்டையுடனும் அறைக்குள் நுழைந்தான். கண்ணாடியில் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தவள் அவன் திடீரென நுழைந்ததில் பயந்து “ஏய் இடியட்.. நீ பாட்டுக்கு பெர்மிஷன் கேட்காம ரூம்க்குள்ள வர்ற அறிவில்லை. வேலைக்காரங்கலாம் இப்படி தான் கொஞ்சம் கூட டிசிபிளின்யே இல்லாம இருப்பேங்களா?” என்று அவன் யாரென்று தெரியாமல் கோவத்தில் ஏதேதோ கத்தினாள்.

 

‘இவ யாரைத் திட்டுறா?’ என்று திரும்பி திரும்பி பார்த்து முழித்துக் கொண்டிருந்தான்.

 

“உன்னை தான்டா கேட்குறேன் காட்டான். ஏன் திருதிருனு முழிச்சுக்கிட்டு நிக்குற. வெளில போ” என்றாள்.

 

“அடிங்… என் ரூம்க்குள்ளே வந்து நின்னுக்கிட்டு சில்வண்டு மாதிரி இருந்துட்டு என்னையவே டா சொல்லி மரியாதை இல்லாம பேசுறியா. யாருடி நீ?. என் ரூம்ல என்னடி பண்ற?” என்றான் ஒரு சிறு பெண் தன்னை மட்டு மரியாதை இல்லாமல் பேசுகிறாளே என்ற கோவத்தில்.

 

“என்னாது உன் ரூம்ஆஆ!!. சிவம் மாமா என்ன இங்க தான் யூஸ் பண்ணிக்க சொன்னாங்க. நீங்க யாரு?’ என்றாள் அதிகாரமாக.

 

“ம் உங்க சிவம் மாமா பெத்த புள்ளை. போதுமா?”.

 

” அவங்க எப்டி அமைதியா இருக்காங்க. நீ காட்டான் மாதிரி அவரு புள்ளைனா நம்பவே முடியலை. சே பட்டிக்காட்டான். அதுக்கு தான் அப்பாகிட்ட இந்த பட்டிக்காட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னேன்” என்று அவள் போக்கிற்கு பல பாவனைகளை முகத்தில் காட்டி பேசிக் கொண்டிருந்தாள்.

 

“ஆமா இவ பெரிய நகரத்து அல்லிராணி. உன்னலாம் என்னை மாதரி ஆளுக்கு கட்டிக் கொடுத்து காட்டுல வேலை செய்ய விட்டா தான்டி கொழுப்பு குறையும்”  என்றான் ஏதோ விளையாட்டாக கிராமத்தில் சொல்வது போல்.

 

அவள் வாயைக் இடவலமாக கொணட்டி விட்டு “நான் ஏன்டா உன்னைக் கட்டிக்கிறேன். உன்னைய மாதிரி காட்டானை என் வாழ்நாளுல சந்திக்கவே மாட்டேன்” என்று கோவமாக சென்று விட்டாள்.

 

சிறு பெண்ணவள் அதையே மூளையில் ஏற்றிக் கொண்டாள் கிராமம் என்றாலே இப்படித்தான் காட்டுமிராண்டித் தனமாக அவர்கள் சொல் படி ஆட வேண்டும் என்று‌. அதன் பின் அந்த ஊருக்கு வருவதுமில்லை. அவனைப் பார்க்கவும் இல்லை.  அவன் வார்த்தைகளை தவிர அவன் முகம் கூட நினைவில் பதியவில்லை.

 

அதன் பின் வெற்றி இளங்கலைப் படிப்பு முடித்து முதுகலைப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மதி அவன் கல்லூரிக்கு கல்சுரல்ஸ்காக ஒரு பிரசென்டேஷன் செய்வதற்கு வந்திருந்தாள்.

 

கல்லூரியில் மாணவத் தலைவனாக கருப்பு வண்ண பேண்ட் மற்றும் வெள்ளை நிறச் சட்டையில் மங்கையர்களை மயக்கும் மாயக் கண்ணனாக வியர்க்க விறுவிறுக்க வெள்ளைச் சட்டை நனைய அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து கொண்டிருந்தான் வெற்றி.

 

கல்லூரிக்கு வந்திருந்த நிறைய பெண்களின் கண்களில் அவன் விழாமலில்லை. அதில் நம் மதியின் குருஃப்பும் ஒன்று. பிரசென்டேஷன் முடிந்து மீதி இருந்த நேரங்களில் அவனைத் தேடி தேடி அலைந்து சைட் அடிக்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தனர் மதி மற்றும் வைஷாலி.

 

“அடியே மதி ஆளு செமயா இருக்கான். இவனுக்கு ஆள் இல்லாமலா இருக்குங்குற!?” என்றாள் வைஷூ சந்தேகமாக.

 

” ஆளு இருந்தா என்ன இல்லனா என்ன. இன்று இந்த பொழுது அவன் நம்மாளு. பாத்துட்டு போய்க்கிட்டே இருக்கலாம். எப்படி?” என்று கண்ணடித்து இருவரும் ஹைபை போட்டுக் கொண்டனர்.

 

அவன் வேலை செய்யும் அழகையும், சில நேரம் மிரட்டவதிலும், சில நேரம் பக்குவமாக எடுத்துச் சொல்வதாக இருக்கட்டும் அவனின் ஒவ்வொரு செய்கையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

அவனுடன் இருந்த நண்பர்களில் ஆனந்த் என்பவன் “மச்சான் உன்னை ரொம்ப நேரமா ஒரு பொண்ணு நீ எங்க போனாலும் பாலோவ் பண்ணிட்டு வருது” என்றான் மெதுவாக.

 

“நானும் பார்த்தேன். இரு வர்றேன்” என்று விட்டு அவர்களை நோக்கி நடந்தான்.

 

” இவன் எதுக்குடி நம்மளை பார்த்து வர்றான். வாடி போய்டலாம”  வைஷூ.

 

“வரட்டும்டி பாத்துக்கலாம்” என்றாள் மதி அசால்டாக.

 

அவர்களை நெருங்கி ஒரு நிமிடம் ஆராய்ச்சி பார்வை பார்த்து விட்டு

“என்ன வேனும் உங்களுக்கு?. எதுக்கு என் பின்னாடியே வந்துட்டு இருக்கேங்க. ஏதாவது உதவி வேனுமா?” என்றான் நேரடியாக ஒருவேளை புதுஇடம் என்பதால் ஏதாவது உதவி வேண்டி வருகிறார்களோ என்று.

 

“நோ தேங்க்ஸ் எந்த உதவியும் வேண்டாம். நீங்க அழகா இருக்கேங்க அதான் சைட் அடிக்கலாமேனு பின்னாடியே வந்தோம்” என்றாள் படாரென்று.

 

‘அடிப்பாவி இப்டியாடி பட்டுன்னு போட்டு உடைப்ப. அவன் நம்மள என்ன நினைப்பான்’ என்று உள்ளுக்குள் பதறிக் கொண்டிருந்தாள் வைஷூ.

 

அவள் பதிலில் திகைத்து நின்றவன் “பாத்தாச்சுல கிளம்பு. இப்படி பின்னாடியே வராத” என்று திரும்பியவனின் உதட்டிற்குள் மர்மப் புன்னகை.

 

” இது என்னடா நம்மூர்ல பையன்களே பொண்ணுங்க கிட்ட இப்டி சொல்ல வெட்கப்படுவோம். இவ படக்குனு இப்டி சொல்லிட்டு போறா. இந்த நேரத்துக்கு உன் கை பேசிருக்குமே?. பொண்ணுங்குறதால விட்டுட்டியோ?!. சந்தேகமாக இருக்கே” என்றான் ஆனந்த் தாடையில் கைவைத்து யோசித்துக் கொண்டே.

 

” சந்தேகப்படுற அளவுக்கு ஒன்னுமில்லை. வா நாம அடுத்த வேலையை பார்க்கலாம்” என்று அவனை அங்கிருந்து இழுத்துச் சென்று விட்டான் வெற்றி.

 

அவளுக்கு தான் வயதின் மாற்றத்தால் அரும்பு மீசை இப்போது வளர்ந்து முறுக்கு மீசையாகவும் உடல் விறைப்பாகவும் அவனை அடையாளம் தெரியவில்லை. அவனுக்கோ குண்டு கன்னங்களுடன் இருந்த பருவமங்கை இப்போது காளையவனை மயக்கும் குமரியாக வந்து நிற்கவும் ஒரு நிமிடம் மயங்கி அன்று தன் அறையில் நடந்த நிகழ்வுகள் ஞாபகம் வந்து  அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

 

கல்சுரல்ஸ் முடியவும் ரவி தான் அவர்களை அழைக்க அவர்கள் உடன் வந்திருந்தார். அப்போது அவரைப் பார்த்து விட்டு அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அது கிராமத்தில் வைத்துப் பார்த்தவன் என்று தெரிந்தது மதிக்கு.

 

சே இவனா…! காட்டான்’ என்று முனுமுனுத்து விட்டு அதுவரை இருந்த ரசனைப் பார்வை வெறுப்பாக மாறி அவன் யார் என்னவென்று கூட பேசாமல் காரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

‘இவ எதுக்கு இவ்வளவு நேரம் நம்மளை ரசிச்சுட்டு இப்போ இப்டி கோவமா போறா?’ என்று குழம்பியிருந்தவன் இன்று அவள் கேட்ட பிறகே இது போல் அவள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது.

 

அதன்பின் முறுக்கிய மீசையுடன் முரட்டுக் காளையாக அவனைச் சென்னையில் பார்த்தது.

 

இருவரும் நடந்து முடிந்ததை நினைத்துக் கொண்டே ஒருவாறு தூங்கியும் விட்டனர்.

 

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Interesting sis nice ud super madhi kum vetri kum ipdi oru flashback ah

    2. Sangusakkara vedi

      Ivlo Thane rendu kutty meeting thana… Nan thn athikama ethir parthutten pola… So sad of me… Super ud sis… Tamizh ah parthu rmba naal achu mrg kuda varala… Nan rmba feel panren….

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.